ஒன்றிய அரசு கீழடி ஆய்வறிக்கையை ஏற்றுக் கொள்ளா விட்டால் அதிமுக போராடும் என்று அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான உதயகுமார் பேசியிருக்கிறார்.
அவர்கள் ஏன் போராட வேண்டும்? ஒன்றிய அரசின் பாஜகவுடன்தான் இவர்கள் கூட்டணி வைத்துள்ளார்களே! எடப்பாடியார், 'கீழடியை ஏற்றுக் கொண்டால்தான் கூட்டணி' என்று ஒரு நிபந்தனையைப் போட்டு மோடியை ஏற்கச் செய்திருக்கலாமே!
இவ்வளவு எளிமையான வழி இருக்கும்போது போராட்டம்..கத்தரிக்காய் எனக்கூவிக் கொண்டிருக்கிறார் உதயகுமார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாததற்கு திமுகவே காரணம் என்று கூச்சம் இன்றிப் பேசும் அதிமுக, கொஞ்சம் மோடியின் காதுகளில் அதையும் போட்டு, அந்தச் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாமே!
இதையெல்லாம் விட்டுவிட்டு எங்கே சைக்கிள் விபத்து, எங்கே பஸ் விபத்து, எங்கே கொலை - கொள்ளை, அதற்கெல்லாம் காரணம் திமுக அல்லது ஸ்டாலில் ஆட்சிதான் என்று பேசிக்கொண்டு இருக்கிறது அதிமுக.
இது இப்படியிருக்க, சாதிவாரிக் கணக்கெடுப்பு என்று சொன்னாலே பயந்து நடுங்குகிறதாம் திமுக! சொல்கிறார், அன்புமணி. எப்படி? மோடியைப் பார்த்து அன்புமணி நடுங்குகிறாரே, அப்படியா?
அரசியல் என்பது ஒரு கலை. இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும், மக்கள் முன் எப்படிப் பேசவேண்டும், தொண்டர்களை எப்படி வழிநடத்த வேண்டும், அரவணைக்க வேண்டும் என்ற அரசியல் கலைக்கும், தலைமைப் பண்புக்கும் அடையாளமாக இருப்பது திமுக, திராவிட இயக்கம்.
அப்படி இல்லாமல் யாருக்குச் சொந்தம் அதிமுக என்று தலையைப் பிய்த்துக் கொண்டு நான்குகள் பேர்கள், நான்கு பக்கம் சண்டை! இது ஒருபுறம். மறுபுறம் அப்பா, பிள்ளை தகராறில் கட்சி யாரிடம் இருக்கிறது என்று தெரியாமல் தவிக்கும் பாமக தொண்டர்கள்.
இவைகளுக்கு எல்லாம் சூத்திரதாரி பாஜக என்பது அவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, மக்களுக்குத் தெளிவாகவே தெரிகிறது!
பாஜகவின் குரங்கு வித்தை தமிழ்நாட்டில் இப்போதல்ல, எப்போதும் எடுபடாது!
- கருஞ்சட்டைத் தமிழர்