அகன்றோடிய நீர்ப்பரப்பின்
பாதையில் இப்போது
எனது கால்கள்
கழித்தோடிய அதன் காலத்து
குளிர்மை பாதம் கிள்ள
மெல்லிய சிலிர்ப்பில் உறைகிறத தேகம்
கரைகளின் வனாந்திரத்தில்
எழும் நுண்அரவம்
காதுகளினுள் உலாவ
மாயத்தின் சலசலப்பில் தொலைகிறது மனம்
மோதித்தெறித்த
நீரின் சாட்சிகளாக
உயிர்ப்பை
சுமந்து கிடக்கும் கூழாங்கற்களில் படிகிறது.
துள்ளலின் குரல்
பெரும் வழி நீளும் திசை முழுக்க
ஓடியோடிக் காட்சிகள் புசித்து சொரிகின்றன கண்கள்
எங்கோ தொலைத்த
தன் இசையை தேடிவரும்
பறவைகளோடு சிநேகித்து
காட்டின் பாடல் எழ
நீரின் பிரவாகத்தில்
உருண்டோடி சுயமழிந்து
நிலம் பாய்கிறேன்
சற்று பொற
என் நண்பனே
உனக்கு நானே வருகிறேன்
நதியாக.. !!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.