தமிழ்ச் சித்தர் மருத்துவத்தில் நானோ தொழில் நுட்பம்

 ஆவணப்படுததலின் அவசியம்

“நானோ என்ற கிரேக்க வார்த்தைக்குக் குற்றம் என்று பொருள். நானோ அளவுகோலை 100 கோடியில் ஒரு பங்கு என்று குறிக்கிறார்கள். அந்தக் காலத்தில் தமிழில் கீழ்க்காணி, கீழ்முந்திரி, இம்மி அளவு, அடிசாரம் என்றெல்லாம் அளவு கோல்கள் இருந்தன. கீழ்க்காணி என்றால் 25 ஆயிரத்து 600இல் ஒரு பங்கு, கீழ்முந்தரி என்பது 1 லட்சத்து 2 ஆயிரத்து 400 இல் ஒரு பங்கு. இதே போல் இம்மி அளவு என்றால் 10 லட்சத்து 75 ஆயிரத்து 200இல் ஒரு பங்கு. அடிசாரம் என்பது 18 லட்சத்து 38 ஆயிரத்து 400இல் ஒரு பங்கு ஆகும். இவ்வளவு சிறிய அளவுகளை தமிழர்கள் எதற் காகப் பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை மருந்துகள் தயாரிக்கும் போது பயன்பட்டிருக் கலாம். இது குறித்து எல்லாம் விரிவான ஆய்வுகள் செய்ய வேண்டியிருக்கிறது.”

இவ்வாறு கூறியவர் கான்பூர் மற்றும் ராஜஸ்தான் ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமான மு. அனந்தகிருஷ்ணன் அவர்கள்

மிகச்சிறிய அளவில் வடிவமைக்கப்பட்ட பொருளில் அதிக ஆற்றலை உட்புகுத்தும் தொழில் நுட்பம் நானோ டெக்னாலஜி என்று பொருள் கொள்ளலாம். தமிழரின் பண்டைய அளவை அலகுகள் மிக நுண்ணியதாக இருந்தி ருக்கின்றன. தமிழ்ச் சித்தர் மருந்துவ முறைகளில் இவ்வாறான மிகச்சிறிய அளவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கனிம, உலோகப் பொருட்களை முதன்மை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் பற்பம் மருந்துகள், செந்தூரம் மருந்துகளை தயாரிக்கும் முறைகளில் இச்சிறிய அலகுகளை பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவு. தமிழ்ச் சித்தர்களின் இம்மியம் முறையிலான உலோகத் தாதுப் பொருட்களின் பகுப்பு முறை அத்தகையதுதான். இந்த இம்மிய உலோகத் தாது பகுப்புமுறை தான் (Alchemy) என்று உலகெங்கிலும் பரவுயுள்ளது. போதிசத்துவர் என்ற தமிழ்ச்சித்தர் காஞ்சி புரத்திலிருந்து சீனா சென்று ஜென்புத்தமதத்தை பரப்பியவர். அவர்கள் உலோகத் தாது பகுப்பு முறையையும், தமிழ் மருத்துவத்தையும் மற்றும் சீனர்களின் போர்க்கலை வடி வத்திற்கு ஆதாரமான தமிழர் தற்காப்பு விளையாட்டு களான சிலம்பம், வர்மம், குஸ்தி ஆகியவற்றையும் சீனர்களுக்கு கற்றுத்தந்தவர். அவரது ரிஷி மூலத்தை அறியவே பல்லவர் காலத்தில் தலைநகராக இருந்த காஞ்சிபுரத்திற்கு “யுவான் சுவாங்” என்ற சீனப் பயணி வருகை புரிந்ததாக அவரே பதிவு செய்துள்ளார். உலகில் தொன்மை வாய்ந்ததாக கருதப் படும் சீனமருத்துவமே தமிழ்ச்சித்தர் மருத்துவத்தின் அடிப்படையைக் கொண்டது எனில் ஆயுர் வேதம் போன்ற மாற்று மருத்துவ முறைகளின் தொன்மையை நாம் கணக்கிட்டுக்கொள்ளலாம்.

தமிழ்ச்சித்தர்மருத்துவம் 4000 ஆண்டுகளுக்கு முன்

ரோமர் மருத்துவம்    கி.பி.முன்னூறிலும்

யுனானி மருத்தும்     கி.பி.அறுநூறிலும்

கிரேக்க மருத்துவம்    கி.பி.தொள்ளாயிரத்திலும்

அஷ்டாங்க ஹிருதயம் கி.பி.தொள்ளாயிரத்திலும்

சாரங்கதரசம்கிதை     கி.பி.ஆயிரத்து முன்னூறிலும்

பாவப்பிரகாசம் கி.பி.ஆயிரத்து அறுநூறிலும்

அலோபதி என்ற     ஆயிரத்து எழுநூற்றி

ஆங்கில மருத்துவம்   எழுபத்தி ஐந்திலும்

தோன்றியதாக அறிஞர்கள் முடிவெடுத்துள்ளனர்.  கி.மு. 200 வாக்கில் போகர் அறிமுகம் செய்ததற்குப் பின்பே உலோக, தாது பகுப்பு மருந்து செய்முறை சீனாவில் பரவியது. மேலும் போகர் நீரிலும், வானிலும் செல்லும் விமான நுட்ப முறையை சீனருக்கு செயல்படுத்தி காட்டி யதையும் சீனநூல்கள் சொல்கின்றன. எனவே போகருக்கு முன்பே உலோக, தாது பகுப்பு மருந்து செய்முறை சித்தர் மருத்துவம் திகழ்ந்துள்ளது என்பதும், Alchemi சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் தொன்மையானது என்பதும் தெளிவு. சித்தமருத்துவம் இம்மிய பகுப்பு மருந்து செய்முறை மருத்துவமாக (Nanometalic Medicine) திகழ்ந்துள்ளது என்பதும் நாம் புரிதற்குரியது.

மேலும் இந்த இம்மிய பகுப்பு மருந்து செய்முறை யாக்கோப்பு என்ற இராமதேவரால் அரபு நாடுகளில் பரவிள்ளது. இவர் பதிணென் சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் யாக்கோபு என்று அராபிய நூல்களில் குறிப்பிடப்படுகிறார்.   இவர் கூறிய 100க்கும் மேற்பட்ட மருந்து செய்முறைகள் யுனானி மருத்துவ முறையில் காணப்படுகின்றன. சித்த மருத்துவ முறையில் உலோக, தாதுக்களின் பற்பசெந்தூரம் செய்முறையான இம்மிய பகுப்பு மருந்து செய்முறை சீன மருத்துவத்திற்கு, அராபிய மருத்துவத்திற்கும் மற்றும் உலகின் பல மருத்துவமுறைகளுக்கும் சித்தம் அளித்துள்ள கொடை எனக்கூறலாம்.

மருத்துவ முறையில் தமிழரின் இத்தகை தொல்லறிவை ஆவணப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தமிழ்ச் சித்தர் மருத்துவ முறையின் பல்வேறு பிரிவுகள் இயற்கை மருத்துவம் (Naturopathy)ஓகம் (Yoga)மூலிகை மருத்துவம், ( Medicinal Herbology )என்ற வேற்றுப் பெயர்களில் நிலவி வருகிறது. வர்மம், தொக்கணம், என்பவை “பஞ்சகர்மா” என்று ஆயுர்வேத மருத்துவத்தின் உட்பிரிவாக்கப்பட்டு பிரபலமடைந்து விட்டன. கன்னியாகுமரி மாவட்டத் தமிழ் மக்களிடமிருந்தும் மருத்துவ ஆசான்களிடமிருந்தும் கேரளாவிற்கு பரவிய வர்ம, தொக்கண முறைகள் மொழிமாற்றப் பட்டு ஆயுர்வேதத்தின் உட்பிரிவாக்கப்பட்டு விட்டன. பஞ்சகர்மா என்ற சிகிச்சை முறை 20,25 ஆண்டுகளுக்கு முன்பு வடஇந்திய ஆயுர்வேத மருத்துவர்களால் கையாளப்பட்டதில்லை என்பதன் மூலமும், கேரளாவில் மட்டும் சிறப்பாக கையாளப்படுகிறது என்பதன் மூலமும் இவ்வுண்மையை புரிந்து கொள்ள முடியும்.

நமது இஞ்சி, மஞ்சள், வேம்பு போன்றவற்றுக்கு அமெரிக்கா மற்றும் மேலை நாட்டினர் காப்புரிமை பெற்றது போல் தமிழ்ச் சித்தர் மருத்துவ முறையின் பற்பம், செந்தூரம் மருந்துகள் நானோ தொழில் நுட்ப அடிப் படையில் அமைந்துள்ளதால் அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகள் காப்புரிமை பெற வாய்ப்புள்ளது. அத்தகைய பேரிடியிலிருந்து நமது உரிமைகளைக் காத்துக் கொள்ளும் வகையில் பற்ப செந்தூரங்களின் பயன்களை அறிவியல் பூர்வமாக நாம் ஆவணப்படுத்த வேண்டியது மிக மிக  அவசியமானதாகும்.

கடந்த காலத்தில் இப்பணிகளை அரசின் மூலமும் தனியார் மூலமும் செய்ததில் சில சிக்கல்கள் உள்ளன. இந்திய மருந்துவ முறைகளுக்கான ஆய்வுகளை இந்திய அரசு நிறுவ னங்கள் பல்வேறு தனியார் பல்கலை ஆய்வுக்கூடங்கள் மூலம் மேற்கொள்வதை நடைமுறைப்படுத்தி வருகிறது. அவை வணிக ரீதியாக செயல் படுவதால் ஆயுர்வேத முறையாக பதிவு பெற வாய்ப்புள்ளது. கீழாநெல்லி மூலிகை பற்றிய அறிவியல் தமிழ்ச் சித்தர் மருத்துவத்தைச் சார்ந்தது. ஆந்திர மாநிலத்திற்கு வடக்கே கீழாநெல்லி தாவரம் காணப்பட்டதில்லை. ஆனால் கீழா நெல்லி ஹெபடைடிஸ்-ஙி கிருமித் தொற்றை முற்றாக நீக்க வல்லது. இந்த தன்மையை ஆய்வு செய்து ஆவணப்படுத்திய சென்னைப் பல்கலைக்கழகம் அதை ஆயுர்வேத மருந்தாக பதிவு செய்து லண்டனைச் சார்ந்த ராலிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. கீழாநெல்லி, குப்பைமேனி, தூதுவளை, கொளுஞ்சி இன்னும் இதுபோன்ற பல மூலிகைகளின் பதிவு ஆயுர்வேதத்தின் அடிப்படை நூல்கள் எதிலும் கிடையாது என்பது உண்மை. ஆனால் சித்த மருத்துவம் பதிவு செய்யும் எந்த ஆய்வையும் எவ்வித தயக்கம், தடையுமின்றி ஆயுர் வேதமாக மாற்றிவிட முடிகிறது. தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவனையில் ஆங்கில மருத்துவப் பேராசிரியர் தெய்வநாயகம் அவர்களின் தலைமையில் எய்ட்ஸ் நோய்க்கு 1992-95 ஆண்டுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்த ரசகெந்தி மெழுகு, நெல்லிக்காய் லேகியம், அமுக்கரா சூரணம் மாத்திரை ஆகிய மருந்துகள் பயன்படுத்தப்பட்டு உலகு தழுவிய பல்வேறு மருத்துவ மாநாடுளில் ஏற்றுக் கொள்ளப்பட்டன.  ஆனால் எவ்வித தயக்கமுமின்றி ஆயுர்வேத தயாரிப்பு நிறுவனங்கள் அதற்கு இணையான சமஸ்கிருதப் பெயர் கொண்ட நரசிம்ம கிருதம் (ரஸகெந்திக்கு ஒப்பானது) சியவன பிராஸ் என்ற நெல்லிக்காய் லேகியம், அஸ்வகந்தி என்ற அமுக்கரா மாத்திரை என்று ஆயுர்வேதத்தின் பெயரில் கூட்டு மருந்து சிகிச்சையாக விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வருகின்றன.

இதில் அந்நிறுவனங்களுக்கு எவ்வித தயக்கமோ குற்ற உணர்வோ இல்லை. இது குறித்து சித்த மருத்துவத் துறையினரும் எவரும் கேட்பாரில்லை. இதுபோல் எண் ணற்ற எடுத்துக்காட்டுக்களை கூறமுடியும். தமிழரின் மருத் துவம் சார்ந்த தொல்லறிவு இதுபோல் பலவகைகளில் சூறையாடப்பட்டு வருகிறது. எனவே சித்த மருத்துவத்தின் ஆராய்ச்சி முடிவுகளை ஆவணப்படுத்துவதில் நாம் விழிப் புடன் செயல்பட்டு தமிழ்ச் சித்தர் மருத்துவத்தின் பெயரில் ஆவணப்படுத்துவது மிகுந்த அவசியமாகிறது.

நம் மண்ணில் விளையும் தாவரங்களைப் பற்றிய அறிவு நமது கிராம மக்களின் அறிவு. மூலிகைகளைப் பற்றிய அறிவு நம் மூதாதையரின் அறிவு. இயற்கை மருத்துவம், ஒகம் வர்மம் பற்றி அறிவு தமிழ்ச் சித்தர்களின அறிவு. ஆனால் இவையாவும் சித்த மருத்துவத்தினின்றும் அந்நியப் படுத்தப்பட்டுவிட்டன. இவ்வறிவைச் சந்தைப் பொருளாக மாற்றி இதன் மூலம் கோடிக்கணக்கில் பொருள் ஈட்டுவது யார்? தமிழ் மக்களோ, தமிழ்நாடோ, தமிழ் இனத் தொழில் அதிபர்களோ அல்லர்.எல்லாம் பன்னாட்டு வட நாட்டுப் பெருமுதலாளிகளே.

எனவே பற்ப, செந்தூரங்களின் நானோ தொழில் நுட்பத்தையாவது தமிழ்ச் சித்தர் மருத்துவத்தில் ஆவணப் படுத்த தமிழ் மொழி, இன, பண்பாட்டு உணர்வுடன் கூடிய  அமைப்புகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதைச் செய்து முடித்தபின் தமிழ்ச் சித்தர் முறை என்ற பெயரில் வணிக மயமாக்குதல் வேண்டும். இப்பணியை மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் “தமிழ்நாடு சிறுதொழில் சித்த மருந்து உற்பத்தியாளர் சங்கம்” (TANSIDMA) மேற்கொண்டுள்ளது. மதுரை சித்தா கிளஸ்டர் என்ற பெயரில் MSME யின் தொடக்க நிலை ஏற்பிசைவினையும்  (Priliminary Approval) பெற்றுள்ளது. அதற்கான பணிகள் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிக்கு உலகெங்கிலுள்ள தமிழ் மொழி, இன, பண்பாட்டு ஆர்வலர்கள் எந்தவகையில் துணைபுரிய முன்வந்தாலும் அதை விரும்பி ஏற்றுக் கொள்ள TANSIDMA சங்கமும், சித்தா கிளஸ்டருக்கானமும் Consortium- மும் ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் உள்ளன..

Pin It