periyar 218-5-31-ந் தேதி மாலை 5 மணிக்கு சுமார் 4, 5 ரூபாய் பெறுமான ஒரு திருட்டு மோதிரத்தை விலைக்கு வாங்கிய ஒரு பையன் ஏதோ ஒரு ஷராப்புக் கடையில் இருப்பதாக ஈரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேள்விபட்டு இரு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஈரோடு பிரபல ஷராப்பு வியாபாரியாகிய உயர்திரு. மாரிமுத்து ஆசாரி கடைக்குச் சென்று விசாரித்ததாகவும், அந்த ஆசாரியார் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதில் திருப்தி அடையாத சப்-இனஸ்பெக்டர் ஒருவர் அந்த ஆசாரியாரை ஓங்கிக் கன்னத்தில் அடித்ததாகவும், அதற்காக அங்கு சுற்றியுள்ள ஜனங்களுக்கு மன வருத்தமேற்பட்டு சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்தாகவும், அதற்காக கடை வீதியானதால் ஜனங்கள் சீக்கிரம் கூடி விட்டதாகவும், இதில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் நயந்து பதில் சொல்லிக் கொண்டிருக்க மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்குச் சென்று பல கான்ஸ்டேபிள்களை கத்தி, தடி, துப்பாக்கிகளுடன் கூட்டிக் கொண்டு போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டருடன் வந்து, திரு. மாரிமுத்து ஆசாரி உள்பட சிலரை கைது செய்து, ஸ்டேஷனுக்கு அழைத்துப் போனதாகவும் சொல்லப்படுகின்றது.

இது இப்படியிருக்க பொது ஜனங்கள் எங்கு திரு. மாரிமுத்து ஆசாரியாரை போலீசார் அடித்து விடுவார்களோ யென்று கவலை கொண்டு சுமார் 2000 பேர் வரையில் போலீஸ் டேஷனைச் சுற்றி கூடி விட்டார்கள். பெரிய பேங்கர்களும்,வியாபாரிகளும் ஜாமின் கொடுப்பதாகச் சொல்லியும், போலீசார் அவர்களை ஜாமீனில் விடாததால் டிப்டி கலெக்டர் ஜனாப். கான்பகதூர் ஜிண்டா சாயபு அவர்களிடம் சென்று இவ்விஷயத்தைச் சொல்லிக் கொண்டவுடன் அவர் உடனே புறப்பட்டு வந்து அரஸ்டு செய்யப் பட்டவர்களை ஜாமீனில் விடச் செய்ததும், கூட்டம் கலைந்து விட்டது. இரண்டு சிறு பையன்களை மாத்திரம் இன்னமும் விடுதலை செய்யாமல் இருக்கிறார்கள். அன்று இரவு பொது ஜனங்கள் ஒன்றுகூடி போலீஸ்டேஷ னில் காவல் புரியாதிருந்தால் போலீசார் திரு. ஆசாரியையும், மற்ற ஆட்களையும் நையப்புடைத்திருக்கக் கூடும் என்றே எல்லாரும் கருதினார்கள். ஆனால் ஒரு அடிகூட அப்புறம் யாருக்கும் விழவில்லை. இப்போது போலீஸார் திரு. மாரிமுத்து ஆசாரி அவர்கள் மீதும் திரு. மாரிமுத்து ஆசாரி போலீசார் மீதும் பிராதுகள் செய்திருப்பதாகத் தெரிய வருகின்றது.

இது தவிர ஈரோடு பொது ஜனங்கள் காந்தி சவுக்கில் சுமார் 2000 பேர்கள் ஒரு கூட்டம் கூடி போலீசாரின் அக்கிரம நடவடிக்கையை கண்டித்துத் தீர்மானங்கள் செய்து மேல்அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கிறார்கள். விஷயம் எப்படி இருந்தாலும் கோவை ஜில்லா கலெட்டர் அவர்களாவது, ஜில்லா போலீஸ் சூப்ரெண்டென்ட் அவர்களாவது தயவு செய்து ஈரோடு வந்து இருதரப்பாரையும் கூப்பிட்டு விசாரித்து கேசுகள் மேற்கொண்டு நடவாமல், தேவையானால் இருவர்களுக்கும் புத்தி சொல்லி விஷயத்தை இவ்வளவுடன் நிறுத்தி விடுவது போற்றத்தக்க காரியமாகும்.

இல்லாதவரை போஸீசுக்கு ஒரு கெட்ட பெயரும், ஜனங்களிடம் ஒரு அனாவசியமான பரபரப்பும் இருந்து கொண்டு மெனக்கேடும், பணச் செலவும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். இவ்விஷயத்தில் வியாபாரிகள் எல்லாம் ஒன்று கூடி இருக்கின்றார்கள். மற்றும் இதற்கு ஊர் பொதுஜனங்களில் பலரும் ஆதரவாய் இருக்கிறார்கள். இதன் வெற்றி தோல்வியானது ஜனங்களுக்கும், போலீஸ்காரருக்கும் என்பதாக திரும்பி விடக்கூடும் போல் தெரிகின்றது. கடைசியாக ஒரு விஷயம். டிப்டி கலெக்டர் திரு. கான்பகதூர் ஜிண்டா சாயபு அவர்கள் அந்த இரவில் தைரியமாய் வெளிவந்து அரஸ்ட் செய்யப்பட்டவர்களை ஜாமினில் விடச்செய்து ஜனங்களுக்குச் சமாதானம் செய்து எவ்வளவோ பெரிய கலவரம் நடக்க இருந்ததை ஒன்றுமில்லாமல் செய்தது போற்றத்தக்கதேயாகும்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.05.1931)

Pin It