உலக சினிமா வரலாறு மறுமலர்ச்சி யுகம் : 20

மனித மனத்தின் ஆழங்களை யார் அளக்கமுடியும், ஆனால் தூய இலக்கியம் அதைத்தான் செய்கிறது என்றார் ருஷ்ய இலக்கியவாதியும் சாகாவரம் படைத்த 19ஆம் நூற்றாண்டு எழுத்தாளனுமான தஸ்தாயேவெஸ்கி. அவரைப் போலவே திரைப்படம் எனும் அரிய கலையில் இப்பாதையில் பயணித்த மிகப் பெரும் கலைஞன் இங்மர் பெர்க்மன். மனிதனை அழுத்தும் துன்பங்களையும் அவற்றிற்கும் கடவுளுக்குமான இடைவெளிகளும்தான் இவரது அனைத்து திரைப்படங்களின் மையப்புள்ளி என்றாலும் அவற்றை உயர்ந்த கலைப்படைப்பாக மாற்றிய மேதமைதான் இவரை சினிமாவரலாற்றில் தடம் பதிக்கவைத்துள்ளது. எவ்வளவுக் கெவ்வளவு தனது தேடலில் அவர் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டாரோ அதே தீவிரத்தையும் உழைப்பையும் தன் கலைத்தன்மைக்கும் செலவிட்டு தன்னை உறுதியான இடத்தில் தக்கவைத்துக்கொண்டது இவரது தனிச்சிறப்பு.

1918 இல் ஸ்வீடனில் ஒரு தீவிர கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்த பெர்க்மன் தன் சிறுவயதில் ஒரு அழகான சிறைக்குள் வளர்ந்தார். அந்தச்சிறை அவரது கத்தோலிக்க மதம், அவரது தந்தை எரிக் ஒரு மத போதகராக இருந்த காரணத் தால் தேவாலயங்கள், பிரம்மாண்ட மான மதில்சுவர்கள், அமைதியான உருக்கள், தாழ்ந்த விதானங்கள்,மெழுகுவர்த்திகள், மணியோசைகள் தேவ கீர்த்தனைகள், தேவதைகள் மற்றும் சாத்தான்கள் என மதம் அவரை வேறு கவனங்களுக்குத் திசை திருப்பவிடாமல் ஜன்னல்களை இறுக்க அடைத்திருந்தது மட்டுமல்லாமல் தந்தையின் கண்டிப்பான குரல் பால்யத்தில் அவருடைய மனதில் வடுக்களாக ஆழ பதிந்துபோனது. இன்று தன் திரைப்படங்களில் காணப்படும் சோகத்திற்கும் அழுத்தங்களுக்கும் மூலபடிமம் இங்கிருந்துதான் எடுத்தாளப்பட்டது என பெர்க்மெனே பின்னாளில் தன் திரைப்படங்கள் குறித்துக் கூறுமளவிற்கு அவரது பாதிரி தந்தையான எரிக் மூர்க்கமான மதவெறியராகவும் கண்டிப்பான கணவனாகவும், தகப்பனாகவும் இருந்தார்.

இதன் காரணமாகவே எட்டு வயதிலேயே அவருக்கு மதத்தின் மீது வெறுப்பு தோன்றத் துவங்கியது. இந்த வெறுப்பே அவருக்கு கலைகளின் மீதான நாட்டத்தைத் திசை திருப்பியது.

அப்போது அவருக்கு வடிகாலாக இருந்தவை பொம்மைகள்தான். விதவிதமான பொம்மைகளைச் செய்து அவற்றை கதாபாத்திரங்களாக மாற்றி தனக்குத்தானே ஒரு பொம்மலாட்டம் நடத்திப் பார்ப்பது அவருக்குப் பிடித்தமான பொழுது போக்கு. இந்த ஆர்வம் அவரை கொஞ்சம் கொஞ்சமாக உந்தித்தள்ளி நாடகக்கொட்டை களின் வாசலில் கொண்டுபோய் நிறுத்தியது. ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முழுவதுமாக முடிக்கும் முன்பே எண்ணற்ற நாடகங்களுக்குக் கதைவசனம் எழுதி, உதவி இயக்குனராகவும் பணிபுரிந்திருந்தார்.

கஸ்பரின் மரணம் . இதுதான் 1942ல் இவர் இயக்கத்தில் தயாரான முதல் நாடகம். அடுத்த இரண்டு வருடங்களில் மேலும் சில நாடகங்களை உருவாக்கிய பெர்க்மனைத் திரையுலகம் சுலபமாக சுவீகரித்துக்கொண்டது. ஆல்ப் சோஜ் பர்க் எனும் இயக்குனரின் ஹெட்ஸ் எனும் படத்தில் உதவியாளராகத் தன் வாழ்க்கையைத் துவக்கிய பெர்க்மன் படத்தின் திரைக்கதைக்கும் பொறுப்பு வகித்தார். ஒரு கண்டிப்பான ஆசிரியரைப் பற்றின கதை இது. இதனாலேயே வெளிப்புறக் காட்சி களின்போது பெரும்பாலும் பெர்க்மெனே இயக்கவும் நேரிட்டது. இப்படத்தின் உலகளாவிய வெற்றி காரணமாக அடுத்தவருடமே பெர்க்மன் தன் முதல் திரைப்படத்தை இயக்க ஆரம்பித்தார். அடுத்த பத்து வருடங்களில் அசுரவேகத்தில் கிட்டதட்ட பன்னிரண்டு திரைப்படங்களைப் பெர்க்மென் இயக்கியிருந்தார். அனைத்துமே தனிமை, அந்நியமாதல் என இருப்பின் தீராத வலியைப் பற்றிப் பேசும் திரைப்படங்களாக அமைந்திருந்தன. இவையனைத்துமே அவரது முழுமை எனும் உயரத்திற்கு அழைத்துசெல்லும் படிக்கட்டு களாகவே அமைந்திருந்தன.

1955இல் இவர் இயக்கத்தில் வெளியான ஸ்மைல்ஸ் ஆப் சம்மர் நைட் எனும் திரைப்படம்தான் பெர்க்மனின் முழு ஆளுமையை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியது. இந்த வெற்றியும் அங்கீகாரமும் அவரை அடுத்தடுத்த மகத்தான இரு வெற்றிகளை அடுத்தடுத்த வருடங்களில் உருவாக்க வைத்தது. தி செவன்த் சீல் (The seventh seal) மற்றும் வைல்டு ஸ்ட்ராபெர்ராஸ் (Wild strawberries) ஆகியவைதான் அந்த மகத்தான இரு காவியங்கள்.

மொத்தம் முப்பத்தைந்தே நாட்களில் தயாரான செவன்த் சீல் உலகின் தலைசிறந்த பரிசான கேன்ஸ் விருதைப் பெர்க்மனுக்கு வாங்கித் தந்தது.

வைல்ட் ஸ்ட்ராபெர்ராஸ் ஐம்பதுகளில் வெளியான உலகின் தலைசிறந்தபடங்களில் ஒன்றாகக் கணிக்கப்பட்டது. உறவுகளின் சிறு சிறு கண்ணிகளினூடே மின்மினிப் பூச்சிகளாய் நம் மனதில் உண்டாகும் மாயங்களின் தொகுப்பாக இப்படத்தைச் சொல்லலாம்.

பெர்க்மனின் படத்தைப் பார்ப்பதற்கு நமக்கு மொழி அவசியமில்லை. அவர்கள் என்ன பேசுகிறார்கள் கதை எங்கே நகருகிறது என்ற கேள்விகளுக்கு நமக்குப் பயன்படாது. அவரது காட்சிகளை உள்வாங்குவதற்கு இரண்டு கண்களும் அவரது உலகத்திற்குள் நம்மை விரல்பிடித்து அழைத்துசெல்லும் அந்த இசையைக் கேட்பதற்கு இரண்டு காதுகளும் மட்டும் நமக்குப் போதுமானது. நம்மை அறியாமல் நாம் வேறு உலகத்திற்குள் மனித மனங்களின் இருண்மைக்குள் அலைவதை உணரமுடியும். வைல்ட் ஸ்ட்ராபெர்ராஸ் அத்தகையதொரு படமாக அமைந்தது. இறப்புக்காகக் காத்திருக்கும் வயோதிகனின் மனதுக்குள் செல்லும் காமிரா நம்மை தனிமையின் ஆழத்துக்குள் அழைத்துச் சென்றுவிடுகிறது. பெர்க்மன் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக நின்றது.

இதனைத்தொடர்ந்து த்ரூ த கிளஸ் டார்க்கி, தி சைலன்ஸ் , பெர்சோனா, வெர்ஜின் ஸ்பிரிங் க்ரைஸ் அண்ட் விஸ்பர்ஸ், போன்ற மகத்தான காவியங்கள் பெர்க்மனின் கைவண்ணத்தில் உலக சினிமாவுக்கு மாபெரும் நன்கொடையாகக் கிடைத்தன.

பெர்க்மனின் திரைப்படங்களின் வெற்றிக்குச் சரிவிகிதமான பங்களிப்பைத் தந்திருப்பவர். 1953க்கு பிறகான அவரது எல்லாப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் சாம் நிக்விஸ்ட் நிக்ச்விஸ்டின். இவரின் ஒளிப்பதிவுக்குள் பல தந்திரங்கள் கட்டுண்டு ஒளிந்துகிடப்பதை ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளன் கண்டுணரமுடியும்.

பெர்க்மன் தனது திரைப்படங் களுக்கு உலகமெங்கும் வரவேற்பைக் கண்டபோதிலும் தன் சொந்த நாடான ஸ்வீடனில் அவர் தொடர்ந்து அவமானப் படுத்தப்பட்டு வந்தார்.

ஸ்வீடனின் சக இயக்குனர்கள் அவர் மேல் கடும் விமர்சனங்களை வைத்தனர். அவர்களுள் எனும் இயக்குனர் ஒருபடி மேலேபோய் 1962இல் “பெர்க்மன், உன்னுடைய படங்கள் பழைய பனைமட்டையாக இருக்கின்றன பார்க்க சகிக்கவில்லை தயவு செய்து உன் வாழ்க்கையில் ஒரு நல்ல படமாக எடுத்துவிடு” எனும் வாசகங்கள் கொண்ட துண்டுபிரசுரத்தை ஸ்வீடனில் விநியோகித்தார்.

இதுமட்டுமல்லாமல் 1976 இல் அவரது வீட்டினுள் திடுமென புகுந்த போலிசார் அவரைக் கைது செய்தனர். கேட்டதற்கு அவர் வருமானவரி கட்டவில்லை என காரணத்தைச் சொன்னார்கள். இதனால் பெரும் மன உளைச் சலுக்கு ஆளான பெர்க்மன் தீவிர நரம்புத்தளர்ச்சி நோய்க்கு ஆளானார். பின் தனக்கிருந்த ஸ்டுடியோக்களை மூடிவிட்டு ஸ்வீடனை விட்டேவெளியேறி ஜெர்மனியில் உள்ள ம்யூனிச்சிற்கு சென்று தனக்கென வீட்டைத் தேடிக்கொண்டார்.

இந்தப் பிரச்சனைகளுக்குப் பிறகு 1983இல் தனது பால்ய வாழ்க்கையை அடியற்றி எடுத்த ‘பேனி அண்ட் அலெக்ஸாண்டர்’ எனும் திரைப்படம் உலகளவில் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றதோடு அவரது வாழ்நாளின் மிகச்சிறந்த படமாகவும் உருக்கொண்டது. சிறுவயதில் தன் தந்தையிடம் அவர் வாங்கிய பிரம்படிகள் மிரட்சிகள் இவை உண்டாக்கிய மனவலிகளைத் தேர்ந்தெடுத்து பார்வை யாளனுக்குள் மறக்கமுடியாத வடுக்களை நிகழ்த்தினார். நமக்குள் சிறுவயதிலிருந்து அழுத்தப்பட்ட பல்வேறு உணர்வுகளைக் கிளர்ந்தெழச்செய்வதுதான் பெர்க்மனின் வெற்றி. ஆனால் அதற்காக அவர் எப்போதும் மெனக்கெடுவதேயில்லை. படத்தில் எங்கிருந்து அந்த உணர்வு நமக்குள் தோன்றுகிறது என்பதை நாமறியாவண்ணம் நம்மை நம் மேல் விழுந்த அடிகளை உணரச் செய்வதுதான் பெர்க்மன் எனும் மகத்தான கலைஞனின் வெற்றியாக உலகசினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர்.

பிற்பாடு மீண்டும் ஸ்வீடனுக்குள் பெர்க்மன் திரும்பிய போது அரசாங்கம் பெரும் குற்றவுணர்ச் சியுடன் அவரை வரவேற்று அவர் பெயரில் ஒரு திரைப்படப் பயிற்சி நிறுவனத்தையும் உருவாக்கியது.

1988 இல் தனது வாழ்க்கை வரலாற்றை மேஜிக் லாண்டர்ன் எனும்பெயரில் எழுதிய பெர்க்மன் 1993 இல் பெஸ்ட் இண்டென்ஷன்ஸ் எனும் பெயரில் நாவல் ஒன்றையும் எழுதினார். பிற்பாடு சினிமாவுக் கான திரைக்கதையாகவும் இதை வடித்தார். அவரது தாய்க்கும் தாமஸ் எனும் பாதிரியாருக்கு மிடையில் நடந்த ஒரு உறவை அடிப்படையாக வைத்து அவர் இந்தக் கதையை எழுதியிருந்தார்.

பெர்க்மனின் திரைப்படங்கள் ஆஸ்கார், கேன்ஸ், கோல்டன் குளோப், பாப்டா, பெர்லின் தங்க கரடி உள்ளிட்ட உலகின் பல மூலைகளில் பலவிருதுகளை அள்ளிக்குவித்துள்ளன.

1995 இல் தன் 77ஆம் வயதில் Ingird von Rosen என்ற விதவைப் பெண்ணை அவர் திருமணம் செய்த போது அவருக்கு அது முறைப்படி ஐந்தாவது திருமணம். இதற்கு முன்பான நான்கு மனைவிகளையும் சேர்த்து அவரது குழந்தைகள் எண்ணிக்கை பலவாக இருந்தாலும் மொத்தம் 12 குழந்தைகளை மட்டுமே அவர் தன் வாரிசுகளாக அங்கீகரித்துள்ளார்.

அவரது அனேகப் படங்களில் நடித்த உலகப்புகழ் நடிகையான லிவ் உல்மன் தானாக விரும்பி தாய்மை அடைந்து ஒரு குழந்தைக்குத் தாயானார்.

உலகசினிமாவில் ஆச்சர்யமூட்டும் ஒற்றுமையாக விமர்சகர்கள் இவரையும் மைக்கேல் ஏஞ்சலோ ஆண்டனி யோவையும் கருதுகின்றனர். காரணம் இருவரது வாழ்க்கையும் ஒரே தன்மையுடையன. பலவிடயங்களில் இருவருக்கு மிடையே காணப்பட்ட ஆச்சர்யமான ஒற்றுமை இவர்களது மரணத்திலும் தொடர்ந்தது..

ஜூலை 30, 2007, ஒரே நாளில் இருவரது மரணச்செய்தியும் அடுத்தடுத்து வந்து உலகசினிமா ரசிகர்களையும் பார்வையாளர் களையும் ஒருசேர அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அமரத்துவம் வாய்ந்த பெர்க்மனின் படங்களை நாம் இன்றும் பார்க்கும் போது அவர் நம் முதுகின் பின்னால் இருப்பதை அவரது படங்களின் மூலமாக உணரமுடியும் .

(தொடரும் )

-அஜயன் பாலா
Pin It