உ.பி. உள்ளிட்ட வட மாநிலங்களில் கோயில்களிலுள்ள கடவுள்களுக்கு ‘ஷொட்டர்கள்’ போடப்பட்டுள்ளதாம். அர்ச்சனை மந்திரங்கள் ஷொட்டர்களுடன் உள்ள கடவுள்களுக்கு நடக்கிறதாம். கோடை காலத்தில் குளிர் சாதன வசதிகளை செய்ததாகவும், காற்று மாசுபாடு இருந்த காலத்தில் அதைத் தடுக்கும் கவசங்கள் அணிவிக்கப் பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

கடவுள் சிலைகளுக்கு உயிர் இருப்பதால் இந்த பாதுகாப்புகள் தேவைப்படுகிறது என்று ஒரு வேத பண்டிதர் சமாதானம் கூறுகிறார். கடவுளுக்கும் உயிர் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டாலும் அனைத்து உயிர்களையும் படைத்ததாக இவர்கள் கூறும் கடவுளின் உயிர், மனித உயிர்களைப் போன்றதுதானா என்று பகுத்தறிவாளர்கள் கேட்கவே செய்வார்கள். மனிதன் கடவுளை தன்னைப் போலவே கருதி தனது பண்புகளை கடவுள் மீது திணித்து விட்டான், ஜாதி உட்பட! எனவேதான் கடவுள் மனிதனின் கற்பனை என்று பகுத்தறிவாளர்கள் கூறுகிறார்கள்.

மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்தில் அச்சத்தின் காரணமாக கடவுள் என்ற கற்பனையை உருவாக்கிக் கொண்டான் என்பதால் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றார் பெரியார். இது ஏதோ கடவுள் நம்பிக்கையாளர்களைப் புண்படுத்துவதாக புலம்புகிறார்கள். மனிதர்களைப் போலவே கடவுளுக்கும் உயிர் இருக்கிறது என்று பேசும் புரோகிதர்கள், இனி ஒவ்வொரு கடவுளுக்கும் புரோகிதர்களைத் தவிர கூடுதலாக செலவு பற்றி கவலைப்படாமல் மருத்துவ ஆலோசகர்களையும் நியமித்து கடவுளின் உடல்நலனைக் கண்காணித்து வரலாம். அவசர சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைகளிலும் சேர்க்கலாம். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழும் கடவுளர்களைக் கொண்டு வரலாம் என்பது அடியேனின் யோசனை.

உ.பி.யில் முதல்வராக இருக்கும் ஆதித்ய நாத் என்ற காவிச் சாமியார் அம்மாநில மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஆன்மிக வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளாராம். அதற்கு முன்பு கடவுள்களுக்கு அதே மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ சேவைகள் கிடைக்க ஏற்பாடு செய்வது நல்லதுதானே.

ராமன் வேடம் போட்டு பிச்சை எடுத்தால் சிறை

உ.பி. மாநிலத்தில் கோயில் ஒன்றில் ஒருவர் இராமன் வேடம் போட்டு பிச்சை எடுத்து வந்தார் என்பதற்காக பஜ்ரங்தள் என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் அவரை அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காவல்துறை அவர் மீது வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டது. ராமன் வேடம் போட்டு பிச்சை எடுக்கக் கூடாது என்ற ‘தன்மான’ப் பிரச்சினைக்காக இவர்கள் எதிர்க்கவில்லை. வேடம் போட்டவர் ஒரு முஸ்லிம். நாடக நடிகர். நடிப்புத் தொழில் இல்லாதபோது குடும்பத்தைக் காப்பாற்ற ‘ராமன்’ வேடம் போட்டு பிச்சை எடுப்பது அவரது வழக்கமாம். ஒரு இஸ்லாமியர் பிச்சை எடுப்பதற்குக்கூட ராமன் வேடம் போடக் கூடாது என்கிறது ‘பஜ்ரங்தள். “கடவுள் வேடம் போட்டு பிச்சை எடுக்கும் உரிமை இந்துக்களுக்கு மட்டுமே உண்டு; இது இந்து நாடு; எங்கள் நாடு” என்று பொங்குகிறார்கள்.

ஆனால், இந்தியாவை தாய்நாடாக ஏற்றுக் கொண்டு வாழ்கிறவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் முஸ்லிம்களாக இருந்தாலும் ‘இந்து’க்கள்தான் என்கிறார், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். அந்த ‘இந்துத்துவ’ கொள்கை எல்லாம் ‘பஜ்ரங்தள்’ கும்பலுக்கு தெரியாது. ‘முஸ்லிம் என்றால் அடி; உதை’ என்பதே இவர்களுக்கான ‘ஆன்மீகம்’. ‘இந்து ராஷ்டிரம்’ என்ற இராம இராஜ்யத்தில் பிச்சைக்காரர்களே இருக்க மாட்டார்கள் என்றெல்லாம் இவர்கள் கூற மாட்டார்கள். ஒரு இஸ்லாமியர் ராமர் வேடம் போட்டு பிச்சை எடுக்கக் கூடாது என்பதே இவர்களின் ‘இராமராஜ்ய’த்தின் இலட்சியம்.

- கோடங்குடி மாரிமுத்து

Pin It