கும்பமேளாவில் சாமியார்கள் கொட்டம்

உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கப்பட்டு பிப்ரவரி 26-ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. கும்பமேளாவில் கூடும் சாமியார்கள், 2035-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை இந்து நாடாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

இந்து அரசமைப்புச் சட்டம்

கும்பமேளா தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அம்மாநில முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத், “சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். அதுவே மனிதத்தின் மதம். நமது வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இருக்கலாம், ஆனால், மதம் ஒன்றுதான். அந்த மதம் சனாதன தர்மம். அந்த சனாதன தர்மத்தின் பிரதிநிதியாக கும்பமேளா விளங்குகிறது. பிரயாக்ராஜில் நடந்து வரும் மாபெரும் மத நிகழ்வான மகா கும்பமேளா, எந்த ஒரு ஜாதி அல்லது மதத்திற்கும் உட்பட்டது அல்ல. இது அனைத்து மதம், கலாசாரம் மற்றும் சமயங்களின் மாபெரும் கலவையாக திகழ்கிறது.’’ என்று கூறியுள்ளார்.

ஆனால் கும்பமேளாவில் கூடிய சாமியார் கூட்டம் இந்து அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கக் குழு அமைத்துள்ளது. அதில் வட இந்தியாவின் 14 மற்றும் தென் இந்தியாவின் 11 வேத நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனராம். தூய சனாதன இந்து சமுதாயத்தை உருவாக்குவதற்காக, தர்ம சாஸ்திரங்களுடன் ராமராஜ்யம், கிருஷ்ணராஜ்யம், மனுஸ்மிருதி மற்றும் சாணக்யனின் அர்த்தசாஸ்திரத்தைப் படித்து, இந்து அரசமைப்பை உருவாக்கியுள்ளதாகக் கூறுகின்றனர்.

இந்து நாடாக்க திட்டம்!

அந்தக் குழுவில் காசி ஹிந்து பல்கலைக்கழகம், சம்பூர்ணானந்த சமஸ்கிருத பல்கலைக்கழகம் மற்றும் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் அறிஞர்கள் உட்பட பலர் உள்ளனர். அரசமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சம்பவி பீடாதீஸ்வர் ஸ்வாமி ஆனந்த ஸ்வரூப் மகாராஜ் 2035-ஆம் ஆண்டுக்குள் இந்து நாடாக இந்தியா அறிவிக்கப்படும் என்கிறார்.

குருகுலத்தின் மூலம் மட்டுமே நாட்டின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்களாம்! இந்து தர்மத்தின் அடிப்படையில் தேர்தல் நடைபெறும்; வாக்களிக்கத் தகுதியான நபர்கள் பட்டியலிடப்படுவார்கள். மற்ற மதத்தினர் இங்கு வாழலாம். ஆனால் மற்ற உரிமைகள் சொல்லப்படவில்லை. தர்மசாஸ்திரம் மற்றும் அரசியல் விஷயங்களில் தேர்ச்சி பெற்ற, மாநில நிர்வாகத்தில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவரே நாட்டின் தலைவர் பதவிக்குத் தகுதியானவர். இந்து நாடு அரசமைப்பின்படி, யுத்தத்தின் போது தலைவர் தனது தலைமையில் படையைக் கொண்டு செல்ல வேண்டும். நாட்டிற்குத் தலைவரானவர் நீதி, போர் மற்றும் ராஜதந்திர விவகாரங்களில் கைதேர்ந்தவர்களை மட்டுமே அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும்.

அரசமைப்பில் நூற்றுக்கணக்கான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், தர்மசாஸ்திரங்களில் ஒரு திருத்தமும் இல்லை என்று சம்பவி பீடாதீஸ்வர் ஆனந்த ஸ்வரூப் கூறியுள்ளார்.

இசுலாமியர்களுக்கு உரிமை இல்லை!

இந்து நாடு அரசமைப்பு வடிவமைப்பின்படி, சபையின் பெயர் நாடாளுமன்றம் அல்ல; இந்து தர்ம பீடமாக மாற்றப்படும்; ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரு தர்ம சாம்சத் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவர். நாடு முழுவதும் 543 தர்ம சாம்சத் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தர்ம சாம்சதுக்கு குறைந்தது 25 வயதானவர் போட்டியிடலாம்; வாக்களிக்கக் குறைந்த வயது 16 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்தர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது.

சனாதனத்தை வெறுப்பவர்களுக்கு வாக்கு உரிமை மறுக்கப்படும். தர்ம சாம்சத் உறுப்பினராக மாறுவதற்கு, குருகுலத்தில் வேதம் கட்டாயம் பயின்றிருக்க வேண்டும்.

கல்லூரிகள் ஒழிக்கப்படுமாம்!

நாட்டுத் தலைவரின் கட்டுப்பாட்டில் முதன்மை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகள் இருப்பார்கள். கல்லூரி போன்ற எந்த அமைப்பும் இருக்காது. ஆங்கிலப் பள்ளிகள் குருகுலங்களாக மாற்றப்படும். அரசு நிதியால் இயங்கும் அனைத்து மதரசா மற்றும் மிஸினரி பள்ளிகளும் இழுத்து மூடப்படும். மனு மற்றும் யாஜ்ஞவல்கியாரின் ஸ்மிருதிகள் நடைமுறையில் கொண்டு வரப்படும். தந்தையின் மரணத்திற்குப் பிறகு மகன்கள் மட்டுமே உரிமையாளர் ஆக இருக்க வேண்டும் என்கிறார்கள். அப்படியானால் பெண்களுக்கு பரம்பரைச் சொத்தில் பங்கில்லை.

கும்பமேளாவில் ஜாதி - மதத்துக்கு இடமில்லை என்கிறார் சாமியார் ஆதித்யநாத். ஆனால் நாட்டை ஜாதிய- இந்துத்துவ மதவாத நாடாக மாற்றுவதற்கு அங்கே கூடி திட்டம் தீட்டுகிறது இந்த சாமியார் கும்பல். இந்த சங் பரிவார் கூட்டத்தை அம்பலப்படுத்துவோம். சனதானிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்.

- விடுதலை இராசேந்திரன்