அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. (குறள் 32)
மனித வாழ்வுக்கு ஆக்கத்தை அளிப்பது அறம் என்பது வள்ளுவனார் கூற்று. அத்தகைய அறத்தை மறப்பதை விட வேறொரு கேடில்லை என்று அவர் எச்சரிப்பதன் வாயிலாக அறத்தின் மேன்மையை நம்மால் விளங்கிக் கொள்ள இயலும். மனதில் மாசற்று இருப்பதே அறம் (குறள் 34) என்பது அறத்திற்கு வள்ளுவர் அளிக்கும் வரையறை. அந்த அறத்தைப் பின்பற்றுவதால் ஒருவர் அடையும் பயன் இன்பமாகும் (குறள் 39). வாழ்வியல் நெறி எனும் வகையில், பொது வழக்கில், அறத்திற்கு இணையாகப் பயன்படுத்தப்படும் சொல் தர்மம். பயன்பாட்டளவில் இரண்டு சொற்களும் ஒன்றாகக் கைக்கொள்ளப்படினும் கருத்தளவிலும் பரப்பளவிலும் இரண்டும் ஒரே நிறையும் பொருளும் கொண்ட கருதுகோள்களா என்று ஆய்வதே இக்கட்டுரையின் நோக்காகும்.
அறவியல்:
அறவியல் என்று தமிழில் பெயர்க்கப்படும் ‘Ethics’ என்கிற சொல் மேற்குலக மெய்யியலின் கிளைகளுள் ஒன்றைக் குறிப்பது. இதன் வேர்ச்சொல், குணம் அல்லது வழிகாட்டும் நம்பிக்கைகள் எனும் பொருளுடைய ‘Ethos’ என்னும் கிரேக்கச் சொல்லாகும். தனிமனித வினைகளை ஆராய்ந்து அவற்றுள் கொள்ளத்தக்கன எவை? தள்ளத்தக்கன எவை? என்று வாதிப்பதும் வரையறை செய்வதும் இப்புலத்தின் உட்கிடையாகும். ‘அறுதியான நன்மை’ (The Ultimate Good) என்று ஏதும் உளதா என்று ஆய்வதே இம்மெய்யியல் பிரிவின் நோக்கமாகும். தெரிந்தும் தெளிந்தும் ஆற்றப்படும் செயல்களே இதில் ஆராயப்படும். அறிவின் துணைகொண்டு ஆற்றப்படா அனிச்சை செயல்களும் அறிவின் தேவையழிந்து ஆற்றப்படும் பழக்க வழக்கங்களும் (Habits) சடங்குகளும் இதில் ஆய்வுக்குரியனவாய்க் கொள்ளப்படா. தனிமனிதச் செயல்பாடுகளை வழிநடத்துபவை என்கிற அடிப்படையில் அறமும் தர்மமும் இப்புலத்துள் அடைபடுபவை.
அறம்:
‘அறம்’ எனும் சொல் ‘அறுத்தல்’ என்னும் வினையையொட்டி எழுந்தது. புதர் மண்டிக் கிடக்கும் நிலத்திடையோ அல்லது மரம் அடர்ந்தக் காட்டிடையோ அறுத்துக் கொண்டுச் சென்றால்தான் செம்மையான பாதை கிடைக்கும். அதுபோல, மாந்தர் தமது வாழ்வில் செம்மையுற வகுக்கப்பட்ட பாதைதான் அறம் என்று விளக்குகிறார் கரு. ஆறுமுகத் தமிழன்.
வழிநடத்தும் பாதையெனில் அது எஞ்ஞான்றும் ஒன்றுபோல் இருப்பதா, சாசுவதமானதா, சனாதனமா (காலங்காலமாக மாறாமல் தொடர்வதா) என்றால் அது அப்படியன்று. புதுவெள்ளம் ஏற்படுங்கண் ஆற்றொழுக்கு மாற்றமடைவதைப் போன்று அறமும் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மாற்றமடையும்.
காலங்கள்தோறும் அறம்:
சங்க காலத்தில் காதலும் வீரமுமே முதன்மை அறங்கள்.
சங்க இலக்கியத்திற்கு இலக்கணமாகத் திகழும் தொல்காப்பிய முறைப்படி, ஐவகை நிலத்தில் அன்பின் ஐந்திணைகளாய் விளங்கும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை ஆகியவையும் கைக்கிளையும் பெருந்திணையும் அக ஒழுக்கங்கள். இதில் முதல் ஐந்தும் கொள்ளப்பட வேண்டிய ஒழுக்கங்கள். ஒருதலைக் காமமாகிய கைக்கிளையும் பொருந்தாக் காமமாகிய பெருந்திணையும் அகத்திணையில் கூடா ஒழுக்கங்கள். புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவை அந்தந்த நிலத்திற்குரிய காதல் உணர்ச்சிகள். இவற்றுடன் ஒழுகி அவர்தம் இல்லறம் நல்லறம் ஆவதே அகத்திணையின் இலக்கு.
புறத்திணையில் கல்வியும் கொடையும் நல்வழியில் பொருளீட்டலும் புகழீட்டலும் போற்றத்தக்க அறங்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற பொதுமை உணர்வும் தீதும் நன்றும் பிறர்தர வாரா (புறம் 192) என்ற பொறுப்புணர்வும் பேரறங்கள். தொல்காப்பியத்தின்படி, நிரை கவர்தல் துவங்கி பாடாண் திணை ஈறாய் அமைபவை புற ஒழுக்கங்கள். போரில் புறமுதுகிடல் பெருங்குற்றம்.
வள்ளுவர் காலத்திலோ கள்ளாமையும் கொல்லாமையுமே அறங்கள். கொள்ளத்தக்க அறங்கள் எவையோ அவைதாம் திருக்குறளின் அதிகாரப் பெயர்களாய் அமையப்பெற்றன என்று உரைப்பாரும் உளர்.
தமிழகத்தில் சமணமும் பௌத்தமும் கிளைபரப்பத் துவங்கிய காப்பிய காலத்தில் அரசனின் செங்கோல் வழுவுங்கால் அறமே காலனாக மாறி உரிய தீர்ப்பிடும் என்று சிலப்பதிகாரம் அறத்திற்குத் தெய்வநிலையை வழங்குகிறது. பசிப்பிணிப் போக்கலும் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றலும் என அறத்திற்குச் சமூகநலன் என்னும் பரிமாணத்தை அளிக்கிறது மணிமேகலை.
சைவம் முதலான சமயங்கள் பெருமதங்களாய் நிலைபெற்ற பிற்காலத்தில் அறம் இறைவனை அடையும் வழியெனக் கொள்ளப்பட்டது.
…மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்;
அறந்தான் அறியும் அளவு அறியாரே (திருமந்திரம் 256)
இவ்வாறு, அறத்தை அறிந்தவர்களை இறைவனே வந்தடைவான் என்று நம்பிக்கை அளிக்கிறார் திருமூலர்.
இவ்வழியே, காலமாற்றத்திற்கும் சமூகச் சூழலுக்கும் ஏற்ப இன்பத்தையும் புகழையும் பெறுவதற்குப் பாதையாக அமைந்த அறம் என்னும் கருதுகோள் பின்னாளில் இறைவனை அடையும் வழியாகவும் வளர்ச்சி அடைந்தது. கால-இட மாற்றங்களுக்கு ஏற்ப அனைவருக்கும் உரிய பொது அறங்களும் தனிமனிதரின் இயல்புக்கும் முயற்சிக்கும் அவர்தம் தேவைக்கும் ஏற்றத் தனி அறங்களும் போதிக்கப்பட்டன. திருக்குறளே அத்தகையத் தனியற நூல்தான் எனவும் தனிநபரின் தேவைக்கேற்ப அது தன்னை நெகிழ்த்தித் தந்துதவும் தன்மையுடையது என்றும் கூறுகிறார் வ. சுப. மாணிக்கனார்.
பொது அறமாயினும் சரி, தனி அறமாயினும் சரி, ஒருவர் பின்பற்றத்தக்க அறத்தைக் காலமும் சூழலும் தனிமனித அறிவும் அவர்தம் இயல்புகளும் முயற்சிகளுமேத் தீர்மானிக்கும். மாறாக, மனிதர்தம் சாத்திரமோ, மதகுருவோ, கடவுளோ இன்னார்க்கு இது அறம் என்று விதிப்பதில்லை; அறத்திற்குப் பிறப்பு ஒரு தகுதியாய் அமைவதில்லை.
தர்மம்:
தர்மம் எனும் சொல்லின் பொருள் ரிக் வேத காலம் துவங்கி சமய மறுமலர்ச்சி காலம் வரை தொடர்ச்சியான மாற்றங்களுக்கும் பொருள் விரிவுக்கும் உள்ளாகி வந்துள்ளது. வேதச் சடங்குகளை முறைப்படி ஆற்றலும் அதன் வழியே இயற்கைச் சக்திகளைப் பிரதிபலிக்கும் அக்னி, வருணன், சோமன், இந்திரன் முதலான தேவர்களைத் திருப்திபடுத்தி உலகின் ரிதம் (ஒழுங்கு) வழுவாமல் நிலைநிறுத்தலுமே வேததர்மங்கள். இதனோடு வருண தர்மங்களும் ஆசிரம தர்மங்களும் வளர்ச்சிபெற்று வருணாசிரம தர்மம் நிலைபெறுகிறது. மனுஸ்மிருதி முதலிய பின்னாளைய தர்ம சாத்திரங்கள் வருணாசிரம தர்மத்தைக் கட்டிறுக்கம் செய்வதோடு அதனைச் சட்டமாக்குகின்றன. இவ்வாறு சமயச் சடங்காகத் துவங்கிய தர்மம் பின்னாளில் சமூக வாழ்விற்கான சட்டமாக நிலைபெறுகிறது.
அறங்களை ஒத்த நெறிகளும் ஒழுக்கங்களும் பொதுவில் தர்மங்கள் என்றே அழைக்கப்பட்டாலும் இயல்பில் தர்மம் என்பது பிறப்பின் அடிப்படையில் கடமைகளை விதிப்பது; மாற்றத்திற்கும் மறுபரிசீலனைக்கும் உட்படாதது. ஏனெனில் இது கடவுளால் படைக்கப்பட்டதாகச் சாத்திரங்களில் ஓதப்பட்டு மக்களாலும் சைவம், வைணவம் முதலிய சமயங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் நிறுவன அமைப்பு.
மனிதர்களின் குணம் மற்றும் செயல்களின் வேறுபாட்டிற்கு ஏற்ப அவர்களை நான்கு பிரிவாக நான் வகுத்தேன் (ஸ்ரீமத் பகவத்கீதை 4:13) என்கிறார் கிருஷ்ணர். இதன் மூலம் வருண தர்மத்தின் தோற்றத்திற்கு ஒரு புனிதநிலை ஏற்படுகிறது.
இத்தகு செய்திகளைக் கூறும் வேதங்களையும் ஸ்மிருதிகளையும் தனது தர்க்க அறிவு கொண்டு ஆராய்பவனை நாத்திகன் (மனுதர்ம சாஸ்திரம் 2:10-11) என்று மனு பழிப்பதன் மூலம் அப்புனிதநிலை அறிவுக்கு அப்பாற்பட்டதாகவும் நம்பிக்கைக்கு மட்டுமே உட்பட்டதாகவும் நிலைபெறுகிறது.
தமிழ்ச்சூழலில் அறமும் தர்மமும்:
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் (புறம் 183) எனும் பாடல் புறநானூற்றுக் காலத்திலேயே தமிழகத்தில் வேற்றுமை தெரிந்த நாற்பால்களும் இருந்ததைப் புலப்படுத்துகிறது. ஆனால் கல்வி கீழ்ப்பால் ஒருவனை மேற்பாலாக்கும் என்று சுட்டுகிறது. இது அறவழிப்பட்ட கருதுகோள். ஏனெனில் நால்வருண தர்மத்தில் தனது சொந்த முயற்சியால் ஒருவன் வாழ்வில் உயர்வடைதல் என்பதற்கு இடமில்லை. நாலாம் வருணத்தோன் ஏவல் புரிதலை விட்டொழித்து அரசனாக ஆவானேயாகின் அவன் ஆளும் நாட்டில் வசிக்கக்கூடாது (4:61) என்று அந்தணர்களுக்கு மனு இடும் கட்டளையின் வழியே தர்மத்தின் இறுக்கத்தை அறியலாம்.
இத்தகு நிலையில், ‘அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும்’ என்று திருக்குறளின் உரைப்பாயிரத்தில் எழுதுகிறார் பரிமேழலகர். உடம்பில் சிறப்பு வாய்ந்தது முகம் எனவே இறைவனின் முகத்திலிருந்து உதித்த பெருமையால் முன்னிற்கும் சால்பு அந்தணனுக்கே உரித்தது என்று கூறும் மனுவின் தர்மத்தை, சதுர்வருணக் கோட்பாட்டில், காலிலிருந்து பிறந்ததால் நான்காம் இடத்திற்கு உரியவன் என்று தள்ளப்பட்ட உழவனை உயர்த்தி, உழன்றும் உழவே தலை என்றும் பிறர் எல்லாம் அவன் அடியைத் தொழுதுண்டு பின்செல்பவர் என்றும் கூறும் வள்ளுவரின் அறத்தோடு பிணைத்த பரிமேலழகரின் திறத்தை முரண் என்றுதான் கொள்ளவேண்டியுள்ளது.
இயல்பான இடப்பெயர்வுகளாலும் வைதீகச் சார்புடைய மன்னர்களால் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றங்களாலும் வருண தர்மத்தைப் பின்பற்றுவோரின் பண்பாடு தமிழ் நிலத்தில் பகிரப்பட்டதற்கான சான்றே மேற்கண்ட முரண் என்று ஊகிக்க இடமுண்டு . பரிமேலழகர் போன்ற பேரறிவாளர்களும்கூட அறத்தையும் தர்மத்தையும் பிழைபடப் பிணைத்தமைக்கு இப்பண்பாட்டுப் பரிமாற்றங்களே காரணங்கள் எனலாம்.
முடிவுரை:
வாழும் நிலத்திற்கு ஏற்ப அக ஒழுங்கையும் புற ஒழுங்கையும் அமைத்து வாழ்வது அறனெறிப்பட்ட வாழ்வு. பிறந்த குலத்திற்கேற்ப வினைகளை அமைத்துக்கொள்வதும் அதனின்று வழுவா தன்மையுமே தர்மநெறிப்பட்ட வாழ்வு. காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மாறக்கூடியது அறம். இத்தகையச் சூழல் மாற்றத்தை, ‘சாந்தியும் சமாதானமும் போதித்த சமணத் துறவிகளுக்கு வீரயுகத்திலே வரவேற்பு இருந்திருக்க முடியாது’ என்று சான்று காட்டி விளக்குகிறார் க. கைலாசபதி. ஆனால் தர்மங்கள் அவற்றை நம்புவோரின் மீது கால-இட மாற்றமின்றி சுமத்தப்படுபவை. விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் என்கிற பரிமேலழகரின் கூற்று அறம், தர்மம் இவையிரண்டுக்குமே பொருந்தும். ஆனால் மனு முதலிய நூல்களில் விதிக்கப்பட்டனவும் விலக்கப்பட்டனவுமான தர்மங்களோ அற விழுமியங்களோடு பொருந்தாதவை.
தர்மம் காலங்காலமாய்த் தொடரும் சனாதனம். மாற்றத்திற்கோ ஏற்றத்திற்கோ வழியில்லாக் கட்டிறுக்கமான படிநிலை அது. நிறுவன பலத்தினால் நிலைபெறுவது. அறமோ தனிமனித மேம்பாட்டிற்கு முதன்மையளிப்பது. இத்தகைய அறத்தையும், தர்மத்தையும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்த முற்பட்டால் கருத்தியல் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகளே அதிகம்.
எனவே, அறமும் தர்மமும் அடிப்படையில் வெவ்வேறானவை, அமைப்பளவில் முரணானவை.
துணை நூல்கள்:
1. ஆறுமுகத்தமிழன், கரு, 2019, உயிர் வளர்க்கும் திருமந்திரம், தி இந்து தமிழ் திசை, சென்னை.
2. கைலாசபதி, க, 1999, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை.
3. சாமிநாதையர், உ. வே, 2019, என் சரித்திரம், டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை.
4. சிவசுப்பிரமணியன், ஆ, 2022, பிராமண போஜனமும் சட்டிச் சோறும், NCBH, சென்னை.
5. திருவள்ளுவர், 2016, திருக்குறள் பரிமேலழகர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை.
6. தொல்காப்பியர், 2021, தொல்காப்பியம், பாரி நிலையம், சென்னை.
7. மனு, 2018, மனுதர்ம சாஸ்திரம், அலைகள் வெளியீட்டகம், சென்னை.
8. மாணிக்கம், வ. சுப, 2019, வள்ளுவம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
9. ராதாக்ருஷ்ண சாஸ்த்ரிகள், S.V, 2002, தர்ம சாஸ்திரம், ஸ்ரீ சுரபி ஜகத்குரு சதாப்தி பப்ளிகேஷன்ஸ், சென்னை.
10. ஜோத்கா, சுரிந்தர் எஸ், 2023, சாதி தோற்றமும் வளர்ச்சியும்: ஓர் அறிமுகம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
இணைய மூலங்கள்:
1. எது அறம்? எது தர்மம்? - பேராசிரியர். கரு. ஆறுமுகத்தமிழன்
2. உயர் வள்ளுவம் திருக்குறள் வகுப்பு, இலங்கை ஜெயராஜ்,
- மகிமை பெர்னாண்டோ நிக்சன்.அ, ஆய்வு மாணவர், மெய்யியல் துறை, இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி (தன்னாட்சி), மயிலாப்பூர், சென்னை.