தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சிதான், மதுரையில் அமித்ஷா தெளிவாகச் சொல்லி விட்டார். இது நடக்காது என்பது வேறுவிசயம்.

இல்லையில்லை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் அஇஅதிமுக தலைமையில் ஆட்சி அமைப்போம். இது அமித்ஷா பிடியில் வசமாக சிக்கிக்கொண்டு இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு.

தமிழகத்தில் 'ஜெயலலிதா கட்சித் தலைமையில்' தான் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பதாக அமித்ஷா கூறியுள்ளார். இது டி.டி.வி.தினகரனின் தமாஷான பேச்சு.

அமித்ஷா மதுரைக்கு வந்தபோது அவரைச் சந்திக்க மனுபோட்டுக் காத்திருந்த இவர் சொல்கிறார் 'ஜெயலலிதா கட்சி' தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலாம். அந்தக் கட்சி அஇஅதிமுக என்பதும், அது எடப்பாடியிடம்தான் இருக்கிறது என்பதும் இவருக்குத் தெரியாதா? 'நானும் ரவுடிதான்..நானும் ரவுடிதான்' என்று வடிவேலு சொல்வதுபோல நானும் இருக்கிறேன்.. நானும் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்ளும் உளறல் பேர்வழி இவர்.

தேமுதிக கூட்டணி தலைமையில் தான் ஆட்சியமைப்போம் என்று பிரேமலதா அவர்கள் சொல்லவில்லையே என்பதைத் தவிர, அவர் எந்தக் கூட்டணியில் இருக்கிறார் என்பது அவருக்கே தெரியாது.

பாமகவைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. ஒரு மாம்பழத்திற்காக சண்டைபோட்ட முருகன் - விநாயகன் கதையாக இருக்கிறது அது.

நடிகர் விஜய், அவருக்கு அரசியலே தெரியாது.

ஆனாலும் இவர்கள் அத்துணை பேரும் பாஜகவின் பிடிக்குள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இவர்களை வைத்துக் கொண்டு ஆட்சி அமைப்போம் என்று சர்க்கஸ் செய்கிறார் அமித்ஷா.

 2026இல் வெற்றிபெற இருக்கும் இந்தியா கூட்டணியை,ஆட்சியமைக்கும் திமுகழகத்தை, மீண்டும் முதல்வராகப் போகும் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களை அமித்ஷா பார்க்கத்தான் போகிறார், டில்லியில் இருந்து கொண்டு.

- கருஞ்சட்டைத் தமிழர்