கல்விக்காக இந்து வேத மதம் தனித்துறை ஒன்றை உருவாக்கி அதன் அதிகாரத்தை சரஸ்வதி என்ற கடவுளுக்கு ஒதுக்கியது, பள்ளிகளில் சரஸ்வதி படமாக தொங்கினார். ஆனால் `சூத்திர'மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது.

கல்விக்காக ஒரு கடவுள் இருந்தும் ஏன் மக்களுக்கு கல்வி கிடைக்கவில்லை என்ற கேள்வியை பெரியார் இயக்கம் கேட்டது. `சூத்திரர்களுக்கு' கல்வியை தராதே என்ற மனுதர்மத்தை அமல்படுத்துவதிலேயே தான் பார்ப்பனர்கள் குறியாக இருந்தார்கள். 1952-ல் தேர்தலில் நிற்காமல் மேலவை வழியாக முதலமைச்சர் பதவிக்கு வந்த ராஜகோபாலாச்சாரி தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஜாதித் தொழிலை பயிற்றுவிக்கும் குலக்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பெரியார் இயக்கம் போராடி அதை ஒழித்தது.

சென்னை திருவான்மியூரில் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில் "நீங்கள் படிக்க வந்து விட்டால் துணி துவைக்கும் தொழிலை யார் செய்வது?" என்று கேட்டார் ராஜகோபாலாச்சாரி. சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தியதால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிகட்ட 6000 அரசுப் பள்ளிகளை அவர் மூடினார். இந்த கல்வித் தடைகளை எதிர்த்து பெரியார் இயக்கம் தொடர்ந்து போராடியது. நீதிக்கட்சி ஆட்சியில் 1928-இல் அமைச்சர் முத்தையா முதலியார் கொண்டு வந்த வகுப்புரிமை ஆணையை `சுதந்திர' இந்தியாவில் பார்ப்பனர்கள் உச்ச நீதிமன்றம் வழியாக ஒழித்தனர்.

1950-ல் நீதிமன்றம் வகுப்புரிமை ஆணையை தடை செய்தது. பெரியார் போர்ச் சங்கு ஊதினார். திமுகவும் களமிறங்கியது.

இதற்காக 1951-இல் முதன்முறையாக இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டு சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் இந்த சமூக நீதி போராட்டத்துக்கு காமராசரும், பிரதமர் நேரும், சட்ட அமைச்சர் அம்பேத்கரும் உறுதியாக ஆதரவு தெரிவித்தனர் என்பது வரலாறு.

சமூக நீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலம் தமிழ்நாடு என்பது பெருமைக்குரிய ஒரு அடையாளமாகும். சமூக நீதியை உறுதிப்படுத்தும் சமூகச் சூழலை உருவாக்கும் திட்டங்களை இப்போது `திராவிட மாடல்' ஆட்சியில் அமல்படுத்தி வருகிறது.

பள்ளி இடைநிற்றலை ஊக்குவித்து, தொடர் கல்விக்கு தடையாக நிற்கும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் வெற்றிகளை குவித்து வருகின்றன. பள்ளிப் படிப்பை தொடராமல் இடை நிற்கும் மாணவ, மாணவியர்களை நேரில் கண்டறிந்து அவர்களை கல்வி அமைப்புக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் ‘திராவிட மாடல்’ ஆட்சி தீவிரம் காட்டி வருகிறது.

எழுத்தறிவு இல்லாதவர்களே தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது என்ற இலக்கு நோக்கிய செயல் திட்டத்தில் தமிழ்நாடு இப்போது முதல் இடத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு என்ற மதிப்பீட்டுத் தேர்வு திட்டத்தை ஒன்றிய ஆட்சி அமல்படுத்துகிறது. அதற்காக மதிப்பீட்டுத் தேர்வு முறை ஒன்றை உருவாக்கி நாடு முழுவதும் நடத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஐந்து லட்சம் பேர் தேர்வுகளை எழுதி 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

இந்தியாவிலேயே இதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. நாடு முழுவதும் தேர்ச்சி பெற்றவர்கள் 19.4 விழுக்காடுதான். ஆனால் தமிழ்நாடு மட்டும் 100 விழுக்காடு எட்டி இருக்கிறது. இது எப்படி சாத்தியமானது?

தமிழ்நாட்டில் சமூக நீதிக் கொள்கை உருவாக்கிய பண்பாட்டுச் சூழல் தான் இதை சாத்தியமாக்கி இருக்கிறது. குடும்பத்தினரின் ஊக்கம், பஞ்சாயத்துகள் ஆர்வம், தேர்வுக்கு முந்தைய தயாரிப்புகள், உள்ளூர் தன்னார்வ குழுக்களின் செயல்பாடுகள் இவை எல்லாம் உந்து சக்திகளாக இயங்கி இந்த வெற்றியை சாதித்து உள்ளன. ஜாதியப் பார்வையில் தேர்ச்சி பெற்ற ஐந்து லட்சம் பேரும் சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்கள். இதில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். இந்த சாதனைக்கு காரணமான பள்ளிக்கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 39 மாவட்டங்களில் இதற்கான இயக்கங்கள் நடத்தப்பட்டன.

தமிழ்நாட்டில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக எஞ்சி இருப்போர் 10 லட்சம் பேர் மட்டுமே. இவர்களும் வரும் நவம்பர் மாதத்திற்குள் எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்றப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டு வரும் நான் முதல்வன் திட்டம் மகத்தான சாதனைகளை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தில் தொழில் நுட்ப பயிற்சி பெற்ற பல லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வில் அரசு வழங்கும் ஊக்கத் தொகையின் காரணமாக தேர்ச்சி பெற்ற எண்ணிக்கை 315 ஆக இவ்வாண்டு அதிகரித்துள்ளது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக அளவு தேர்ச்சி விகிதம் இதுதான்.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் 1967-இல் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் 31.4 விழுக்காடு மட்டுமே. திராவிட இயக்கம் என்ன செய்து கிழித்தது என்று கேட்போருக்கு இந்த 100 விழுக்காடு சாதனையே பதில்.

- விடுதலை இராசேந்திரன்