சிறுபான்மையினரின் பண்பாட்டு உரிமை பற்றியும், அந்த உரிமையின்படி சிறுபான்மை மக்கள் தங்களின் தாய்மொழி வாயிலாகவே தத்தம் ஆரம்பகால கல்வியைப் பெற முடியுமா? இவ்வுரிமையை அடிப்படை உரிமையாக நமது அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறதா? என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் என்ற சொல், மத சிறுபான்மையினர் என்ற சொல்லோடு தொடர்புடையது அல்ல. மத சிறுபான்மையினரின் நலன்களை நமது அரசியல் சட்டம் பாதுகாக்கும் நோக்கத்தோடு, நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் அவர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கபோது, எண்ணிக்கையில் ஒப்பிடும்போது குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களை மொழி சிறுபான்மையினர் என்று நான் குறிப்பிடுகிறேன்.

எடுத்துக்காட்டாக, சென்னையை பூர்வ இடமாகக் கொண்டு வாழ்ந்த தமிழர்கள், வேலை தேடி பம்பாயில் குடியேறுகின்றனர். இவர்கள் பொதுவாக, வந்தேறியாக அல்லது மொழி ரீதியாக இந்தியா முழுமையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சிறுபான்மையினராகக் கொள்ளப்படாவிட்டாலும், தாங்கள் வாழும் பகுதிகளில் மொழி சிறுபான்மையினராகவே வாழ நேரிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இவர்களை நான் "கலாச்சார சிறுபான்மையினர்' (Cultural Minorities) என்று குறிப்பிட விரும்புகிறேன்.

இந்தியா ஒரே நாடு என்று பொருள்படுத்தி, தமிழர்களின் மக்கள் தொகையைக் கணக்கிட்டு, பம்பாயில் வாழும் தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளைப் புறக்கணிக்க நான் தயாராக இல்லை
.
இவர்கள் தாங்கள் வாழுமிடத்தில் அல்லது தங்குமிடத்தில் மொழி ரீதியாக வாழ நேரிடுவதால், அவர்களின் உரிமைகளை எவ்வித இடையூறுமின்றிப் பாதுகாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அவர்களது மொழி, எழுத்து மற்றும் இலக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன்.

பணிக்காக புலம் பெயர்ந்து செல்பவர்கள், அங்கு நிரந்தரமாகத் தங்க விரும்புவதில்லை. தங்களின் பூர்வீக இடத்தின் மொழி, வாழ்வியல் முறை மற்றும் பண்பாட்டைத் துளியும் இழக்க அவர்கள் தயாராக இருப்பதும் இல்லை. மாறாக, தங்களது பூர்வீக இடத்துடன் நிரந்தரத் தொடர்பினை ஏற்படுத்தி தங்களின் வாழ்க்கையை நடத்துகின்றனர். திருமணம், திருவிழா மற்றும் அனைத்துச் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் சொந்த ஊருக்குச் சென்று மகிழ்கின்றனர்.

நடைமுறை இவ்வாறாக உள்ளபோது, தங்களின் பணிநிமித்தம், பம்பாயில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்க் கல்வி தருவது, பம்பாய் அரசினுடைய கடமை. இந்தக் கடமையை நான் சட்டப்பூர்வமான உரிமையாக அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடுகின்றேன். இதைப்போலவே, அந்தந்த மொழிவாரி மாநிலங்களைச் சார்ந்த மக்கள், தங்களது தேவைகளுக்காக, வேற்று மொழி மாநிலங்களுக்குச் சென்று வாழ்ந்தாலும், அவர்களது தாய் மொழிக் கல்வியினை தடையின்றிப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசு தங்களது சட்ட மன்ற விதிகளின் படி வழிவகை செய்ய வேண்டும். இது, அரசமைப்புச் சட்டத்தின் கடமை என்பதை இங்கு நான் வலியுறுத்துகிறேன்.

ஆந்திரம் அல்லது தமிழ் நாட்டைச் சார்ந்தவர் பம்பாயில் வாழும் போது, பம்பாயில் இந்தி பிரதான மொழியாக இருப்பதால், தமிழ் அல்லது தெலுங்கு படிப்பது மிகுந்த பொருட்செலவினை ஏற்படுத்தும். இந்தத் தடையை நீக்கி புலம் பெயர் சிறுபான்மையினர்களின் தாய் மொழிக் கல்விக்கு ஆகும் செலவை, சம்பந்தப்பட்ட மாநில அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ள நமது அரசியல் சட்டம் வழிவகை செய்துள்ளது.

ஒரு மொழியின் எழுத்தும், கலாச்சாரமும் அனைத்து வகையிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் மற்ற எல்லா நடைமுறை சிக்கலைவிடவும் முக்கியம்.

எந்த ஒரு மாநில அரசு இயற்றும் சட்டமும், நமது நாட்டின் எந்தவொரு மொழியின் எழுத்து மற்றும் கலாச்சாரம் பாதிக்கும் வகையில் இருத்தல் கூடாது. ஏனெனில், ஒரு மொழியின் எழுத்து அல்லது கலாச்சாரம் பாதிக்கப்படுமானால், அது சம்பந்தப்பட்ட தனிமனிதனின் அடிப்படை உரிமையை அர்த்தமற்றதாக மாற்றி விடுகிறது. இதை அனைத்து மாநில அரசுகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதை மீறி எந்த ஒரு மாநில அரசாவது சட்டத்தின் மூலம் தங்கள் மொழியைத் திணிக்க, புலம் பெயர் வாழ் மக்களின் மொழியை அலட்சியப்படுத்தினால், அந்த மாநில அரசு இயற்றும் சட்டம், இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 8க்கு முரண்பாடு உடையதாகிறது. இதன்படி, அந்த மாநில அரசின் சட்ட மன்றம் இயற்றும் சட்டம் செயலற்றதாகி விடும் என்று நமது அரசியல் சட்டம் தெளிவாகக் கூறுகிறது.

(‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 13 பக்கம் : 429)
Pin It