“எப்பாத் துறைக்கும் இவனோர் பழம் புலவன்

ஆப்பாத் துரையறிஞன் ஆழ்ந்தகன்ற முப்பால்பா

நூலறிவு நூறு புலவர்கள் சேரினியன்

காலறிவு காணார் கனிந்து”

                                                                                                                -பாவேந்தர் பாரதிதாசன்.

             Ka appathurai   “ஆய்வறிஞர் அப்பாத்துரையார் எடுக்க எடுக்கக் குறையாத ஓர் அறிவுச் சுரங்கம்; பன்மொழிப் புலவர்; தென்மொழி தேர்ந்தவர்; யாரும் செய்ய முடியாத சாதனையாகப் பலதுறைகள் பற்றிய நூற்றுக் கணக்கான நுல்களைத் தமிழுக்குத் தந்தவர்; அகராதி தொகுத்தவர்; அக்கலையில் ஆழம் கால் கொண்டவர்; சிறந்த சிந்தனையாளர்; பகைவர் அச்சுறும்படி சொல்லம்புகளை வீசும் சொற்பொழிவாளர்; மொழி பெயர்ப்பாளர்; கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர்” –என்று, பதிப்புச் செம்மல் இவ்வாறெல்லாம், முனைவர் ச.மெய்யப்பன் போற்றிப் புகழ்ந்திட்ட பூந்தமிழ் அறிஞர்!

                கா. அப்பாத்துரையார், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய் மொழி என்னும் சிற்றுரில், சாசிநாதப்பிள்ளை-முத்து இலக்குமி அம்மாள் வாழ்வினையருக்கு 24-06-1907 அன்று பிறந்தார்.  பெற்றோர் சூட்டிய பெயர் “நல்லசிவம்” என்பதாகும்.  தொடக்கக் கல்வியை ஆரல்வாய் மொழியிலும், பள்ளிக் கல்வியை நாகர்கோவிலிலும், கல்லூரிக் கல்வியை திருவனந்தபுரத்திலும் பயின்றார்.  ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

                இந்தி மொழியில் ‘விசாரத் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தார்.  திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தனிவழியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டதாரியானார்.  சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து எல்.டி.பட்டம் பெற்றார்.

                திருநெல்வேலி, ‘மதுரைதிரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி ‘யில் 1937 முதல் 1939 முடிய இந்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.  காரைக்குடி, ‘அமராவதிப் புதூர்’-குருகுலப் பள்ளியில் அப்பாத்துரையாத் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது மாணவராயிருந்த கவிஞர் கண்ணதாசன் இவரிடம் பயின்றார்.

                சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.  நடுவண் அரசின் செய்தித் தொடர்புத் துறையில் 1947 முதல் 1949 முடிய பணியாற்றினார்.  அப்பொழுது, ‘இந்தியாவின் மொழிச்சிக்கல்’ என்ற ஆங்கில நூலை எழுதியதால் வேலை இழந்தார்.

                சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 முடிய அதன் ஆசிரியராகப் பணி செய்தார்.  மேலும், தமிழக வரலாற்றுக்குழு உறுப்பினராக 1975 முதல் 1979 வரை இருந்துள்ளார்.

                ‘திராவிடன்’, ‘ஜஸ்டின்’, ‘இந்தியா’, ‘பாரததேவி’, ‘சினிமா உலகம்’, ‘லிபரேட்டர்’, ‘விடுதலை’, ‘லோகோ பகாரி’, ‘தாருஸ் இஸ்லாம்’, ‘குமரன்’, ‘தென்றல்’ முதலிய இதழ்களில் இவரது பணி தொடர்ந்தது.

                அப்பாத்துரையார் இந்தி மொழி ஆசிரியராகப் பணி புரிந்தவர்.  ஆனால் தமிழகத்தில் இந்திமொழி கட்டாயபாடமாகத் திணிக்கப்பட்ட பொழுது 1938-39 ஆம் ஆண்டுகளில் நாடெங்கும் நடந்த போரில் பங்கு கொண்டார்.

                அப்பாத்துரையார் இந்திமொழி ஆசிரியராகப் பணி புரிந்தவர்.  ஆனால் தமிழகத்தில் இந்திமொழி கட்டாய பாடமாகத் திணிக்கப்பட்டபொழுது 1938-39 ஆம் ஆண்டுகளில் நாடெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு கொண்டார்.

                தந்தை பெரியார் தலைமையில் 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அப்பாத்துரையாரும் அவரது மனைவி அலமேலு அம்மையாரும் பெரும்பங்கு கொண்டனர்.

                ‘குமரிக்கண்டம்’ அல்லது ‘கடல்கொண்ட தென்னாடு’, ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’, ‘சரித்திரம் பேசுகிறது’, ‘சென்னை நகர வரலாறு’, ‘ஜ.நா.வரலாறு’, ‘கொங்குத் தமிழக வரலாறு’ முதலிய வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.

                திராவிட நாகரிகம், திராவிடப் பண்பு, திராவிடப் பாரம்பரியம், திராவிட மொழி என்பவற்றுக்கெல்லாம் மிகப் பொருத்தமான விளக்கங்களைத் தம் வரலாற்று நூற்களில் அளித்துள்ளார்.

                அப்பாத்துரையாரின், ‘தென்னாட்டுப் போர்க்களங்கள், என்ற வரவாற்று நூல், போர்க்களங்களில், பட்டியலன்று, போர்க்களங்களின் போர்களின் பின்புலங்கள், போர்ச் செயல்கள், போரின் விளைவுகள், போர்களின் வழியாக புலப்படும் அரசியல் நெறிகள் ஆகியவற்றையெல்லாம் ஆராயும் நூலாக அமைந்து ள்ளது என வரலாற்று அறிஞர்கள் போற்றுகின்றனர்.

                ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்ற நூல் குறித்து அறிஞர் அண்ணா, “இந்நூல் என்னை மிகவும் கவர்ந்த நூலாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும்.  எத்தனை ஆயிரம் கவிதைகள், இலக்கியங்கள் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும் என்பதை எண்ணி வியந்தேன்” என்று விதந்துரைத்துள்றளார்!

                அப்பாத்துரையார் தமது வரலாற்றுப் படைப்புகள் மூலம் கீழ்க்கண்ட கோட்பாடுகளை நிறுவியுள்ளார்.

1)            தமிழரினம் உலகின்  நாகரிகத் தொட்டில்களுள் மூத்த முதன்மையுடையது.

2)            தமிழர் பண்பாட்டுக் கூறுகள் உலகின் பல பண்பாட்டுக் கூறுகளோடு கலந்து கரைந்துள்ளன.

3)            தமிழ்த் தேசிய வரலாறு, இந்தியத் தேசிய வரலாறு, உலகத் தேசிய வரலாறு ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று நீங்காப் பிணைப்புடையவை.

“அப்பாத்துரையார் தமிழின் மூலத்தையே ஆராய முனைற்தவர்; தமிழ் இனத்தின் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்துக்கும் மற்ற இனத்துக்கும் இடையே பகைமூட்ட அல்ல; தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” –என அறிஞர் அண்ணா போற்றிப் புகழ்ந்துரைத்துள்ளமை முற்றிலும் உண்மையே!

                ‘கிருஷ்ண தேவராயர்’, ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்’, ‘டேவிட் லிவிங்ஸ்டன்’, ‘அரியநாத முதலியார்’, ‘கலையுலக மன்னன் இரவிவர்மா`, `வின்ஸ்டன் சர்ச்சில்`, `அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்`, `அறிவுலக மேலை பெர்னாட்ஷா`, `கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர்அலி`, `ஆங்கிலப் புலவர் வரலாறு`, சங்க காலப் புலவர்கள் வரலாறு`, `அறிவியலாளர் பெஞ்சமின் ஃபிராங்கிளின்` -உட்பட பலரின் வாழ்க்கை வரலாறுகளை அரிய பல நூல்களாகப் படைத்துள்ளார். 

                சங்க காலப் புலவர்களில் பிசிராந்தையார், கோவூர் கிழார், ஒளவையார், பெருந்தலைச் சாத்தனார் முதலிய நால்வர் பற்றி எழுதியுள்ளார்.

                `கலையுலக மன்னன் இரவிவர்மா` என்னும் நூலில், ``இரவிவர்மா ஓவியத்தைத் தாய்மொழியாகக் கொண்டு அதில் கவிதை வரைந்த கலைஞன்`` என்று அவர் கூறியிருப்பதில் அனைத்துமே அடங்கிவிடுகிறது!

                `நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்` என்னும் வரலாற்று நூலில், நேதாஜியை இந்தியாவின் நெப்போலியனாகக் காண்கிறார்.  மேலும், ``இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளரை எதிர்க்கத் துணிந்தவர்கள் இருவரே.  இவர்களுள் காலத்தால் முந்தியவர் `கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி! மற்றவர், கிழக்காசியாவிலிருந்து கொண்டு இந்தியாவின் வீரக்கொடியை வானளாவப் பறக்கவிட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ்`` என்று மொழிந்து முத்திரை பதித்துள்ளார்.

                `அறிவுலக மேதை பெர்னார்டு ஷா` வைப்பற்றிய நூலில், ``அவர் வாழ்க்கையில் எதிர்த்து நீந்தி வியத்தகு வெற்றிகண்ட பெரியார் என்றும் ஷாவின் வாழ்க்கை வருங்கால உலகின் இளைஞருக்குப் படிப்பினையாகத் தக்கது`` என்றும் குறிப்பிட்டடுள்ளார்.

                அலெக்ஸாண்டர், சந்திரகுப்தர், சாணக்கியர் ஆகிய மூவரையும் பற்றி ஏ.எஸ்.பி. ஐயர் எழுதிய நூலை மொழிபெயர்த்து தந்து உள்ளார்.

                அறிஞர் அப்பாத்துரையார், இளைஞர்கள் பயிலும் பாடநூல்களுக்காகவே, சாதனையாளர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதிக் குவித்துள்ளார்.

             கிரேக்க இலத்தீன் மொழிகள், அரபு எபிரேய மொரிகள், சமஸ்கிருதம், முதலிய எல்லா உலக மொழிகளிலும் மொழிக்கு மட்டுமே இலக்கணம் உண்டு.  இலக்கியத்துக்கு இலக்கணம் இல்லை, தமிழ் மொழியில் மட்டுமே தொடக்கக் காலத்திலிருந்து மொழிக்கும், இலக்கியத்துக்கும் ஒருங்கே இலக்கணம் உண்டு. 

             உலக வழக்கும் செய்யுள் வழக்கும் இலக்கணத்துக்கு இலக்யிமாகக் குறிக்கப் பெற்றது தமிழ் மொழியில் மட்டுமே.

             தமிழ் மொழியில் தொடக்கத்திலிருந்தே, எழுத்துக்களின் தொடர்ந்த ஒலிப்பு வேறாகவும் சொல்லின் ஒலிப்பு வேறாகவும் இருந்ததில்லை.

-எனப் `பன்மொழிப் புலவர்` அப்பாத்துரையார் தமது ஆய்வின் மூலம் தமிழின் சிறப்புத் தகுதியை உலகிற்கு பறைசாற்றியுள்ளார்.

                `` தமிழிலக்கிய வானில் திருக்குறள் ஒரு கதிரவன், மணிமேகலை ஒரு பால்நிலா வெறிக்கும் தன்மதியம், சிலப்பதிகாரம் பண்மணி ஒளிவீசும் ஒரு வானவில், சங்க இலக்கியப் பாடல்கள் யாவும் சேனில் நிலவும் ஒளிக்கோனங்களாகிய விண்சுடர் மணிகள்``

                என தமிழிலக்கியத்தின் பெருமையையும், சிறப்பையும் தமது, `தமிழ் தந்த இன்பம்` என்ற நூலில் எடுத்தியம்பியுள்ளார்.

                ``தமிழ் தமிழரின் இலக்கிய மொழியாகவும், அரசியல் மொழியாகவும், அறிவுத்துறை மொழியாகவும் தொன்று தொட்டு இயங்கி வந்துள்ளது.  இடையிருட்கால அடிமைச் சூழல்களிடையே தமிழர் தம் தட்டுக்கெட்டனர்`` என்ற கூறி தமிழ் மொழி வளர்ச்சி பெற தமிழர்கள் பாடுபட வேண்டும் என வலியுறுத்துகிறார்.

                அப்பாத்துரையார், திருக்குறளுக்கு விரிவும் விளக்கமுமாக பல்லாயிரம் பக்கங்கள் ஓயாமல் எழுதிக் குவித்தவர்.  `அவரது திருக்குறள் மணி விளக் உரை` என்ற தலைப்பில் ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.  மேலும், கவியரசு கண்ணதாசன் நடத்திய `தென்றல்` வதரஇதழிலும், `அன்னை அருங்குறள்` என்ற தலைப்பில் புதிய குறள்பா படைத்தார்!

                திருக்குறள் உரைக்கெனவே `முப்பால் ஒளி` என்ற இதழை ஆறு ஆண்டுகள் தொடர்ந்து வெளியிட்டார்.

                அவரது திருக்குறள் விளக்க உரையில், உலகின் பலமொழிகளில் உள்ள அறிவார்ந்த அற நூல்களோடு ஒப்பிட்டு திருக்குறளைக் காணும் காட்சி மிகப் புதியது.

                `உலக இலக்கியங்கள்` என்ற நூலில் பிரெஞ்சு, சீனம், ருசியா, உருது, பாரசீகம், கன்னடம், தெலுங்கு, செருமணி, வடமொழி, கிரேக்கம் எனப் பத்து மொழிகளின் இலக்கியங்களை ஆராய்ந்து அரிய பல செய்திகளைத் தந்துள்ளார்.

                ``பிறநாட்டு நல்லறிர் சாத்திரங்கள்

                தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்``

என்று முழங்கிய மகாகவி பாரதியாரின் அறைகூவலை மனதில் ஏற்று, காரல் மார்க்சின் ‘னுயளள ஊயயீவையட’ நூலை முதன் முதலில் `முதலீடு` என்னும் பெயரில் மொழியாக்கம் செய்தார்.

                தற்கால இலக்கிய, நூல்கள்பற்றிய ஆய்வில், `மக்கள் எழுத்தாளர்` விந்தனின் எழுத்துக்களை திறனாய்வு செய்து, ``விந்தனின் மனச்சான்றே கலை படைப்பாய் அவரது கதைகளில் அமைந்துள்ளது`` என்று தெரிவித்துள்ளார்.

                வரலாறகள், வாழ்க்கை வரலாறுகள், மொழிபெயர்ப்புகள், இலக்கியத் திறனாய்வுகள், சிறுகதைகள், நாடகங்கள், பொது அறிவு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், குழந்தை இலக்கிய நூல்கள் என எத்துறைக்கும் ஏற்றதான நூற்று இருபது அரிய நூல்களைப் படைத்த ஆழ்ந்தகன்ற அறிஞர்!

                இப் `பன்மொழிப் புலவர்` அப்பாத்துரையார் படிப்பதையும், சிந்திப்பதையும் எழுதுவதையும் நிறுத்திய நாள் 26.05.1989 அன்றுதான் அவனியைவிட்டு அவர் மறைந்தார்.

- பி.தயாளன்

Pin It