தமிழக முதல்வர் அனைத்து இந்துக்களும் பயிற்சி பெறக் கூடிய 9 பயிற்சிப் பள்ளிகளை காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார். உண்டு - உறைவிடப் பள்ளிகளாகச் செயல்படும்; ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.3000/- உதவித் தொகை வழங்கப்படும்; சமயபுரத்தில் புதிய ஓதுவார் பயிற்சிப் பள்ளியையும் முதல்வர் திறந்து வைத்தார்.

அனைத்து இந்துக்களையும் அர்ச்சகராக நியமித்து தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்த ஓராண்டு நினைவாக (ஆக. 14) பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். தமிழில் அர்ச்சனைப் பாடல்களைப் பாடினர். இது குறித்து சங்கத் தலைவர் வா. அரங்கநாதன் விடுத்துள்ள அறிக்கை:

non brahmin gurukkalஇந்திய வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய நாள் ஆகஸ்ட் 14, 2021. பல்லாயிரம் ஆண்டு தமிழக வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சிதான் மகத்தானது. மன்னர்களின் ஆட்சிகளைவிட, சமத்துவம், சமூகநீதி என்ற விளிம்புநிலை மக்களை மையப்படுத்திய கோட்பாடுகள் ஆட்சி அதிகாரத் திலும் விதைக்கப்பட்டு வளர்ந்து செழித்த காலமிது.

சமூகத்தின் மிக முக்கிய அதிகார மையமான கோயில் கருவறையில் 2000 ஆண்டுகளாக நிலவி வந்த பார்ப்பனிய மேலாண்மை அடிப்படையிலான கருவறை தீண்டாமை இருள் அகற்றப்பட்ட காலமும் இதுதான்.

திமுக ஆட்சியில் பல சாதனைகள் இருந்தாலும், கருவறைத் தீண்டாமையை அகற்ற எடுத்த முயற்சியே வரலாறு போற்றும் நிகழ்வு. அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் நிகழ்ந்து ஆக.14 அன்று, ஓராண்டு நிறைவடைகிறது. அர்ச்சகர் நியமனத்திற்காக பெரும் முயற்சியெடுத்த சமூக நீதிக் காவலர் அய்யா முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை இன்னாளில் நினைவு கூர்கிறோம். கலைஞரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறோம்.

ஓராண்டிற்கு முன்பு இந்நாளில் அர்ச்சகர் பணிநியமனம் செய்த தமிழக முதல்வர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எங்களுடைய அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் சார்பாகவும், அரசு கோயில் அர்ச்சகர்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வரின் தளபதியாக நின்று வென்று காட்டிய செயல்வீரர் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் சந்திரமோகன், குமரகுருபன் ஆணையர், எங்களுடன் கடந்த 15 ஆண்டுகளாக இணைந்து போராடி வரும் முற்போக்கு அமைப்புத் தோழர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்மை கவலை கொள்ளச் செய்யும் விசயங்களும் நடந்து வருவதை இந்நாளில் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அர்ச்சகர் நியமனம், விதிகள், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தை எதிர்த்து 25-க்கும் மேலான வழக்குகள் தொடுக்கப்பட்டு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. வழக்கில் ஆகமக் கோயில் பார்ப்பனருக்கு, ஆகமம் அல்லாத கோயில்கள் சூத்திர, பஞ்சமருக்கு எனப் பிரிக்கும் முயற்சிகள் நடக்கிறது.

இதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது.தமிழக வரலாற்றில் முதல்முறையாக வடநாட்டவர் பலர் அர்ச்சகர் வழக்கில் இணைந்திருப்பது, அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருப்பது என்பதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

இரண்டாவதாக, அரசு கோயில் அனைத்து சாதி அர்ச்சகர்களை ஏற்கனவே கோயிலில் உள்ள பார்ப்பனர்கள் நடத்தும் விதம் மிக மோசமாக உள்ளது.100 பார்ப்பனர்கள் இருக்கும் இடத்தில் ஒரு தமிழ் அர்ச்சகரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனவே தமிழக அரசு உடனே அறிவித்தபடி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் திறக்க வேண்டும்.

அனைத்து சாதி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் கோயில்களில் அர்ச்சகர் பணிநியமனம் நடைபெற வேண்டும். மூன்றாவதாக, எங்களுடன் படித்த 100-க்கும் மேலான மாணவர்கள் அதிமுக அரசின் வஞ்சகத்தால் பணி நியமனம் இன்றி வாடி வருகின்றனர்.

வயது வரம்பைத் தளர்த்தி இவர்களுக்கு உடனே பணிநியமனம் வழங்க வேண்டும். இன்றுவரை மதுரை மீனாட்சியம்மன், திருச்செந்தூர், பழனி முருகன் கோயில்கள், திருவரங்கம் அரங்கநாதன், சென்னை கபாலீசுவரர் கோயில்களில் தமிழ் சமுதாயத்தின் தேவர் , கவுண்டர், யாதவர், வன்னியர், செட்டியார், பிள்ளை, ஆதிதிராவிடர் உள்ளிட்டோர் கோயில் கருவறையில் நுழைய முடியவில்லை என்பது கடும் வேதனைக்குரியது. அரசியல் சட்டத்தின் ஆட்சி என்பதற்கான சவால் இது.

எனவே இந்நாளில் சமத்துவ, சமூகநீதி தமிழக முதல்வர் அவர்கள் தமிழ் மக்கள் பணத்தில் கட்டப்பட்ட கோயில்களில் தமிழர்களை, தமிழை நிலைபெறச் செய்ய வேண்டுகிறோம்.

வழக்கில் ஆகமக் கோயில் பார்ப்பனருக்கு, ஆகமம் அல்லாத கோயில்கள் சூத்திர, பஞ்சமருக்கு எனப் பிரிக்கும் முயற்சிகள் நடக்கிறது. இதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது.

தமிழக வரலாற்றில் முதல்முறையாக வடநாட்டவர் பலர் அர்ச்சகர் வழக்கில் இணைந்திருப்பது, அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருப்பது என்பதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

- வா. அரங்கநாதன்

Pin It