இலட்சக்கணக்கான மனிதர்களின் தினசரிப் பிழைப்பிற்கான ஆதாரமாக இருக்கும் பட்டாசுத் தொழில் பற்றிய நுட்பமான தகவல்களுடன் மனதை உருக்கும் உயிர்வதைக் காட்சிகளுடன் 'கரிக்காசு' என்ற பெயரில் ஒரு நாவல் வந்திருக்கிறது. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் மகிழ்விக்கிற பலவிதமான வாணவேடிக்கைகளின் ஆதாரமான உழைப்பைப் பற்றி விலாவாரியாக விளக்குகிறது நாவல்.
சிவகாசி பகுதியில் உள்ள சிறிய கிராமத்தில் எளிய மனிதர்கள் அனுபவிக்கும் துயரத்தைச் சொல்லி வாசகர்களைப் பதைபதைக்க வைக்கிறது நாவல். மாறன், அல்லி தம்பதியினர் அகிலா, பாரதி என்ற இருபெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் உறவினருடன் சேர்ந்து பட்டாசுத் தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர்.
பட்டாசுத் தயாரிக்கும் வேலையில் தவிர்க்க இயலாமல் விபத்துகள் நடப்பதுவும் பல உயிர்கள் தங்களின் தினசரி நடைமுறையில் தம்மை இழந்து போவதைக் கண்டும் கேட்டும், ஆபத்துகள் நிறைந்த இத்தொழிலை விட்டுவிட இயலாத கட்டாயத்தில் இப்பகுதியில் தங்களின் தினசரி வாழ்வை நடத்துகின்றனர்.
இத்தகைய ஆபத்துகள் நிறைந்த இத்தொழிலை விட்டுவிட்டுப் போவதற்கு மாற்றுத்தொழில் ஏதும் இவர்களுக்குக் கிடைக்காத சூழல். காலையில் வீட்டை விட்டுப் போனால் வேலை முடிந்து வீடு திரும்புவது உறுதி இல்லை. சில சமயங்களில் வாரத்திற்கு இரண்டு மூன்று விபத்துகள்கூட நடந்து விடுவதுண்டு.
இந்த நாவலில் வருகிற மாறனின் குடும்பம் தன் தலைவனை இழந்து துயரத்தில் சிக்கிக் கொள்கிறது. விபத்தில் உடல் கருகி மாறன் இறந்து விடுகிறான். இதன் பிறகும் இத்தொழில் செய்துதான் தன் இரண்டு பெண் குழந்தைகளுடள் எஞ்சிய காலத்தைக் கடத்த வேண்டியதாகிறது அல்லிக்கு.
விபத்தில் காயங்களுடன் உயிர் பிழைத்தவர்களுக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை தரப்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் அழுது புலம்பியவாறு காத்திருக்கின்றனர். பத்திரிகைக்காரர்கள் செய்தி சேகரிக்கக் கூடுகிறார்கள். உயிர்பிழைக்க வைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து உடல்கள் உறவினர்களுடன் உடற்கூறு ஆய்விற்காகக் காத்திருக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் பெற்றுத்தரும் முயற்சிகளில் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் ஈடுபடுகின்றனர்.
அரசு அதிகாரிகள் விரைந்து இறந்த உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை நிறைவேற்ற செயல்படுகின்றனர். இறந்தவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் அளிக்க அரசு உறுதியளிக்க வேண்டுமென்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உறவினர்களுடன் சேர்ந்து போராட்டத்தை முன்னெடுத்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதிகாரிகள் உறுதியளிக்க இயலாது என்று கை விரிக்கிறார்கள். நிவாரணத் தொகை அறிவிக்காமல் உடல்களை வாங்க மறுக்கின்றனர்.
வேறுவழியில்லாமல் ஐந்து லட்சம் தருவதற்கு வாக்குறுதி தருகிறார்கள். இப்போது இறுதிச் சடங்குச் செலவுகளுக்காக தலா இருபதாயிரம் ரூபாய் தருவதைப் பெற்றுக் கொண்டு உடல்களை வாங்கிக் கொள்கிறார்கள். வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிடுகிறார்கள். அவரும் ஐந்து லட்சம் தன்னால் தரஇயலாது என வந்தவர்களை அனுப்பி வைக்கிறார். சில நாட்கள் கழித்து ஒரு லட்சம் காசோலை வழங்கப்படுகிறது. பட்டாசு ஆலை உரிமையாளர்கள் இறந்தவர்களின் குடும்பம் நிவாரணத் தொகையைப் பெற அலைவதைக் கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.
முதலாளிகள் தங்களுக்கு இழப்பு ஏற்படுமென்றால் தொழிலாளர்களைத் தங்களுடன் சேர்த்துக் கொண்டு போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். சீனாவிலிருந்து விலை மலிவாகப் பட்டாசுகள் இறக்குமதியாவதைக் கண்டு, அதை நிறுத்த வேண்டுமென்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறார்கள். தங்கள் ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களிடம் சீனப் பட்டாசு இறக்குமதியால் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மிகவும் குறைந்துவிடும் என்பதாக தொழிலாளர்களுடன் பேசி, அவர்களையும் இணைத்துக் கொண்டு வேலை நிறுத்தப் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்றெல்லாம் முதலாளிகளின் தரப்பில் ஏற்பாடு செய்தார்கள்.
தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்த அரசுத் தரப்பில் கூறப்பட்டிருந்த விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முதலாளிகள் கண்டுகொள்வதில்லை. இந்த அலட்சியத்தினால் பல விபத்துகள் நடக்கின்றன. வேலை நடைமுறைகளில் தொழிலாளர்களின் கவனமின்மையும் சில சமயங்களில் விபத்துகளுக்குக் காரணமாகின்றன. விபத்துகள் நடப்பதற்கான வாய்ப்புகளை நாவல் மிகவும் விரிவாகப் பேசுகிறது.
நாவலின் நிறையப் பக்கங்கள், பல பட்டாசு வகைகள் தயாரிக்கும் தொழில்நுட்பம் பற்றிச் சொல்கின்றன. எந்த வகையான வெடிகள் தயாரிப்பதில் விபத்துகளுக்கு அதிகமும் வாய்ப்புகள் உள்ளன என்பதையும் தொழிலாளர்களின் வழியாகவே வாசகர்கள் அறிந்து கொள்வதற்கு வாய்க்கிறது. இதற்கு முன் நடந்த விபத்துகளைப் பற்றித் தொழிலாளர்களே விவரமாகப் போகிறார்கள்.
இந்தத் தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களைப் பற்றியும் அவற்றில் அக்கறை காட்டாமல் ஒதுங்கியிருக்கும் தொழிலாளர்களைப் பற்றியும் இதற்கென அரசாங்கம் அறிவித்திருக்கும் விதிமுறைகள் பற்றியும்கூடத் தெரிந்து கொள்ளாமலிருப்பதையும் நாவல் விளக்கமாகப் பேசுகிறது. முதலாளிகள், சில அதிகாரிகள் கூட்டுறவினால் தொழிலாளர்களுக்குத் தொழில் செய்யும் இடங்களில் கிடைக்காமல் போகிற சலுகைகளைப் பற்றியும் சுட்டப்படுகின்றது, தொழிலாளர்களின் நலன் சீர்கெட்டுப் போவதற்கு வாய்ப்பாக, தொழிற்சாலைகளையும் உற்பத்தியையும் குத்தகை முறையில் தனிநபர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஆதாயத்தை மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்கிற முதலாளிகளைப் பற்றியும் சட்டங்களின் வரையறைக்குள் வராமல் தப்பித்துக் கொள்கிற குத்தகைதாரர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள வாய்க்கிறது.
சில இடங்களில் தொழிலாளர்களில் யாரேனும் பகுதி பகுதியாக உற்பத்தியைக் குத்தகை முறையில் எடுத்து, கடினமாக தனது உழைப்பையும் செலுத்தி தொழிலாளர்களைவிட கொஞ்சம் அதிகமாகச் சம்பாதிக்கும் அவர்களின் மனநிலை சில சமயங்களில் முதலாளிகளின் சார்பாக இருப்பதையும் நாவல் கவனப்படுத்துகிறது.
குடும்ப உறவுகளும் கூட சின்னச் சின்ன பொருளாதரக் காரணங்களால் சிதைந்து போவதையும் உறவுகள் போலிமை கவிந்ததாக மாறி மனஉளைச்சல்களை உண்டாக்குவதையும் நாவல் கவனித்திருக்கிறது. விவசாயம் சார்ந்த கிராமப்புறங்களில் போதிய அளவில் வேலை வாய்ப்புகள் இல்லாத நிலையில் பல புதியவர்களும் பட்டாசு ஆலைகளை நோக்கி இழுக்கப்படுவதையும் காணமுடிகிறது. நெருக்கடியான சூழலில் அரசாங்கமும் அப்பகுதியில் மாற்றுத் தொழில் வாய்ப்புகளை உருவாக்க முனைவதில்லை.
மிக எளிமையான மொழியினால் விவரிக்கப்படுகிற சம்பவங்கள் வாசிக்கிறவர்களின் கவலையை அதிகரிக்கச் செய்கிறது. அனைத்துப் பிரச்சனைகளையும் அதிகபட்சம் கவனம் செலுத்தி வாசகர்கள் அறியத் தருகிறது. இதனால் தன் சக்திக்கு மீறிய அளவாக 800 பக்கங்களைக் கொண்டதாகியிருக்கிறது.
இந்தத் தொழிலாளர்களின் தினசரி வாழ்க்கை இந்தளவு ஆபத்துகளைக் கொண்டிருந்த போதிலும் அந்த வேலையை நோக்கி இப்பகுதித் தொழிலாளர்கள் ஈர்க்கப்படும் முரணை நாவல் கடினமான வலியுடன் நம்முன் வைக்கிறது.
விபத்தில் சிக்கிக் கருகிய உடல்களின் காட்சிகள், வாசகர், நேரில் காண்பதைப் போன்று விரிவான துயரத்தை பதிவுகள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் சிகிச்சைக்கு வைக்கப்பட்டிருக்கும் உடல்களின் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கான ஏற்பாடுகளினால் படுகின்ற அவதிகளை நாவல் புகைப்படக் காட்சிகளாக, அதையும் தாண்டி திரைப்படக் காட்சிகளைப் போல் விவரிக்கிறது நாவல் மொழி. சிறுநீர் கழிப்பதற்கான இரப்பர் குழாய்களை ஆண் குறிகளுடன் இணைக்கும் போது, அந்த உடல்கள் பட்டுமாயும் வேதனைகளை வாசகன் உணர்கிறான். ஒரு உடலில் ஆண்குறி கருகி இல்லாமல் போயிருக்க, அதுஇருந்த இடத்தில் குழாயைப் பொருத்தவரும் காட்சி, அதை வாசிக்கிறவரின் மனதைக் கலங்கடிக்கிறது.
பாத்திரங்களின் வழியாகவே நாவலின் பெரும்பகுதி அமைந்துள்ளது. அதனால் எந்தச் சிரமமும் இல்லாமல் வாசகருடன் இணைந்து கொள்கிறது.
- ஜனகப்பிரியா