திருநங்கைகள் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட சமூகமாக இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் பார்க்கக்கூடிய நிலையில் உள்ளனர். திருநங்கைகள் சமூகத்தின் விளிம்பு நிலையில் காணப்படுகிறார்கள், திருநங்கைகள் பற்றிய ஆய்வு என்பது அரிதாகவே உள்ளது. சமூகத்தால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள், அலட்சியமாக புறக்கணிக்கப்படுகிறார்கள். திருநங்கைகள் நம் சமூகத்தின் ஒரு அங்கம் என்பதை நாம் உணர வேண்டும். மேலும், பாலின சார்பு இல்லாத ஒரு சமூகத்தை நிறுவ வேண்டும். நம் வாழ்வியலிலும், கலாச்சாரத்திலும் அவர்களின் பங்கு, மற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழும் வழிமுறையை ஏற்படுத்த வேண்டும். திருநங்கைகளின் வரலாற்றுப் பரிணாம வளர்ச்சி, காலப்போக்கில் அவர்களின் நிலைப்பாடு மற்றும் இந்து புராணங்களில் அவர்களின் இருப்பு, திருநங்கைகளுக்கான அரசியலமைப்பு விதிகள், கல்விக் கொள்கைகள் மற்றும் வடிவமைக்கப் பெற்ற நலத் திட்டங்கள் போன்றவற்றை விரிவாகவும், தெளிவாகவும் இக்கட்டுரை உள்ளடக்கியுள்ளது. இருபத்தியோராம் நூற்றாண்டிலும் திருநங்கைகளுக்கு கல்வி என்பது கனவாகவே உள்ளது. திருநங்கைகளுக்கு கல்வி கிடைக்கப்பெறின், அவர்கள் கண்ணியத்துடனும், மரியாதையுடனும், நேர்மையுடனும், வாழ்க்கையை வாழமுடியும் எனும் பரிந்துரையை இக்கட்டுரை ஆணித்தரமாக எடுத்துக் காட்டுகின்றது.transgender 404முன்னுரை

பல நூற்றாண்டுகளாக சாதியத்தால் கட்டுண்டு கிடக்கும் தலித் மக்களின் விடுதலைக்காகவும், ஆணாதிக்கத்தில் சிக்குண்டு அனைத்து சுதந்திரத்தையும் இழந்து தவிக்கும் பெண்களின் விடுதலைக்காகவும் ஒட்டுமொத்த மனித சமூகமே புறக்கணிக்கின்ற மூன்றாம் பாலினமாக திருநங்கையரின் விடுதலைக்காகவும் போராடிக் கொண்டே இருக்கும் நிலையைத்தான் இன்றுவரை பார்க்கிறோம்.

“பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்”. டாக்டர் அப்துல் கலாம்.

நம்மில் பெரும்பாலானவர்களுக்குப் பிறப்பு சம்பவமாக அமைகிறது. ஆனால், சிலருக்கு அந்தப் பிறப்பு கூட வெறும் சம்பவத்திற்கு குறைவானதாக அமைந்துவிடுகிறது. அப்படி பிறப்பால் வஞ்சிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் உலகில் இருந்து தள்ளி வைக்கப்பட்டு, எப்படியோ வாழ்ந்து மடியும் மனிதர்கள் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரை. சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட திருநங்கைகள் மீது உள்ள அக்கறையும் மதிப்பும் அன்பும் இக்கட்டுரைக்கான மையப்புள்ளி.

பெயர்க் காரணம்

தமிழ் இலக்கியத்தில் பெண் தன்மை மிக்கவர் ‘அலி’ என்றும் ஆண் தன்மை குறைந்து பெண் தன்மை மிக்கவர் ‘பேடி’ என்றும் குறிப்பிடப்பட்டனர் (அன்னி தாமசு, 2002, ப.26). திருநங்கைகள் அரவானுக்கு மனைவியாக தாலிகட்டி அறுப்பதால் அரவாணி என்று பெயர் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சாதி மதங்களை கடந்தவர்களாக திருநங்கையர் கருதப்பட்டாலும், அரவாணி என்னும் சொல்லாடல் இந்து சமயத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் நடைபெற்ற கூத்தாண்டவர் விழாவில் நடந்த அழகிப் போட்டிக்கு தலைமை ஏற்ற விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர். இரவி ‘ அரவாணி’ என்ற பெயரை முன்மொழிந்தார் (விழுப்புரம் 2. 5. 1998).

“திருநங்கையர்” ‘திரு’ என்பதற்கு மரியாதைக்குரிய என்று பொருள். ‘நங்கை’ என்பது பெண்ணைக் குறிக்கும். திருநங்கையர் என்பது பெண்ணில் சிறந்தவள் என்று விளக்கம் கொண்டது. திருநங்கை எனும் சொல் சமயம் சாரா, இன அடையாளம் அற்ற பொதுப் பெயராக அமைகிறது. அலி, அரவாணி என்று அழைக்கப்பட்ட அவர்களை திருநங்கையர் என்று பெயர் மாற்றினார் நமது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி. (திருநங்கை, திருநம்பி ஆகிய இரு பிரிவினருக்கும் பொதுவாக ‘திரு.நர்’ என்று அழைக்கலாம் என ஆல்கா. பி.ஆரேன் குறிப்பிட்டார். (தி இந்து, சனவரி 17, 2016)

உயிரியல் மாற்றங்கள்

சமூகத்தில் சுமார் 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு குரோமோசோம்களில் ஏற்படும் இணைவில் திருநங்கையர் உருவாகின்றனர். இது இயற்கையான அறிவியல் நிகழ்வு என்கிறார் வீ. அரசு (மகராசன், 2007, ப.126) அறிவியலாளர்களின் கருத்துப்படி திருநங்கையர் பால் ரீதியாக மரபணு அடிப்படையில் இயற்கையாகவே பிறப்பதாகவும், மானுடவியலாளர்கள் கருத்துப்படி சமூகச்சூழலால் உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. திருநங்கையருக்கு உள்ளுணர்வு மருத்துவம் (Insight Therapy), ஆதார மருத்துவம்( Supportive therapy) நட்புறவு மருத்துவம் ( Relationship Therapy ) போன்றவை மேற்கொள்ளப்பட்டால் தவறான வழிகாட்டுதலால் உடலும் உள்ளமும் பாதிப்பு அடையாமல் தன்னம்பிக்கையுடன் வாழ வழி கிடைக்கும்.

திருநங்கையர் வழி மாறும் தருணம்:

சொந்த வீட்டினர், உறவினர், ஆசிரியர், நண்பர்கள் என சமுதாயத்தில் அனைவருமே ஒதுக்கித் தள்ளுகின்றபோது, தனக்கான உறவுகளைத் தேடி 16 முதல் 22 வயதில் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். எதிர்பாராத பேருந்து சந்திப்பில், ரயில் நிலையங்களில், கடைவீதிகளில், ஊர் விழாக்களில் திருநங்கையர் சந்திக்கின்றனர். பிறரோடு இணைந்த பின் பெரும்பாலும் மும்பை, தில்லி, பூனா, கொல்கத்தா போன்ற வட மாநிலங்களுக்கு பயணிக்கின்றனர். அங்குதான் கிருஷ்ணரின் அவதாரம் என்ற நம்பிக்கையில் திருநங்கையர் மதிக்கப்படுகிறார்கள்.

இலக்கண இலக்கியங்களில் திருநங்கையர்

அரண்மனை பணிப்பெண்ணாக, ராணியின் அந்தப்புர காவலராகவும் திருநங்கைகள் பணியாற்றியிருக்கிறார்கள். அரசரின் அரண்மனையின் அந்தப்புரத்தில் ராணிக்கு காவல் மற்றும் தோழியாகவும் திருநங்கைகள் இருந்திருக்கிறார்கள் என்ற வரலாற்றுப் பதிவு காணப்படுகிறது. அரச குடும்பங்களின் அந்தரங்கங்கள் ரகசியங்களும் அறிந்தவர்களாகவும், அரச குடும்பங்களுக்கு விசுவாசமாகவும், திருநங்கைகள் கௌரவமான பல பதவிகளிலும் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

திரைப்படத்தில் திருநங்கையர் பங்கு, இரண்டு விதத்தில் சித்தரிக்கப்படுகின்றனர்.

திருநங்கையர் திருநங்கையாக நடிப்பது,

திருநங்கையர் போல ஓர் ஆண் வேடமிட்டு நடிப்பது,

காஞ்சனா திரைப்படத்தில் கருணையும் அன்பும், பாசமும் கொண்ட கதாபாத்திரம் உண்மையான திருநங்கையின் உடல் மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னேறும் எண்ணம், கல்வி, அநீதியை எதிர்க்கும் போர்க்குணம் என மிகச் சிறப்பாக பதிவு செய்கிறது.

திருநங்கையர் மனிதாபிமானத்தோடு சித்தரித்த முக்கியமான படம் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பம்பாய் படமாகும். பம்பாய் மதக்கலவரத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளை காப்பாற்றுவதும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும் ஒரு திருநங்கை. திருநங்கைக்கு சாதியோ, மதமும் இல்லை என்பதை பொறுப்புணர்வோடு அத்திரைப்படம் பதிவு செய்தது.

திருநங்கையர் தினம்

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு திருநங்கைகளின் சமூக பாதுகாப்பைக் கருதி அவர்களின் பிறப்பை வலியுறுத்தும் வகையில் ஏப்ரல் 15ஆம் நாளை திருநங்கையர் தினமாகக் கொண்டாட அரசாணை எண்:27, 26.02.2011. பிறப்பித்து திருநங்கைகளை சிறப்பித்துள்ளனர்.

சமச்சீர் கல்வி

தமிழக அரசின் சமூக நலத்துறை 2006 ஆம் ஆண்டில் பள்ளி, கல்லூரிகளில் பாலின அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கையை தடை செய்யக்கூடாது என அறிவித்து மூன்றாம் பாலினமாக கல்லூரி சேர்க்கை விண்ணப்பத்தில் ஆண், பெண், திருநங்கையர் என குறிப்பிட்டு அதை செயல்படுத்தியும் உள்ளது (தினமலர், மே.24,2008). சமச்சீர் கல்வித் திட்டத்தில் (2011) ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத் திட்டத்தில்’ ‘திருநங்கையர் வாழ்வியல்’ பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது

வாக்காளர்களின் உரிமை

திருநங்கைகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முதன்முதலாக உத்தரவிட்டவர் முன்னாள் தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன். இவர் ஆண்களுக்கு ‘M’ என்றும், பெண்களுக்கு ‘F’ என்றும் குறியீடுகள் உள்ளது போலவே அரவாணிகளை ‘U’ என்று குறிப்பிடலாம் என்ற ஆலோசனையைக் கூறியுள்ளார். 2009 -ஆம் ஆண்டில் இந்தியாவின் வாக்களிக்கும்படி அமைப்புகளில் திருநங்கைகள் தங்கள் பாலியல் நோக்கு நிலையை ‘ மற்றவர்கள்’ என்று தேர்வு செய்ய அனுமதித்தது. 2014ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து, மூன்றாம் பாலினம், சமூக அல்லது மருத்துவ பிரச்சனை அல்ல, மாறாக மனித உரிமைப் பிரச்சனை (நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன், 2014) என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருநங்கைகளின் கோரிக்கைகள்:

அரசு மற்றும் தனியார் துறையில் உள்ள கல்வி நிறுவனங்களிலும், தொழில் நிறுவனங்களிலும் ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளாக திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

காவல் நிலையத்தில், விமான நிலையத்தில், வெளிநாட்டு தூதரகத்தில் திருநங்கைகளை சோதனை செய்ய திருநங்கையரையே நியமிக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரிப் பாட நூல்களில் திருநங்கையர் வாழ்வியல் பற்றிய நல்ல புரிதல் உள்ள பாடங்களை வைக்க வேண்டும். மூன்றாம் பாலினத்தவர் பற்றிய சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கல்வியை பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும்.

திருநங்கைகளுக்கு கல்வி இலவசமாக, உயர்கல்வி வரை அரசே ஏற்க வேண்டும்.

திருநங்கைகளின் வாழ்வியல் மாற்றம்

எந்த நாடாக இருந்தாலும் பாலியல் தொழில் தான் திருநங்கையரின் முக்கியத் தொழிலாக இருந்திருக்கிறது. திருநங்கைகளின் மொத்தத் தொகையில் 84% விபசாரத்தில் ஈடுபடுகின்றனர். இந்த நிலை மாறி இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பல திருநங்கைகள் படித்தவர்களாக இருப்பதால் இழிதொழிலான பாலியல்தொழில், பிச்சை எடுத்தல் போன்றவற்றை விடுத்து மாற்றுத் தொழில் செய்யும் எண்ணம் திருநங்கையர் இடையே ஏற்பட்டிருக்கிறது. கல்வி ஒன்றே திருநங்கைகளின் வாழ்வை மாற்ற முடியும் என்பதற்கு சான்றாக,

தமிழ்நாட்டு திருநங்கைகளின் சாதனைகள், பன்முக ஆளுமை சில துளிகள்:

சபீனா பிரான்சிஸ் - TATA கல்வி நிறுவனத்தில் முனைவர் பட்டம் TNUANA - வில் பணிபுரிகிறார்

நாடகக் கலைஞராக திருநங்கை நர்த்தகி நடராஜ் மத்திய அரசின் பத்மஸ்ரீ (2019) விருது பெற்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்

பிரியா பாபு எழுத்தாளர், இவரின் மூன்றாம் பாலின முகம்(2008) எனும் நாவல், நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு (2010-2011) மூன்றாம் பருவத்திற்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் பெரியார் விருதினை பிரியா பாபு பெற்றுள்ளார்.

ஆல்கா. பி. ஆரோன்: பி.ஏ. ஆங்கில இலக்கியம், எம். ஏ. பொது நிர்வாகம் மற்றும் கணினி பட்டப்படிப்பு படித்துள்ளார். ஐந்து மொழிகள் தெரிந்தவர்.

கல்கி, பி.ஏ.இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு பட்டப் படிப்பை முடித்தவர். வெளி நாட்டினரரோடு ஆங்கில நாடகம் நடித்தவர், தமிழ் கலாச்சாரத்தை அமெரிக்கர்களுக்கு பறைசாற்றியவர். திருநங்கைகளுக்கான அழகான திருமண வலைதளம் உருவாக்கியவர், வாழ்நாள் சாதனையாளர் விருது 2009 இல் பெற்றவர்.

பிரித்திகா யாஷினி- முதல் திருநங்கை சப் இன்ஸ்பெக்டர்.

சத்யஸ்ரீ சர்மிளா- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதவி ஏற்றுள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கை (NEP 2020)

தேசியக் கல்விக் கொள்கையில் அனைவருக்கும் தரமான கல்வி பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. சமமான கல்வி, பிறப்பு மற்றும் பின்னணி காரணமாக எந்த ஒரு குழந்தையும் பின்தங்கி இருத்தல் கூடாது என்பதே தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கம். திருநங்கையரை ‘சமூக பொருளாதார ரீதியாக, பின்தங்கிய குழு (SEDG’s) Socio Economic Disadvantaged Group என்ற அடிப்படையில், (எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மையினர், ஓபிசி களுடன், திருநங்கைகளையும் சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. திருநங்கைகள் மற்றும் பெண்களுக்கு கல்வி, சுகாதாரம், மிதிவண்டிகள், உதவித் தொகை வழங்கப்படும். மாநில அரசுகள் பெண்கள் மற்றும் திருநங்கையர் காண மேம்பாட்டு திட்டங்களை நிறுவி, நிவர்த்தி செய்யவும், சமூகம் சார்ந்த தலையீடுகளை மேற்கொள்ளவும், நிதி உதவி மத்திய அரசால் வழங்கப்படும். SEDG’s எனும் பின்தங்கிய குழுவில் திருநங்கைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முடிவுரை

திருநங்கைகள் அடையாளமற்றவர்கள் என்ற நிலை மாறி, 21 ஆம் நூற்றாண்டில் சமூகரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். கல்வி நிலைகளில் அவர்கள் பங்களிப்பு குறைவாக இருப்பினும், அரசாங்கமும் சமூக ஆர்வலர்களும் திருநங்கைகளின் கல்விக்காக பெரிதும் பாடுபடுகின்றனர். விண்ணப்ப படிவங்களில் மூன்றாம் பாலினத்திற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது போல், அனைத்து துறைகளிலும் திருநங்கைகளுக்கான உரிமைகளை வழங்க வேண்டும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில், தீண்டாமை, மத வேறுபாடுகள், போன்ற தீய எண்ணங்களை மக்களிடமிருந்து அகற்றப்பட்டது போல, திருநங்கைகள் மீது உள்ள தவறான எண்ணங்களையும், அவர்களை கையாளும் முறைகளையும் நாம் மிக கவனமாக மேற்கொள்ள வேண்டும். வரும் காலங்களில் மாணவர்களும், சமுதாயமும் உள்ளடக்கிய கல்வி முறையைக் கையாள வேண்டும். உள்ளடக்கிய கல்வி என்பது அனைத்து குழந்தைகளும் எந்தவித பாரபட்சமும் இன்றி ஒரே வகுப்பில் கல்வி கற்க வேண்டும். இதுபோல் ஒரு கல்வி முறையே நமது புதிய கல்விக் கொள்கை 2020, வலியுறுத்துகிறது. புதிய கல்விக் கொள்கையை பின்பற்றி நாம் திருநங்கைகளுக்கான அனைத்து உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டும். திருநங்கைகளின் உயர்வுக்காகவும் வாழ்க்கைக்காகவும் கல்வியாளர்கள் அனைவரும் கூடி பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்க வேண்டும்.

துணைநூற் பட்டியல்

அருண். மோ. உடலியல் பெண் மனதளவில் ஆண்: பெண்கள் குறித்து தமிழ் சினிமாவின் பிம்பம், படச்சுருள், அடையார், சென்னை, நவம்பர் 2015.

அண்ணிதாமசு (2000) தமிழர் சமூகவியல் சில பார்வைகள், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.

மகராசன், ( தொ .ஆ), (2007), அரவாணிகள் உடலியல், உளவியல், வாழ்வியல், தோழமை வெளியீடு, சென்னை.

மகராசன், (2016) கழகத்தை முன்னிறுத்தும் அரவாணியின் குரல், புதிய காற்று இதழ்.

- முனைவர் தி.சங்கீதா, உதவிப் பேராசிரியர், ராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகம்.