பண்டைத் தமிழரின் வாழ்வியல் முறையை விளக்குகின்ற ஆய்வாளர்கள் பல்வேறு வகையான அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளனர். இலக்கியங்களை மட்டும் தரவாகக் கருதுதல், இலக்கியங்களை மானுடவியல் முதலான பிற துறைப் பார்வையில் விளக்குதல், தொல்லியலை முதன்மையாக்கி இலக்கியத்தைத் துணையாக்கிக் கொள்ளுதல், உலக அளவிலான பிற தொல்குடி இயல்புகளுடன் ஒப்பிட்டு விளக்குதல் என அவை அமைகின்றன. இவற்றில், பிறமொழி பிற இன தொல்குடி வாழ்வியலைப் பண்டைத் தமிழ்ச் சமூக இயங்கியலுடன் இணைத்துப் பார்த்து விளக்குகின்ற பாங்கில் கணியன்பாலனின் ‘தொல்பழங்காலமும் தமிழக நகர அரசுகளும்' எனும் நூல்(2024) அமைந்துள்ளது. இந்த நூல், தன் கருத்தியலாக்கத்திற்கு மார்கன் எழுதிய ‘பண்டைய சமுதாயம்' என்ற நூலையும் அதை ஒட்டி எங்கெல்சு எழுதிய 'குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்' என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு எஸ்.ஏ.டாங்கே எழுதிய 'பண்டைக்கால இந்தியா' என்ற நூலையும் கவனத்தில் கொள்கிறது. மார்கன், எங்கெல்சு நூல்களைத் தனித்தனியாக வாசிப்பதற்கு அப்பால் ஒன்றின் தொடர்ச்சியாக ஒன்றினை வாசித்து, அந்தப் பின்புலத்தில் தமிழ்ச் சமூகத்தின் பண்டைய வாழ்வியலை ஆராய்ந்து புதிய புரிதல்களை முன்வைத்துள்ளது.
அமெரிக்க, கிரேக்க உரோமச் சமூகங்களைக் காட்டுமிராண்டிநிலை, அநாகரிகநிலை, நாகரிகநிலை என்று பகுத்து ஆராய்ந்ததை அடிப்படையாகக் கொண்டு ஆரியச் சமூகத்தில் தொல்நிலையை டாங்கே ஆராய்கிறார். ஆரிய மரபில் சுட்டப்படுகின்ற கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் எனும் பகுப்புகளில் புராணத்தன்மை இருந்தாலும் பகுப்பிற்குள் இழையோடுகின்ற சமூக வளர்ச்சி நிலையானது மார்கன், எங்கெல்சு ஆகியோர் குறிப்பிடுகின்ற சமூக வளர்ச்சிப் படிநிலையோடு ஒத்த தன்மையுடன் இருப்பதாக டாங்கே கருதுகின்றார். இவற்றை விரிவாக எடுத்துரைக்கின்றது இந்த நூலின் முன்பகுதி. இவற்றுடன் தமிழ்ச் சமூகத்தின் தொல்நிலையை ஒப்பிட்டுக் காட்டி, ஏனைய சமூக இயங்கியலிலிருந்து தமிழ்ச் சமூக இயங்கியல் வேறுபட்டு அமையும் பாங்கை அடையாளப்படுத்துகிறது.
கிருதயுகத்தைச் சேர்ந்த ஆரியர்கள் கூட்டு வாழ்க்கை வாழ்ந்தனர். அவர்களுக்கு என்று அரச அமைப்பு இல்லை. கிடைப்பதை உண்டு வாழ்ந்தனர். அலைந்து திரிகின்ற வாழ்க்கை முறைக்கு உரியவர்களாக இருந்தனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த வாழ்க்கைமுறை தொடர்ந்தது. திரேதாயுக மக்கள் நெருப்பைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். வாழ்க்கையின் எல்லா வகையான நுகர்வுக்கும் நெருப்பை அடிப்படையாகக் கொண்டனர். இதன் அடிப்படையில் விலங்குகளையும் பகைவர்களையும் தமக்கேற்ப மாற்றி அமைத்தனர். இதனால், ஓரிடத்தில் வாழுதல் என்ற சூழல் உருவாகிற்று. செல்வத்தைக் கூடுதலாக உற்பத்தி செய்தல் என்ற புதிய பொருள் உற்பத்தி முறை (யக்ஞம்/யாகம்) வழக்குப்பெற்றது. கூட்டு உழைப்பு, அதை ஒட்டிய உற்பத்தி முறை, தாய்வழிச் சமூகம் அனைத்து உறுப்பினர்களும் இரத்த உடையவர்களாக இருப்பது, திருமணமோ தனிக்குடும்பமோ இல்லாமல் இருப்பது, தனிச்சொத்தோ வர்க்கமோ இல்லாமல் இருப்பது, வேலைப் பிரிவினை இல்லாமல் இருப்பது, அனைத்துப் பொறுப்புகளும் அனைவருக்கும் உரியவை, படை காவல் பிற நிர்வாக அமைப்புகள் சட்டம் அரசு எவையும் இல்லாமல் இருப்பது, உறுப்பினர்கள் அனைவருமே ஆயுதம் கொண்டு இருப்பது எனும் வாழ்வியல் முறைகள் வழக்குப் பெற்றன.
இந்த வாழ்வியல் முறையில் உற்பத்திச் சக்திகள் வளரும்போது தற்காலிகப் பொறுப்பாளர்கள் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், உற்பத்திப்பணி முடிந்தவுடன் பொறுப்பும் முடிந்தது. அதாவது, ஒரு நிலையான தலைமை உருவாகவில்லை. இந்தத் திரேதா யுகத்தில் கணங்கள் பல சேர்ந்து குலங்கள் உருவாகின. குழுமணம் வழக்குப்பெற்றது. உலோகங்கள் பற்றிய அறிவு இருப்பினும் அவை உற்பத்தி முறைக்குப் பயன்படுத்தப் பெறவில்லை. இதற்கு அடுத்ததாகக் கருதப்படுகின்ற துவாபர யுகத்தில் வேளாண்மையும் கைத்தொழிலும் வழக்குப் பெற்றன. வணிகம் செழித்தது. தனியுடைமை உருவாகிற்று. இணை மணமுறை வழக்குப்பெற்றது. காலவோட்டத்தில் ஒருதார மணம் உருவாகிற்று. தனிச்சொத்துடைமை வலுப்பெற்றது. தாய் தலைமை வீழ்ச்சியுற்றது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வெவ்வேறு கணத்தவர்கள் வாழுதல் மற்றும் ஒரு கணத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பகுதிகளில் வாழ்தல் என்ற வாழ்வியல் இடமாற்றமும் உருவாகிற்று. இரத்த உறவு முறையை அடிப்படையாகக் கொண்டு மக்களைப் பகுத்த கண அமைப்பிற்கு மாறாக, மக்கள் வாழ்கின்ற நிலப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு சமூக வாழ்வியலைப் பகுக்கும் அரசு எனும் அமைப்பு உருவாகிற்று. இத்தகு ஆரியச் சமூக வளர்ச்சி இயல்புகள் யாவும் மார்கன் எங்கெல்சு சுட்டும் தொல்சமூக வளர்ச்சிப்போக்குடன் ஒத்துச் செல்கின்றன என்பதனை இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.
ஊடே, பீஷ்மர் சுட்டுகின்ற சங்கல்பம், சம்சுபரிசம், மைதுனம், துவந்தம் எனும் மண முறைகள் யாவும் முறையே தடையற்ற பாலியலுறவு, குழுமணம், இணைமணம், ஒருதாரமணம் எனும் மணமுறை வளர்ச்சிப் போக்குடன் ஒத்துள்ளதையும் எடுத்துக் காட்டுகின்றது. இது சார்ந்த புரிதல்களை வடமொழி புராண இதிகாசங்களில் இடம்பெறுகிற சுதர்சன முனிவர் ஓகாவதி, கௌதமன் கௌதமி, ஜமதக்கினி ரேணுகா எனும் மூன்று இணையருடைய வாழ்க்கைவழி விளக்குகிறது. விருந்தாளிக்குத் தன்னை ஓகாவதி ஒப்படைக்கிறாள். இதனை அறிந்த சுதர்சனன் எவ்வகையான கருத்தியல் மாற்றத்தையும் அடையவில்லை. மனைவி விருந்தினருடன் உறவு வைத்துக்கொண்டதைத் தம் மரபுசார் பண்பாட்டுப் பழக்கமாகக் கருதுகிறான். இதுவே, கௌதமி விருந்தாளிக்குத் தன்னை அளிக்கும்போது கௌதமன் சினம் கொள்கிறான். தன் மகனிடம் தாயைக் கொன்றுவிடுமாறு சொல்லுகிறான். ஆனால், அவன் தாயைக் கொல்லவில்லை. எனினும், கௌதமனின் சினம் தணிந்து தன்னுடைய மனைவியின் செயலை ஏற்கிறான். இவற்றிலிருந்து ஜமதக்கனி ரேணுகா வாழ்க்கை முறை வேறுபட்டு அமைகிறது. ரேணுகா, சித்திரரதா என்கிற கந்தர்வன் மீது ஆசைகொள்வதை அறிந்த ஜமதக்கனி, தன் மகனிடம் தாயைக் கொல்லுமாறு தெரிவிக்க, மகன் தாயைக் கொன்று விடுகின்றான். இந்த மூன்று கதைகளையும் அடுத்தடுத்த சமூகவாழ்வியல் படிமுறை வளர்ச்சியை அறிந்து கொள்வதற்கு ஏற்றதாக இந்த நூல் விளக்குகிறது. இது போன்ற கருத்தியல் பின்புல அடிப்படையில் சங்க காலத்தை ஆராய்ந்து எழுதிய ஆய்வுகள் பல வெளிவந்துள்ளன. எனினும், அவற்றிலிருந்து இந்த நூல் வேறுபட்ட பார்வையை முன்வைக்கிறது.
மேற்சுட்டிய சமூக வளர்ச்சிப் போக்கில் கணம், குலம் முதலானவை மறைந்து அரசு உருவாகிவிட்ட சமூகச் சூழலில் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அதாவது,4 கிரேக்கத்தில் ஒடிசி, இலியத் சமஸ்கிருதத்தில் மகாபாரதம், இராமாயணம் தோன்றியதை ஒத்த சமூக இயங்கியலை உடையனவாகச் சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன என்கிறது இந்த நூல்.
சங்க இலக்கியங்கள் சுட்டும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற திணைப் பாகுபாடுகள் தமிழ் மக்கள் பிரதேச அடிப்படையில் பிரிந்து வாழ்ந்ததைக் காட்டுகின்றன என்கிறது. தமிழகத்தில் குறிஞ்சி நிலக் குறுமன்னர்களும் முல்லை நிலச் சீருர் மன்னர்களும் மருதநில மூதூர் மன்னர்களும் சிறு நகரங்கள், பேரூர்கள் ஆகியவற்றின் ஆட்சியாளர்களாகவே உள்ளனர். அவர்கள் குலம், குலக்குழு, கூட்டுழைப்பு ஆகியவற்றின் தலைவர்களாக இல்லை; பிரதேச அடிப்படையிலான தலைவர்களாக, அரசர்களாக, மன்னர்களாக உள்ளனர். பாரி பரம்பு மலையின் ஆட்சியாளன்; ஓரி கொல்லிமலையின் ஆட்சியாளன் என்பன போன்று பலரும் ஏதேனும் ஒரு ஊரின், ஒரு சிறு நகரத்தின் ஆட்சியாளராகச் சொல்லப்படுகின்றனர். அதாவது, 'ஒரு மன்னன் ஒரு நிலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு அடையாளப்படுத்தப்படுவதை இந்த நூல் கவனத்தில் கொள்கிறது. குறிப்பாக, ஓரி, அதியமான் ஆகிய இருவருமே மழவர் இனத்தின் தலைவர்கள். ஆனாலும், இருவரும் வெவ்வேறு நிலப்பகுதியின் ஆட்சியாளராகத் திகழ்கின்றனர். ஓர் இனத்தின் தலைவராக ஒருவர் இருந்தால் யாரேனும் ஒருவர்தான் ஆட்சியாளராக இருக்க முடியும். ஆனால், வெவ்வேறு நிலப்பகுதியின் ஆட்சியாளர்களாக ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதனால் பிரதேச அடிப்படையிலான ஆட்சி முறை தமிழகத்தில் வழக்குப் பெற்றதைச் சங்க இலக்கியம் தெளிவாக்குகின்றது'(ப.95) என்கிறது.
இந்தச் சூழலில்தான் கிரேக்க, உரோம, அமெரிக்க, ஆரியத் தொல்குடிச் சமூகங்களில் நிலவிய வாழ்க்கை முறையிலிருந்து தமிழ்ச் சமூகம் வேறுபட்டு அமைவதையும் அந்த வேறுபாட்டால் நேர்ந்த வெவ்வேறு வகையான சூழல்களையும் சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக கிரேக்க, உரோம தொல் வாழ்வியல் முறையில் வேளாண்மையைவிடக் கைத்தொழில், பட்டறைத்தொழில், வாணிகம், கப்பல் தொழில் முதலானவை வேகமாக வளர்ந்தன என்கிறது. இந்தப் பட்டறைத்தொழிலில் இயந்திரப் பயன்பாடு இல்லை; முற்றிலும் மனித உழைப்பே ஈடுபடுத்தப்பட்டது. இந்த மனித உழைப்பில் அடிமைகள் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடிமைகள் வாழ்வதற்கான சூழலை இந்தப் பட்டறைத்தொழில் உருவாக்கிற்று. இதன்வழி உருவான கப்பல் கட்டுதல் முதலான தொழில்களும் அதனை ஒட்டி உருவான வாணிக வளர்ச்சியும் மேலும் மேலும் பொருள் உற்பத்திமுறையில் அடிமைகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்தன. ஆண்டான் அடிமை என்ற சமூகப் பிளவு மிகப்பெரிய அளவில் அங்கு வளர்ந்தது. வேளாண் வளர்ச்சிக்கு ஏற்ற சூழல் அங்கு உருவாகவில்லை. ஆனால், பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் வேளாண் வளர்ச்சி என்பது உச்சம் பெற்றது. கைத்தொழில் என்பதோ பட்டறைத்தொழில் என்பதோ முதன்மை பெறவில்லை. வேளாண் வளர்ச்சி முதன்மை பெற்றதால் அடிமைகளுடைய வாழ்வியல்முறை தமிழகத்தில் பெரிதும் கோலோச்சவில்லை. வேளாண்முறை என்பது நுணுக்கமானது மட்டுமன்றிக் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட மேற்பார்வையில் நிகழ்வது, நிலையான அடிமைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏற்ற வாய்ப்பற்றது. இதனால், இங்கு வணிக வளர்ச்சியும் கைத்தொழில் வளர்ச்சியும் அடிமை முறையும் பின்தங்கிப் போகின்றன. அதே நேரத்தில் இந்த வேளாண்மை வளர்ச்சியானது பரம்பரை ஆட்சிக்கும் தொழில் வகுப்புப் பிரிவுகளுக்கும் வர்க்கங்கள் உருவாவதற்கும் ஒரு வகையில் காரணமாக அமைந்ததனையும் இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.
கணமுறையில் சிறு மக்கட் பேரவையில் கணத் தலைவர்கள் இருந்தனர். இவர்கள் கணத்தின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாளடைவில் தலைவர்களின் மகன்களுக்குத் தேர்தலில் முன்னுரிமை வழங்கப்பட்டது. இந்த தலைவர்கள் கணத்திற்கான பொதுச் சொத்து அனைத்திற்கும் பொறுப்பாளர்களாகவும் திகழ்ந்தனர். தொடர்ச்சியாகப் பிரபுத்துவம் உருவாகிற்று. பொதுச்சொத்து குடும்பச் சொத்தாக மாறிற்று. இராணுவத் தளபதியும் வாரிசு உரிமை பெற்றவராக அமைந்தார். நிரந்தரத் தலைவர்கள் உருவாகினர். அரசன் உருவாகினான். இவ்விதப் பொதுப் போக்குகள் தமிழகத்திலும் நிலவின என்று குறிப்பிடும் இந்த நூல், வேளிரைப் பிரபுக்களாகவும் சேர சோழ பாண்டியரை வேளிர்க்கான வேந்தர்களாகவும் தொடர்புபடுத்துகிறது. அதாவது, சேர சோழ பாண்டியர்களில் வேந்தன் என்ற நிலையில் ஒருவன் இருக்க, அவர்களுக்குக் கீழே வேளிர் பலர் இருந்தனர்; அரசர்கள் பலர் இருந்தனர் என்கிறது இந்த நூல். இந்தத் தொடர்புபடுத்தத்தில் தொடர்ச்சியாகக் கிரேக்க உரோம வாழ்வியலில் நகர அரசுகள் உருவாகின. தமிழகத்தில் வேளாண்மை சமூகம் முதன்மை பெற்றதால் இங்கு நகர அரசுகளைவிட நகர்மைய அரசுகள் தான் உருவாகின என்கிறது. அதாவது, சிற்றூர்கள் பேரூர்கள் அரசு உருவாக்கத்தில் முதன்மை பெற்றன என்கிறது.
வேளாண் வளர்ச்சிக்கும் பரம்பரை ஆட்சி முறைக்கும் உள்ள தொடர்பினை விளக்குவதற்குப் பிற்கால உரோம ஜெர்மானியச் சமூகங்களில் நிகழ்ந்த வேளாண் வளர்ச்சியையும், அதே காலத்தில் உருவான பரம்பரை மன்னர் ஆட்சியையும் இந்த நூல் தொடர்புபடுத்திக் காட்டுகிறது. இந்தப் பரம்பரை ஆட்சியானது ஒரு முடியாட்சி போன்று இல்லை. ஒரு வரம்புக்கு உட்பட்ட மக்கள் மன்றத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஆட்சியாகவே இருந்தது என்கிறது. மக்கள் மன்றங்கள் வலுவிழந்து, பேரரசுகள் உருவாகிவிட்ட சூழலுக்குரியதாகக் கிரேக்க உரோமச் சமூகங்கள் திகழ, தமிழ்ச் சமூகம் நகர்மைய அரசுகளுக்கு உரியதாக இருக்கின்றதே தவிர பேரரசுக்கு உரியதாக இல்லை. இதனால், கண அமைப்பின் நீட்சியாக மக்களுடைய ஆளுகை தமிழக அரசுகளில் இருந்தன என்கிறது. குறிப்பாகத் தமிழக அரசுகளின் ஆளுவோர் தெரிவு செய்யப்பெற்ற முறையையும் கவனத்தில் கொள்கிறது.
அரசன் பரம்பரை வழியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும் அவனுடைய ஆட்சிக்குட்பட்ட பல்வேறு துறைகளை நிர்வகிக்கின்ற தலைவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களாக உள்ளனர் என்பதனை இந்த நூல் தெளிவுபடுத்துகிறது. அதாவது, மெகஸ்தனிஸ் குறிப்பிடுகின்ற கருத்தையும் அகநானூற்று 77ஆம் பாடலில் இடம்பெறுகின்ற குடவோலைமுறை தொடர்பான குறிப்பையும் இந்த நூல் கவனத்திற்கு உட்படுத்துகிறது. இந்தக் குடவோலை முறையால் மக்களின் பிரதிநிதி அரசு அதிகாரத்தில் இடம் பெறுவதைச் சுட்டிக்காட்டி, அது கண அமைப்பின் தொடர்ச்சி என்கிறது. கண அமைப்பு அழிந்துவிட்டாலும் அதனுடைய தன்மைகள் சங்க காலத்தில் தொடர்ந்தன என்கிறது. முடியாட்சி தன்மைக்குரிய அரச அதிகாரம் ஒரு வரம்பிற்கு உட்பட்டதாகவே திகழ்ந்தது என்கிறது.
இந்த நூல் சுட்டும் மற்றொரு கருத்து மிகுந்த கவனத்திற்குரியது. அதாவது, வாணிக வளர்ச்சி, பேரரசுகளுடைய உருவாக்கம் ஆகியவை பொருள் முதல்வாதச் சிந்தனையோடு தொடர்புபடுத்திச் சிந்திக்கத் தக்கவை என்கிறது. உரோம ஐரோப்பியச் சமூகங்களில் பேரரசுகள் உருவாகிய காலத்தில்தான் பொருள் முதல்வாதச் சிந்தனைகள் வீழ்ச்சி பெற்றன என்கிறது. வட இந்தியாவில் சிறு குறு நகர் மைய அரசுகள் வாணிக நகர அரசுகளாக வளர்ச்சி அடைவதற்குள் மதம் சார்ந்த பெரிய அரசுகள் உருவாகிவிட்டன.
இதனால், ‘சிறு குறு நகர அரசுகளில் இருந்த சுதந்திரமான சிந்தனைகளும் பொருள் முதல்வாத மெய்யியலும் சமண பௌத்த மத சிந்தனைகளும் வழக்கற்றுப்போகத் தொடங்கின' (ப.45) என்கிறது. தமிழகத்தில் பரம்பரை ஆட்சி முறை இருந்தாலும் அது மூத்த மகன் ஆளுதல் எனும் தாய முறைக்கு உரியதாக இல்லை என்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரே குடியைச் சார்ந்த பலர் வெவ்வேறு நிலப் பகுதிகளில் அரசாண்டதை எடுத்துக்காட்டுகிறது. பாண்டியர் கொற்கை, மதுரை போன்ற இடங்களிலும் சோழர் உறையூர், பூம்புகார் போன்ற இடங்களிலும் சேரர் வஞ்சி, கருவூர் போன்ற இடங்களிலும் ஒரே நேரத்தில் ஆட்சி செய்தனர். இதனால்தான் ‘பஞ்சமர்' எனப் புறநானூறு பாண்டியர்களைக் குறிப்பிடுகிறது என்கிறது. மேலும், 'சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வடக்கிருந்தபோது அவனது தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் அவனது மூத்த மகன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் அவனது நடுமகன் சேரன் செங்குட்டுவன் அவனது தாயாதித் தம்பி சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் அவனது கிளை வம்சத்தைச் சேர்ந்த பொறையர் குல அரசர்கள் பாலைபாடிய பெருங்கடுங்கோ மற்றும் மாந்தரன் பொறையன் கடுங்கோ என ஆறு பேர் ஆண்டு வந்தனர். ஆனால், அவனது தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் மட்டுமே வேந்தனாக இருந்துள்ளான். மீதி ஐந்து பேரும் பிற நகர அரசுகளின் அரசர்களாக இருந்தனர்'(ப.142) என்று எடுத்துக்காட்டுகிறது.
சுருங்கச் சொல்வது என்றால் கண அமைப்பிலிருந்து வளர்ச்சி அடைகிற அரச முறையை இந்த நூல் நகர அரசு நகர்மைய அரசு என்றும் வாணிக அரசு என்றும் பேரரசு என்றும் அடையாளப்படுத்துகிறது எனலாம். இவற்றில், நகர்மைய அரசுகள்தான் தமிழ்ச் சமூகத்தில் சங்க காலத்திலும் நிலவியதாக இந்த நூல் சுட்டுகிறது. இதனால், பொருள் முதல்வாதக் கருத்தியலானது பெரு வழக்குப் பெற்றது என்கிறது. இந்திய வடபுலத்திலும் உரோம ஐரோப்பிய நாடுகளிலும் வாணிக வளர்ச்சி மதநிறுவன வளர்ச்சி ஆகியவற்றால் அங்கு பொருள் முதல்வாதச் சிந்தனைகள் வீழ்ச்சி பெற்றுவிடுகின்றன என்கிறது. சங்கச் சமூகத்தில் கடவுள் நம்பிக்கை இருந்தாலும் அந்தக் கடவுள் நம்பிக்கையானது மனிதர்கள் வாழ்க்கையில் உயர்ந்து நிற்கின்ற நிலையைச் சுட்டுவதாக இருக்கிறது. தனி ஒரு கடவுளைப் போற்றுகின்ற தன்மை பக்தி இலக்கியக் காலத்தில்தான் உருவாகிறது என்கிறது. இயற்கையைவிட ஆன்மாவை இந்த உலகிற்கு அப்பாற்பட்ட ஒன்றினை முதன்மைப்படுத்திப் போற்றும் பாங்கு ஏனைய சமூகங்களில் கண அமைப்பு வீழ்ச்சியுற்றதும் வழக்குப் பெற்றுவிடுகிறது. ஆனால், தமிழகத்தில் பக்தி இலக்கியக் காலத்தில்தான் அது உருவாகிறது என்கிறது. இத்தகு கருத்தாக்க முறைதான் இந்த நூலுக்கான வலிமை. உலகத் தொல்லினங்களின் வளர்ச்சிப் போக்குடன் ஒப்பிடத்தக்க இயல்புகளைத் தமிழ்ச் சமூகம் பெற்றிருப்பினும் காலப்போக்கில் தனக்கெனச் சில தனித்தன்மைகளை உடையதாக வளர்ந்துள்ளது.
இந்த வளர்ச்சிக்கும் பொருள்முதல்வாதச் சிந்தனைக்கும் செவ்வியல் இலக்கிய உருவாக்கத்திற்கும் தொடர்புபடுத்தி ஆராய்வதன் தேவையை இந்த நூல் உருவாக்கியுள்ளதாகவும் கருத இயலும். நூல் நெடுக நீரோட்டம் போல் அமைந்துள்ள மீள் வருகையைத் தவிர்த்துவிட்டால் இந்த நூல் தமிழ் ஆய்வுலகிற்குப் புதியதொரு பார்வையை வழங்கியது என்று கூறலாம். இந்த நூல் சமூக வளர்ச்சியை அதன் இயங்கியல் அடிப்படையில் படிமுறை வளர்ச்சிப் போக்கில் விளக்குவதாக அமைகிறது. இந்த நோக்குநிலையில் இருந்து கருத்துகளை உள்வாங்கிச் செல்லும் வாசகரின் மனத்திற்கு நூலில் ஆங்காங்குச் சுட்டப்படும் காலக்கணிப்புகள் இடையூறு செய்கின்றன என்பதும் உண்மைதான்.
துணையன்
கணியன்பாலன், 2024, என்சிபிஎச், சென்னை.தொல்பழங்காலமும் தமிழக நகர, அரசுகளும்,
குறிப்பு: புதுதில்லி ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகச் சிறப்புநிலைத் தமிழ்த்துறையின் திங்கள்வட்ட நூல்மதிப்புரை அரங்கில் (24.03.2025) வாசித்ததன் மேம்பட்ட வடிவம் இது. படித்துக் கருத்து வழங்கிய ஆய்வாளர் எம். தீபன் அவர்களுக்கு நன்றி.
- பேராசிரியர் இரா. அறவேந்தன், சிறப்புநிலைத் தமிழ்துறை, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம், புது டில்லி.