இந்நிகழ்வின் அறிவியல் முக்கியத்துவமும்  வரலாற்றுப் பின்னணியும்

17-ஆம் நூற்றாண்டில் கெப்ளரது கோள்களின் விதிகள் மற்றும் நியூட்டனின் இயக்க விதிகளைப் பயன்படுத்தி சூரியக் குடும்பத்தின் அளவினை ‘வானவியல் அலகின்’  வாயிலாகக்  கணித்தனர். வானவியல் அலகு (Astronomical Unit or A.U) என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட சராசரி தொலைவாகும்.  மேற்கூறிய விதிகள் சூரியக் குடும்பத்தின் கோள்களின் தொலைவை வானவியல் அலகில் கணித்தன.  ஆனால் வானவியல் அலகு என்பதன் அளவைக் கணிக்க இயலவில்லை.  18 ஆம் நூற்றாண்டில்  இந்த  அளவைத்துல்லியமாகக் கண்டறிய கடும் முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டன.  இந்த அலகில் ஏதேனும் தவறு நேரிட்டால், பேரண்டத்தின் அள வைக் கணிக்கையில் அந்தத்தவறு பல்கிப் பெருகிவிடும் அச்சம் இருந்தது.

17 ஆம் நூற்றாண்டில்  வெள்ளி  மற்றும் புதன் கோள்கள் 1631  ஆம் ஆண்டில்  சூரிய வட்டைக் கடப்பதைக் காண இயலும் என கெப்ளர் கணித்தறிந்தார். எனினும் 1631-ல் நிகழ்ந்த வெள்ளியின்  சூரியக்  கடப்பு  ஐரோப்பிய நாடுகளில்  புலப்படாத காரணத்தால் யாரும் அதனைக் காணவில்லை. பின்னர் ஜெரேமியா ஹாரக்ஸ்  எனும் இளம் ஆங்கிலேயர் 1639-ல் மீண்டும் ஒரு முறை வெள்ளியின் சூரியக் கடப்பு நிகழும் எனக் கணித்தார். அதனை உடனடியாக உலகிற்குத்தெரிவிக்க இயலாததால்   அவரும்  அவரது நண்பரான  வில்லியம் கிராப்ட்ரீ என்பவரும் மட்டுமே 1639-ல் வெள்ளி யின் சூரியக்கடப்பினைக் கண்ணுற்றனர்.  இதன் மூலம் வெள்ளிக் கோளின் சூரியக் கடப்பினை முதன் முதலில் பார்த்தவர்கள் எனும் வரலாற்றுச் சிறப்பை இவர்கள் பெற்றனர்.

பின்னர் 1677-ல் புதன் கோளின் சூரியக் கடப்பை எட்மண்ட் ஹாலி  கண்டார்.  இதன்மூலம், வெள்ளிக்கோளின் சூரியக் கடப்பின் உதவி கொண்டு பூமிக்கும் சூரியனுக்கு முள்ள தொலைவைக் கண்டறிய முடியும் என்று உணர்ந்தார். பூமியின்  பல்வேறு பகுதிகளிலிருந்து வெள்ளியின் சூரியக் கடப்பை  ஆய்வு செய்து வெள்ளியின் கோண மாற்றத்தை (Parallax) அளப்பதன் மூலம் வானவியல்  அலகின் அளவைக் கண்டறியும் முறையையும் அவர் வகுத்தார். இதன் பின்னர் 1761, 1769, 1874 மற்றும் 1882ல் நிகழ்ந்த வெள்ளியின் சூரியக் கடப்பின்போது உலகெங்கும் வானவியல் அலகின் அளவைக்காணும் பெரு முயற்சி வானவியலாளர்களின் ஒன்றிணைந்த உழைப்பால் நிகழ்ந்தது..

கருந்துளி விளைவு

வெள்ளியின் சூரியக்கடப்பைப் பயன்படுத்தி வானவியல் அலகைக் கண்டறியும் முயற்சியால் மிகவும் முக்கியமான பகுதி வெள்ளிக்கோள் சூரிய வட்டினுக்குள் முழுமையாகச் சென்றடையும் நேரத்தைக் கண்டறிவதாகும்.  இதனை இரண்டாம் தொடுநிலை   (II  contact) அல்லது (Interior Ingress)  என்பர் .

பூமியிலிருந்து தொலைநோக்கி மூலம் இந்த நிகழ்வை ஆராயும்போது இந்தக் கட்டத்தைக் கடந்து சற்று உட்புறமாக வெள்ளிக்கோள் நகர்ந்த பின்னரும் சூரிய வட்டின் விளிம்புடன் கரிய     இணைப்பு ஒன்று தோன்றி ஒரு கருப் புத்திரவத்துளி போன்ற தோற்றத்தை   உருவாக்கியது.  இதனைக் கருந் துளி விளைவு (black  drop effect) என்பர்.

நாம் காணும் சூரிய வட்டின் ஓரத்திலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் சூரியனின் வளிமண்டலத்தில் அதிகத்தொலைவு பயணம் செய்வதால் ஏற்படும் சூரிய விளிம்புக் கருமையும்  (limb darkening) பூமியின் வளிமண்டல  மாற்றங்களால் தோன்றும் ஒளிவிலகல் விளைவும் இணைந்து கருந்துளி விளைவைத்தோற்றுவிக் கின்றன.  இந்த விளைவின் காரணமாக சூரிய வட்டினுள் மிகச் சரியாக எந்த நேரத்தில்  வெள்ளிக் கோள் நுழைந்தது என்பதனைக் கண்டறிவதில் பிழை  நேரிட்டது.  இதன் காரணமாக வானவியல் அலகைத் துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை.  1882-ஆம் ஆண்டு நிகழ்ந்த வெள்ளியின் சூரியக்கடப்பின்போது பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு சைமன் நியூகோம்ப் என்பவர், வானவியல்  வானவியல் அலகு என்பது 149.59 ± 0.31 மில்லியன்  கிலோ மீட்டர்  எனக்கணித்தார்.

என்றபோதும் சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர் அளவுக்கு இந்த அளவில் தவறிருக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதப்பட்டது.  ரேடார் அலைகளை சூரியனுக்குச்  செலுத்தி, அவை சென்று திரும்பும்  நேரத்தைக் கணித்து தற் காலத்தில் சூரியனின் தொலைவு கணக்கிடப் படுகிறது.  இதன்படி சூரியன் தொலைவு 149, 597, 870.691 ±  0.030 கிலோமீட்டர்   என்று அறியப் பட்டது.  இதில்  வேறுபாடு  30 மீட்டர்  அளவே யிருக்கும் என்பது குறிப்பி டத்தக்கது.  என்ற போதும் ரேடார் தொழில் நுட்பம் இல்லாத அக் காலத்தில்  வெள்ளியின் சூரியக்கடப்பின் மூலம் நம் முன்னோர் கள் சூரியனின் தொலைவைக் கண்டறிந்த  கடும் முயற்சி இணையற்றது.  இன்றும் பள்ளிக் குழந்தை கள்  உதவியுடன் சூரியனின் தொலைவு காணும் முயற்சி 2012 ஆம் ஆண்டின் சூரியக் கடப்பின்போது பல்வேறு நாடுகளில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.  இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், வெள்ளி, சூரியன், கோள்களின் இயக்கம், கணிதம் போன்ற பல்வேறு  துறைகளில் அனுபவம் பெறுகின்றனர்.

கண்  பாதுகாப்பு

சூரியனை வெறும் கண்களால் பார்ப்பது மிகவும் ஆபத்தானது.  மேலும் எக்காரணத்தைக் கொண்டும், தொலை நோக்கி அல்லது  பைனா குலர் மூலமோ அல்லது எந்த உருப்பெருக்கு கருவியைக் கொண்டோ சூரியனை நேரடியாகப் பார்க்கக் கூடாது .  அப்படிச் செய்தால் கண் பார்வையை இழக்க நேரிடும்.  சூரியனைக் காண எளிய  ஒரு வழி சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்து பார்ப்பதாகும்.  ஒரு  சிறிய  5 மில்லி மீட்டர் அளவிலான துளையை ஒரு அட்டையில் ஏற்படுத்தி அதன் வழியே ஒரு கண்ணாடியின் உதவி கொண்டு சூரிய ஒளியைப் பாய்ச்சினால் அட்டையின் மறுபக்கத்தில் சற்று தூரத்தில் சூரியனின் பிம்பம் உருவாகும்.  அங்கு ஒரு வெண்ணிற அட்டையைப் பயன்படுத்தி சூரியனின் பிம்பத்தைக் காணலாம்.  இதில் ஒரு சிறு புள்ளிபோல வெள்ளிக்கோள் நகர்வதைக் காணலாம்.

ஒரு சிறிய கண்ணாடியில் சிறு துளையிட்ட அட்டையை ஒட்டி சூரியனின் பிம்பத்தை அந்தத்துளை வழியே ஓர் இருண்ட அறையில் அமைந;த வெண்திரையில் பாய்ச்சியும் காணலாம்.  தொலைநோக்கி அல்லது பைனாகுலரின் வழியே வெளிவரும் சூரியனின் பிம்பத்தைத் திரையில் விழச்செய்தும் காணலாம்.  பற்ற வைப்பவர்கள் பயன்படுத்தும் 14-ம் எண்  (Welders glass shade No.14) ஒளி வடிகட்டி கொண்டும் சூரியனைக் காணலாம்.  எனினும் ஒளிவடிகட்டிகளில் கீறல்களோ, துளைகளோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சென்னை பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மையம் பி.எம்.பிர்லா கோளரங்கத்தில்  2004 ஜுன் மாதம் 8 ஆம் நாள் பொதுமக்கள் வெள்ளிக் கோளின் சூரியக் கடப்பினைப் பாதுகாப்பாகக் காண தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு 8 தொலைநோக்கிகள் வாயிலாக சூரியனின் பிம்பத்தைத் திரையில் விழச் செய்து பொதுமக்கள் காணும்படி ஏற்பாடு செய்யப்பட்டது.   காலை 10.45 மணி முதல் மாலை 4.51 மணி வரை அதனை பொது மக்கள் கண்டுகளித்தனர்.  இவ்வரிய காட்சியை   சுமார் 11,000 பேர் கண்டு களித்தனர்.

(அறிவியல் ஒளி - 2012 ஜனவரி இதழில் வெளியான படைப்பு)

Pin It

கருந்துளை(Black hole) என்றால் என்ன?

கருந்துளை என்பது விண்வெளியிலுள்ள வலிமைமிக்கதும் அதிக ஈர்ப்புவிசை கொண்டதுமான ஒரு பொருளாகும். நாமறிந்த பொருட்களிலேயே மிக வேகமாகப் பயணிக்கக்கூடியது ஒளியாகும் (300000 கி.மீ/நொடி). கருந்துளையின் ஈர்ப்புவிசையிலிருந்து ஒளிகூடத் தப்ப முடியாது. ஒளியே கருந்துளையின் ஈர்ப்புவிசையிலிருந்து தப்பமுடியாதென்றால் நாமறிந்த வேறு எந்தப்பொருளும் தப்பமுடியாது.

கருந்துளை என்றவுடன் அது ஏதோ ஒரு துளை என்று நினைத்து விடாதீர்கள்.  அது துளையோ வெற்றிடமோ இல்லை. கருந்துளை என்பது மிகச்சிறிய இடத்தில் அதிகமாக அடக்கி வைக்கப்பட்ட பலபொருட்களின் தொகுப்பாகும். மிகக்குறைந்த இடத்தில் நிறைய பொருட்கள் அதிக அழுத்தத்தில் அடக்கிவைக்கப்படும்போது அவற்றின் ஈர்ப்புவிசை அதிகமாகும். எனவே கருந்துளை தம்மைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களையும் அதிகவிசையுடன் ஈர்க்கும். அதை ஏன் கருந்துளை என்கிறோம் என்கிறீர்களா? கருந்துளைகள் விண்வெளியில் எவ்வித ஒளியையும் வெளிவிடாததாலும் கருநிறத்திலுள்ள ஒருதுளையைப் போன்று தோன்றுவதினாலும் கருந்துளைகள் என அழைக்கப்படுகின்றன.

கருந்துளைகள் எவ்வாறு உருவாகின்றன?

பெரிய விண்மீனின் எரிபொருள் தீர்ந்துவிட்டால்  அவ்விண்மீனால் அதன் எடையைத் தாங்க முடியாது. விண்மீனிலுள்ள ஐட்ரசன்(Hydrogen) அடுக்குகள் விண்மீனின் மீது அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். இவ்வழுத்தத்தினால் விண்மீன் சுருங்கி அளவில் சிறியதாகும். இறுதியில் விண்மீன் அணுவைவிட(Atom) மிகச் சிறியதாகும். ஒரு பெரிய விண்மீன் சுருங்கி அணுவைவிடச் சிறியதாகும்போது அதன் அடர்த்தியும் ஈர்ப்புவிசையும் மிகமிக அதிகமாகிக் கருந்துளை உருவாகின்றது. இந்த மீப்பெரு ஈர்ப்புவிசையால் அது தன்னைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களையும் தன்னுள் ஈர்க்கிறது.

விண்மீன் மிகச்சிறியதாவதால் அதன் எடை குறையுமா?

இல்லை. ஒருவிண்மீன் சுருங்கி கருந்துளையானால் அதன் நிறை குறையாது. சிறிதளவு பஞ்சைக் கையில் எடுத்துக்கொண்டு அதை நன்றாகச்சுருட்டிச் சிறியதாக்கினாலும் அதன் எடை குறையாது அல்லவா? அதைப்போன்றுதான் விண்மீன் சிறியதானாலும் அதன் எடைகுறையாது.

கருந்துளைகள் எவ்வளவு பெரியதாக இருக்கும்?

கருந்துளைகளின் அளவு அவற்றில் எந்த அளவுக்குப் பொருட்கள் உள்ளனவோ அதைப்பொறுத்து வேறுபடும். மிகப்பெரிய வீண்மீன்கள் அழிந்து அவற்றின் எச்சங்கள் கருந்துளைகளாகியுள்ளன. நமது சூரியனைவிடச் சிலமடங்கு பெரிய கருந்துளைகள் உள்ளன. இவை மற்ற கருந்துளைகளோடு ஒப்பிடும்போது அளவில் மிகச்சிறியதாகும்.  சில விண்மீன்மண்டில‌ங்களின்(Galaxy) மையத்தில் சில கருந்துளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை சூரியனுள்ள பொருட்களைக்காட்டிலும் 100 மில்லியன் மடங்குப் பொருட்களையோ அதைவிட அதிகமான பொருட்களையோ கொண்டிருக்கும்.

கருந்துளைகளைப் பார்க்க முடியுமா?

கருந்துளைகளை நம்மால் பார்க்கமுடியாது. ஆனால் விண்வெளியாளர்கள் கருந்துளைகள் உள்ள இடத்தினைக் கண்டறியமுடியும். கருந்துளைகள் தம்மைச் சுற்றியுள்ள பொருட்களை அதிவேகத்தில் இழுப்பதினால் அப்பொருட்கள் அதிகவெப்பமடைந்து X-கதிர்களை வெளியிடும்.  இந்த X-கதிர்களைப் புவியிலிருந்து கண்டறியலாம்.

நம்முடைய பால்வீதியின்(Milky Way) மையத்தில் கருந்துளைகள் உள்ளனவா?

ஆம். நமது பால்வீதியின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை ஒன்று உள்ளது. அது சூரியனைவிட 3 மில்லியன் மடங்கு எடைகொண்டது.  புவியிலிருந்து 24000 ஒளிஆண்டுகள்(Light Years) தொலைவில்உள்ளது. இக்கருந்துளை புவியிலிருந்து  மிகத்தொலைவிலுள்ளதால் அதனால் நமக்கு பாதிப்பு ஏதுமில்லை.

நமது சூரியன் கருந்துளையாக வாய்ப்பு உள்ளதா?

இல்லை.நமது சூரியன் அளவில் மிகச்சிறியது. சூரியன் கருந்துளையாக மாறவேண்டுமானால் அது இப்போது இருப்பதைவிட பலமடங்கு அதிக எடைகொண்டதாகவும் பெரியதாகவும் இருக்கவேண்டும்.

ஆங்கில மூலம்http://coolcosmos.ipac.caltech.edu/cosmic_kids/AskKids/blackholes.shtml , http://www.kidsastronomy.com/black_hole.htm

- வி.நரேந்திரன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

சூரிய மண்டலத்தில் சிறு துண்டுகளாக சுற்றி திரியும் விண்கற்கள் பல உள்ளன. அவை பெரும்பாலும் சூரியனை மையமாகக் கொண்டு தான் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றி வரும் விண்கற்கள் சில வேளைகளில் கிரகங்களில் மோதுவதும் உண்டு.

அவ்வாறான ஒரு மோதலின் போது தான் பூமியில் காணப்பட்ட டைனோசரஸ் போன்ற பழங்கால உயிரினங்கள் அழிந்து போனதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி ராபர்ட் மெக்மில்லன் என்பவர் ஒரு விண்கல்லை கண்டுபிடித்தார். இந்த விண்கல்லுக்கு 2005 YU55 என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது ஏறக்குறைய கோள வடிவில் உள்ளதாகவும் இதனுடைய விட்டம் 400 மீட்டர்கள் (1,300 அடிகள்) இருக்கும் எனவும் கணக்கிட்டுள்ளனர். இது மெதுவாக சுழல்கிறது எனவும் ஒரு முழு சுழற்சிக்கு 18 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதனுடைய மேற்பரப்பு மிகக்கருமையாக காணப்படுகிறது.

வரும் நவம்பர் 8-ம் தேதி 23:28 மணிக்கு (இந்திய நேரப்படி நவ.9 அதிகாலை 04:58 மணி) இந்த விண்கல் பூமிக்கு அருகில் வரவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு அருகில் வருகிறது என்பதால் பயப்பட வேண்டிய தேவையில்லை. அது பூமியின் மீது மோதுவதற்கோ அல்லது வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்துவதற்கோ வாய்ப்பில்லை. குறிப்பாக அதனுடைய ஈர்ப்புவிசை காரணமாக பூமியின் மீது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை.

இந்த விண்கல் தனது சுற்றுப்பாதையில் வரும்போது 3,24,600 கிலோ மீட்டர்கள் (2,01,700 மைல்கள்) வரை பூமியை நெருங்கி வரும் எனக் கணித்துள்ளனர். இது பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தில் 0.85 மடங்கு மட்டுமே. எனவேதான் பூமியை நெருங்குகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். புவியின் வட, தென் பாகங்களிலிருந்து இதனை நன்றாக கவனிக்க முடியும்.

நவம்பர் 4-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை இந்த விண்கல்லை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸாவின் விஞ்ஞானிகள் கோல்ஸ்டன்(Goldstone) என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள டெலஸ்கோப் மூலமும் பியர்டோ ரிகா(Puerto Rico)வில் உள்ள ரேடார் அமைப்புகள் மூலம் தீவிரமாக கண்காணிக்கவுள்ளனர். இதனை ஒளியியல், அகச்சிகப்பு, ரேடார் தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1976-ம் ஆண்டு 2010 XC15 என்ற ஒரு விண்கல் சந்திரனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரத்தைப்போல் 0.5 மடங்குக்கு நெருங்கி வந்தது. அப்போது விஞ்ஞானிகள் அதை கவனிக்க தவறி விட்டனர். எனவே, இம்முறை நெருங்கி வரும் 2005 YU55ஐ மிகத் தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

அடுத்து 2028-ம் ஆண்டு 2001 WN5 என்ற விண்கல் பூமியை நெருங்க உள்ளது. அது சந்திரனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரத்தைப்போல் 0.6 மடங்குக்கு நெருங்கி வரவுள்ளது. எனவேதான் விஞ்ஞானிகள் இம்முறை விண்கல்லை கண்காணிப்பதில் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Pin It

 

ஒவ்வொரு ஆண்டும் பல கிரகணங்கள் வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கிரகணத்தின் போது என்ன நிகழ்கிறது என்பது மக்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, கிரகணத்தின் போது கட்டாயம் பல மேட்டுக்குடி மக்கள் விரதம் இருக்கின்றனர். கொஞ்சம் நடுத்தர வர்க்கமும், கொஞ்சம் விபரம் அறிந்தவர்களும், கிரகணத்தின் போது கருவுற்ற பெண்களை, கிரகண நேரத்தில் வெளியே விட மாட்டார்கள்; யாரும் சாப்பிட மாட்டார்கள். முக்கியமாக, அனைத்துக் கோயில்களின் நடை சாத்தப்படுகிறது. கிரகணம் முடிந்த பின், கோயில்களை கழுவி விடுகின்றனர். மக்கள் குளித்த பின்னரே சாப்பிடுகின்றனர். இந்த விஷயங்கள் எல்லாம் வெயிலில் வருந்தி பாடுபட்டு, உழைத்து உண்ணும், அடித்தட்டு மக்களுக்கு எதுவும் தெரியாது. அது ஒரு பக்கம் இருக்க, உலகில் வாழும் அனைவரும் இப்படித்தான் செய்கின்றனரா? அப்படித்தான் பழக்க வழக்கங்களை நாமும் கடைபிடிக்க வேண்டுமா? கிரகம் பிடிச்சவனே/வளே என்று திட்டுவது, இந்த கிரகணம் பிடிச்ச கிரகணத்தினால்தானா/ காரணத்தினால்தானா ?

 "திருமலை திருப்பதி கோவில் ஜூன் 15 ல் மாலை 6 மணி முதல் ஜூன் 16 அதிகாலை 4.30 வரை மூடப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 15 ஆம் தேதி பகல் 12.53 மணிக்கு சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி கோவில் சுத்திகரிக்கப்பட உள்ளதால் மாலை 6 மணிக்கு கோவில் மூடப்பட்டு தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். மேலும் ஜூன் 16 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் வழிபாட்டிற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் கோவிலில் நடைபெற உள்ள திருப்பாவாடை சேவை ரத்து செய்யப்பட உள்ளது." இந்த தகவல் திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

எது கிரகணம்....?

 lunar_eclipse_1கிரகணம் என்றால் என்ன? இது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல பொருட்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவை நகர்ந்து செல்லும்போது, சில சமயம் ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடலாம். அப்போது அந்த வான் பொருள், நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும். இந்நிகழ்வு, சூரிய குடும்பத்துக்குள் நிகழும்போது, மறைக்கப்படும் பொருளின் பெயரை வைத்து, அதன் கிரகணம் என்று சொல்லப் படுகிறது. கிரகணம் என்பது சமஸ்கிருத சொல். இதனை நாம் சூரிய மறைப்பு, சந்திர/நிலா மறைப்பு என்றும் சொல்லலாம்.

 2011 , ஜூன் முதல் தேதியிலிருந்து ஜூலை முதல் தேதிக்குள் (30 நாட்களுக்குள்) வானம் நமக்கு மூன்று அற்புதமான விருந்தினை படைக்கிறது..! ஆமாம். ஜூன் முதல் தேதி அன்று, பகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்போது, ஜூன் 15 ம் நாள் 2011ம் ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் உருவாக உள்ளது. இந்த முழு சந்திர கிரகணத்தின் போது, முழு நிலா நாளில், நிலவு முழுமையாக நம் கண்களிருந்து மறைக்கப்பட்டு விடும். அது மட்டுமல்ல, இந்த நூற்றாண்டின் மிகக் கருமையான சந்திரக் கிரகணம் இதுதான் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் ஒரு விருந்து..! அடுத்து ஜூலை முதல் தேதி மீண்டும் பகுதி சூரிய கிரகணம்..!

சூரிய குடும்பம், ஒரு மணல் துகள் போல, பால்வழி மண்டலத்தை 22 1/2 கோடி ஆண்டுகளில் ஒரு சுற்று சுற்றி முடிக்கிறது.

 பூமி, தன் துணைக் கோளான சந்திரனையும் இழுத்துக் கொண்டே சூரியனைச் சுற்றிகொண்டிருக்கிறது. சந்திரனும் தனது கோளான பூமியை, பூமியை 29 1/2 தினத்தில் சுற்றுகிறது. அது மட்டுமல்ல. சூரியனாவது சும்மா இருக்கிறதா? சூரியனும் கூட தனது தாய் வீடான பால்வழி மண்டலத்தை(MilkyWay galaxy), தனது குடும்ப உறுப்பினர்களான கோள்கள், துணைக் கோள்கள், குள்ளக் கோள்கள், குயிப்பர் வளையம், ஊர்ட் மேகம், மற்றும் வால் மீன்கள் என தனது அனைத்து குஞ்சு குளுவான்கள் படை சூழ நொடிக்கு சுமார் 250 -270 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த நிகழ்வு முடிய சுமார் 22.5 கோடி ஆண்டுகள் ஆகும். இதுவே ஒரு பிரபஞ்ச ஆண்டு என்றும் சொல்லப்படுகிறது

அனைத்து கோள்களும், சற்றே சாய்ந்த நிலையில்

 பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்ளது. சூரியன் தன் அச்சில் 7 பாகை சாய்வாக சுற்றுகிறது. சந்திரனும் கூட, 5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது. இந்த காலகதியில், பூமி, சூரியன் மற்றும் சந்திரன் இவை மூன்றும் எப்போதாவது, ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அப்படி அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, ஏதாவது ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. இதுதான் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. ஏனெனில் சந்திரன் தன் அச்சில் 5 டிகிரி சாய்வாக சுற்றுவதால், இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் சாத்தியக் கூறு எல்லா அமாவாசை/முழுநிலா நாளிலும் ஏற்படுவது கிடையாது. எனவே, எல்லா முழு நிலா நாளிலும் கிரகணம் ஏற்படுவதில்லை. அது போல எல்லா அமாவாசை தினத்திலும், சூரிய கிரகணமும் உருவாவதில்லை.
 
 lunar_eclipse_2

சூரியனுடன் ஒப்பிடும்போது, சந்திரன் ரொம்ப பொடிசு. அதன் விட்டம், 384,400 கி.மீ மட்டுமே. இதில் சூரியன் சந்திரனைவிட 4,00 மடங்கு பெரியது. அதைப் போல பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 400 மடங்கு அதிகம். இந்த அரிதான ஒற்றுமையால் தான், குட்டியூண்டு நிலவும், இம்மாம்.. பெரிய் ..ய் ..ய சூரியனும், பூமியிலிருந்து நாம் பார்க்கும்போது, ஒரே அளவில் தென்படுகின்றன. ௦௦குட்டியூண்டு ..சின்ன நிலா, நம் குடும்ப தலைவரான, மிகப் பெரிய சூரியனை மறைத்து, முழுசூரிய கிரகணம் ஏற்படச் செய்வதும் இதனாலேதான். .
 
 பொதுவாக, ஒரு வருடத்தில், 2-5 சூரிய கிரகணமும், அதிகபட்சமாக 3 சந்திர கிரகணமும் ஏற்படலாம். சில சமயம், ஒரு சந்திர கிரகணம் கூட ஏற்படாமலும் போகலாம். ஆனால், ஒரு வருடத்தில் அதிகபட்சம் 7 கிரகணங்கள் தான் வரும். இதில் 4 சூரிய கிரகணமாகவும், 3 சந்திர கிரகணமாகவும் இருக்கலாம். முழு சூரிய கிரகணத்தின், மிக நீண்ட நேரம் என்பது 7.5 நிமிடங்கள் மட்டுமே. எப்போதும் வட, தென் துருவங்களில், பகுதி சூரிய கிரகணமே தெரியும். நிலநடுக்கோட்டு அருகே கிரகணம் நிகழும்போதுதான் முழு சூரிய/சந்திர கிரகணம் உண்டாகிறது. ஒரே மாதிரியான சூரிய கிரகண நிகழ்வுகள், (நேரம், வகை போன்றவை). 18 வருடம் , 11 நாட்கள் (6.585.32 நாட்கள்) நிகழும். இதற்கு சாரோஸ் சுழற்சி(Saros cycle) என்று பெயர். பொதுவாக, கிரகணம் சூரிய உதயத்தில் துவங்கி, பூமியின் ஏதாவது ஒரு பாதியில் சூரியன் மறையும் போது முடிவடைகிறது. ஒரு வருடத்தில் பூமியில், எங்காவது இரு இடங்களில் கட்டாயம் சூரிய கிரகணம் நிகழும். இந்த கிரகணத்தில், கிரகண நிழலின் வேகம் 1,770 கி.மீ./மணி நிலநடுக்கோட்டுக்கு அருகில். ஆனால் துருவங்களில், கிரகண வேகம் பொதுவாக 8,046 கி .மீ/மணி. முழு சூரிய கிரகணம் 1 .5 வருடங்களுக்கு ஒரு முறை வருகிறது. சூரிய கிரகண பாதையின் அகலம் 269 கி.மீ. பகுதி சூரிய கிரகணம், பூமியின் மற்ற இடங்களுக்கு, முழு கிரகண பாதை தாண்டி 4,828 கி.மீ தூரம் வரை தெரியும்

முழு சந்திர கிரகணம்

 ஜூன் 15 ம் நாள் நமக்கு காட்சி அளிக்கப் போவது, முழு சந்திர கிரகணம். பொதுவாக முழு சந்திர கிரகணத்தின் முழு மறைப்பு நேரம் (Totality) அதிக பட்சம் 107 நிமிடங்கள். ஆனால், பூமியில் நிழல் சந்திரனைத் தொடுவதிலிருந்து, சந்திரனின் அடுத்த எதிர் முனையில் விடுவது வரை உள்ள நேரம் சுமார் 4 மணி நேரம் வரை நீட்டிக்கலாம். பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்தான் கிரகண நேரத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி. ஏனெனில், சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றுவதால், சில சமயம் அண்மையிலும், சில சமயம் சேய்மையிலும் காணப்படும். சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் (சேய்மையில்) இருந்தால், அதன் சுற்று வேகம் மெதுவாக இருக்கும்.எனவே, முழு மறைப்பு நேரத்தின் கால அளவும் இதனால் அதிகரிக்கும்.

 இந்த ஆண்டின்(2011) முதல் சந்திர கிரகணம் ஜூன் 15 ம் நாள் நிகழ உள்ளது. ஜூன் 15ம் நாள் வரவுள்ள சந்திர கிரகணத்தின் முழு மறைப்பு நேரம் சரியாக 100 நிமிடங்கள். இது சந்திரனின் உயர் சந்திப்பு பகுதியில், தெற்கு ஒபியுக்கசுக்கு(southern Ophiuchus)அருகில், மேற்கு லாகூன் நெபுலா(Lagoon Nebula ,M8)க்கு 7 பாகையில் நிகழவுள்ளது. இங்கே, சந்திரனில் கருமைப் பகுதி/முழு மறைப்பு நேரம் 100 நிமிடங்கள் அதிகமாக நீட்டிக்கும். இதற்கு,முன் ஜூலை 2000 ஆண்டில்தான், இந்த மாதிரி நீண்ட கிரகணம் வந்தது. இந்த முழு கிரணத்தின்போது சந்திரன், நொடிக்கு ஒரு கி. மீ வேகத்தில் கிரகண பகுதியை கடக்கும். கிரகணத்தின் போது, அதன் நிழல் விழும் பகுதியின் கருப்பு மற்றும் கருமை குறைவான பகுதிகளை, முறையே, அம்பரா(Umbra), பெனும்பரா(Penumbera) என்று சொல்கின்றனர். சூரிய ஒளியே படாத பகுதி அம்பரா. சூரிய கதிர்சிதறல் படும் பகுதி பெனும்பரா. சூரிய உதயம்/மறையும் சமயத்தில், சந்திர கிரகணத்தைப் பார்க்க நேரிட்டால், சூரியன் , சந்திரன் இரண்டும் எதிரெதிர் திசைகளில் அற்புதமாய் தெரியும். இந்த ஆண்டு, ஜூன் 15ம் நாளில் நிகழ உள்ள கிரகணம் இந்த வகையைச் சேர்ந்தது. இந்த மாலை மயங்கும் வேளையில், நாம் ஒரே நேரத்தில் சூரிய மறைவையும், சந்திர உதயத்தையும் தொடுவானுக்கு அருகில் பார்க்கும்போது, செலனோஹிலியன்(selenehelion ) என்ற நிகழ்வு உண்டாகிறது. மேலும் இந்த சமயத்தில் இப்படி சூரிய மறைவு மற்றும் சந்திர உதயத்தில் சூரிய, சந்திரனுடன், மாலை வேளையில் சந்திர கிரகணம் தெரிவதை படுக்கைவச கிரகணம் என்றும், சொல்கின்றனர்.
 
ஜூன் 15 நிகழவுள்ள இந்த கிரகண நேரம்:

lunar_eclipse_3முழு சந்திர கிரகணம்.. துவக்கம் முதல்.. முடிவு வரை
பெனும்பரா(Penumbra) கிரகணம் துவக்கம்: 17 .24 .34 UT.
பகுதி சந்திரகிரகணம் துவக்கம்: 16 .22 .56 UT
முழு மறைப்பு துவங்குநேரம்:
அதிக பட்ச முழு கிரகணநேரம்:
பகுதி கிரகணம் முடியும் நேரம்:
பெனும்பரா கிரகணம் முடியும் நேரம் :
கிரகண நேரம்:
முழு மறைப்பு நேரம் : 1 மணி, 40 நிமிடம்,52 நொடிகள்
பகுதி கிரகண நேரம்...: 3 மணி, 39 நிமிடம்,58 நொடிகள்.
பெனும்பரா கிரகண நேரம்: 5 மணி,39 நிமிடம், 1 வினாடி.
இந்திய நேரப்படி,2011 , ஜூன் 15 ன், முழு சந்திர கிரகணம்:
 பெனும்பரா பகுதிக்குள் : இரவு 10 மணி, 52 நிமிடம், 52 நொடி .ஜூன் 15
. கருமைநிற பகுதி சந்திர கிரணத்துக்குள்:11 மணி,52 நிமிடம், 24நொடி
 முழு மறைப்பு கிரகணம் :இரவு ௦0.மணி,51 நிமிடம், 57 நொடி ..ஜூன் 16
அதிக பட்ச கிரகணம் . ....:விடிகாலை,1 மணி,42 நிமிடம்,24 நொடி ஜூன் 16
 முழு மறைப்பின் முடிவு..:காலை 2 மணி, 32 நிமிடம்,50 நொடி
கருமை நிற பகுதி கிரகணம் முடிவு:ஜூன் 16 காலை, 3மணி, 32 நிமிடம், 22 நொடி
நிலா பெனும்பராவை விட்டு விலகுவது: ஜூன் 16 , விடிகாலை, 4 மணி, 32 நிமிடம், 02 நொடி.

அரிதான.. மிக .. இருண்ட.. சந்திர.. கிரகணம்..!
 
 இந்த ஆண்டு ஜூன் 15 ம் நாள் ஏற்பட உள்ள முழு சந்திர கிரகணம் ஓர் அரிதான நிகழ்வே..! ஏனெனில் இந்த கிரகணத்தின் போது , சந்திரன் பூமியின் மைய நிழலை ஒட்டி பயணிக்கும். இது போலவே ஒரு முழு சந்திர கிரகணம், கி.பி. 2000 ஆண்டு, ஜூலை 16 ல் உண்டானது. இனி இதனை ஒத்த முழு சந்திர கிரகணம், கி.பி.2018 , ஜூலை 27 ம் நாள்தான் வரும். இந்த கிரகணத்தை முழுமையாக, உலகின் பாதி மக்கள் பார்த்து மகிழலாம். இது ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா முழுமைக்கும் தெரியும். தென்னமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இக்கிரகணம், துவங்குகிறது. மேற்கு ஆசியா , ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்சில், ஜூன் ௧௬ ம் நாள் சூரிய உதயத்துக்கு முன்,கிரகணம் முடிகிறது. இப்போது வந்துள்ள முழு சந்திர கிரகணம், சாரோஸ் சுழற்சியின் 130 வது வகை. இந்த வகையில் மொத்தம் 72 கிரகணங்கள் நிகழும், இது 34 வது கிரகணம்.இந்த வகை சாரோஸ் சுழற்சி, 1262 ஆண்டுகளில் முடியும். இனி அடுத்த சந்திர கிரகணம், 2011 , டிசம்பர் 10 ம் நாள் ஏற்பட இருக்கிறது.

முழு சந்திர கருப்பு கிரகணம்

பொதுவாக முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் செம்பு வண்ணத்தில் மிளிரும். ஆனால் இம்முறை அப்படி இருக்காது. நிலா கருப்பு நிலாவாக காட்சி அளிக்கும். இதனைத் தொடர்ந்து பார்த்து பழக்கமில்லாத நண்பர்களுக்கு, கிரகணத்தின் போது, சந்திரனைக் கண்டறிவதே சிரமம்தான். சூரியன், பூமி மற்றும் சந்திரனின் மையங்கள் ஒரே நேர்க் கோட்டில் அமைவதால் /வருவதால்தான் சந்திரன் இப்படி இருட்டாக இருக்குமாம். மேலும் சமீபத்தில் ஐஸ்லாந்தில் ஒரு எரிமலை வெடித்து புகை மற்றும் சாம்பலை அள்ளி வளி மண்டலத்தில் வீசியதே..! அதுவும் கூட, இந்த இருண்ட முழு சந்திர கிரகணத்தின் ஒரு காரணியாகும். !முழுமையும் வானம் இருட்டாக, சந்திரனைக் காண முடியாமல் போவதால், மிகவும் ஒளி குறைவாய் தெரியும் விண்மீன்களைக் கூட இப்போது பார்க்கலாம். ! இதற்கு முன்னால், இப்படி ஒரு முழு சந்திரகிரகணம், 1971 , ஆகஸ்ட் 6 ம் தேதி ஏற்பட்டது. அடுத்து இது போல ஒரு முழு சந்திர கிரகணம், இன்னும் 47 ஆண்டுகள் கழிந்து, 2058 , ஜூன் 6 ம் நாள் வரவிருக்கிறது. இப்போதுள்ளவர்களில் எத்தனை மனிதர்கள், 47 ஆண்டுகளுக்கு அப்புறம் இப்படியான சந்திர கிரகணத்தைப் பார்க்கப் போகிறோம்...! 

 முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியன் சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டு கருப்பாகத் தெரிவது போல, முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் கருப்பாக/இருட்டாகத் தெரிவது இல்லை. சந்திரன் முழு கிரகணத்தின் போது காணாமல் ஓடிப் போவதும் இல்லை. சந்திரன் பூமியின் நிழல் வழியே நகரும்போது, பூமியின் வளிமண்டலம் மூலமாக,சந்திர மறைவுப் பிரதேசங்களில், சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரதி பலிக்கின்றன. இப்போது பூமியில் மட்டும் வளிமண்டலம் இல்லாது போயிருப்பின், சந்திரன் கன்னங்கரேல் என கரித்துண்டம்/கருப்பு நிலாவாக காட்சி அளித்திருக்கும். பூமியின் வளிமண்டலம்தான், அதில் பட்டு சந்திரனில் சிதறும் அகச் சிவப்பு ஒளித் துகள்கள்தான் , முழு சந்திர கிரகணத்தின் போது, அதனை சிவப்பான செம்பு நிலாவாகக்(copper moon) காட்டுகிறது.இதுவேதான், சூரியன் உதிக்கும்/ மறையும்போதும், அதன் சிவப்பு வண்ணத் தூரிகை கொண்டு வான் மேகத்தில் சிவப்பு-ஆரஞ்சு வண்ண ஓவியம் வரைவதன் காரணியும்..! 

பால்வழி மண்டலம்

 lunar_eclipse_4சாதாரணமாய் நம் கண்களுக்கு கண்ணாமூச்சி காட்டும் நமது சூரிய குடும்ப தாய்வீடான, பால்வழி மண்டலம், முழு சந்திர கிரகணத்தின் போது, முழு மறைப்பின் பின்னணியில் அதி அற்புதமாய் தெரியும். இம்முறை நீங்களும் பார்த்து மகிழுங்கள். இந்த முறை சந்திர கிரகணத்தின் போது, தெற்கு வானில், தனுசு விண்மீன் படலமும்,அதன் பிரகாச விண்மீனான பூரட்டாதி, அதன் அருகில் வலப்பக்கத்தில், அழகாகத் தெரியும், பால்வழி மண்டலத்தின் மையப் பகுதியையும் கண்டு ரசித்து மகிழலாம்.அது மட்டுமல்ல. இரவு வானின் பிரகாச விண்மீன்களான, வடக்கில் உச்சியில் தெரியும் பருந்து/வடக்குச் சிலுவையின் தெனாப்(Denob),அதன் அருகில் உள்ள கழுku (aquis) விண்மீன் படல திருவோணம்(Altair), கொஞ்சம் தள்ளி யாழ் விண்மீன்(Lyra) படலத்தின் வேகா(Vega), இவை உருவாக்கும், கோடைக்கால முக்கோணம் (Summer Trianle) போன்றவற்றை பார்த்து பரவசப்படலாம்.

  சரித்திரம் படைத்த முழு சந்திர கிரகண நிகழ்வுகளும் உண்டு. சந்திர கிரகணம் அரிதானதுதான் என்றாலும், முழு சூரிய கிரகணம் போல அவ்வளவு அரிதானது கிடையாது. ஏனெனில் முழு சூரிய கிரகணம், உலகின் சில பகுதிகளுக்கு மட்டுமே தெரியும். ஆனால்,முழு சந்திர கிரகணம், உலகில் இரவில் இருள் கவிந்த பாதி புவிப் பகுதிக்கு தெரியும். சரித்திரத்தில் பதிவுடன் எழுத்துக்களில் பதித்த முதல் முழு சந்திர கிரகணம் , சீனாவில் சோயூ வம்சத்தின் (Zhou Dynasty.) சோயு-சூ புத்தகத்தில், கி.மு 1136 ம் ஆண்டு, ஜனவரி மாதம் 29 ம் நாள் நிகழ்ந்ததாய் குறிப்பிடப் பட்டுள்ளது.

 பழங்காலத்தில், கிரகணம் என்ன என அறியப்படாதபோது, அவை ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர். கிரேக்கத்தில் சூனியக்காரர்கள், நாங்கள் எங்களது அற்புத சக்தியால் வானிலுள்ள சந்திரனின் ஒளியை உறிஞ்சி விடுவோம் என சவால் விட்டனர் முழு கிரகணத்தின் போது ஒளி ஓடிப்போயிற்று. மக்களும் நம்பினர். இது கி.மு. 425 , அக்டோபர் 9 ம் நாள் நிகழ்ந்தது.அதற்கு முன்னால், கி.மு.413 , ஆகஸ்ட் 28 ம் நாள் முழு சந்திரகிரகணம் ஏற்பட்டது. இந்த கிரகணம், சைரகுயுசின் இரண்டாம் போரின்போது வந்தது. அப்போது ஏதென்ஸ்காரர்கள் வீடு நோக்கி செல்ல திட்டமிட்டனர். அவர்கள் துசிடிடெஸ்(Thucydides) என்ற மதகுருவிடம் என்ன செய்வது என்று கேட்டனர். அவர் இன்னும் 27 தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்.மதகுருவின் சொல்படி எதெனியர்கள் நடந்தனர்.ஆனால் சைராகுசன்ஸ்(Syracusans ) இதனை சாதகமாக எடுத்துக் கொண்டு, திட்டமிட்டு ஏதேனியர்களின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டனர்.ஏதேனியர்கள் போரில் தோல்வியுற்றனர். யூரிமேடான் மாய்ந்தார்.சந்திர கிரகணத்தின் மேலுள்ள மூட நம்பிக்கையால்,ஓர் போர் ஆழ்ந்த அழிவைச் சந்தித்தது.

மக்களை.. மிரட்டிய.. கொலம்பஸ்..!
 
 கிறிஸ்டோபர் கொலம்பஸ் உலகை வலம் வந்தவர் என்ற தகவல் நமக்கெல்லாம் தெரியும். ஆனால் அவர் பெரிய கில்லாடி..! அவர், 1503 , ஜூன் 30 , ஜமைக்கா போய் இறங்கி, அங்கேயே கொஞ்ச நாட்கள் தங்கினார். அங்கிருந்த பூர்வகுடி மக்கள், வந்தவர்களை வரவேற்று உணவும் அளித்தனர். ஆனால் கொலம்பஸின் மாலுமிகள் அம்மக்களிடம் ஏமாற்றி, திருடினர். இதனால் கோபம் கொண்ட மக்கள் அவர்களுக்கு உணவு தர மறுத்து விட்டனர். இந்த சமயம் பார்த்து, அப்போது முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. கொலம்பஸ் கடற் பயணத்துக்காகவும், சொந்த தேடல் மற்றும் ஆர்வத்தாலும், கால நிகழ்வுகள் குறித்த, ஒரு காலண்டரை வைத்திருந்தார். அதில் முக்கிய நிகழ்வுகள் குறிக்கப்பட்டிருக்கும். அதன்படி, அப்போது வரும் முழு சந்திர கிரகணம் அறிந்து, இதன் மூலம் அந்த மக்களை மிரட்ட திட்டமிட்டார். அவர்களின் தலைவனைக் கூப்பிட்டு, கடவுள் உங்கள் மேல் கோபம் கொண்டிருக்கிறார். இரவின் ஒளியை/ சந்திரனை உங்களிடமிருந்து பிடுங்கிக் கொள்ளப் போகிறார், என்றார். தலைவர் இதனை நம்பவில்லை. முழு சந்திர கிரகணம் வந்தது. ஊர் இருண்டது. சந்திரன் மறைந்தான்; ஊர் மக்கள் கொலம்பசிடம் வந்தனர். அவரின் குழுவுக்கு உணவும், உதவியும் செய்வதாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தனர். பின் வழக்கம் போல், பூமியின் நிழல் விலகியதும், சந்திர ஒளி ஜமைக்கா மேல் விழுந்தது. மக்கம் மகிழ்ச்சி கொண்டனர். எப்படி இருக்கிறது.. இந்த வரலாற்றுத் தகவல்..! எப்போதும் மெலிந்தோரை வலியோர் ஏமாற்றுவது தொடர்ந்து கொண்டே இருப்பது தெரிய வருகிறதா?

மூட நம்பிக்கையால்.. மூடப்பட்ட.. மக்கள்..!

பொதுவாக,தினம் தினம், சந்திரன் உதிப்பதில்லை. காரணம் நாம் அறிவோம். தினமும் சூரியன் நமக்குத் தெரிகிறது. அது நகர்வது போல தோன்றினாலும், அது நகர்வதில்லை. நாம்தான் சூரியனைச் சுற்றுகிறோம். கிரகணத்தின் போது எந்த சிறப்பு கதிரும் சூரியனிடமிருந்து வருவதில்லை . அப்போது வருகிறது என்று சொல்லப்படும் அகசிவப்பு கதிர், காமாக் கதிர்கள், எப்போதும் சூரியனிட மிருந்து வந்து கொண்டேதான் இருக்கின்றன. நாம் வெயிலில் போனால் உடலோ, பொருளோ சூடாவதுக்கு காரணம் அகச்சிவப்பு கதிர்களே. பிரபஞ்சம் முழுவதும் காமாக் கதிர்கள் உள்ளனவே. ஆனால், கிரகணம் தொடர்பான, கட்டுக்கதைகளையும், மூட நம்பிக்கைகளையும், ஊடகங்கள் சும்மா, சகட்டு மேனிக்கு அவிழ்த்துவிட்டே இருக்கின்றன. கிரகணம் எப்படி வருகிறது என்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே, கிரகணம் முடிந்ததும், குளித்து, தர்ப்பணம் செய்கிறார். இது எவ்வளவு சரி? அது மட்டுமல்ல, வானுக்கு விண்கலத்தை அனுப்பும், இஸ்ரோ விண்வெளி நிலையத்தில் கூட, சாமி கும்பிட்டு, தீபாராதனை செய்த பின் தான், விண்கலம் அனுப்பும் பட்டனைத் தட்டுகின்றனர். இன்று அறிவியல் உலகின், பல அறிவியல் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்திக் கொண்டு, அதனுடனே மூட நம்பிக்கைகளையும் போர்த்திக் கொண்டு வாழ்வது என்ன நியாயம்.?

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It