"நசூத்ராய மதிம் தத்யா" இந்த ஸ்லோகத்தின் பொருளென்ன? விளக்குகிறார் டி.எம்.நாயர், "சூத்திரன் படிக்கக் கூடாது" என்பதுதான் இதன் பொருள்.

அண்மையில் டில்லி பல்கலைக் கழகத்திற்குச் சென்று மாணவர்களுடன் பேசியிருந்தார் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி.

அவர் சொல்கிறார் டில்லி பல்கலைக் கழகங்கத்தில் 60 பேராசிரியர் இடங்களும், 30 துணைப் பேராசிரியர் இடங்களும் காலியாக இருக்கின்றன். அவற்றை நிரப்பப் போதுமானத் தகுதி உடைய பட்டியலின, பிற்படுத்தப் பட்ட, மிகப்பிற்படுத்தப் பட்ட 'தகுதி' யானவர்கள் கிடைக்கவில்லை என்று காலியாக வைத்திருக்கிறார்கள். ஒன்றிய அரசு உயர்கல்வி நிறுவனங்கள், ஐ.ஐ.டி போன்றவைகளிலும் இதே நிலை நீடிக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

இது மனுவாதத்தின் புதிய நடைமுறை என்றும், இது சமூக நீதிக்கு இழைக்கப்படும் துரோகம் என்று அவர் சாடியிருக்கிறார்.

"கல்விதான் சமத்துவத்திற்கான ஆயுதம்" என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களின் முகமூடியாக இருக்கும் ஒன்றிய காவி மோடி அரசு மேலே சொல்லப்பட்ட ஸ்லோகத்தை நடைமுறைப் படுத்திட கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறது.

ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்குக் கல்வி நிதியாகத் தர வேண்டிய தொகை ரூபாய் 2,153 கோடி. அதை இதுவரை விடுவிக்கவில்லை ஒன்றியம். ஆகவே 6 சதவீதம் வட்டியுடன் 2, 201 கோடி ரூபாய் தமிழ்நாட்டுக் கல்விக்குத் தரவேண்டும் என்கிறது தமிழ்நாடு அரசு.

ஆனால் "தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை அமல்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டுக்கு இந்த நிதியை ஒதுக்க முடியாது" என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்கிறார்.

வேறு வழியில்லை உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டுவதைத் தவிர என்ற முடிவுக்கு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

இப்பொழுது மேலே சொன்ன சுலோகத்தைப் படியுங்கள்.

"நசூத்ராய மதிம் தத்யா" - சூத்திரன் படிக்கக்கூடாது. இந்த வேலையைத்தான் பா.ஜ.க அரசு செய்துகொண்டு இருக்கிறது.

கொடுங்கோல் ஆட்சியை மக்கள் வீழ்த்துவார்கள், நேரம் பார்த்து!

- கருஞ்சட்டைத் தமிழர்