periyar 355உண்மையில் எல்லைப் போராட்டம் நடத்தியவர்கள் அதை ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமாக நடத்தவில்லை. ம.பொ.சி. வடக்கெல்லைப் போராட்டம் நடத்திய போது, தமிழரசுக் கழகம் என்ற பெயர் வைத்துக் கொண்டிருந்தாலும் 1954இல் காமராசர் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் வரையில் காங்கிரசுக் கட்சியில்தான் இருந்தார்.

காங்கிரசுக் கட்சியை விட்டு வெளியே வந்த பிறகும் கூட அவருடைய சிந்தனைப் போக்கு இந்திய தேசியத்திலேயே குடிகொண்டிருந்தது. அதற்கு அவருடைய எனது போராட்டம் நூலே சாட்சி.

வடகெல்லை மீட்பு குழுவின் முதல் மாநாட்டிற்கு பெரியார் வாழ்த்து செய்தி அனுப்பினார் (செங்கோல் 11-1­53), நகரியில் நடைபெற்ற தமிழர் மாநாட்டுக்கும் பெரியார் வாழ்த்து. (செங்கோல் 15-2-53).

தெற்கெல்லைப் போராட்டம் நடத்திய மார்ஷல் நேசமணி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற பெயரிலேயே அமைப்பை வைத்திருந்தார். கொச்சி, திருவிதாங்கூரிலுள்ள "தமிழ்ப் பகுதிகளைத் தமிழ் நாட்டுடன் இணைப்பது மட்டுமே எங்கள் குறிக்கோள். மற்றபடி காங்கிரசுக்கும் எங்களுக்கும் கொள்கை வேறுபாடு கிடையாது" என்று வெளிப்படையாக அறிக்கை விட்டவர் (நம் நாடு 1-9-54). எல்லைப்போராட்டம் நடத்தியவர்கள் அடிப்படையில் இந்தியத் தேசிய வாதிகளாகவே இருந்தார்கள்.

நேசமணி 26-1-1957இல் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை கலைத்துவிட்டு, இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார். வடக் கெல்லைப் போராட்டத் தளபதி கே. விநாயகம் 1952 முதல் பிரஜா சோசலிடு கட்சி சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். 1957 இல் இந்தியத் தேசியக் காங்கிரசில் சேர்ந்தார்.

இருவரும் 1957 இல் காங்கிரசு கட்சி சட்ட மன்ற உறுப்பினர் ஆனார்கள்.ம.பொ.சி கடைசியாகக் காங்கிரசில் சேர்ந்தார். ஆக இவர்களில் யாரும் தமிழ் இன விடு தலைக்கான உண்மையான போராளிகள் அல்லர்.

இனி எல்லைப் போராட்டங்களைக் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.

ஆந்திர பிரிவினைக்காக பிரதமர் நேரு 1953இல் அமைத்த நீதிபதி வாஞ்சு குழு, தன் பரிந்துரையில், சென்னை ஆந்திராவின் தற்காலிக தலைநகராக 3-5 வருடங்கள் இருக்க வேண்டும். (அறிக்கை பக் 6).

ஆந்திராவின் உயர்நீதி மன்றம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சென்னையில் இருக்க வேண்டும். (அறிக்கை பக் 8)

சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் ஆந்திர மாணவர்களுக்கு 36சதவீத இடங்களை 25 ஆண்டுகளுக்கு ஒதுக்கித் தரவேண்டும். (அறிக்கை பக் 12-13) பிரிந்து போகும் ஆந்திர மாநிலம் புதிய தலைநகரை உருவாக்குவதற்குச் சென்னை மாகாண அரசு இரண்டரை கோடி ரூபாய் தர வேண்டும். (அறிக்கை பக் 26) என்பவை வாஞ்சிக் குழுவின் பரிந்துரைகளாகும். தமிழகத்தின் வடக்கெல் லையான சித்தூரையும் திருப்பதியையும் இக்குழுதான் ஆந்திராவிற்கு அளித்தது.

வாஞ்சுவின் பரிந்துரைகளைக் கண்டித்துத் தமிழ்நாடே கொதித்து எழுந்தது.

பிரதமர் நேரு 19-12-1952இல் நாடாளுமன்றத்தில் தகராறுக்கு இடமில்லாத 12 மாவட்டங்களைக் கொண்டு ஆந்திரம் அமையும் என்று அறிவித்தார். அவரால்தான் வடக்கெல்லை ஆந்திராவுக்கு சொந்தமாகி போனது. 14.7.53இல் ஆந்திர பிரிவினை மசோதாவை சட்டப் பேரவையில் தாக்கல் செய்த இராசாசியும், சித்தூரையும் திருப்பதியையும் திருத்தணிகையையும் ஆந்திராவுக்கே சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை மா.பொ.சி. கண்டிக்கவில்லை. முதல்வருக்கு சூழ்நிலை சந்தர்ப்பம்; இதைப் பெரிது படுத்த வேண்டாம் என்று 21­7-53 அன்று சட்டமன்ற மேலவையில் பேசினார்.

ஆந்திரா பிரச்சினை குறித்துத் திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழு 11-1-1953இல் நிறை வேற்றிய தீர்மானம்:

(எ) ஆந்திர நாடு பிரிவினை விஷயத்தில் ஆந்திரர்கள் பிடிவாதமாக இருப்பதால் ஆந்திரநாட்டைப் பிரிக்கும் விஷயத்தில் காலதாமதம் செய்யாமல் உடனடியாகப் பிரித்து விடவேண்டு மென்று இக்கமிட்டி தெரிவித்துக் கொள்ளுகிறது.

அப்படிப் பிரிப்பதில் ஆந்திரநாட்டினரிலேயே சிலர் பிரிவினைக்கு முட்டுக்கட்டை போடுகிற மாதிரியில் தாங்கள் பிரிந்துபோன பின்பும் எஞ்சியுள்ள சென்னை நாட்டில் தங்களுக்குச் சில உரிமையோ சலுகையோ அதாவது பொது நீதிமன்றம், பொது கவர்னர் முதலியவை சென்னையிலிருக்க வேண்டுமென்று கேட்பதையும், சென்னையைத் தற்காலிகத் தலைநகரமாக இருக்க இடம் தர வேண்டுமென்பதையும், இக்கூட்டம் கண்டிப்பதுடன், அப்படிப்பட்ட உரிமைக்கோ சலுகை முதலியவற்றிற்கோ மத்திய சர்க்கார் இடம் கொடுக்குமானால், தமிழர்களின் அதிருப்திக்கும், கிளர்ச்சிக்கும் ஆளாகவேண்டி நேரிடு மென்று மத்திய சர்க்காருக்கு எச்சரிக்கை செய்கின்றது.

இதே சமயத்தில் திராவிடர் கழகம் இராஜ்ய பிரிவினையைப் பற்றிய தனது கருத்தைக் தெரிவித்துக் கொள்ளுகின்றது. அதாவது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி நாடுகள் சேர்ந்த சென்னை ராஜ்யம் மத்திய (இந்திய யூனியன்) ஆட்சியின் எவ்வித சம்பந்தமுமில்லாத தனிச் சுதந்திர ராஜ்யமாகப் பிரிக்கப்படவேண்டும் என்பதே அதன் முடிந்த கருத் தாகும்.

இந்த நிலையில் சென்னை இராஜ்ஜியத் திலிருந்து எந்த மொழி நாடு பிரிந்து போனாலும் மீதியுள்ள மொழி நாடு அல்லது நாடுகள் பூரண சுதந்திரமுள்ள தனி அரசு நாடாக ஆக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்து கொண்டு இருக்கிறதுடன், இந்த கொள்கைக்குக் கட்டுப் பட்டுப் பிரிவினைக் கிளர்ச்சி செய்யும் எந்த மொழி நாட்டாருடனும் யாருடனும் திராவிடர் கழகம் கூடுமான அளவு ஒத்துழைக்க முன்வரும் என்று தெரிவித்துக் கொள்கின்றது.

(பி) எந்தக் காரணத்தைக் கொண்டும் மத்திய அரசாங்கத்தார் சென்னை நகரத்தையும் அதைச் சேர்ந்த எந்த பாகத்தையும் சேர்த்து கமிஷனர் இராஜ்யமாக (Commisioner State) ஆக்கக் கூடாதென்றும் இக்கமிட்டி வற்புறுத்தித் தெரிவித்துக் கொள்ளுகிறது.

(சி) பிரிட்டிஷ் ஆட்சி இருந்த காலத்தில் அவர்கள் நிர்வாக வசதிக்கு ஆக அமைத்துக் கொள்ளப்பட்ட ஜில்லா எல்லையில் தமிழ் பெரும்பான்மையாகப் பேசப்படும் பிரதேசத்தையும், தெலுங்கு பெரும்பான்மையாகப் பேசப்படும் பிரதேசத்தையும் ஒன்றாக ஒரே ஜில்லாவாக அமைத்திருந்தினர்.

சித்துர் ஜில்லாவில் திருத்தணி முதலிய பெரும்பாலாக தமிழ் பேசும் மக்களடங்கிய பிரதேசங்கள் இருப்பதனால் இப்போது மொழியை அடிப்படையாகக் கொண்ட நாடே பிரிக்கப்படுவதனால், ஒரு மொழி பேசும் நாட்டுடன் வேறு மொழி பேசும் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட பிரதேசம் சேர்க்கப்படுவதென்பது மொழிவாரிப் பிரிவினைத் தத்துவத்திற்கே எதிர்ப்பானது என்பதோடு, வேறு மொழி பேசும் மக்களுக்கும் இடையூறானது. ஆதலால் இந்த மொழிவாரி நாடு பிரிவினையில் சித்துர் ஜில்லாவிலுள்ள தமிழ் மொழி அதிகமாகப் பேசும் பிரதேசத்தைக் கண்டிப்பாகத் தமிழ் நாட்டுடன் சேர்க்க வேண்டுமென்று இக்கமிட்டி தீர்மானிக்கிறது. (விடுதலை 12-1-1953)

1-2-53 ஆம் தேதி தமிழ் முலிசும்கள் சார்பில் சென்னை கடற்கரையில் நடைபெற்ற "சென்னை தமிழருக்கே" என்ற சர்வக்கட்சிக் கூட்டத்தில் இலட்சக் கணக்கான மக்கள் மத்தியில் பேசிய பெரியார்: 'எங்களு டைய கொள்கைப்படி நாங்கள் பிரிவினை கேட்பது எல்லாம் இந்த மாதிரியான பிரிவினை அல்ல; நாடு பிரிய வேண்டும். எப்படிப்பட்ட பிரிவினை என்றால், பர்மா பிரிந்தது போல... அந்நியர் சுரண்டலற்ற தனி நாடு வேண்டும் என்பதுதான். ஆனால், பிரிய வேண்டுமென் பவர்களை சந்தோஷமாகப் பிரித்து அனுப்பிவிடுவோம். சுயநலக்காரர்களோடு சண்டை போட்டுக் கொண்டிருப் பதைவிட, வெளியே அனுப்பிவிடுவது நல்லது.

மற்றபடி இரண்டு, மூன்று பிரச்சனைகள் சொல்லப் படுகின்றன; அதாவது ஆந்திரா ஐ கோர்ட், சர்க்கார் காரியாலயம், தலைநகர் முதலியவைகள் எல்லாம் சென்னையில் கொஞ்சநாளைக்காவது இருக்க வேண்டும் என்கிறார்கள். எப்போது போகிறோம் என்று போகிறார் களோ, அவர்களுக்கு இங்கு என்ன வேலை? ஒரு வீட்டில் பாகப்பிரிவினை எல்லாம் செய்யப்பட்ட பிறகு 'சமையல் மட்டும் கொஞ்ச நாளைக்கு இங்கே செய்துகொள்கிறேன்' என்பது என்ன நியாயம்?

அடுத்தபடியாக கமிஷனர் மாகாணமாக சென்னை யை ஆக்கவேண்டும் என்று ஆந்திரர்கள் சொல்வதைப் பற்றிக் கூறவேண்டுமானால், மடத்தை விட்டுப் போகின்ற ஆண்டிக்கு நந்தவனத்தைப் பற்றி என்ன கவலை? மற்றும் நஷ்ட ஈடு கேட்பது என்பதும் அப்படித்தான் நியாய மில்லாத கோரிக் கையாகும்" என்று ஆந்திரர்களைக் கண்டித்துப் பேசினார். (விடுதலை 3-2-53)

சென்னை நகர மேயர் தி.செங்கல்வராயன், முதலமைச்சர் காமராசரைக் கலந்து ஆலோசித்து, அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். முதலமைச்சர் இராசாசி அக்கூட்டத்திற்குப் பெரியாரையும் அழைக்கும்படி கூறினார். பெரியாருக்கு மட்டும்தான் நேரு பயப்படுவார் என்பது இராசாசிக்கு நன்கு தெரியும். அக்கூட்டத்திற்குப் பெரியாரை அழைக்க மேயர் செங்க வல்வராயனும் சில காங்கிரசு கட்சியினரும் வந்தனர்.

பெரியார் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு இரண்டு இலட்சம் மக்களிடையே எழுச்சியுரை ஆற்றினார். ஆந்திரர்களின் அக்கிரமத்திற்கு முடிவுகட்ட ஒரு நாள் கடையடைப்பும் வேலைநிறுத்தமும் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்தார். அவ்வேண்டுகோளை காங்கிரசாரோ, ம.பொ.சி.யின் தமிழரசு கழகமோ ஏற்றுக்கொள்ளவில்லை. அக்கூட்டத்தில் எம்.பக்தவச்சலம், எ.என். கரையாளர், பி.டி. ராசன், மீனாம்பாள் சிவராஜ், ம.பொ.சி. உட்படப் பலர் பேசினர். மேயர் நன்றி கூறினார். (விடுதலை 17-2-1953).

வாஞ்சு அறிக்கை வெளிவருவதற்கு முன்பிருந்தே­ அதன் செய்திகள் கசிய ஆரம்பித்த காலம் முதலே விடுதலையில் அதன் ஆசிரியர் குத்தூசி சா.குருசாமி அவர்கள் மத்திய அரசைக் கண்டித்தும், ஆந்திரர்களைக் கண்டித்தும், வாஞ்சு அறிக்கையைக் கண்டித்தும்7-1­1953 முதல் பல தலையங்கங்கள் எழுதியுள்ளார்.

ம.பொ.சி.யின் பொய்

மேயர் தமது சொந்தப் பொறுப்பில் 16.3.53 அன்று திருவல்லிக்கேணிகடற்கரையில்கூட்டம்நடத்தமுயன்றார்; பெரியார் ஈ.வெ. ரா.வையும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்குமாறு இராசாசி கூறினார். நான் அவர்தான் சென்னை ஆந்திராவுக்குப் போனாலும் தமிழ் நாட்டிலிருந்தாலும் திராவிடத்தில் தானே இருக்கப் போகிறது என்று சொல்லிவிட்டாரே! தமிழ்நாட்டில்தான் இருக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு அவர் வருவாரா? என்றேன். இந்தக் கூட்டத்தில் நாயக்கர் பேசுவதை நான் விரும்புகிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள் அவர் வருவார் என்று சொன்னார். (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 623).

இது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பொய்? திராவிடர் கழக மத்தியச் செயற்குழு 11.1.1953இல் சென்னை தமிழ கத்திற்கே சொந்தம் தற்காலிகத் தலைநகராகக் கூட ஆந்திராவிற்குக் கொடுக்கக்கூடாது என்று கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், 1.2.53இல் சென்னை கடற்கரையில் இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலை யில் சென்னையில் ஆந்திரர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லையென்று கண்டித்துப் பேசிய பிறகும், 16.2.53 கூட்டத்திற்கு அழைக்க வந்த ம.பொ.சி இராசாசியிடம் கூறியதாக எனது போராட்டம் என்ற நூலில் எழுதியுள்ளது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி!

உண்மையில் ம.பொ.சி. யின் குருநாதர் இராசாசி தான் சென்னை ஆந்திரர்களின் தற்காலிகத் தலைநகராக இருக்கவேண்டும் என்று விரும்பினார். இதோ ம.பொ.சியே கூறுகிறார்: மாநாகராட்சியின் சிறப்புக் கூட்டம் நடைபெற இருக்கும் செய்தியைப் பத்திரிகை களில் பார்த்ததும் மேயரையும் என்னையும் இராசாசி தமது இல்லத்திற்கு அழைத்துப் பேசினார்.

ஆந்திர அரசுக்குத் தற்காலிகமாகக்கூட சென்னையில் இடம் தரக்கூடாது என்ற வாசகத்தை நீக்கிவிடுமாறு மேயரை யும் என்னையும் இராசாசி கேட்டுக் கொண்டார். மேயர் அவர்கள் வெகு சுலபத்தில் அதற்கு இணங்கி விட்டார். நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன்.

நிபந்தனை எதுவும் இல்லாமலே ஆந்திர அரசுக்கு சென்னையில் இடம் தரத் தமிழ்நாடு காங்கிர தலைவரும் தயாராக இருப்பதை நான் அறிவேன். (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 632) சென்னையில் ஆந்திராவுக்கு தற்காலிகமாகக் கூடத் தலைநகரமாக இருக்க அனுமதிக்கக் கூடாது என்று சொன்ன பெரியாரைத் துரோகி என்பதும், ஆந்திரத் தலைநகர் தற்காலிகமாகச் சென்னையில் இருக்க வேண்டும் என்று சொன்ன இராசாசியைத் தலைவர் என்பதும் இராசாசியைத் தமிழ்ப் பார்ப்பனர் என்பதும் வேண்டுமென்றே பெரியார் அவரை எதிர்க்கிறார் என்பதும் எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி என்பதை இதன்மூலம் நன்கு அறியலாம்.

மேயர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு ஆந்திராவின் தற்காலிகக் தலைநகராகக் கூட சென்னை இருக்கக்கூடாது என்ற தீர்மானத்தில் பெரியார் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கையொப்பமிட்டு பிரதமர் நேருவுக்கு விண்ணப்பம் அனுப்பினர்.

15.2.1953 சென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயற்குழு 22.2.1953 அன்று சென்னைக்கு வரும் குடிஅரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத்துக்குக் கருப்புக் கொடி காட்டத் தீரமானித்தது. (விடுதலை 16.2.53) அன்றே திராவிடர் கழக மத்திய செயற்குழு கூடி, இந்தியக் குடி அரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் சென்னைக்கு வரும் அன்றே தமிழக உரிமைப் பாதுகாப்பு நாள் தமிழக மெங்கும் கொண்டாடும்படித் தீர்மானம் நிறை வேற்றியது. (விடுதலை 16.2.53)

திட்டமிட்டபடி இராசேந்திர பிரசாத்துக்குக் குத்தூசி குருசாமிதலைமையில் ஆயிரக்கணக்கானதொண்டர்கள் கருப்புக்கொடி காட்டினர். காவல் துறையினரின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலால் சில தி.க. தோழர் களுக்கு மண்டையும் உடைந்தது.

22.2.53 அன்று "வாஞ்சு அறிக்கைக் கண்டன நாள்" தி.க. தோழர்களால் தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. தமிழ்ப் பகுதியைச் சேர்ந்த 32 நாடாளு மன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடு கருதாமல் புதுதில்லியில் 1953 மார்ச்சு 23இல் பிரதமர் நேருவைச் சந்தித்து, ஆந்திரத்தின் தற்காலிகத் தலைநகரமோ, உயர்நீதி மன்றமோ சென்னையில் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தினர். (விடுதலை (24-3-53)

இவ்வளவு போராட்டங்களுக்கு பிறகுதான் நேரு ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என்றார்.

தெற்கெல்லைப் போராட்டத்தைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்:

இந்தியாவில் உள்ள மாநிலங்களை மொழிவழி யாகப் பிரித்து அமைக்க நேருவின் தலைமையிலான இந்திய அரசு, நீதிபதி பசல் அலி தலைமையிலான குழுவை 29.12.53இல் அமைத்தது. அக்குழுவில் கே.எம். பணிக்கர் என்ற மலையாளியும், குன்சுரு என்ற உ.பி.காரரும் உறுப்பினர்களாக இருந்தனர். அக்குழு 30.9.1955இல் தங்கள் பரிந்துரையை இந்திய அரசுக்கு அளித்தது. 267பக்க அறிக்கையில், பக்81 முதல் பக்89 வரை தமிழகத்தைப் பற்றியது.

அக்குழுதான் தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட 4 தாலுக்காக்களைக் கேரளாவுக்குக் கொடுக்கவேண்டும் என்று பரிந்துரை செய்தது. மார்ஷல் நேசமணி தலை மையில் 1946 முதலே திருவாங்கூர், கொச்சி பகுதியில் உள்ள தமிழ்ப்பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடி வந்தனர். இந்த அறிக்கை வெளிவந்தவுடன், அவர்களுடைய போராட்டமும் அதி கரித்தது; தமிழகமும் கொந்தளித்து எழுந்தது. 10.7.54 முதலே விடுதலையில் திருவாங்கூர் தமிழர் கிளர்ச்சிக்கு ஆதரவான தலையகங்கள் எழுதப்பட்டு வந்தன.

தெற்கெல்லைப் போராட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள பெரியார் இசைவு. இது குறித்தும் ம.பொ.சியே கூறுகிறார்: வெளி ஜில்லாவில் சுற்றுலா செய்து கொண்டிருந்த பெரியாரை தந்தி மூலம் நான் சென்னைக்கு அழைத்தேன். அவரும் என் அழைப்புக்கு மதிப்பு கொடுத்து, சுற்றுலாவை பாதியில் நிறுத்திவிட்டு, சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்து உரையாடினார்... "இந்தப் பிரச்சனையில் அய்யாவை விட அக்கரையுள்ளவர்கள் யாரும் இருக்கமுடியாது. அதனால், அய்யா வீட்டில் அந்தக் கூட்டத்தை நடத்து வதையே நான் விரும்புகிறேன். அதுதான் நியாயமும் கூட" என்று கூறி, என்னைப் பெருமைப்படுத்தினார். (எனது போராட்டம், பக்.767)

21.11.1955 முதல் 24.11.1955 வரை தமிழகச் சட்டமன்றத்தில் இந்த குழுவின் அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது. மலையாளிகளும் இந்தியப் பொதுவு டைமைக் கட்சியினரும் தவிர எல்லோருமே தேவிகுளம் பீர்மேடு தமிழகத்துடன் இணைய வேண்டும் என்று பேசினர், தமிழக நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம், தேவிகுளம் பீர்மேடு தமிழகத்திற்குச் சொந்தம் என்பதை ஆதாரங்களுடன் விளக்கினார்.

இறுதி நாளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தேவிகுளம் பீர்மேடு தமிழகத்திற்குச் சேரவேண்டுமென்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் அதற்கு எதிராக 18 வாக்குகளும் கிடைத்தன. பின்னாளில் உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யர் உள்பட எதிர்த்து வாக்களித்தனர். தமிழகப் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர்கள் ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி, எம்.கல்யாண சுந்தரம் உட்பட 13 சட்டமன்ற உறுப்பினர்கள் நடுநிலைமை வகித்தனர். தீர்மானம் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக நிறைவேறியது. பொதுவுடைமைக் கட்சியினர் தெற்கெல்லைப் போராட் டத்தில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்தனர்.

வடக்கெல்லை பிரச்சினையிலும் இந்தியப் பொது வுடைமைக் கட்சி தமிழகத்திற்கு துரோகமே இழைத்தது. சித்தூர் ஜில்லாவும், திருப்பதியும் ஆந்திரர்களுக்கே உரியது என்று தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி 1948 இலேயே விளக்கமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. (ஜீவா, ஜனசக்தி தலையங்கம், 26-7-1952).

தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்தை ஆதரித்து, விடுதலையில் தலையங்கம் எழுதினார் குத்தூசி குருசாமி (விடுதலை 25.11.1955) நேரு, பசல் அலி குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதத் திற்கு வைத்தார். 16.12.1955 முதல் 23.12.55வரை விவாதம் நடைபெற்றது. நேசமணியும் தமிழக நாடாளு மன்ற உறுப்பினர்களும் எவ்வளவோ எடுத்துக்கூறியும், நேரு தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்தைப் புறக் கணித்துத் தேவிகுளம், பீர்மேடு கேரளாவுக்கே சொந்தம் என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்.

தமிழக முதல்வரையும், நிதிஅமைச்சர் சி.சுப்பிர மணியத்தையும் தில்லிக்கு அழைத்துத் தேவிகுளம், பீர்மேடு கேரளாவுக்குச் சொந்தம் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

நேரு கூறியபடி, தமிழக சட்டமன்றத்தில் சி.சுப்பிர மணியம் "தேவிகுளம், பீர்மேடு கேரளாவுக்கே சொந்தம்" என்று மசோதா கொண்டு வந்தார். 28.3.56 முதல் 31.3.56 வரை நடைபெற்ற விவாதத்தில் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் விவாதத்தில் பங்கேற் கக் கூடாது என்று கொரடா உத்தரவைப் பிறப்பித்து, "இது மேலிட உத்தரவு இதைமீற முடியாது" என்று கூறித் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கும் விடாமலே நிறை வேற்றினர். அப்போதுதான் முதலைமைச்சர், குளமாவது மேடாவது என்று சட்டமன்றத்திலேயே பேசினார்.

உண்மையான தமிழர்களின் எதிரி நேருவே என்பதை உணர்ந்த பெரியார், "மலையாளிகளைத் தமிழகத்தை விட்டு வெளியேறும் படியான கிளர்ச்சி செய்யாத வரையில் தில்லி பணியாது" என்று மதுரைப் பொதுக் கூட்டத்தில் அறிவித்தார்.(விடுதலை 18.1.56)

"தில்லி அநீதிக்கு மேல் அநீதி; தேவிகுளம் பீர்மேடு தாய்த் தமிழகத்திலிருந்து துண்டிக்கப்படுகின்றன" என்று 17.1.56 அன்று விடுதலையில் தலையங்கம் எழுதப் பட்டது. 15.2.56 அன்று, மன்னார்குடியில் பொதுக்கூட் டத்தில் பேசிய பெரியார் "பார்ப்பான், வடநாட்டான், மலை யாளி போன்ற அந்நியனெவனும் வெளியேற்றப்பட வேண்டியவனே! மலையாளிகளைத் தமிழ் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டாமா?" என்று ஆவேசப் பட்டார்.(விடுதலை 16.2.56).

ஆக தமிழகம் தன் மண்ணை இழந்தது திராவிடத்தாலா அல்லது இந்தியத்தாலா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். தமிழரசுக் கழகம் என்ற பெயரில் கட்சி வைத்துக் கொண்டு "நேருதான் என் தலைவர், காந்திதான் என் தலைவர், சத்தியமூர்த்திதான் என் தலைவர், இராஜாஜிதான் என் தலைவர்" என்று கூறி இந்தியத் தேசியத்திற்குக் காவடித் தூக்கிய ம.பொ.சி.தான் தமிழினத்துரோகி ஆவார்.

தி.மு.கவும், வடக்கு எல்லை, தெற்கு எல்லைப் போராட் டங்களில் தீவிரமாகப் பங்கெடுத்து கொண்டது. தேவி குளம், பீர்மேட்டை தமிழகத்துடன் இணைக்கக் கோரி, தி.மு.க.வினர் 110 பேர் செங்கோட்டை நீதிமன்றம் முன்பும், நாகர்கோவில் நீதிமன்றம் முன்பும் மறியல் செய்து, மூன்று மாதம் சிறையில் இருந்தனர்.(நம்நாடு, 7-8-54) ம.பொ.சி. வட எல்லைப் போராட்டத்தில் பெரியாரின் மீது பொய்யையும், புளுகையும் அவிழ்த்து விட்டதைப் போலவே தெற்கெல்லைப் போராட்டத்திலும் மிகப்பெரிய பொய்யை அவிழ்த்து விட்டார்.

'பெரியார் ஈ.வெ.ரா. எப்போதும் எதிலும் ஒரு தனிப்போக்கோடு நடந்து கொள்ளக்கூடியவரல்லவா?

பசல் அலி கமிஷன் பரிந்துரையிலும் தமது வழக்கப்படித் தான் அவர் நடந்து கொண்டார். திருச்சியிலுள்ள தமது மாளிகையில் தினத்தந்தி (தேதி கொடுக்கப்படவில்லை) நிருபர்க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை, கொச்சி, சித்தூர் ஆகிய பகுதிகள் பற்றி எனக்குக் கவலை இல்லை; மலையாளத் துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியதுதான்; சமீபத்தில் சர்தார் பணிக்கர் வந்திருந்தார்; அவரை 'நான் சந்தித்துப் பேசினேன்.

தொழிலுக்காகத் தமிழர்கள் அங்கு (தேவிகுளம், பீர்மேடு) வந்தார்களே ஒழிய நிலம் மலையாளத்தைதான் சேர்ந்தது' என்று பணிக்கர் சொன்னார்; நானும் சரி என்று சொல்லிவிட்டேன்' என பெரியார் கூறினார். (எனது போராட்டம் பக் 758) தினத் தந்திக்குக் குத்தூசி குருசாமி வைத்த பெயரே 'தினசரிப் பொய்'(டெய்லி டூப்) என்பதாகும். ம.பொ.சியும், தினத்தந்தி ஆதித்தனும் வேண்டுமென்றே பெரியாரின் மீது அவதூறுகளைப் பரப்பி வந்தனர்.

ஆதித்தனார் 1952-57 வரை பிரஜா சோஷலிடு கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அக்கட்சியின் கொச்சி முதலமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளை 11 தமிழர்களைச் சுட்டுக் கொன்றார். அக்கட்சி கொச்சி சட்டசபையில், தேவிகுளம் பீர்மேடு கேரளாவுக்கே சொந்தம் என்று கூறியபோதும் தினத்தந்தி ஆதித்தன் அக்கட்சியின் செயல்பாடுகளை எதிர்க்கவில்லை.

ம.பொ.சியைப் போன்றே, பெரியார் மீது ஏதாவது பொய் சொல்லிக் கொண்டிருப்பது அவரது வாடிக்கை. பெரியாருக்கென்று விடுதலை நாளேடு இருக்கிறது. எங்காவது தேவிகுளம், பீர்மேடு மலையாளிக்கு சொந்தம் என்று இருக்கிறதா என்று யாராவது காட்ட முடியுமா?

பிரஜா சோசலிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் இராம் மனோகர் லோகியா, பட்டம் தாணுப் பிள்ளையின் செயலைக் கண்டித்து, அவரை பதவி விலக வலியுறுத்தினார்; தனது அகில இந்திய பொதுச் செயலாளர் பதவியையும் இராஜினாமா செய்தார்.

தந்தை பெரியாரின் விடு தலை ஏடும், தி.மு.க.வின் ஏடு நம்நாடும் பட்டம் தாணுப் பிள்ளையின் வெறிச்செயலை வன்மையாகக் கண்டித்தன. சி.பா.ஆதித்தன், திருத்தணி கே.விநாயகம் உட்பட 7 பேர் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் யாருமே பதவி விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி மொழி வெறியர் என்று கூறப்படும் லோகியா தனது பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்தார். ஆனால், அக்கட்சியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவித ஆத்திரமும் வரவில்லை.

1956 முதல் பெரியார் மறையும் வரை "தமிழ்நாடு தமிழருக்கே" என்று முழங்கி வந்தார். இவரா தமிழினப் பகைவர்? இவரா தமிழினத்துரோகி?

-வாலாசா வல்லவன்

Pin It