அதிதீவிர வெப்ப உயர்வால் உலகில் மூன்றில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். உலகின் பல பகுதிகளிலும் நிலவும் வெப்பநிலை உயர்வு, இளமையான மற்றும் ஆரோக்கியமானவர்களுக்கும் இயல்பான உடலியல் வேலைகளைச் செய்வதைக் கடினமாக்குகிறது. காலநிலை மாற்றம், மக்கள் தங்கள் வாழ்வின் நேரத்தைப் பாதுகாப்பாகச் செலவிட முடியாதபடி சுருக்கி விட்டது என்று புதிய ஆய்வு கூறுகிறது.global warming 650உலக மக்களில் மூன்றில் ஒருவர்

உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இன்று உடற்செயல்பாடுகளைத் தீவிரமாகக் கட்டுப்படுத்தும் பகுதிகளில் வாழ்கின்றனர். புதைபடிவ எரிபொருட்கள் தொடர்ந்து எரிக்கப்படுவதால், பல இளமையான மற்றும் ஆரோக்கியமானவர்களுக்கும் கூட வெப்பம் உச்சத்தில் இருக்கும் கோடை காலப் பகல் நேரத்தில் வீட்டு வேலை செய்வது, மாடிப்படியை ஏறுவது போன்ற அடிப்படைச் செயல்களைச் செய்ய முடியாமல் போகிறது.

குறைவாக வியர்வை வெளியேறும் திறன் இருப்பதால், உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் வயது முதிர்ந்தவர்களிடம் இந்தக் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளன. உடலியல் ரீதியாக வெப்பத்தைச் சமாளிப்பது குறித்த ஆய்வுகளுடன், உலகளாவிய மற்றும் பிராந்திய ரீதியிலான மக்கள்தொகை, வெப்பநிலை மற்றும் மனித வளர்ச்சி தொடர்புடைய எழுபது ஆண்டு காலத் தரவுகளும் ஒப்பிடப்பட்டு ஆராயப்பட்டன. சராசரியாக 65 வயதிற்கும் அதிகமானவர்கள் இப்போது பாதுகாப்பான வெளிப்புறச் செயல்பாடுகளில் ஆண்டிற்கு 900 மணி நேர வெப்ப உயர்வை அனுபவிக்கின்றனர். இது 1950-களில் இருந்த 600 மணி நேரத்துடன் ஒப்பிடப்படும்போது, ஒரு மாதத்திற்கும் அதிகமான பகல் பொழுதிற்குச் சமமாகும்.

அதிக எரிவாயு, எண்ணெய் மற்றும் நிலக்கரியை எரிப்பதால் உமிழப்படும் பசுமைக்குடில் வாயுக்கள், செல்வந்த நாடுகளின் வாழ்க்கைமுறை மாற்றங்களால் அதிகம் வெளிவிடப்படுகின்றன. காலநிலை அவசரநிலை ஏற்பட ஏழை நாடுகளின் மக்கள் குறைவாகவே காரணமாக இருக்கின்றனர்; என்றாலும் அவர்களே இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சில வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பிரதேசங்களில், ஆண்டின் கால் பகுதி முதல் மூன்றில் ஒரு பகுதி வரையிலான கால அளவில் முதியோரின் வெளிப்புறச் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. தென்மேற்கு ஆசியாவில் பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக், ஓமன் போன்ற பகுதிகளில் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலாண்மை செய்து செலவிடும் ஆற்றல்

தெற்காசியாவில் பாகிஸ்தான், வங்கதேசம், இந்தியா மற்றும் மோரிட்டேனியா, மாலி, செனகல், புர்கினா பாசோ (Burkina Faso), ஜிபூட்டி (Djibouti), நைஜர் போன்ற சில மேற்காப்பிரிக்க நாடுகளில் மக்கள் மிகத் தீவிரமான சவால்களைச் சந்திக்கின்றனர். இதில் நிலவியல், வருமானம் மற்றும் வேலையின் இயல்பைப் பொறுத்து நாடுகளுக்குள் இருக்கும் பகுதிகளுக்கிடையே பெரிய அளவில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இந்தியாவில் இந்த வேறுபாடுகள் கங்கைச் சமவெளிப் பகுதிகள் மற்றும் கிழக்குத் தாழ் நிலப் பகுதிகளில் அதிகமாகவும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் இமயமலையின் அடிவாரப் பகுதிகளில் குறைவாகவும் உள்ளன. தென் அமெரிக்காவில் ஆண்டீஸ் தொடரின் உயரமான இடங்களில் உள்ள மக்களை விட, அமேசான் படுகைப் பகுதி மக்கள் வெப்பத்தால் பலவீனமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வளைகுடா நாடுகளில் செல்வந்தர்கள் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தி வெப்பநிலை உயர்வைச் சமாளிக்கின்றனர். ஆனால் இடம்பெயர்ந்து வந்த ஏழைத் தொழிலாளர்கள், கட்டுமான இடங்கள் மற்றும் வெளிப்புற வேலை பார்க்கும் இடங்களில் ஆபத்தான அளவில் சூரியக் கதிர்வீச்சுக்கு ஆளாகின்றனர்.

இந்த ஆய்வு 'நேச்சர் கன்சர்வென்சி' (Nature Conservancy) என்ற அமைப்பின் விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டது. இது குறித்த ஆய்வுக் கட்டுரை 'என்விரான்மென்டல் ரிசர்ச் ஹெல்த்' (Environmental Research Health) என்ற இதழில் வெளிவந்துள்ளது. முந்தைய ஆய்வுகள் போலன்றி, இந்த ஆய்வு உலகளாவிய வெப்பத்தால் ஏற்படும் ஆபத்துகளுக்கேற்பத் தகவமைத்துக் கொள்வதற்குரிய மக்களின் சமூக மற்றும் உடலியல் திறனை விரிவாக ஆராய்ந்துள்ளது.

வெவ்வேறு வெப்பநிலைகளில் வாழும் திறனை விஞ்ஞானிகள் 'மேலாண்மை செய்து செலவிடும் ஆற்றல்' (METs) என்ற அலகில் மதிப்பிட்டனர். இது, சராசரியாக ஒருவர் ஓய்வாக இருக்கும்போது செலவிடும் ஆற்றலுக்குச் சமமானது. 65 வயதிற்கும் குறைவாக உள்ளவர்கள், 3.3 என்ற அளவிலான ஆற்றலைச் செலவழித்து தரையைப் பெருக்குதல், நடுத்தர வேகத்தில் நடத்தல் போன்ற செயல்களை வெப்ப அழுத்தம் இன்றி ஒரு குறிப்பிட்ட நேரம் வரை செய்ய முடியும். தங்கள் உடல் வெப்பநிலையை அவர்களால் நிதானமாக ஒழுங்குபடுத்திக்கொள்ள முடியும் என்பதே இதன் பொருள்.

வாழத் தகுதியற்ற இடங்கள்

இதற்கு மாறாக, வாழ இயலாத நிலைக்குரிய கட்டுப்பாடுகள் சூடான இடங்களில் உள்ளன. மனிதச் செயல்பாடுகள் 1.5 METs அளவில் இருக்கும்போது, படுத்துக்கொண்டிருத்தல் அல்லது உட்கார்ந்திருத்தல் போன்ற எந்தச் செயலும் செய்யாத நிலையையே இது குறிக்கிறது.

வேறுபட்ட வயதுக் குழுக்களில் இந்நிலையால் ஏற்படும் பலவீனத்தைப் பரிசோதிக்க, விஞ்ஞானிகள் வெவ்வேறு கால அளவுகளில் வெப்பமான அறைகளில் தனிநபர்களின் வியர்வை வெளியேறும் அளவு மற்றும் தோலின் ஈரத்தன்மையை ஆராய்ந்தனர். 1950-1979 மற்றும் 1994-2024 ஆகிய காலக்கட்டங்களில் நிலவிய வாழக்கூடிய திறன் பற்றிய தரவுகளுடன் ஒப்பிட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

உயரும் வெப்பநிலையால் வாழ்வதற்குரிய நிலை மேலும் மோசமாகி வரும் உலகின் பகுதிகள் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன. இதனால் மக்கள் தொடர்ந்து விரிவடையும் உலகின் வாழத் தகுதியற்ற இடங்களில் பெரும் சவால்களுடன் வாழ்கின்றனர். இது 2024-ல் தீவிரமாக இருந்தது.

எரிவாயு, எண்ணெய் மற்றும் நிலக்கரியை எரிப்பது போன்ற உலக வெப்பமயமாதலின் முதன்மை மூலங்களை விரைவாகக் குறைக்க வேண்டும் என்பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. கொள்கை வகுப்பாளர்கள், மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு வளங்களை அளிப்பதன் மூலம் உதவ வேண்டும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

“இதற்குத் தீர்வு காணப்படாவிட்டால், நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் ஆண்டின் மிக வெப்பமான காலத்தில் அன்றாட வாழ்வியல் செயல்களை இனி பாதுகாப்பாக வெளியில் சென்று மேற்கொள்ள முடியாது. வெப்ப உயர்விற்கு மிகக் குறைவாகக் காரணமானவர்களே இதனால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் வாழ்கின்றனர். ஒவ்வொரு டிகிரி வெப்பநிலை கூடும்போதும் அதனால் உண்டாகும் பாதிப்புகளும் அதிகமாகின்றன."

ஒவ்வொரு டிகிரி வெப்பம் உயரும்போதும்…

தொழிற்புரட்சிக்குப் பின் 1.5 டிகிரி அளவு வெப்பம் உயர்ந்தால் உலகம் எவ்வாறு இருக்கும் என்ற கசப்பான உண்மையை 2024 நமக்கு எடுத்துக் காட்டியது. 2 டிகிரி அல்லது அதற்கும் அதிகமாக வெப்பம் உயராமல் இருக்க வேண்டுமென்றால் நாம் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும். மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெப்ப எச்சரிக்கை முன்னறிவிப்புகள் மற்றும் குளிர்ச்சிக்கான வசதியுடன் கூடிய உட்கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும், முதியவர்கள் மற்றும் வெளிப்புற வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். என்றாலும், இதற்காகச் செய்யப்படும் முதலீடுகள் உலக வெப்பமயமாதலைக் குறைப்பதற்கான மாற்றாக இருக்க முடியாது” என்று ஆய்வின் முன்னணி ஆசிரியர் லூக் பார்சன்ஸ் (Luke Parsons) கூறுகிறார். நாட்கள் செல்லச் செல்ல சூடு அதிகரித்து வரும் இன்றுள்ள சூழலில், உயரும் வெப்பநிலையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு நாம் முன்னோக்கி எடுத்துவைக்கும் ஒவ்வொரு சிறிய நகர்வும் பெரிய பயனைத் தரும் என்பதை உணர்வோம்.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.