தமிழ்நாட்டின் 2000 ஆண்டுகாலப் பொருளாதார வரலாற்றைச் சான்றாவணமாக்கும் நோக்குடன் வெளிவந்துள்ளது “தமிழரின் நிதி நிர்வாகம் – தொன்மையும், தொடர்ச்சியும்” என்ற நூல். தமிழ்நாடு அரசின் நிதித்துறை இதை வெளியிட்டு உள்ளது.
சங்க காலத்திலும், அதனைத் தொடர்ந்து பேரரசுகள் உருவான காலத்திலும் வரி வசூல் செய்யப்பட்ட முறை, நிதி மேலாண்மை எவ்வாறு நடைபெற்றது உள்ளிட்ட பல்வேறு செய்திகள் கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள் ஆகிய சான்றுகளின் துணை கொண்டு செறிவான முறையில் அமைந்த கட்டுரைகளைக் கொண்டுள்ளது இந்நூல். ஆங்கிலேயர் காலத்தில் செயல்படுத்தப்பட்டத் திட்டங்கள், இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட வரவு செலவுத் திட்டங்கள் (பட்ஜெட்) ஆகியவையும் பொருத்தமான கட்டுரைகள் மூலம் விளக்கப் பட்டுள்ளது.
சங்க கால இலக்கியங்களில் வரிவிதிப்பு, வசூலிப்பு பற்றிய குறிப்புகள் அதிகம் இல்லை என்றாலும் இவ்வகை நடவடிக்கைகள் இருந்துள்ளன. வணிகச் சரக்குகள் பெருவழிகளில் எடுத்துச் செல்லப்பட்ட போது 'உல்கு' என்ற சாலை வரி விதிக்கப்பட்டுள்ளது. அரசு வருவாயில் முக்கிய மூன்று இனங்களாக நிலவரி, வணிகவரி, திறைப்பொருட்கள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டுகிறது திருக்குறள். "உறுபொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்" என்ற திருக்குறளுக்குக் கட்டுரை அளவிற்கு விளக்கம் தரப்பட்டுளது சிறப்பு.
தமிழர்களின் கடல்வழி வாணிகப் குறித்த மயிலை சீனி.வேங்கடசாமியின் கட்டுரை, அன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் வாணிகத்தில் கடல் கடந்து கோலோச்சியதைத் தெளிவுபடுத்துகிறது. அதேபோல, சோழப் பேரரசின் நீர் மற்றும் நில மேலாண்மைச் சிறப்புகளை கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, சுப்பராயலு ஆகியோரின் கட்டுரைகள் விளக்குகின்றன. சுந்தர பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் ஆட்சி செய்தபோது, கடலில் கிடைக்கின்ற முத்துக்களில் பத்தில் ஒரு பகுதி அரசனுக்குக் கொடுத்துவிட வேண்டும். கடலில் முத்து எடுக்கும் ஆட்களைப் பெருமீன்கள் கடிக்காதவாறு மந்திர சக்தியால் கட்டுப்படுத்தும் மந்திரவாதிகளுக்கு இருபதில் ஒரு பகுதி தரப்பட வேண்டும் என்பது போன்ற மார்கோ போலோவின் பயணக் குறிப்புகளில் காணப்படும் செய்திகள் போன்றவற்றையும் இந்நூல் ஆங்காங்கே தொட்டுச் செல்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இந்நூலில் விரித்துரைக்கப்பட்டுள்ளன. “தாமஸ் மன்றோ- விவசாயிகளின் நண்பன்” என்ற தலைப்பின்கீழ், வேளாண்மை சார்ந்த வரி மேலாண்மை விளக்கப்பட்டுள்ளது. பெரியாறு மற்றும் மேட்டூர் அணைகளின் வரலாறு, இரட்டையாட்சியின்போது வரியதிகாரப் பகிர்வு முறை ஆகியன குறிப்பிடத்தக்கவை.
”குடியாட்சியில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் குறிக்கோள்களையும் கோட்பாடுகளையும் எய்துவதற்கு ஏற்ற வலிமை வாய்ந்த ஒரு கருவியாகவே தற்கால வரவு-செலவுத் திட்டம் அமைகிறது” என்ற பேரறிஞர் அண்ணாவின் வாசகங்களோடு தொடங்குகிறது விடுதலைக்குப் பிறகான செயல்திட்டங்கள் குறித்த பகுதிக்கான தொடக்கம். சமூகநீதியை மையப்படுத்திய வளர்ச்சியைச் சாத்தியமாக்கிட எடுக்கப்பட்ட முயற்சிகள் பல்வேறு கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளன. மதிய உணவுத் திட்டம் தமிழகத்தின் கல்வித் தளத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய திட்டம். அதனைச் செயல்படுத்துவதில் நேரிட்ட இடையூறுகள், தடைகள் ஆகியவற்றைச் சுவைபட விளக்குகிறது நெ.து.சுந்தரவடிவேலுவின் கட்டுரை. வளர்ச்சி தேவையானதுதான்; அதே நேரம் அந்த வளர்ச்சி வளங்குன்றா வளர்ச்சியாக இருக்க வேண்டும், எளியோர்களின், தொழிலாளர்களின் நலன் காக்கும் வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதைப் பல கட்டுரைகள் எடுத்தியம்புகின்றன.
சங்க காலம் முதல் சமூகநீதிக் காலம் வரையிலான தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி நிர்வாகச் சித்திரத்தைத் தீட்டும் நூல் இது என்ற அறிமுகவுரையுடன் தொடங்கியிருக்கும் இந்நூல், உண்மையாகவே அப்பணியைத் திறம்படச் செய்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையன்று. தமிழர் வரலாற்று ஆவணங்களில் ஒன்றாக இந்நூலைக் கொண்டு வந்துள்ள திராவிட மாடல் அரசுக்கும், நூலினை வடிவமைத்த ஆசிரியர் குழுவிற்கும் பாராட்டுகள்.
- வெற்றிச்செல்வன்