பண்டையத் தமிழர் பல வகைப்பட்ட வழிபாட்டு மரபுகள் உடையவர்களாக விளங்கியுள்ளனர். பண்டையத் தமிழகம் என்பது இன்றைய கேரளம், ஆந்திரம், கர்நாடாகம், தமிழ்நாடு முதலான பகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்நாடுகளில் நிலவிய வழிபாட்டு முறைகளில் திணை, தொழில், சமூக வாழ்வியல் சார்ந்த கூறுபாடுகள் அமைந்திருந்தன. அந்த வகையில் சங்க காலம் முதல் இன்றுவரை தொன்றுதொட்டு வழங்கிவரும் வழிபாட்டு முறைகளில் ஒன்றே கண்ணகி வழிபாடு. இவ்வழிபாட்டு முறைகளில் கண்ணகியின் பெயர் மாற்றம் பெற்றிருக்கலாம். இருப்பினும் கண்ணகி தொடர்பான தொன்மம் அவற்றினூடே இழையாடுவதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். சிலப்பதிகாரம் இயற்றப்படுவதற்கு முன்பும் இயற்றப்பட்ட பின்பும் மக்கள் வாழ்க்கையில் கண்ணகி பற்றிய மரபானது எந்த வகையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது என்பதை ஆராய்வதாக 2023-இல் வெளியான ’சிலப்பதிகாரமும் கண்ணகி வழிபாடும்’ எனும் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலின் ஆசிரியரான ப. ஜெயகிருஷ்ணன் அவர்கள் தமிழகத்தினை அடுத்துள்ள பசுமை கொஞ்சும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இந்நூலானது வர்ணனைகள் அதிகமில்லாமல் தகவல்களை அள்ளித்தரும் ஒரு தகவல் களஞ்சியமாகவே காணப்படுகின்றது. மக்கள் வாழ்க்கையில் அமைந்துள்ள நாட்டுப்புறக் கதையாடல்களில் காணப்படும் கண்ணகி பற்றிய தொன்மங்களைத் தொகுத்தளிக்கும் நூலாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலில் வேறு என்ன சிறப்பு இருக்கிறது? எனக் கேட்பின் இதுவரை நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்காத கண்ணகி, கோவலன் ஆகியோரின் பல்வேறு பரிணாமங்களைக் கண்முன் நிறுத்துகின்ற ஓர் ஆய்வுப் பார்வையினைப் படிப்போரின் முன் வைக்கின்றது.

silappathikaramum kannaki vazipaadumசிலப்பதிகார காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கண்ணகி வழிபாடானது தமிழகம் தாண்டி பல்வேறு இடங்களில் பரவி இருந்துள்ளது. இதனை ‘ஒருமுலை இழந்த திருமாவுண்ணி’ முதலான வழக்குகளை வைத்து தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக அவற்றுள் ’கண்ணகி பாண்டிய மன்னனைப் பழிவாங்க அவனுக்கு மகளாகப் பிறந்தவள்’ என்று தமிழகக் கதைப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. ’தாருகனைப் பழி வாங்கவே காளி பிறப்பெடுத்தாள், ஆனால் பழி வாங்குதல் பாண்டிய மன்னனையேயாகும்’ இதனைக் கேரளத்து மணிமங்களா தோற்றப்பாட்டு, பழங்குடியின மக்களின் நாட்டுப்புறப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. (தாருகனைப் பாண்டியனாகவும் கண்ணகியைக் காளியாகவும் கருதுகின்ற மரபும் உண்டு) – அ.கா பெருமாள் (கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்களூர் கோவிலும்) ’காளி கோவிலில் வெட்டுண்ட காளி பக்தனான எண்ணெய் வணிகனே கோவலானகப் பிறந்தான்’ என்பதாகவும் வேறுசில கதைப்பாடல்கள் அமைந்துள்ளன. சீர்மா எனும் பகுதியில் வழங்கும் கதையானது ‘மாதவிக்குப் பதில் ஏழு சப்த கன்னியர் கோவலன் மீது விருப்பம் கொள்வதாகவும் கோவலனான பொன்மகன் மதுரைக்குச் சென்று அங்குக் கொல்லப்பட்டதாகவும், அவன் இறப்பிற்குக் கண்ணகி நீதி கேட்கிறாள் என்றும் இறுதியில் இருவரும் தெய்வமாகின்றனர்’ என்பதாகவும் அமைந்துள்ளது.

பிற மாநிலங்களில் குறிப்பாகக் கர்நாடகாவில் கண்ணகியின் கற்பிற்கு இரங்கிய சிவபெருமான் வெட்டுண்ட கோவலனை உயிருடன் எழுப்பி அவர்கள் இருவரும் தம் ஊர்சென்று நலமாக வாழ அருள் புரிந்ததாகக் கண்ணகி கதையானது திரிபடைந்து வழங்குகின்றது.

சிலப்பதிகாரம் குறித்தும் கண்ணகி வழிபாடு குறித்தும் தமிழகம் தாண்டி பல்வேறு மாநிலங்களிலும் இன்னும் சொல்லப்போனால் பல்வேறு நாடுகளிலும் பலவிதமான கதைகளும், நம்பிக்கைகளும் மக்களிடையே நிலவி வருகின்றன. அவ்வகையில் கேரளத்திலும் கண்ணகி பற்றிய தொன்மம் பல்வேறு வடிவங்களில் வழங்கி வருகின்றது. அதனைப் பற்றியும் பகவதி வழிபாடு கண்ணகி வழிபாட்டோடு எவ்வகையில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதனைப் பற்றியும் களஆய்வின் வழி மிக விரிவாகப் பேராசிரியர். ப. ஜெயகிருஷ்ணன் பேசியுள்ளார்.

எடுத்துரைப்பு முறை

எளிமையான தமிழில் அனைவருக்கும் புரியும் வகையில் சான்றாதாரங்களோடு நூலினை முன்னோக்கி விரித்துரைக்கும் ஆசிரியர் இந்நூலில் விளக்கமுறைத் திறனாய்வையும், வரலாற்றுமுறை அணுகுமுறையினையும் பின்பற்றியதோடு சில இடங்களில் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் உள்ள கண்ணகை வழிபாட்டு முறைகளைப் பற்றிக் குறிப்பிடுமிடங்களில் ஒப்பீட்டு முறையில் ஆய்வினை மேற்கொண்டு செல்கின்றார். ’நீதியரசனால் தண்டிக்கப்பட்டு, மழுவரசனால் கொல்லப்பட்ட செய்தி’ என்பன போன்று எதுகை, மோனையாகச் சில செய்திகளைக் குறிப்பிடுவதும் ஒவ்வொரு பாடல் வகைகளைப் பற்றிக் குறிப்பிடுவதும் கண்ணகி கதையானது சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள விதத்தினையும் விளக்கிக் கூறியுள்ளது மிகவும் சிறப்பு. இவற்றோடு சில சொற்களுக்குப் பல பொருண்மைகளை விளக்கிச் செல்லுதலுமாக நூலின் பாங்கானது விரிந்து செல்கின்றது.

ஆசிரியர் தனது ஆய்வு நூலின் உள்ளடக்கத்தை நான்கு இயல்களாகப் பகுத்து விரிவாக விளக்குகிறார்.

சிலப்பதிகாரமும் நாட்டுப்புறக் கூறுகளும் எனும் முதல் இயலில் சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ள நாட்டுப்புறக் கூறுகள் குறித்தும் ஒவ்வொரு பாடல் வகைகளிலும் சிலப்பதிகாரக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ள விதத்தினையும் விளக்கிக் கூறுவதாகவும் அதனோடு மாதவி ஆடிய பதினொரு ஆடல்களை விளக்கியும் சிலம்பில் காணப்படும் சாதாரண எளிய நாட்டுப்புற மக்களின் வாழ்வியலினையும் வேட்டுவர்களின் கொற்றவை வழிபாடு, ஆய்ச்சியர்களின் கண்ணன் வழிபாடு, குன்றக் குறவர்களின் முருகன் – வேலன்- வள்ளி வழிபாடு, தாய் தெய்வ வழிபாடு முதலான வழிபாட்டு முறைகள் பற்றியும் கொற்றவை வழிபாடு பத்தினி வழிபாடாக மாறியமை குறித்தும் சிலம்பில் வரும் நம்பிக்கைகள், சடங்குகள், கனவுகள், தீயநிமித்தங்கள் முதலானவற்றையும் குறிப்பிட்டுச் செல்கிறார்.

இரண்டாவது இயலான கேரளத்தில் கண்ணகி கோயில்களும் பகவதி வழிபாடுகளும் எனும் பகுதியில் நீண்ட கடற்கரையும் காயல்களும் அழகிய மலைகளும் நிரம்பிய பூமியமான கேரளத்தில் நிலவிய, கண்ணகித் தொன்மமானது எவ்வகையில் கதையாகவும், கதைப்பாடலாகவும் மக்களிடையே நிலவி வருகின்றது என்பதையும் ஆரிய நம்பூதிரிகள் கேரளத்தில் குடிபெயர்ந்தபோது, கண்ணகி வழிபாடனது பகவதி வழிபாடாக உருமாறி வைதீக வழிபாட்டு முறையினை ஏற்றுக்கொண்டதையும் கொடுங்களூர் பகவதி, பாலக்காட்டுப் பகுதியில் பகவதி போன்ற செய்திகள் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரம் குறிப்பிடும் கோயில் மேற்கூரையின் அமைப்பின்படி கட்டப்பட்ட திருவனந்தபுரத்திலுள்ள ஆற்றுக்கால் பகவதியம்மன், இடுக்கி மாவட்டம் பெருமலையிலுள்ள பழங்குடி மக்களிடையே காணப்படும் மலையாள பகவதி, மங்கலாதேவிக் கோட்டத்திலுள்ள மங்கலா தேவிக் கோவில் ஆகிய தலங்களின் வரலாற்றில் எந்தவகையில் கண்ணகியின் தொன்மம் கலந்துள்ளது என்பதனைக் குறிக்கின்றது. மேலும் அந்தக் கோயில்கள் உருவான கதைகளையும் அங்கு வழிபட வரும் மக்களின் நம்பிக்கைகளையும் அதன் வழிபாட்டு மரபுகளையும் பற்றி குறிப்பிடுவதோடு கேரளத்தில் முதன்முதலாகப் பகவதிக்குக் கோயில் எழுப்பிய இடமான கொடுங்களூர் கோயிலினைப் பற்றியும் அதன் புவியியல் காரணங்களையும் பகவதி கோயில்களில் பாலைமரம் பெற்றுள்ள முக்கியத்துவம் குறித்தும் குறிப்பிட்டுச் செல்கின்றார்.

மூன்றாவது இயலான தமிழ்நாட்டில் கண்ணகி கோயில்களும் வழிபாடுகளும் எனும் பகுதியில் கண்ணகி வழிபாடு கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், இலங்கை ஆகிய இடங்களில் காணப்படுகின்றது என்பதனையும் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களாகத் திருச்சியின் உறையூர், தஞ்சையிலுள்ள செங்காளாச்சி அம்மன், பெரம்பலூரிலுள்ள சிறுவாத்தூர், கருவூரிலுள்ள வஞ்சியம்மன், மதுரையிலுள்ள செல்லாத்தம்மன், சென்னையிலுள்ள வட்டபுரி அம்மன் ஆகிய அம்மன் வழிபாட்டு முறைகள் அனைத்துமே கண்ணகியின் தொன்மத்திலிருந்தே வந்தவை என்பதையும் அக்கோயில்களின் வரலாற்றினையும் யாரால் அங்குக் கண்ணகிக்குக் கோயில் எடுப்பிக்கப்பட்டது என்ற செய்திகளையும் குறிப்பிட்டுச் செல்கின்றார்.

இலங்கையில் கண்ணகி வழிபாடு எனும் நான்காவது பகுதியில் கண்ணகி வழிபாடு இலங்கை மக்கள் மத்தியில் அவர்களது பண்பாடு, பிரதேச வாழ்வியல், சமூக நடைமுறைகள் ஆகியவற்றிற்கேற்ப மாறி, விரிவாகி, நெகிழ்வுத்தன்மையுடன் காணப்படுகின்றது. அனுராதபுரம், கண்டி, நவகமுவ, மாதளை முதலான இடங்களிலுள்ள கண்ணகிக் கோயில்கள், தமிழ்ப் பகுதிகளான மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி, திரிகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம் முதலான இடங்களில் வழங்கப்பட்டு வரும் கண்ணகி வழிபாடுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதோடு சிங்கள மக்கள் ’பத்தினி அம்மன் கண்ணகியின் வடிவமெடுத்து மூன்று கண்களுடன் பிறந்த கொடிய பாண்டிய மன்னனை அழித்ததாகக் கருதுகின்றனர். இதனோடு நவாலி, அனுராதபுரம், கண்டி, மாதளை, யாழ்ப்பாணம், முதலான இடங்களில் உள்ள கண்ணகிக் கோயில்கள் குறித்தும் கண்ணகிக் குறித்தான சிங்கள கதைகள் குறித்தும் சிங்களத்தில் வெளிவந்துள்ள கண்ணகி பற்றிய நூல்களைக் குறித்தும் ஆசிரியர் இவ்வியலில் விளக்கிச் செல்கின்றார்.

இந்நூலின் மையக் கருத்துக்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்படலாம்,

கேரளத்தில் காணப்படும் பெரும்பான்மையான கோயில்கள் கண்ணகி அம்மனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவைகளெனவும் ஒவ்வொரு நம்பிக்கைக்குப் பின்னும் கண்ணகி தொடர்பான கதைகளே காணப்படுவதும் மார்க்கண்டேய புராணத்தில் வரும் தாருகன் கதையானது கேரளக் கலைகள், வழிபாட்டு முறைகள், சடங்குகள் போன்றவற்றில் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதையும் அறிய முடிகின்றது.

தமிழகத்தில் மட்டும் அல்லாமல் இனம், மொழி, நாடு கடந்து பரவிய கண்ணகிக் கதையானது பல இடங்களில் வாழ்ந்த மக்களிடையே அதன் வடிவம் சிதைந்து பல்வேறு உருக்கொண்டு இலக்கிய வடிவமாகிய போது, நடந்த சில சம்பவங்களை ஒருங்கிணைத்து இளங்கோ காப்பியமாகப் படைத்தார்.

மலையாளம் செம்மொழி உயர்வு பெற பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் ஆகியவை எவ்வகையில் காரணமாக அமைந்துள்ளன என்பதனையும் குறிப்பிட்டுச் செல்கிறார்.

பகவதி வழிபாடு முதலில் நம்பூதிரிகளிடையே உருவாகி பின்னர் கடற்கரை, சமவெளிப்பகுதிகளில் பரப்பப்பட்டு அதன்பின் முல்லை நிலத்துக் குறும்பர்களால் பிற மலைவாழ் மக்களிடையே சென்றடைந்திருக்கலாம்.

வண்ணான் சாதியினர் தங்களைக் கண்ணகியின் குழந்தைகளாகக் கருதுகின்றனர் எனவும் ’விண்ணேற்றிப்பாறை’ என்ற சொல்தான் ’வண்ணாத்திப்பாறை’ என மருவியதாகவும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்,

பொள்ளாச்சி வட்டம் பரம்பிக்குளம் பகுதியிலும் அதோடு தொடர்புற்று காணப்படும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதுவான் மக்கள் கண்ணகியை வழிபடுகின்றனர். தமிழகத்துக் கண்ணகி தமிழீழத்தில் கண்ணகை அம்மனாகவும், கேரளத்தில் பகவதியாகவும் பெயர் மாற்றம் பெற்று வழிபாட்டுத் தெய்வமாக உருமாறி விளங்குகிறாள்.

என்பன போன்ற செய்திகளையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

இந்நூலினைப் படிக்கும் போது நூலில் பாதிக்கு மேல் கேரளத்தினைப் பற்றியும் அங்கு வழங்கிவரும் கண்ணகித் தொன்மங்களைக் குறித்தும் நூலாசிரியர் விளக்கிச் சென்றமையைக் காண முடிகின்றது. இந்நூலினைப் பாராட்டி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொன்மைசார் நூலுக்கான ‘தோழர். கே. முத்தையா விருது’ வழங்கி சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இந்நூலினை படித்து முடிக்கும்போது கேரளத்தின் கோயில்களைப் பற்றியும் கண்ணகி பகவதியான வரலாற்றினையும் வாசகர்களுக்கு மனதில் பதிய வைக்கும் என்று நம்புகிறேன்.

இளஞ்செழியன். ச, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகம், காரியவட்டம் வளாகம், திருவனந்தபுரம்.