கை தட்டும் ஓசை கேட்டாலே
அனிச்சையாய்
பதுங்கு குழி தேடி
ஒடுங்கும் கண்கள்.

எப்போதும் வெற்றிடமாய்
எண்சாணில் ஒரு சாண்.

நிகழ்ந்த கணங்களில்
இடறிப் பிழைத்து...
எப்போதும்
அடுத்த கணத்தில்
இமைத்துக் கொண்டிருக்கும்
மரணம்.

வியர்வையிலும்...
இரத்தத்திலும்...
கசியும்
மண்வாசனை.
 
ஒரே நூலில் ஊசலாடி...
ஒரே மையம் நோக்கிக் குவியும்...
கடவுளும்....காலனும்.
 
அகதியின் வாழ்க்கையின்
ஆறுதல் தராத காலம்
மழை உடைத்த நதியென
அடங்காமல் பெருகிச் செல்கிறது
பிணங்களைத் திருடியபடி.