srilanka 600ஐந்தாண்டு முன்பு முள்ளிவாய்க்கால் அவலமாக உச்சங்கண்ட இத்துணைப் பெரிய தோல்விக்கும் இத்துணைக் கொடிய அழிவுகளுக்கும் பிறகுங்கூட தமிழீழ மக்கள் நீதிக்காகவும் விடுதலைக்காகவும் அயராது தொடர்ந்து போராடி வருவது பெருமைக்குரிய செய்தி.

முக்களப் போராட்டம்

இந்தப் போராட்டம் புவியியல் நோக்கிலும் அரசியல் நோக்கிலும் மூன்று களங்களில் நடைபெற்று வருகிறது. தமிழீழத் தாயகம், புலம்பெயர் நாடுகள், தமிழ்நாடு ஆகியஇம்மூன்று களங்களிலும் நடந்து வரும் இப்போராட்டங்களின் இறுதிக் குறிக்கோள் தமிழீழ விடுதலைதான் என்றாலும், இந்தக் கட்டத்தில் வடிவங்களிலும் வழிமுறைகளிலும் உடனடிக் குறிக்கோள்களிலும் வேறுபாடு இருக்கவே செய்யும்.

இந்த மூன்று களங்களையும் ஒன்றாக இணைக்க முடியாது என்னும் போதே இவற்றுக்கிடையே ஒருவகை ஒருங்கிணைவு தேவைப்படுகிறது. புலம்பெயர் நாடுகளில் கிடைக்கும் சனநாயக வெளிகளைப் பயன்படுத்திப் பன்னாட்டு அரங்கில் சிங்களப் பேரினவாத அரசைத் தனிமைப்படுத்தும் முயற்சிகளும் சரி, தமிழகத்தில் இந்திய வல்லாதிக்க அரசுக்கு நெருக்கடி கொடுத்து சிங்கள அரசுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் மாற்றம் கொண்டுவருவதற்கான முயற்சிகளும் சரி, இறுதி நோக்கில் தமிழீழத் தாயகத்தில் விடுதலை வேண்டி நிற்கும் மக்களுக்குத் துணிவூட்டிப் போராடச் செய்வதற்காகத்தான், இதுவே மூன்று களங்களின் ஒருங்கிணைவு என்பதன் சாரம்.

முதற்களத்தில் ஆயுதப் போராட்டம், இரண்டாம் களத்தில் பொருளியல் ஆதரவு, மூன்றாம் களத்தில் அரசியல் ஆதரவு என்பது போன்ற புரிதல் இப்போது உதவாது. இப்போது மூன்று களங்களிலும் அரசியல் போராட்டங்களே!

ஒன்றோடு ஒன்று பின்னிக் கிடக்காமல் ஒன்றுக்கொன்று இசைவுடன் நடைபெற வேண்டிய போராட்டங்கள் இவை. இந்த இசைவை சாதிப்பதற்கு ஈழப் போராட்டத்தின் இன்றைய நிலை பற்றியும் எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் தெளிவான புரிதல் தேவை.

ஒற்றுமை தேவை

முக்களங்களின் இசைவுக்கான முயற்சிகள் ஒருபுறமிருக்க, அந்தந்தக் களத்திலும் போராட்ட ஒற்றுமை தேவைப்படுகிறது. தமிழீழக் களத்திலும் புலம்பெயர் களத்திலும் எதிர்வகையில் சிங்கள அரசின் அடக்குமுறையும் நேர்வகையில் இயக்கங்களின் பொறுப்புவாய்ந்த அணுகுமுறையும் சேர்ந்து, ஒற்றுமையின் திசையில் நல்ல முன்னேற்றத்துக்கு வழிசெய்துள்ளன. சிற்சில சுருதிபேதங்கள் இருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

ஆனால் தமிழகத்தில்? பதவி அரசியலால் போராட்ட ஒற்றுமை சிதறுவது பழைய கதை. கொள்கைவழி நின்று தன்னளிப்போடு போராடும் இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை கலைந்து போயிருப்பது கவலைக்குரிய செய்தி. கலைந்து போயுள்ளதே தவிர அடியோடு குலைந்து விட்டதாக நாம் கருதவில்லை.

இந்நிலையைச் சீர்செய்து ஒற்றுமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் இதை எழுதுகிறோம். எவ்வித உள்நோக்கமும் இல்லாமலும் எவ்வித உள்நோக்கமும் கற்பிக்காமலும் கருத்து வேறுபாடுகளைக் கருத்து வேறுபாடுகளாகவே மதித்து விவாதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.

விவாதப் பொருள்

எத்தனையோ கருத்துவேறுபாடுகள் இருக்கலாம், இப்போதைய நம் நோக்கத்துக்கு எல்லாவற்றையுமே விவாதித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. நிகழ் வேறுபாடுகளுக்கு மையமாக இருக்கிற ஒன்றை முதலில் எடுத்துக் கொள்வோம். அது ஐநா மனித உரிமை மன்றத் தீர்மானம் குறித்தான பார்வை.

இதில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை ஓரடி முன்னே... (தமிழ்த் தேசம் 2014 சித்திரை) கட்டுரையில் விளக்கியுள்ளோம். இதே பொருள் குறித்து எமக்கு மாறுபட்ட பார்வையுடன் வெளிவந்துள்ளவற்றை விவாதத்துக்கு உள்ளாக்குவதே இங்கு நம் நோக்கம்.

இந்த வரிசையில், மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள ஒரு குறுநூலில் இடம்பெற்றுள்ள ‘அமெரிக்கத் தீர்மானத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?’ என்ற அறிக்கையை முதலில் எடுத்துக் கொள்வோம்.

“தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறிய தமிழகத்தின் அரசியல் தோல்வியிலிருந்து உருவான மே பதினேழு இயக்கம் தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர் நலன் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காகவும் போராடி வருகிறது” என்று மேற்கூறிய அறிக்கை கூறுவதை ஏற்றுக் கொள்கிறோம். இந்தப் போராட்டத்தில் ஒத்த கருத்துடைய அமைப்புகளோடு மே பதினேழு ஒருங்கிணைந்து செயல்பட்டிருப்பதும் உண்மை.

தேசிய ஓர்மை மறுப்பு

தமிழீழ ஆதரவுப் போராட்டத்தைப் பொறுத்த வரை, மே பதினேழுடன் நாம் கருத்து மாறுபாடு கொள்ள நேரிட்டது 2014 மார்ச்சு ஐநா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த தீர்மானம் தொடர்பாகத்தான். அமெரிக்கத் தீர்மானம் தமிழர்களை ஒரு தேசிய இனமாகவே ஏற்றுக் கொள்ளவில்லை என்பது மே பதினேழு முன்வைக்கும் அடிப்படைக் குற்றாய்வு.

ததேபொகவும் இதே குற்றாய்வை முன்வைப்பதை அறிவோம். இது மே பதினேழு, ததேபொக ஆகியவற்றின் பார்வை மட்டுமன்று, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் தமிழகத்தின் தமிழீழ ஆதரவு அமைப்புகள் அனைத்தும் இதே பார்வை கொண்டவைதாம்.

புலம்பெயர் நாடுகளில் இயங்கி வரும் பொறுப்புள்ள தமிழர் அமைப்புகள் எதுவும் அமெரிக்கத் தீர்மானம் தமிழீழ மக்களின் தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வு தரும் என்று நம்பவில்லை. விவாதம் இது குறித்தன்று.

கண்டனம் சரி, காரணம் தவறு

“தமிழர்கள் ஒரு தேசிய இனமாகவும், அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு விசாரணை தேவை என்பதாகவும் இருந்த சர்வதேச விவாதத்தினை, அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் மூலம் வேறு திசையில் மாற்றி இருக்கிறார்கள்” என்று மே பதினேழு அறிக்கை சொல்கிறது.

தமிழர்களை ஒரு தேசிய இனமாக ஒப்புக்கொண்டு ஐநா மனித உரிமை மன்றம் போன்ற அதிகாரப்பற்றுள்ள பன்னாட்டு அரங்கில் ஒரு சர்வதேச விவாதம் எங்கே எப்போது நடைபெற்றது?

1985 திம்பு பேச்சுவார்த்தையின் போது தமிழீழ அமைப்புகள் அனைத்தும் சேர்ந்து வலியுறுத்திய நான்கு அடிப்படைக் கொள்கைகளில் முதலாவதே ஈழத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான். இந்தக் கொள்கைக்காக நாம் தொடர்ந்து போராடுவோம் என்பது உறுதி.

ஆனால் இது வரை இந்தக் கொள்கையின் அடிப்படையில் எந்தப் பன்னாட்டு அரங்கிலும் விவாதம் நடத்தப்பட்டதோ எந்த அரசு சார்பிலும் தீர்மானம் முன்மொழியப்பட்டதோ இல்லை.

தமிழர்களை ஒரு தேசிய இனமாகக் கொண்டு அவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு விசாரணை வேண்டும் என்று ஐநா மனித உரிமை மன்றத்திலோ அது போன்ற வேறு பன்னாட்டு அரங்குகளிலோ ஒரு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது போலவும், அதை அமெரிக்கத் தீர்மானம் வேறு திசைக்கு மாற்றி விட்டதாகவும் சொல்வதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை.

தமிழர்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள மறுப்பதும், அவர்களுக்கெதிரான இனக்கொலைக் குற்றத்துக்கு விசாரணை நடத்த மறுப்பதுமான அமெரிக்கத் தீர்மானத்தைக் கண்டிப்பது வேறு. அது வரை சென்று கொண்டிருந்த சரியான திசையை அமெரிக்கத் தீர்மானம்தான் மாற்றி விட்டது என்று அதற்கொரு காரணம் கற்பிப்பது வேறு.

டப்ளின் & பிறேமன் தீர்ப்பாயங்கள்

ஒருவேளை நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டப்ளின், பிறேமன் அமர்வுகளை மனத்திற்கொண்டு மே பதினேழு பேசுகிறதா?

நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டப்ளின் அமர்வு (2010 சனவரி) தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் குற்றங்கள் குறித்து ஆய்வு செய்கிறது என்றாலும், தமிழர்களை ஒரு தேசிய இனமாக அறிந்தேற்பது அல்லது அறிந்தேற்க மறுப்பது குறித்து விவாதிக்கவோ முடிவு கூறவோ இல்லை. அதற்கான தேவையும் அப்போது எழவில்லை.

பிறேமன் தீர்ப்பாயம் தமிழர்கள் மீதான தேசிய இன ஒடுக்குறையின் தொடர்ச்சியாக சிறிலங்கா புரிந்த இனக்கொலைக் குற்றம் குறித்துப் பேசுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிறேமனுக்கு ஐநா மனித உரிமை மன்றமோ அதன் உறுப்பு அரசுகளோ சட்ட மதிப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

பிறேமனின் அற மதிப்பை நம் பரப்புரையில் நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பது சரி. அமெரிக்கா என்றாலும், வேறு அரசு என்றாலும், ஐநா மனித உரிமை மன்றத்தில் முன்மொழியக் கூடிய தீர்மானத்தை பிறேமன் தீர்ப்பைக் காட்டித் குற்றத் திறனாய்வு செய்வதிலும் தவறில்லை.

ஆனால் ஐநா மனித உரிமை மன்றத்தின் வரம்புகளையும் அமெரிக்கா போன்ற வல்லாதிக்க அரசுகளின் நோக்கங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு, பிறேமன் தீர்ப்பின் முடிவை அடியற்றிய தீர்மானத்தை அமெரிக்காவிடமிருந்து ஐநா மனித உரிமை மன்றத்தில் எப்படி எதிர்பார்க்க முடியும்?

புதிய அமெரிக்கத் தீர்மானம் குறித்து மேம்பாடு அல்லது முன்னேற்றம் என்ற கணிப்பு பழைய தீர்மானங்களுடன் ஒப்பிட்டுப் பெறப்படுவதுதானே தவிர, டப்ளின் அல்லது பிறேமனுடன் ஒப்பிட்டன்று.

இருதரப்பு விசாரணை

மே பதினேழு அறிக்கை “இருதரப்பு விசாரணை என்பதன் நோக்கம் என்ன?”

என்று வினாத் தொடுக்கிறது. இருதரப்பு விசாரணை என்பது அமெரிக்கக் கண்டுபிடிப்பன்று. டப்ளின் தீர்ப்பாயம் பன்னாட்டுச் சமுதாயத்துக்கும், நன்கொடையளிக்கும் அரசுகளுக்கும், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் அளித்துள்ள முதல் பரிந்துரை இதுதான் (பத்தி 6.2):

“சிறிலங்காவுக்கான ஐநா சிறப்புத் தொடர்பாளர் ஒருவரை அமர்த்தி, சண்டையிட்ட எல்லாத் தரப்பினரும் புரிந்த மனித உரிமை மீறல்களுக்கும், மனிதநேயச் சட்ட மீறல்களுக்கும், போர்க் குற்றங்களுக்குமான பொறுப்புகளைப் புலனாய்வு செய்து இனங்காண வேண்டும்.” (அழுத்தம் சேர்க்கப்பட்டது.)

எல்லாத் தரப்பினரும் என்பதன் பொருள் என்ன? இது சிறிலங்காஅரசை மட்டும்தான் குறிக்குமா? ‘இருதரப்பு விசாரணை’ என்பதன் வித்து டப்ளின் தீர்ப்பிலேயே இருக்கக் காணலாம். இத்தனைக்கும் டப்ளின் தீர்ப்பாயம் சிறிலங்கா அரசின் குற்றங்கள் குறித்து விசாரித்ததே தவிர, விடுதலைப் புலிகளின் செயல்களை ஆய்விற்கொள்ளவே இல்லை.

தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வுப் பொறியமைவு ஒன்றை அமைக்கும்படி ஐநாவுக்கு முதலில் பரிந்துரை செய்தது மூவல்லுனர் குழு அறிக்கைதான். அது சிறிலங்கா அரசு மீது மட்டுமின்றி, விடுதலைப் புலிகள் மீதும் நம்பும்படியான குற்றச்சாட்டுகள் (credible allegations)  இருப்பதாக வகைப்படுத்தி, அவை குறித்துத் தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப் பரிந்துரைத்தது.

தமிழர் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் இனக்கொலை, போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள் குறித்துத் தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்கு மூவல்லுனர் குழு அறிக்கை உரமூட்டியுள்ளது.

இந்தக் கோரிக்கை குறித்து மே பதினேழு என்ன கருதுகிறது? ‘தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு வேண்டும், ஆனால் சிறிலங்கா அரசு மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மட்டுமே அது நடைபெற வேண்டும்.

விடுதலைப்புலிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யாமலே தள்ளுபடி செய்து விட வேண்டும்’ என்று நம்மால் கோர இயலுமா? அல்லது மூவல்லுனர் குழு அறிக்கை விடுதலைப் புலிகளையும் குறை சொல்கிறது என்பதால், அந்த அறிக்கையை அடியோடு மறுதலித்து, அதனடிப்படையிலான புலனாய்வு எதுவும் தேவையில்லை என்று சொல்ல முடியுமா? அடிப்படையில் மூவல்லுனர் குழு அறிக்கையை நாம் வரவேற்பதா, இல்லையா?

சிங்கள அரசும் புலிகளும் ஒன்றல்ல

நம்மைப் பொறுத்த வரை இனக் கொலைகார சிறிலங்கா அரசின் மீதான குற்றச்சாட்டுகளையும், தமிழ் மக்களின் பாதுகாப்புக்காக ஆயுதமெடுத்த விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுகளையும் நிகர்ப்படுத்துவதை ஏற்பதற்கில்லை.

அதேபோது புலிகளையும் சரி, வேறு எவரையும் சரி, பிழையாப் பெருமை கொண்டவர்களாக நாம் கருதவில்லை, தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு நடந்தால், சிறிலங்கா அரசின் மீறல்களையும் புலிகளின் பிழைகளையும் ஒரே வகைக் குற்றங்கள் என்ற முடிவு ஏதும் வர வாய்ப்பே இல்லை. அப்படியே வந்தாலும் அதனால் தமிழீழ மக்களின் நீதிக்கும் விடுதலைக்குமான போராட்டம் சேதப்படாமல் பாதுகாக்கும் அற வலு தமிழர்களுக்கும் உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆற்றல்களுக்கும் உண்டு என நம்புகிறோம்.

இப்போது புலிகள் மீது சொல்லப்படுவன போன்ற குற்றச்சாட்டுகள் கடந்த காலத்தில் உலகின் வேறு பல விடுதலை இயக்கங்கள் மீதும் சொல்லப்பட்டவைதாம். இவற்றில் சில குற்றங்கள் உண்மையிலேயே நடந்தவைதாம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டதும் உண்டு. இதனாலேயே அவை விடுதலை இயக்கங்கள் இல்லை என்று ஆகி விடவில்லை.

சான்றாக, பாலத்தீன விடுதலை அமைப்புகளையும், ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசையுமே குறிப்பிடலாம். ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ் மீதான இப்படிப்பட்ட சில குற்றச்சாட்டுகளை நெல்சன் மண்டேலாவே ஏற்றுக் கொண்டுள்ளார். வீரத் தெலங்கானா ஆயுதப் போராட்டத்தின்போது இவ்வாறான குற்றங்கள் நிகழ்ந்ததை இந்தியப் பொதுமைக் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது.

பன்னாட்டுச் செயல்வழிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளைக் குற்றம் சொல்வதா? என்று உணர்ச்சி மேலிடக் கேட்டு, வினவல், ஆய்தல், உசாவல் (enquiry,  investigation and trial) எனும் பன்னாட்டுச் செயல்வழிகளைத் தவிர்க்கப் பார்ப்பது உலகின் பார்வையில் நம்மை நியாயமற்றவர்களாகக் காட்டிப் பகைக்கே வலுச்சேர்ப்பதில் போய் முடியும்.

எந்த விசாரணைக்கும் புலனாய்வுக்கும் எங்களை உட்படுத்திக் கொள்ள நாங்கள் தயார், சிங்களப் பகை தயாரா? என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்வோம், இதுதான் பகையைத் தனிமைப்படுத்தி, நம் போராட்டத்தை வலுப்படுத்தும்.

இருதரப்பு விசாரணை என்பது அமெரிக்கத் தீர்மானத்தில் புதிதாக வந்து விழுந்து விடவில்லை. மூவல்லுனர் குழு அறிக்கை மட்டுமன்று, மனித உரிமை ஆணையரின் அறிக்கை, சேனல் நான்கு ஆவணப் படங்கள் என்று நடுநிலை ஆய்வுகள் பலவும் விடுதலைப் புலிகளும் பன்னாட்டுச் சட்டங்களை மீறிக் குற்றம் புரிந்திருப்பதாகச் சொல்லவே செய்கின்றன.

எனவே இந்தக் குற்றச்சாட்டுகளைக் கைகட்டி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. ஆனால் இவற்றின் மீதான விசாரணையோ புலனாய்வோ கூடாது என்று வாதிடுவது நம் நியாயத்தை வலுக்குன்றச் செய்து சிங்களப் பகை தப்புவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதாகி விடும் என்கிறோம்.

இந்திய, சிங்கள அணுகுமுறை

இருதரப்பு விசாரணை என்பது தமிழ்த் தரப்புக்குப் பாதகம் செய்வதும் சிங்களத் தரப்புக்கு நன்மை செய்வதும் ஆகும் என்றால், சிறிலங்காவும் இந்தியாவும் அதை எதிர்க்க வேண்டியதில்லையே?

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, கனேடியத் தமிழர் பேரவை போன்ற தமிழர் அமைப்புகள் அதை ஏற்க வேண்டியதும் இல்லையே? புலிகள் புரிந்த போர்க் குற்றங்கள் குறித்து தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு தேவை என்று சிறிலங்காவோ இந்தியாவோ ஒப்புக்கும் கோரிக்கை வைக்கவில்லையே, ஏன்?

அப்படி ஒரு புலனாய்வு நடந்தால் தமிழர்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்பைக் காட்டிலும்...

இந்திய உடந்தையோடு சிறிலங்கா செய்த இனக்கொலை, போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் அம்பலப்பட்டு விடவே கூடுதல் வாய்ப்புள்ளது என்ற அச்சம்தானே காரணம்?

எவர் எப்படி விசாரித்தாலும் சரி, புலிகள் சிங்களர்களை இனக்கொலை செய்தார்கள் என்று யாராலும் விரல் நீட்டிச் சொல்ல முடியுமா?

எனவே புலிகளின் ஆட்சியிலிருந்து சிங்களர்களுக்கு விடுதலை வேண்டும் என்று கேட்க முடியுமா? மாறாக சிங்கள அரசு புரிந்த இனக்கொலை, போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்களுக்கு ஈடாகத் தமிழர்களுக்கு ஈடுசெய் நீதி வேண்டும், பாதுகாப்பு வேண்டும், பொது வாக்கெடுப்பு வேண்டும் என்றெல்லாம் கேட்க முடியுமே! கேட்டதும் கிடைக்காதுதான், ஆனால் அவற்றுக்கான மக்கள் போராட்டத்துக்கு வலுச் சேர்க்க முடியுமே!

சட்ட நுணுக்கங்களும் அரசியல் விளைவுகளும்

இருதரப்பு விசாரணையால் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்குப் பாதிப்பு இருக்காது என்றும், தமிழர் தரப்புக்கே பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், விசாரணை முடிய 15, 20 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் மே பதினேழு அறிக்கை அச்சம் தெரிவிக்கிறது. இப்படிச் சொல்வதற்கான சட்ட நுணுக்கங்கள் சரி என்றே வைத்துக் கொண்டாலும், அவற்றைக் காட்டிலும் இந்த விசாரணையின் அரசியல் விளைவுகள்தாம் முக்கியமானவை எனக் கருதுகிறோம். 2009 தொடங்கி நாளது வரையிலான ஐநா மனித உரிமை மன்ற நடடிக்கைகள், மூவல்லுனர் குழு அறிக்கை, ஆணையர் அறிக்கை, தீர்மானங்கள் மீதான விவாதங்கள், வாக்கெடுப்புகள்...

இவை யாவும் தமிழீழக் களத்தில் போராட்ட வெளியை உருவாக்கவும் விரிவாக்கவும் துணை செய்துள்ளனவா, இல்லையா? உலக அளவிலும் தமிழக அளவிலும் தமிழீழ ஆதரவுப் போராட்டங்களுக்குத் துணை செய்துள்ளனவா இல்லையா?

எது போராட்டப் பாதை?

இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஒரு தீர்மானம் இருதரப்பு விசாரணை என்ற ஒரு காரணத்தாலேயே ‘தமிழீழ விடுதலையை நோக்கி நகருகின்ற நமது போராட்டப் பாதையைப் பின்னுக்குத் தள்ளி’ விடும் என்று மே பதினேழு அச்சப்படுவதற்கு அடிப்படை ஏதுமில்லை. தமிழீழ விடுதலையை நோக்கி நகருகின்ற போராட்டப் பாதை என்று சொல்வதை நீங்களே விண்டுரைக்க முற்பட்டால் உங்கள் தன்முரண்பாடு தானாக வெளிப்படும். நீங்கள் பரிந்துரைக்கும் போராட்டப் பாதை என்பது அறிந்தோ அறியாமலோ பன்னாட்டு அரங்கில் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வதில் போய் முடியும்.

அமெரிக்க மயக்கமில்லை

அமெரிக்கத் தீர்மானத்தைக் குற்றாய்வு செய்வதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. இதை நாம் மட்டுமன்று, பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழி செய்கிற அளவில் அதை வரவேற்றுள்ள உலகத் தமிழர் அமைப்புகளும் தெளிவுபடுத்தியுள்ளன.

அமெரிக்க வல்லரசு குறித்து ஒருசில தமிழர்களுக்கு மயக்கம் இருக்கலாம், எமக்கு இல்லவே இல்லை. ஆனால் அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்க்கும் மிகையார்வத்தில் ‘அமெரிக்கா மட்டும் இருதரப்பினரையும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதை விமர்சிக்காமல் எவ்வாறு கள்ள மௌனம் சாதிக்க முடியும்?’ என்று மே பதினேழு அறிக்கை கேட்கிறது.

‘இது வரை எந்த ஒரு சர்வதேச அறிக்கைகளிலும், சார்லஸ் பெட்ரி, நோர்வே, ஐநா வல்லுநர் குழு, மனித உரிமைக்குழுக்கள் புலிகளுக்கு எதிரான ஆதாரங்களை முன்வைக்காத பொழுது...’ என்ற பீடிகையோடு மேற்சொன்ன வினா தொடுக்கப்படுகிறது.

சர்வதேச அறிக்கைகளில் புலிகள்

‘எந்த ஒரு சர்வதேச அறிக்கையிலும்’ புலிகளுக்கு எதிரான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லையா? மூவல்லுனர் குழு அறிக்கை சொல்வது என்ன? போரின் இறுதிக் கட்டங்களில் புலிப் படை பொதுமக்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டது, படைக்குக் கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை ‘நம்பும்படியான குற்றச்சாட்டுகள்’ என்ற வகையில் அது குறிப்பிடுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை இறுதியாக மெய்ப்பிக்கவோ பொய்ப்பிக்கவோதான் தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு தேவைப்படுகிறது.

சிங்கள அரசின் கொடுங்குற்றங்களை உலகறியச் செய்ததன் மூலம் தமிழினத்துக்கு அருந்தொண்டாற்றியுள்ள சேனல் நான்கு & கலம் மக்ரே புலிகள் மீதும் சில குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருக்கிறார்.

பன்னாட்டுப் பொதுமன்னிப்புக் கழகம் சில குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது. சிங்கள அரசு ‘தமிழ்ப் பெண் புலி’ என்று வர்ணிக்கின்ற நவநீதம் பிள்ளையும் புலிகள் மீது சில குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்து வாதுரைக்கவோ, காரண விளக்கம் சொல்லவோ, ஒப்புக்கொண்டு சரி செய்ய முயலவோ நமக்கு முழு உரிமை உண்டு. ஆனால் யாருமே சொல்லாததை அமெரிக்கத் தீர்மானம் இட்டுக்கட்டிக் கிளப்பி விடுகிறது என்று சொல்வது உண்மைக்கு மாறானது.

பெட்ரி அறிக்கையும்தான்

மே பதினேழு அறிக்கை சார்லஸ் பெட்ரியையும் போகிறபோக்கில் தனக்கு சாட்சி ஆக்கிக் கொள்கிறது. பெட்ரியின் ஐநா உள்ளக ஆய்வறிக்கையை மே பதினேழு தோழர்கள் மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டுகிறோம். இந்த அறிக்கை ஐநா நடவடிக்கைகள் தொடர்பானதே என்றாலும், புலிகளைப் பற்றிய குற்றச்சாட்டுகளும் இல்லாமலில்லை.

சான்றாக ஒன்றைக் குறிப்பிடுவதென்றால், “அரசுப் படைகள் தொடர்ந்து இராணுவத் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போதே, பொதுமக்கள் சண்டைப் பகுதியிலிருந்து வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்க மறுத்து, செயலளவில் அவர்களைக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டனர்.” இது பெட்ரி அறிக்கையின் பத்தி 19இல் காணப்படும் குற்றச்சாட்டு.

எதிர்ப்பது எப்படி?

அமெரிக்கத் தீர்மானத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? என்று வினாத் தொடுத்து விடையிறுக்க முற்படும் மே பதினேழு அறிக்கை... அமெரிக்கத் தீர்மானத்தை எப்படி எதிர்க்க வேண்டும்? என்ற வினாவிற்கும் விடை தேடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அமெரிக்கத் தீர்மானத்தைக் கிழித்தெறிவோம்! அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிடுவோம்! என்ற முழக்கங்கள் மட்டுமே எதிர்ப்பாகி விடுமா? அயோக்கியத்தனமான அமெரிக்கத்

தீர்மானத்தைத் தோற்கடிக்க வேண்டாமா? தோற்கடிக்கும்படி ஐநா மனித உரிமை மன்ற உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தீர்களா? இந்தியாவிடம் அப்படிக் கோரிக்கை வைத்தீர்களா?

இந்தியாவிடம் கோரிக்கை என்ன?

நாம் இந்தியாவில் இருந்து கொண்டு போராடுவதாலும், இந்தச் சிக்கலில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என்பதாலும், இந்தியாவிடம் நம் கோரிக்கை என்ன என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருவது உறுதியான பின் அதற்கு எதிராக வாக்களிக்கும் படி இந்தியாவைக் கோருவதுதான் உங்கள் நிலைப்பாட்டிலிருந்து எடுக்க வேண்டிய தருக்கவழி முடிவாக இருக்க முடியும்.

அமெரிக்கத் தீர்மானம் & அதிலடங்கிய எல்லாக் குறைநிறைகளோடும் நிறைவேறியதைத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பெருந்தோல்வியாகவும், சிங்களத்துக்குக் கிடைத்த பெருவெற்றியாகவும் கருதுகின்றீர்களா?

இத்தீர்மானத்தைத் தடுக்க முயன்று, இறுதியில் வாக்கெடுப்பிலிருந்து விலகி நின்ற இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உங்கள் பார்வை என்ன? இந்தக் கேள்விகளைக் கேட்பது உங்கள் பிழையை உணர்த்தும் நோக்கிலும், அதன் வழி கருத்தொற்றுமைக்கும் செயலொற்றுமைக்கும் வழிகோல வேண்டும் என்பதற்காகவும்தானே தவிர, உள்நோக்கம் கற்பித்து உங்கள் பார்வையைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல.

வெற்றியும் விழிப்பும்

ஆக, அமெரிக்கத் தீர்மானம் ஈழத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக அறிந்தேற்கவில்லை என்பதையோ அது இருதரப்பு விசாரணையைக் கோருகிறது என்பதையோ மட்டும் வைத்து, செயலளவில் பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிகோலும் அதன் பயன்பாட்டைப் புறந்தள்ளி விட முடியாது. இது அமெரிக்க அரசோ பிரித்தானிய அரசோ பிற அரசுகளோ தமிழ்மக்களுக்கு இடும் பிச்சை அன்று.

இது ஈடுசெய் நீதிக்காக உலக அளவில் தமிழர்களும் மனித உரிமை ஆற்றல்களும் நடத்தியுள்ள ஐந்தாண்டுக் காலப் போராட்டத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி. இந்த வெற்றியை முன்னெடுத்துச் செல்ல... தொடர்ந்து விழித்திருந்து போராட வேண்டிய கடமை நமக்குண்டு. அயர்ந்தால் ஆதிக்க அரசுகள் நம்மை ஏமாற்றிவிடும் ஆபத்துண்டு.

பிறேமன் தீர்ப்பு

தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான போராட்டம் அதிகாரப்பற்றுள்ள பன்னாட்டு நிறுவனங்களை மட்டும் சார்ந்து நிற்கத் தேவையில்லை. இன்றைய உலகில் அரசுகள் மட்டுமே ஆற்றல்கள் அல்ல. நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் போன்ற அறவழி நிறுவனங்களின் வழிமுறைகளும் நமக்குத் தேவை.

மூவல்லுனர் அறிக்கை வருவதற்கு முன்பே டப்ளின் தீர்ப்பு நம் முயற்சிகளுக்குத் துணை செய்தது. அதே போல் பிறேமன் தீர்ப்பும் மதிப்புமிக்க ஒன்று. நடந்தது இனக்கொலை என்று வரையறுத்ததிலும் அதில் வல்லரசுகளின் பங்கை நிறுவியதிலும் அதன் பங்கு முகாமையானது. பிறேமனில் மே பதினேழு எடுத்த சீரிய முயற்சியைப் பாராட்டுகின்றோம்.

பிறேமன் தீர்ப்பை ஐநா மனித உரிமை மன்றப் புலனாய்வு பின்னுக்கிழுத்து விடும் என்பது ஒரு மேற்போக்கான பார்வை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இது வெறும் குற்றவியல் நீதிக்கான போராட்டமன்று, அதற்கும் மேலே இது அரசியல் நீதிக்கான போராட்டம்.

பிறேமனைப் பெரிதாகக் கண்டுகொள்ளும் தேவை இராசபட்சனுக்கு எழவில்லை. ஆனால் ஐநா புலனாய்வுக்கு எடுத்த எடுப்பிலேயே முட்டுக்கட்டை போடத் தொடங்கி விட்டது சிங்களம். உலகம் இதற்கு எதிர்வினை ஆற்றியாக வேண்டும்.

சிங்களத்தைத் தனிமைப்படுத்துவோம்!

புறக்கணிப்பு முதல்நீக்கம், தடைகள் (BDS = Boycott- Divestment- Sanctions ) என்ற வழிகளில் சிறிலங்காவை நெருக்கும்படி உலகையும் இந்தியாவையும் வலியுறுத்த வேண்டும். இதனால் சிங்களத்தை மென்மேலும் தனிமைப்படுத்த இயலும். இதற்கிணையாகத் தமிழினம் மென்மேலும் ஊக்கம் பெற்றுப் போராடும்.

அந்தப் போராட்டத்தில் தமிழகம் தனக்குரிய பங்கினை ஆற்றுவதற்கு நம்மிடையே – போராடும் இயக்கங்களிடையே  –கொள்கை வழிப்பட்டஒற்றுமை தேவை. ஒன்றுபடுவதற்காகவே ஒன்றுபடுவது அன்று, போராடுவதற்காக ஒன்றுபடுவதுதான் புரட்சிகர ஒற்றுமை. அத்தகைய ஒற்றுமைக்கு உரிமையுடன் அழைக்கிறோம்!

(தமிழீழ ஆதரவு இயக்கங்களிடையே ஒற்றுமை நோக்கில் இந்த விவாதத்தைத் தொடங்கியுள்ளோம். இயக்கங்களும் தலைவர்களும் மட்டுமல்ல, வாசகர்களும் எழுதலாம் & இயன்ற வரை சுருக்கமாக. - ஆசிரியர்.)

Pin It