விரைவில் வெளிவரவிருக்கும் ஒரு தமிழ்த் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் திரு. கமல்ஹாசன் அவர்கள், தமிழ் குறித்தும், கன்னடம் குறித்தும் பேசிய சாதாரணமான ஒரு செய்தி, திட்டமிட்டே பெரிதுபடுத்தப்பட்டு, இன்றைக்குக் கன்னடர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான ஒரு பெரும் மோதலாக வெடிப்பதற்குரிய சதிச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன!

kamal 339இதனை, நடிகர் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு என்று அல்லாமல், மக்கள் நீதி மையத்தின் தலைவர், திமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பவர், மிக விரைவில் மாநிலங்களவை உறுப்பினராக (எம்.பி) ஆகப் போகிற ஓர் ஆளுமைக்கு எதிராகத் திட்டமிட்டுத் தூண்டி விடப்படுகிற கலவரம் என்று புரிந்து கொள்ள வேண்டும்! இது மொழிப் பிரச்சனை அன்று, கட்சிப் பிரச்சனை

தமிழில் இருந்து கன்னடம் வந்ததா, கன்னடத்தில் இருந்து தமிழ் வந்ததா என்னும் மொழியியல் ஆய்வில் முளைத்ததில்லை இந்தக் கலவரம்! தமிழ்நாட்டில் மிகுந்த வலிமையோடு விளங்கிக் கொண்டிருக்கும் திமுகவிற்கும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கும் எதிராக, பாரதிய ஜனதா கட்சியும், அவர்களுக்கு மறைமுக ஆதரவாளர்களாகத் தமிழ்நாட்டில் இயங்கி வரும் போலித் தமிழ் தேசியர்களும் தூண்டி விடும் போராட்டம் இது!

கர்நாடகத்தில் கலவரத்தைத் தூண்டி, கமலஹாசனின் பதாகைகளை எல்லாம் கிழித்துக் கொண்டிருக்கிறவர்கள் யார் என்று கவனியுங்கள்.... பாஜகவின் கர்நாடக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தலைமையில் தான் அது நடந்திருக்கிறது. இங்கே - தமிழ்நாட்டில் - கன்னட மக்களை எதிர்த்தும், தாங்கள்தான் தமிழுக்காக உயிரையே கொடுக்கிறவர்கள் போலவும் வரிந்து கட்டிக்கொண்டு வெளியில் வந்து இந்த மோதலைப் பெரிதாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் யார் என்று பார்த்தால், அவர்கள் திராவிட இயக்கத்திற்கு எதிரான, பெ. மணியரசன் கும்பல்தான் ! அவர்கள்தான் சாட்டை சவுக்கையெல்லாம் எடுத்துக்கொண்டு இப்போது வெளியில் வந்திருக்கிறார்கள்.

இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றால், தமிழை ஆதரிப்பது போல் ஒரு பக்கம் பேசிக் கொண்டு, பெரியாரை, கலைஞரை, இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சரைத் தாக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

"கன்னடத்தை விட தமிழ்தான் உயர்ந்த மொழி, தொன்மையான மொழி என்று ஸ்டாலினைச் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்" என்று சவால் விடுகிறார்கள். அப்படித் திமுக தலைவர் சொன்னால், கன்னடர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் மோதல் பெரிதாகி, பலர் உயிரிழப்பதற்கு கூட வழி உண்டாகும்! அதன் பிறகு, கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி திமுகவை எதிர்க்க வேண்டி வரும்! இந்தியா கூட்டணி உடைந்து போகும் ! இதுதான் பாஜகவினருக்கும், இங்கே உள்ள போலித் தமிழ் தேசியர்களுக்குமான பொதுவான விருப்பம்!

அவரவருக்கு அவரவர் தாய்மொழி உயர்ந்தது, எது தொன்மையான மொழி, எது சிறந்த மொழி என்று மோதிக் கொண்டிருக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை!

ஆடுகள் மோதிக்கொண்டால், கீழே கொட்டும் ரத்தத்தைக் குடிக்க இந்த ஓநாய்கள் தயாராக இருக்கின்றன! அதற்கு இரண்டு மாநில மக்களும் இடம் கொடுத்து விடக்கூடாது !

கமல்ஹாசன் கன்னட மொழியை இழித்தும், பழித்தும் எதுவும் பேசிவிடவில்லை. மொழியியல் ஆய்வாளர்களின் கருத்தையே அவர் சொன்னார். அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் மறுக்கலாம்! அதற்காக மோதல், கலவரம், உயிரிழப்பு என்னும் நிலையை உருவாக்குவது யாருக்கும் நல்லதில்லை!

யார் செத்தால் என்ன, எவ்வளவு சொத்துகள் சேதம் அடைந்தால் என்ன, தாங்கள் தேர்தல் அரசியலில் வெற்றி பெற்றால் போதும் என்பது பாஜகவின் கருத்து! எதைச் சொல்லியாவது திமுகவை அழித்து விட வேண்டும் என்பது இங்கே இருக்கிற ஒரு கும்பலின் விருப்பம்! இரண்டு பேரும் சேர்ந்து இந்த நாடகத்தை இப்போது அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்!

இதுபோன்று கலவரங்களுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்று கருதியும், நம் மொழியை வாழ்த்தும்போது, பிற மொழிகளைப் பற்றித் தமிழ்த் தாய் வாழ்த்தில் குறிப்பிட வேண்டியதில்லை என்பதை எண்ணியும்தான், மனோன்மணீயம் பாடலிலிருந்து அந்தச் சில வரிகளை, அன்றே கலைஞர் எடுத்து இருக்கிறார் என்பது இப்போது புரிகிறது! அவருடைய தொலைநோக்குப் பார்வையைக் கூட இன்றைக்கு இங்கே ஒரு கும்பல், கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறது!

அவர்களின் ஆசைகளுக்குப் பலியாகி விடாமல், நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது!

- சுப.வீரபாண்டியன்