அவளது பிரயாணத்தின் குறுக்கீடான
அகன்ற வாயிலைத் திறந்தபோது
சுவாசத்திலடித்தது சாத்தானின் வாடை

வேட்டை நாயொன்றைப் போலவந்து
Man
சதைகள் கவ்வமுயன்ற பொழுது
வேடிக்கை காட்டித்
தப்பிக்கத் தெரியவில்லை அவளுக்கு
தூக்கிப் போட்டு இரை நோக்கவைக்க
இறைச்சித் துண்டுகளும் கைவசம் இல்லை
அவளுடல் பாகங்கள் குறித்தே
சாத்தானுக்குக் குறியிருந்தது

சூழச் சூழ வந்து அவளைத்
தொட்டணைத்துத் தன்
பற்தடங்களைப் பதிக்கமுயன்றகணம்
தேவதூதனொருவனின் மெல்லிறகுக் காற்று
இருவருக்குமிடையே ஓர் அணையை எழுப்பிற்று
மாயக்கரமொன்று அவளதிர்ந்த நெஞ்சை
ஆறுதல்படுத்தி விழிநீர் துடைத்திற்று

கீறல்கள் மட்டும் சுமந்து
எப்படியோ சாத்தானைக் கூண்டொன்றிலடைத்திட்டாள்
எம்பி எம்பியது அவளிடம் வர
முயற்சித்தபடியேயிருக்க
அவளது பயணம் தேவதூதனை நோக்கித்
திசைமாறிற்று

இன்று
தூரத்து ஒளியொன்று பார்வையில் இடறிட
நெடுஞ்சோலைகள் தாண்டிப்
பசும்வெளிகள் தாண்டி
வற்றாத அழகிய நீர்வீழ்ச்சிகள் தாண்டி
நிலவற்ற நடுநிசிகளில் கூட
அவனது மெல்லிறகுகள் கொண்ட
அருட்கரங்களைத் தேடியே
அவள் பாதங்கள் தொலைந்தபடியிருக்க

அணையெழுப்பிய மெல்லிறகுக் காற்றே
நீயறியாயோ வெந்துருகும் அவள் சுடுமூச்சை ?
விழிநீரழித்த மாயக்கரமே
நீயறியாயோ பிரவகிக்கும்
அவள் துயரங்களின் மூர்க்கத்தை ?

எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It