திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் உருவாக்கிய மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு விஜய் கட்சி ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை பெற்றிருக்கிறது. தேர்தல் களத்தை டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான போராட்டமாக கட்டமைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் டெல்லியின் ஊடுருவலை தோல்வியடைய செய்திருக்கிறார். விஜய் கட்சியை பயன்படுத்தி தமிழ்நாட்டில் கால் பதிக்கலாம்; அதற்கு ஆளுநரை பயன்படுத்தலாம் என்ற சதி திட்டத்தை தமிழ்நாடு முறியடித்திருக்கிறது. முதல்வர் பதவியை ஏற்க இருக்கும் விஜய் முழுமையாக பாஜக எதிர்ப்பு அணிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி மட்டும் தான் துரோக சக்தியாக மாறி உள்ளது. மற்றபடி சிபிஅய், சிபிஎம், இடதுசாரிகளும், விடுதலை சிறுத்தை கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் திமுக கூட்டணியின் நட்பு சக்தியாக இருந்து கொண்டு பாஜக ஊடுருவலை தடுப்பதற்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் மிகச் சிறப்பான முடிவை எடுத்திருக்கின்றன. இதைத் தான் ஏற்கனவே நாமும் வலியுறுத்தி பதிவிட்டோம்.
முதன்மையான எதிரி இந்துத்துவாவை தனிமைப்படுத்தும் நோக்கத்தோடு திமுக தலைவர் மேற்கொண்ட அணுகுமுறை வரலாற்றுச் சிறப்புமிக்கது. புதிய ஆட்சியை ஆளுநர் அனுமதிக்க வேண்டும்; இதுகாலத்தின் கட்டாயம் என்றும்; ஆளுநர் காலம் தாழ்த்தக்கூடாது என்றும் வலியுறுத்தினார் மு. க.ஸ்டாலின் திமுக தலைவர் மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களின் தலைவர் என்ற நிலைக்கு அவரை இந்த கருத்து உயர்த்தி விட்டது. பாசிச கருத்தை மிகவும் மலினப்படுத்தி அரசியல் புரிதல் இல்லாமல் பாயாசமாக கேலி செய்த விஜய்; பாசிசத்தின் அடக்குமுறைகளை இப்போதாவது உணர்வாரா? என்பது தெரியவில்லை! கொள்கைப் பார்வையில் முதன்மை முரண்பாடுகளை முன்னிறுத்தி அரசியலை அணுகும் தெளிவை வேறு எந்த மாநிலத்திலும் எதிர்பார்க்க முடியாது!
- விடுதலை இராசேந்திரன்