இக்கட்டுரை இரண்டு காரணங்களுக்காக எழுதப்பட்டுள்ளது. முதலாவதாக, இன்று இந்தியாவில் வாழ்ந்து வரும் ஒரு குறிப்பிட்ட அடையாளக் குழுவின் வரலாற்றைப் பதிவு செய்யும் நோக்கம். இவ்வடையாளக்குழு எளிதாய் வர்ணிக்கக் கூடியதல்ல. இக்கட்டுரையின் தேவைக்கான வர்ணனை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இவ்வரலாற்றின் மூலம் அடையாளம்சார் சமூக இயக்கங்கள் மற்றும் சட்ட மாற்றத்திற்கான போராட்டங்கள் பற்றிய ஒரு விமர்சனப்பூர்வமான கருத்து முன்வைக்கப்படும்.

இந்தியச் சூழலில் மாற்றுப் பாலினம் பற்றிப் பேசுகையில் முதலில் நினைவிற்கு வருவது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 377 ஆகும். ஆனால் இக்குழுவினரின் வாழ்வில் சட்டரீதியான விளைவுகள் 377 ஐ தாண்டியும் உள்ளன.

‘க்வியர்’ பெண்கள் என்று நாம் குறிப்பிடுபவர் யார் என இக்கட்டுரையின் தொடக்கத்தில் தெளிவுபடுத்துதல் அவசியம். இயக்கசார் அரசியலில் “க்வியர்” என்னும் சொல் பல தோழர்களால் “பால் மற்றும் பாலியல் சார்ந்த நெறிமுறைகளைக் கேள்வி கேட்கும் எந்த நபரும் க்வியர் ஆவர்” என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய பரந்த பொருளின் நற்பயன்களைக் கணக்கில் கொண்டாலும் குறிப்பிட்ட அடையாளப் பெயர்களின் சக்தியை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அதுவும் இக்கட்டுரையின் தேவைக்கு இக்குறிப்பிட்ட அடையாள முறையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகையால் “க்வியர்” பெண்கள் என்பவருள் சமூகத்தால் பெண்ணாகக் காணப்படும் யோனியுடன் பிறந்தோருள் மற்ற யோனியுடன் பிறந்து ‘பெண்’ எனக் காணப்படுபவரின் மேல் இச்சை கொள்பவர் அடங்குவர். சமூக நெறிமுறைகளை மீறி இவர் தம்மைத் தாமே கூப்பிட்டுக்கொள்ளும் பெயர்கள் பலவாகவுள்ளன. அதே சமயம் சட்டரீதியாக முன்பு குறிப்பிட்ட பரந்த அர்த்தத்துடனான “க்வியர்க்கும்” ஒரு தேவையுள்ளது. அதிகபட்சம் சட்டம் மற்றும் சமுதாயத்தில் ஓர்பாலினச் சேர்க்கைக்காகச் செயல்களைவிட அச்செயல்களைச் சார்ந்த அடையாளக் குறிப்புகளே சமூக நெறிகளை உடைத்தெறிபவையாகக் காணப்படுகின்றன.

ஓர்பாலின உடலுறவு அமைதியாக, மறைத்து மறைத்துச் செய்யப்பட்டால் அது சகித்துக் கொள்ளப்படும். அதுவும் சமூகக் கோட்பாடுகளை மீறாமல் திருமணம், குழந்தைபெறல் ஆகிய அமைப்புகள் உடைபடாமல் அதனிடையில் செய்யப்படும் ஓர்பாலின உடலுறவு ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் பொதுவெளியில் அரசியலாகக் கூறப்படும் இவ்வடையாளக்குறிகள், அதுவும் பெண்களால் கூறப்படுபவை சமூக நெறிமுறையை எதிர்த்துத் திடமாய் நிற்பவையாய் அமைந் துள்ளன. அதே சமயம் உடலுறவு மட்டுமே குறிப்பிடும் அடையாளப் பெயர்கள் அப்பெண்களின் பற்பல அனுபவங்களைச் சுட்டிக்காட்டுபவையாய் அமைவது கடினம். இவ்வனைத்துக் காரணங்களால் யோனியுடன் பிறந்து பற்பல பாலினம் மற்றும் பாலியல் கொண்டவர், ஓர்பாலின ஈர்ப்புள்ளவர் ஆகியோரைச் சேர்ந்து இக்கட்டுரையில் க்வியர் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இப்பெண்கள் க்வியர் மட்டுமல்லாமல் குறிப்பிட்ட இடம், மதம், சாதி, வர்க்கம் ஆகியவற்றை சார்ந்தவர். அவரது வாழ்க்கைப் போராட்டத்தில் இவ்வடையாளங்களும் முக்கிய பங்கு வகிப்பவையாகும். இவ்வனைத்து அடையாளங் களும் ஒன்றியே ஒரு மனிதரின் வாழ்க்கை மற்றும் வாழ்வுரிமைக் கான போராட்டத்தை வடிவமைக்கின்றன.

சமூகத்தில் ஆணாகக் காணப்படும் க்வியர் நபர்களின் அனுபவம் மிகவும் வேறுபட்டதாகும். ஆண்கள் என்ற காரணத்தால் சமூகத்தி லுள்ள உரிமை மற்றும் ஆதிக்கம் க்வியர் ஆண்களுக்கும் உண்டு. பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடும் உரிமை மற்றும் வேலை பார்க்கும் உரிமை ஆகியவை எளிதாக உள்ளவை. இதனால் வரும் சுதந்திரம் அவ்வாண்களுக்கு ஒருசில கணங்களில், நேரங்களில் இடம் கொடுக்கிறது. இந்தச் சுதந்திரம் ஒருசில நேரம் அழுத்த மாகவும் மாறலாம். அதே சமயம் க்வியர் ஆண்களின் அனுபவங் களை ஒரே நேர்கோடாக இடமுடியாது. இதிலும் சாதி, மதம், இடம், வர்க்கம், உடல்நலம் ஆகியவை சார்ந்தவையாக பெண்கள் மத்தியில் உடல்சார்ந்த அறிதல், மற்றும் இச்சை மற்றும் வலி பற்றிய அறிதல் ஆகியவை மிகக்குறைவு. இவ்வகை அறிதல் அனுமதிக்கப்படு வதில்லை. ஆண்கள் மத்தியில் உடல் மற்றும் உடலுறவு சார்ந்த அறிதல் தவறானதாகவும் தூய்மைக் கேடு புரிவதாகக் கருதப்பட்டா லும் ஓரளவு அனுமதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தன் சொந்த உடலையே அறிய அனுமதியில்லாமல் இன்னொரு பெண்ணின் உடலை அறிதல் கண்டிப்பாக அனுமதிக்கப்படுவதில்லை. இத்தகைய காரணங்களால் பெண்கள் மத்தியிலான ஓர்பாலின உடலுறவு சமூக நெறிகளுக்கு முழுதும் புறம்பானதாய்க் கருதப்பட்டுக் கண்டிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பின்புலத்தில் ஓர்பாலினச் சேர்க்கை பெண்களின் வாழ்க்கை சமூக நெறிமுறை மீறி வாழும் பல பெண்களின் வாழ்விலிருந்து அவ்வளவு மாறுபட்டதல்ல. இதையும் தாண்டி க்வியர் பெண்களின் அனுபவம் மாறுபட்டதாகும். இதற்கான காரணங்கள் கீழ்வருமாறு. முதலில் வேற்றுப் பாலியலின் நெறிமுறையான ஆணுக்கான தேவை ஆணின் மேல் கட்டாய சார்பு ஆகியவை க்வியர் பெண்களினால் தகர்த்தெறியப்படுகிறது. இரண்டாவதாக ‘குடும்பம்’ என்பதற்கான நெறிமுறைகள் உடைக்கப்படுகின்றன. குழந்தைபெறல் இல்லாததால் குடும்ப வரைமுறை தகர்க்கப்படுகிறது. மூன்றாவதாக இப்பெண்கள் இச்சையுடன் இன்பம் அளிக்கும் உடலுறவில் ஈடுபட்டுப் பெண்களுக்கு அனுமதிக்கப்படாத இன்பம் சார்ந்து வாழ்வதால் அவர் பல நெறிமுறைகளை உடைத்தெறிகின்றார்.

சட்டம்சார் அனுபவங்கள்

சட்டப்படி ஒருபெண் பிறந்த வீட்டிற்கு வெளியே இன்னொரு ஆணின் கீழ் வாழாதது ஒரு பெரிய நெறிமுறை மீறல் ஆகும். அதற்குமேல் இன்னொரு பெண்ணுடன் வாழ முனைவது எரியும் விளக்கில் எண்ணை ஊற்றுவதாக அமைகிறது.

சட்டரீதியாக க்வியர் ஆண்கள் மற்றும் பெண்களின் அனுபவங் களில் ஒருசில பொதுவானதாகவும், ஒருசில வேறுபட்டவையாக வும் உள்ளன. ஐ.பி.சி. பிரிவு 377 க்வியர் ஆண்கள், பெண்கள் இருவரையும் பாதிக்கிறது. காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றாலும் அடிக்கடி அச்சுறுத்தல் செய்வது வழக்கம். அதிலும் பொது இடங்களில் அடிக்கடி காணப்படும் க்வியர் ஆண்கள் குறிப்பிட்ட வகையில் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாண்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினராக உள்ளனர். வாழ்விடம், வேலையிடம், பள்ளிக்கூடம் ஆகிய இடங்களில் சட்டப்படி குற்றம் என்பது தொடர்ந்து பயமுறுத்துவதாக உள்ளது. பிரிவு 377 இல்லாமல் இன்னும் பல சட்டங்கள் இப்பெண்களின் மீது தாக்கமுள்ளவையாக அமைந்துள்ளன.

மற்ற சட்டப்பிரிவுகள்

 பிரிவு 377 இல்லாமல் இன்றும் பல ஐ.பி.சி பிரிவுகள் க்வியர் பெண்கள் மீது தாக்கமுள்ளவையாக அமைந்துள்ளன. அவை கீழ்வருமாறு: பிரிவு 340 முறையின்றி சிறைப்படுத்துதல், பிரிவு 361 ஆள்கடத்தல், பிரிவு 362 கடத்தல், பிரிவு 366 கட்டாய கல்யாணம் செய்யவைத்தல், பிரிவு 368 ஆள்கடத்தப்பட்டவரைச் சிறையி லடைத்தல் மற்றும் ஆட்கொணர்வு ஆணை (லீணீதீமீணீs நீஷீக்ஷீஜீணீs ஷ்க்ஷீவீt) ஆகியவை அடங்கும்.

2006இல் தில்லி நீதிமன்றத்தில் ஓர் அபூர்வமான வழக்கு தொடரப்பட்டது. ஓர் ஓர்பாலினச் சேர்க்கை பெண், தன் காதலியுடன் இருக்க அனுமதிக்கப்படாததால் வீட்டைவிட்டு ஓடிவந்துவிட்டார். அவரது பெற்றோர் அவர் காதலிக்கு எதிராக ஆள்கடத்தல் வழக்கைப் பதிவு செய்தனர். வீட்டைவிட்டு வந்த பெண் நீதிமன்றத்தில் தாம் கடத்தப்படவில்லை தன்னிச்சையாகவே வெளியேறினேன் என வாக்குமூலம் அளித்ததுடன் வழக்கு நிறைவு பெற்றது. இது இயக்கத்தவர் மத்தியில் ஒரு வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் இரண்டு பெண்களுக்கிடையிலான உறவை நாங்கள் நீதிமன்றத்தில் மறைத்தோம். அவர் சட்டப்படி வயது வந்தவர் என்ற கூற்றை மட்டுமே அழுத்தமாகக் கூறினோம். இயக்கத்தின் மூலம் நாங்கள் எழுத விழையும் வரலாறு மறைக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது. இந்நிலைமையில் நொடி ஈடுபாடு உள்ள வழக்குகள் மற்றும் இயக்க நண்பர்கள் அறிந்த கதைகள் மட்டுமே பதிவு செய்யப்படுபவை. இதனிடையில் பல கதைகள் நிகழ்ந்ததறியாமல் தொலைந்து போய்விடுகின்றன.

கேரளத்தில் நடந்த ஒரு வழக்கில் ஒரு பெண்ணின் பெற்றோர் இன்னொரு பெண்ணுக்கு எதிராகக் கடத்தல் வழக்குத் தொடர்ந்த னர். அதே சமயம் காவல் நிலையத்தில் காணாமற்போனவர் வழக்கும் பதிவு செய்தனர். இவ்வழக்கில் நீதிமன்றம் சட்டப்படி 18 வயதிற்கு மேலான இவ்விரு பெண்களை அவர் இஷ்டத்திற்கு மாறாக அவரவர் பெற்றோருடன் அனுப்பிவைத்தது. இவ்விரு பெண்களுக்கும் மிக்க வன்முறையுடனான மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டது. அதே சமயம் கேரளத்தில் இன்னொரு வழக்கில் ஒரு பெண்ணின் காதலியைக் கண்டுபிடிக்க ஆட்கொணர்வு ஆணை கோரி வழக்குத் தொடர்ந்தது. தம் பெற்றோரால் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்தப் பெண் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார். நீதிமன்றம் அவ்விரு பெண்கள் எங்கு வேண்டு மானாலும் சேர்ந்தோ தனியாகவோ வாழலாம் எனத் தீர்ப்பளித்தது. இதனால் 18 வயதிற்கு மேற்பட்டவர் எனும் வாதம் எல்லா நேரமும் இப்பெண்களுக்குச் சாதகமாக அமைவதில்லை.

வழக்கமாக ஆட்கொணர்வு ஆணை சட்டத்தை மீறி சிறைப் படுத்தப்பட்டவரைக் கண்டறிய பயன்படுத்தப்படும் சட்டமாகும். இது அரசு நிறுவனங்களான காவல்துறை மற்றும் சிறையில் உள்ளவருக்காகப் பெரும்பாலும் சிறைப்படுத்தப்பட்டவரையும் இச்சட்டத்தின்படி கண்டறிய வழக்குகள் தொடரப்படலாம். சிறையில் அமைக்கப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஆண்களைக் கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் இச்சட்டம், உரிமைசார் கோட்பாடுகளுக்குச் சாதகமாக அமைகிறது. ஆனால் சமுதாய வரைமுறையை மீறிவாழும் பெண்கள், அவர் வேற்றுச் சாதிய ஆணைக் காதலிப்பவரோ அல்லது இன்னொரு பெண்ணைக் காதலிப்பவரோ எங்குள்ளவர் என்று கண்டறிய பெற்றோரால் பயன்படுத்தப்படும் போது அதே உரிமைசார் கோட்பாட்டிற்கு எதிராக அமைகிறது. பல நேரங்களில் இச்சட்டம் 18வயதிற்கு மேலான பெண்ணை அவரது விருப்பத்திற்கு மாறாகப் பெற்றோ ருடன் அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற நேரங்களில் நீதிமன்றமே அவரைப் பாதுகாப்பிடங்களுக்கு அனுப்புகின்றன. இதிலும் வரைமுறையைத் தாண்டினாலும் வேற்றுப்பாலின தம்பதியினரின் இச்சட்டத்தைத் தமக்கு சாதகமாக அவ்வப்போது பயன்படுத்த முடிகிறது. சமூகத்தினால் அங்கீகரிக்கப்படாததால் இச்சட்டத்தையோ, வேறு எந்த சட்டத்தையோ தமக்குச் சாதகமாய் பயன்படுத்தல் முடியாது.

கேரளத்தில் இன்றும் இரண்டு பெண்களுக்குச் சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது. ஆனால் அதனை அவரது பெற்றோர் முன்னிலையில் செயல்படுத்துமாறு கூறியது. பெற்றோர் தீர்ப்பிற்கு முரணாக அவர்களைப் பிரித்து உடல் மற்றும் மனரீதியாக அவர்களை அச்சுறுத்தினர். தம்மிடமிருந்து பிரிக்கப்பட்டுப் பெற்றோரால் சிறைவைக்கப்பட்டடுள்ள காதலியைக் காப்பாற்ற ஒருவர் ஆட்கொணர்வு ஆணை கோரி வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கு இரு பெண்களுக்கிடையில் எந்த ‘தொடர்பு’ அதாவது குடும்பம் அல்லது விவாகம் சார்ந்த தொடர்பில்லாததால் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்படவில்லை. எந்தவித சட்டரீதியான தெளிவான காரணம் இல்லாவிடினும் ‘தொடர்பு’ என்பதற்கான அர்த்தத்தைச் சுருங்கிப் புரிந்துகொண்டு நீதிமன்றம் இவ்வழக்கை ரத்து செய்தது. சட்டம் மற்றும் நீதிமன்றத்தில பெண்கள் தனியாகவோ அல்லது காதலிகளாகவோ வந்து சாதகமான சேவைகள் பெற இயலாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

அதே கேரளத்தில் இன்னொரு வழக்கில் இரு பெண்கள் திறந்த வெளியில் தம்மிடையே உள்ள காதல் உறவை வெளிப்படுத்தினர். இதில் ஒரு பெண்ணின் உருவத்தைச் சார்ந்து அவர் ஆணா, பெண்ணா எனும் கேள்வி எழுப்பப்பட்டது. எவ்வாறிருந்தாலும், இவர் இருவரும் 18வயதிற்கு மேலானோர் என்ற காரணத்தால் அவர் இஷ்டப்படி வாழ உரிமையுள்ளவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதே மாதிரியான ஒரு வழக்கில் பாகிஸ்தானில் ஷகசீனா மற்றும் ஷமாயில் ஈடுபட்டிருந்தனர். பெண்ணாய் பிறந்து ஆணாய் வாழும் ஷமாயில் நீதிமன்றத்தில் தாம் ஆண் என கூறியது பொய் எனக் கொண்டு நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை அளித்தது. இவரிருவரும் ஒன்றாய் வாழ அதே நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் இரு பெண்களும் சுதந்திரமாய் வாழ வழிவகுத்தது. ஆனால் இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. கீழ்வருமாறு: ஆணாக வாழும் ஷமாயில் அறுவை சிகிச்சை மருந்துகள் மூலம் ஆணாக மாறிக் கொண்டிருந்தாலும் அதனை நீதிமன்றம் அங்கீகரிக்க மறுத்தது. வழக்கு அவரது தொடர்பு குறித்ததே ஒழிய அவரது பாலினம் பற்றித் தொடுக்க படவில்லை யென்றாலும் நீதிமன்றம் தன்னிச்சையாக அவரது பாலினம் பற்றித் தீர்ப்பளித்தது அவசியம் என்று கருதியது. ஒரு பெண், ஆணாக வாழ்ந்தாலும் அவர் மீதுள்ள அழுத்தத்தை நாம் இங்கு காணலாம்.

நீதிமன்றங்களின் ஓரினச்சேர்க்கை பெண்கள் பற்றியான பெரும் குழப்பம், இவ்வனைத்து வழக்குகளில் தெளிவாக தெரிகிறது. இப்படிப்பட்ட மனிதர்கள் உள்ளனர் என்பதே பலரால் யோசிக்க முடியாத விஷயம். அதிலும் அவர் தம் காதல், இச்சை மற்றும் வாழ்க்கைக்காகச் சமூகத்தை எதிர்த்து போராடுகின்றனர் என்பது நீதிமன்றத்திலும் பிற இடங்களிலும் அதிர்ச்சியுடன் கண்டு, வேறு வழியில்லாமல் போனதாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இத்தகையான பெரும் குழப்பத்திற்கான ஒரு நல்ல உதாரணம் கீழ்வருமாறு:

மும்பையில் உள்ள ஜல்காவ் என்ற இடத்தில் இரு பெண்கள் பல்லாண்டுகளாகக் காதலர்களாக இருந்துவந்தனர். இவர்களது வீடுகள் அருகருகில் இருந்தன. கல்யாணம் செய்து குழந்தை பெற்ற இப்பெண்கள் தம் கணவருடன் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் இவ்விரு பெண்களும் ஏதோ சினிமாவில் நடப்பதுபோல் நடக்கும் என எண்ணி அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்று அவரிருவர் இடையில் மணமுடித்து வைக்குமாறு கூறினர். காவல்துறையினர் அவரை விசாரணை செய்து இருவரையும் சிறையிலடைத்தனர். ஒருவர் ஒருவரைத் தேடிவந்த அவர் கணவரையும் சிறையி லடைத்தனர். இதுமட்டுமல்லாமல் இவ்விரு பெண்களும் ஒருவருடன் ஒருவர் உடலுறவு வைத்துள்ளனரா என காண அவர் யோனியில் இரண்டு விரல்கள் நுழைத்துச் ‘சோதனை’ செய்யப் பட்டது. இது மிகப்பெரிய சட்டம் மற்றும் உரிமை மீறலாகும். இவ்விரு பெண்கள் பல நேரங்களில் காவல்நிலையங்களில் சாதி விட்டு, மதம் விட்டு மணம்புரியும் வேற்றுப் பாலின தம்பதியருக் குள்ள உரிமை, தம் காதலின் பெயரால் தமக்கும் உண்டு என தவறாக நம்பினர். இக்காதலை கண்டு திக்கு முக்காடிப்போன காவல்துறை யினர் தமக்குத் தெரிந்த கொடும் விசாரணையும் சோதனையும் சட்டத்தை மீறி மனசாட்சியின்றி மேற்கொண்டனர்.

பெண்கள் ஒரு தனிமனிதர் என்பதை அங்கீகரிப்பதே சட்டத்தில் குழப்பம் உண்டாக்கும். அதிலும் அவர் தாய், மனைவி அல்லது மகளாக வராமல் இன்னொரு பெண்ணின் காதலியாக வந்து நிற்கும்பொழுது அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி நீதிமன்றத்திலோ காவல்துறையிலோ கிடையாது.

இறுதிச் சுருக்கம்

 இந்தியச் சூழலில் பாலியல்புகள் கேள்விகளை எழுப்பவும் அதைப் பற்றிப் பொது வெளியில் பெரும் பிரிவு 377ஐ மாற்ற மேற்கொள்ளப்பட்ட இயக்கம் மிகவும் முக்கியமானது. தனிநபரின் தினசரி வாழ்க்கையில் இவ்வியக்கத்தின் தாக்கம் சிக்கலானது. சட்டத்திலான மாற்றங்களும் அதன் தாக்கமும் எல்லோர் மீதும் ஒன்றுபோல இருப்பதல்ல. ஆக்கப்பூர்வமாக உரிமை அளிக்கும் சட்ட மாற்றங்கள் பெண்களுக்கு வன்முறையை எதிர்க்கவும் கல்யாணம், வேலையிடம் போன்ற சூழல்களில் உதவியாய் அமைகின்றன. பாகுபாடுகளை அகற்றும் சட்ட மாற்றங்கள் பெண்களுக்கு அதே வகையில் பயன்படுவதில்லை. பிரிவு 377 இன் மாற்றம் இரண்டாம் வகையாகும். அது மட்டுமல்லாமல் பிரிவு 377இன் வரலாறு என்றும் ஆண்களுடன் சேர்ந்தே காணப்பட் டுள்ளது. இதில் பெண்களின் இடம் தெளிவானதல்ல. அதேபோல இப்பிரிவிற்கெதிரான போராட்டத்திலும் பெண்களின் இடத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய தேவை உள்ளது. இவ்வகையான பகுப்பாய்வின் மூலம் சமூக போராட்டங்களில் சட்டமாற்றத் திற்கான போராட்டங்கள் பற்றியும் நாம் கூர்ந்து யோசிக்க முடிகிறது. இதனைப் பலவகையில் மேற்கொள்ளலாம்.

முதலாவதாக சமூகமாற்ற இயக்கங்களில் சட்டமாற்றத்திற்கு அளிக்கப்படும் முக்கிய இடம் குறித்து யோசித்தல் அவசியம். இரண்டாவதாக இத்தகைய சிறப்பிடத்தால் இந்த சட்டமாற்றத்துள் சரிவர அடங்கா பல அடையாளக்குழுக்கள் விடுபடுகின்றனர் என்பதையும் அங்கீகரித்தல் அவசியம். பொதுவெளியில் புழங்கும் சட்டமானது சமூக இயக்கங்களின் ஒரு அங்கமாக மட்டுமில்லாமல் அவைகளை வரையறை செய்வதில் முக்கிய பங்குவகிக்கின்றது. உதாரணமாக இயக்கங்களில் உள்ள சொல்லாடல் மற்றும் அடையாளம் சார்ந்து உரிமை கோரல் ஆகியவைச் சட்டத்திலிருந்து வரும் கோட்பாடுகளே ஆகும். இக்காரணங்களால் 377ஐ மாற்றுவதை மையமாக கொண்ட சமூக இயக்கத்தில் ஆண்களே முக்கிய அடையாள குழுவாகி யுள்ளனர். க்வியர் சமூகங்களிலுள்ள பெண்கள் இக்காரணத்தாலும் ஆணாதிக்க அழுத்தங்களாலும் அவ்வளவாக பொதுவெளியில் தென்படுவதில்லை. ஆனால் இவ்வாதம், பெண்களை அப்படியே சேர்த்துக்கொண்டு, அடையாளக்குழுவை விரிவுபடுத்தும் நோக்கத் துடன் முன்வைக்கப்படுவதல்ல. நமது சமூக இயக்கங்கள் பல சமயம் தாம் எதிர்க்கும் நிறுவனங்களின் உட்படுத்தல்கள், தவிர்ப்புகளைத் தமது மொழியிலும், போராட்ட வரையறையிலும் பயன்படுத்துவது சகஜம். இதனை குறித்து ஒரு விமர்சன கோணம் அவசியம் என்று கூறுவதே இவ்வாதத்தின் நோக்கம்.

மேலும் பலவகையான க்வியர் இயக்கங்கள் இந்தியச் சூழலில் உள்ளன. இதனுள் பல பெண்களுடன் பணிபுரிபவை. இவ் விமர்சனம் க்வியர் இயக்கத்தை முழுதாக அல்ல மாறாக அவ்வியக்கம் பொதுவெளியில் காணப்படும் முறை பற்றியதாகும். மேலும் சமூக மாற்றச் செயல்களில் சட்டமாற்றம் ஒரு சிறு துளியே ஆகும் என்பதை என்றும் நினைவு கூறல் அவசியம்.

இந்தியச் சூழலில் மட்டுமல்லாமல் தெற்காசியச் சூழலில் பலவகையான க்வியர் போராட்டங்கள் இருப்பதை நாம் என்றும் கொண்டாடுதல் அவசியம். சில இயக்கங்கள் ஒன்று சேர்ந்தும் மற்றவை தனித்தனியாகவும் அமைந்துள்ளன. ஒவ்வொரு தனிப்பட்ட அடையாளக்குழு, ஓரினச்சேர்க்கை ஆண்கள், அரவாணிகள், ஓரினச்சேர்க்கை பெண்கள், பெண்ணாய்ப் பிறந்து ஆணாய் வாழ்பவள் ஆகியோருக்கு அவரவருக்கான தனிப்பட்ட சந்திப்புக்குழுக்கள் அவசியம். இங்கு அவர்கள் மனம் திறந்து பேச முடியும். ஆனால் இத்தகைய குழுக்களையும் விமர்சன மனப்பான்மையுடன் காணுதல் அவசியம். அவ்வப்போது இணைந்து மேற்கொள்ளும் போராட்டங்கள் ஒரு யுக்தியாக அமையலாம். இன்றும் சில நேரங்களில் இவ்விணைப்புகள் ஒரு பகிர்ந்த அரசியல் புரிதலின் காரணத்தால் அமையலாம். இவ் வரசியல் புரிதல் ஒரு பரந்த அளவிலான ‘க்வியரை’ மேற்கொண்டு செல்வதாகும்.

இவ்வர்த்தகத்தில் அனைவரும் பாலினம் மற்றும் பாலியல்பு பற்றிய வரைமுறைகளை கேள்வி கேட்கும் உரிமையுள்ளவராய் அமைவர். மேலும் தம் வாழ்வில் தமது இச்சைக்கேற்ப, மற்றொருவரைத் துன்புறுத்தாது வாழும் உரிமையுள்ளவராயிருப்பர். இவ்வரசியலில் அடையாளக் கூறுகள் குறிப்பிட்ட நேரங்கள் குறிப்பிட்ட காரணங்களுக்காகப் பயன்படும். அடையாளக் குழுக்களும் அவர்களுக்கான குறிப்பிட்ட உரிமைகளுக்கான போராட்டங்களை மீறி இது அனைவரும் சுயமரியாதை, சுதந்திரம் மற்றும் ஒருவரையருவர் மதிக்கும் ஒரு வேறு உலகம் உருவாக்கும் இயக்க அரசியலாகும். ஒரு சிலரின் ஒரு சில உரிமைகள் வழங்கப்படுவதால் உலகம் மாறுவதில்லை என்பதை நினைவில் கொள்ளல் அவசியம். தில்லி உயர்நீதிமன்றத்தில் 2009, ஜூலை 2ஆம் தேதி அன்று கொடுக்கப்பட்ட தீர்ப்பினால் பல மாற்றங்கள் உருவாகியுள்ளன. இது க்வியர் இயக்கங்களில் மாற்றம் கொணர்ந்துள்ளன. கூடிய சீக்கிரம் ஒரு சட்டம், அதை மாற்றுதல், அதற்காக அடையாளக்குழு அமைத்தல் ஆகியவற்றை மீறி உலகம் பரந்த அரசியலும் அதைத் தழுவிய சமூக இயக்கமும் தொடரும் என்றும் நம்பிக்கை எமக்குள்ளது. 

(ப்ரியா தங்கராஜா, இலங்கையில் பிறந்து வளர்ந்த இவர் இந்தியாவில், பெங்களூரில் உள்ள தேசிய சட்டக் கல்லூரியில் படித்து மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார். அவர் இந்தியாவில் இருந்த பல வருடங்களில் பாலியல்பு பற்றிய ஆராய்ச்சியும், மற்ற வேலைகளும் மேற்கொண்டார்.

பொன்னி அரசு, பெண்ணியலாளரும், ஆராய்ச்சியாளருமான இவர், தில்லி, பெங்களூரு, சென்னை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் பல்வகை சமூக மாற்ற இயக்கங்களுடன் பணிபுரிந்துள்ளார். நிரந்தரமாகத் தமிழகத்தில் வாழ்வும் பணியும் அமைக்கும் கனவை நினைவாக்க முனைகிறார்.)

Pin It