தமிழ்ச் சமூகப் பண்பாட்டுத் தளங்களில் புரையோடிக் கிடக்கிற சடங்கு முறைகள் ஏராளம். அதில் சில சடங்கு என்ற போர்வையில் மக்களிடையே நிலவுகின்ற அபத்தங்களும் மூடநம்பிக்கைகளும் முன்னோர்களின் குருட்டுத்தனமான பண்பாட்டு எச்சங்களும் இருக்கின்றன. அவற்றை மழைப்பாறை நாவலில் எழுத்தாளர் பாண்டியக் கண்ணன் பதிவு செய்து இருக்கிறார். பெண்கள் உடல்களின் இயற்கையைச் சடங்கு முறைக்கு உட்படுத்தி அதைத் தீட்டு என்று மாற்றி அதனால் வரக்கூடிய சடங்கு முறைகளை தமிழ்ச் சமூகம் பல்வேறு சாதிகளிலும் பல்வேறு விதமான சடங்கு முறைகளைக் கையாளுகின்றன. இதில் 1980களில் விருதுநகர் வட்டாரங்களில் வாழ்ந்த குறவர் இன மக்கள் தன் சமூகத்தில் பிறந்த பெண் குழந்தைகள் பருவம் அடைந்தவுடன் தன் உறவினர்களை அழைத்து சடங்கு செய்கின்றனர். அதில் தாய் மாமன் முறை முறையாக மேளதாளத்தோடு வரவேற்கப்பட்டு 11 வரிசை தட்டோடு சீர் கொண்டு வந்த மாமன்மார்கள் அதில் ஏதாவது குறை இருக்கிறதா என்று ஊரு சபையில் கேள்வி கேட்ட பிறகு வள்ளுவர் வந்து குறி சொல்கிறார்.
பருவமடைந்த பெண்ணின் நேரத்தைக் கணக்கிட்டு அந்தப் பெண்ணுக்கு எந்தத் திசையில் வைத்து தலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும் எந்த பக்கம் குச்சில் கட்ட வேண்டும் என்று சொன்ன நிமித்தம் பார்த்த அந்த வள்ளுவருக்கு பணம் கொடுக்கும் போது, அந்தப் பணத்தை வள்ளுவர் கையால் வாங்க மறுத்து தரையில் கீழே வைக்கச் சொல்லி பணத்தில் தண்ணீரைத் தெளித்து வள்ளுவர் கையில் எடுக்கிறார்.
ஏனெனில் குறவர் வீட்டுப் பணத்தைத் தொட்டால் தீட்டுப் பட்டுவிடும். தாய்மாமன் மனைவி முதலில் தலைக்கு எண்ணெய் வைக்கிறாள். அதைத்தொடர்ந்து மற்ற அத்தைமார்கள் எண்ணெய் வைத்தனர். தலையில் தண்ணீர் ஊற்றினர். அதோடு சேர்ந்து குலவைச் சத்தமும் வந்து அந்த ஊர் முழுவதும் பருவம் அடைந்த செய்தி தெரிய வருகிறது.
அதன் பின்பு அந்தப் பெண் தாய்மாமன் கொண்டு வந்த ஆடை ஆபரண பொருட்களை உடுத்தி அணிந்து சபையில் உட்காரும்போது கையில் மாலையைக் கொடுத்து தாய்மாமன் கழுத்தில் மாலையைப் போடச் சொல்கிறார்கள். வந்திருந்த உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து உணவை முடித்துவிட்டு சாராயம் குடித்துச் சடங்கை முடித்து வைக்கின்றனர்.
அதன் பின்புதான் இந்தக் குறவர் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள் கற்பனைக்கு எட்டாத சூழ்நிலையில் அங்கே நடந்திருக்கிறது. வயதுக்கு வந்த பெண்ணை மேற்கண்ட சடங்கு முறைகளை முடித்துவிட்டு மறுநாள் ஊருக்கு வெளியே இருக்கும் கண்மாயில் முறைமாமன் கட்டிய ஓலைக் குடிலில் முப்பது நாட்கள் அந்தப் பெண் யாருடைய துணையின்றி தனியாக இருக்க வேண்டும். குடிசையில் இருக்கக்கூடிய பெண்ணை காற்று கூட தீண்டாது என அந்த குறவர் சமூக மக்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் நடு இரவில் ஆதிக்க சமூகத்தை சார்ந்த சிலர் பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள். அந்தப் பெண் பாலியல் உறவுக்கு சம்மதிக்கவில்லை என்றால் கொன்று விடுகிறார்கள். அதோடு மட்டுமில்லாமல் குடிசையோடு எரித்துக்கொல்லப்படுகிறாள். இதுபோல குறவர் இன மக்களின் பெண் குழந்தைகள் பல பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
"நம்ம குடியிலே சமஞ்சவெ மருநாத்தெ கன்னி கழிஞ்சவளாத் தான் இருப்பா. முப்பது நா சென்டதுக்கப்புறம் வீட்டுக்குள்ள நொளையறப்போ யாரொ ஒருத்தனோட புள்ளைய சொமந்துக்கிட்டுத் தான் போகணும்.”
இந்த மாதிரியான கொடுமை குறவர் இன பெண்கள் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய பாலியல் வன்முறையாகும். பண்பாட்டு சடங்கு என்கின்ற போர்வையில் பலவாறு மூடநம்பிக்கைகளுக்குப் பெண் குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு இரையாக ஆகியிருக்கிறார்கள். இந்த ஆதிக்க சமூகத்தை எதிர்த்து குறவர் இன மக்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தியாகும்.
“தெரிஞ்சு என்ன செய்யப் போறாங்க, மூசு மூசுன்னு அழுது மூக்கு சீந்திட்டு கள்ளுக்கடை, சாராய கடைலே ஒக்கார்ந்து சம்மந்தம் பேசி யாரு தலையிலையாவது கட்டி வைச்சுட்டு கடம முடிஞ்சது சாமினுட்டு மூனுனா நாலு நாளைக்கி முக்க முக்க முக்கிபுட்டு மூலையிலே கெடப்பாய்ங்க.”
இது போலதான் ஆதிக்கத்தை எதிர்க்க முடியாமல் அந்தக் குறவர் இன மக்கள் வாழ்கிறார்கள்.
அடித்தட்டு மக்களுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் சிறிது வேறுபாடு உள்ளது. அடித்தட்டு மக்கள் ஆதிக்க சமூகத்தால் பாதிப்படையும் பொழுது திருப்பித் தாக்குற நிலை அடித்தட்டு மக்களிடம் உண்டு. ஆனால் விளிம்புநிலை மக்கள் ஆதிக்க சமுகத்தால் தங்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகளைத் தாங்கிக் கொள்ளும் பழக்கமே அந்த மக்களிடம் நிலவுகிறது. அந்த பாதிப்பை வெளிப்பாட்டை தனக்குத்தானே புலம்பிக் கொள்கிறார்கள். அதனால்தான் அடித்தட்டு மக்களுக்கும் கீழான விளிம்புநிலை மக்கள் என்கிறோம். அந்த விளிம்பு நிலையில் தான் குறவர் இன மக்கள் வாழ்கிறார்கள்.
கம்மாக்கரையில் வயதுக்கு வந்த குறவர் இனப் பெண் குச்சிலில் இருக்கிற பொழுது ஆதிக்க சமூகத்தை சார்ந்த ஒருவன் காதலிப்பதாக பொய் சொல்லி ஏமாற்றி தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள். இறுதியில் அந்தப் பெண் இறந்து விடுகிறாள்.
“கண்மாய் கரையில் தனியாக ஓலைக் குடில். அதற்கொரு கிடுகு தாழ்ப்பாள். இது பாதுகாப்பா இல்லை, தீட்டானவளை காற்றுக்கூட தீண்டாது என்று அதீத நம்பிக்கை.”
பொங்கித் ததும்பும் கள் பானையை தேனீக்கள் மொய்ப்பதைப் போன்று ஒச்சானின் நண்பர்களான கைகளையும் கால்களையும் ஊன்றி விலங்கைப்போல் நடக்கும் நொண்டி கருப்பன், மொட்டிமீது கைவைத்து தாங்கி தாங்கி நடந்திடும் பெரியண்ணன், இருவரும் ஊனமானவர்கள். காமத்துக்கென்ன ஊனம், நாங்களும் நிருவிப்போமென்று பாண்டிக்கனி மீது பாய அவள் கிறக்கத்தில் இருந்தாலும் பழையதுக்கும் புதியதுக்கும் வேறுபாடு தெரியாதா? என்ன? புரிந்து கொண்டாள். ஒச்சானால் உதிர்ந்த இதழ்கள் ஒன்றிணையப் போவதில்லை. இருப்பினும் ஒவ்வொரு இதழும் உயிர் பிழைக்க வைக்க போராடத் துவங்கினாள். உடலையும் உறுப்புகளையும் மனதால் விலங்கிட்டாள். இரை கிட்டாத விலங்குகள் அவளை மூர்க்கமாய் தாக்கின. மூர்ச்சையானாள். கிள்ளி எறியப்பட்ட அல்லிமலர் அனாதையா கிடக்க ஒச்சான் வந்தான். துவண்டு கிடந்த குறி நிமிர்த்தி அவள் முகத்தில் மூத்திரமடித்தான்.
"குத்த வச்சா பொத்திகிட்டு மூலையிலே கெடக்குறத விட்டுப்புட்டு ஆட்டமா ஆடிறிங்க.சாஸ்த்திரமும் சம்பிரதாயமும். எங்களுக்குத்தான். சாமியும் கொடயும் நாங்கதான் கொண்டாடணும்… த்தூ… திரை விழுந்து வெளியேறும் ரசிக கூட்டத்தைப் போல வெளியேறினார்கள். இதுபோல அந்தக் குறவர் இனப்பெண்கள் ஆதிக்க சாதியால் பல்வேறு வன்புணர்வுக்கு கொடுமையாகிறார்கள்.
அதேபோல் இந்த நாவலில் இன்னொரு பெண் வயதுக்கு வந்து கம்மாகரையில் குச்சிலையில் இருக்கிற பொழுது பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி அந்தப் பெண் உடன் இருக்கிற பாட்டியைக் கொன்றுவிடுகிறார்கள்.
"அந்த கபாலி பயல்கலோடு மல்லு கட்டிருக்கா கெளவி. கடுசாவளா இருக்காளேன்னுட்டு அந்த நொண்டி பயே இருக்கானே அவன் கெளவி கழுத்துலே துண்டை போட்டு இறுக்கி நாக்கு தள்ளவும் அவெ சேலைய வச்செகாலே கைய கட்டி கம்மாயிலே தூக்கி போட்டுட்டு போயிருக்காங்க. மூனுநாலு கழிச்சு மெதந்து வந்தவளே என் கூட தங்குனதுனால சாமி குத்தமாகி முனி அடிச்சி தூக்கி போட்டுருச்சுன்னு சனங்க நம்பி கெளவிய தூக்கி அடக்கம் பன்னிட்டாய்ங்க.”
கொலை செய்து இறந்த பாட்டியை வயதுக்கு வந்த பெண்ணுடன் குச்சலில் இருந்ததனால் இறந்தாள் என்று அந்த மக்கள் நம்புகிறார்கள் என்று சொன்னால் அவர்களுடைய பிற்போக்குத்தனமும் மூடநம்பிக்கையும் எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.
அங்கு இருந்த பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி கர்ப்பமாகிறாள். பெண்ணின் தாய் அழுது புரண்டு வேதனைப்பட்டு அழுகிறாள்.
"கொட கொடன்னு ஒரே வாந்தி என்ன ஏதுன்னு ஆத்தா நாடி புடிச்சு பாத்துட்டு பேய் அரஞ்சவ போல ஆயிட்டா… அப்புறம் தலையல தலையல அடிச்சிக்கிட்டு பொளம்ப ஆரம்பிச்சிட்டா. ஆத்தா மகமாயி இடிஞ்ச வீட்லதான் எழவு விழனுமா. அடி பாதகத்தி ஒங்காந்த எடத்துலே புள்ளக்காரியா போயிட்டியே என்று உருண்டு பொரண்டு மண்ண வாரி தூத்துனா. தூத்திட்டா தூந்துபோயிருமா.தலவிதி பொறந்தா பொம்பளையா பொறக்க கூடாது. அதுவும் கீழ் ஜாதியிலே பொறக்க கூடாதுன்னு ஒப்பாரி வச்சோம்.”
இதைப் போன்று பாலியல் வன்கொடுமைகளால் அவர்களால் அழுகத்தான் முடிகிறது. எதிர்த்து தனக்கான உரிமையை நிலைநாட்ட முடியவில்லை என்பது வேதனையான செய்தியாகும். பாதிக்கப்பட்ட குறவர் இன மக்களுக்குக் கடைசி வரையிலும் தனக்கான நியாயம் கிடைக்கவில்லை.
இவ்வாறு பல்வேறு நிலைகளில் தமிழ் மொழியை பூர்வீகமாகக் கொண்ட குறவர் இன மக்கள் வர்க்கத்தாலும் சாதிய கட்டமைப்புகளாலும் பலவிதமாக ஆதிக்க சக்திகளால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியா சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் கடந்தும் விளிம்பு நிலை மக்கள் பட்டியலில் வரக்கூடிய தலித்துகள், திருநங்கைகள், மலம் அள்ளுகிற தூய்மை பணியாளர்கள், தினக்கூலிகள், பிளாட்பார வாசிகள் இவர்கள் வாழ்க்கை வர்க்க ரீதியாகவும் சமூக நீதியாவும் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு மனிதனை மனிதனாகக் கருதாத ஒரு அவல நிலையும் மனித மலத்தை குடிநீரில் கலப்பதும் ஆணவப் படுகொலையும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இதற்கான தீர்வு பொதுவுடைமைச் சமத்துவம் இன்னும் நம் நாட்டில் அதன் தீவிரத் தன்மையை நிலை நாட்ட வேண்டும் அதற்கு முற்போக்குவாதிகளும் பொதுவுடைமைவாதிகளும் தீவிரமாக செயல்பட வேண்டும்.
- ச. கார்த்திக், முனைவர் பட்ட ஆய்வாளர், குருநானக் கல்லூரி (தன்னாட்சி) வேளச்சேரி சென்னை. மற்றும், உதவிப் பேராசிரியர். தமிழ்த்துறை, இலயோலா கல்லூரி (தன்னாட்சி), சென்னை.