சமூக அக்கறை என்பது ஒரு அடைமொழியைப் போல துருத்திக் கொண்டிருக்கிறது தமிழக கலை இலக்கியச் சூழலில். அல்லது அண்டை அயலாரை கண்ணெடுத்தும் பாராது சொந்தப் படைப்புக்குள்ளேயே புதைந்தும் புளகித்தும் தன்னிலை மறப்பதாயும் இருக்கிறது.
மோவாயைச் சொறிந்தும் மோட்டுவளையை வெறித்தும் உன்னத இலக்கியம் படைத்துவிட முடியும் என்கிற அபத்தக் கற்பிதங்கள் உண்மையெனத் திரிகின்றன.
சமகால நவீன இலக்கியத்தின் மகா கர்த்தர்களை கொண்டாடிக்கொண்டே அவர்கள் சொந்த வாழ்வில் படைப்பில் காத்திரமாய் வெளிப்படுத்தும் சமூக அக்கறையை வரலாற்று ஞானத்தை பண்பாட்டு அடையாள தனித்துவத்தை அரசியல் செயல்பாட்டை இருட்டடிப்புச் செய்வதும்கூட இங்கே நிகழும் மோசடிகளின் இன்னொரு முகமாய் வெளிப்படுகிறது.
ஒரு எளிய மனிதனின் வாழ்வாதாரங்கள் சூறையடப்பட்டிருக்கும் சமூகத்தின் கொடூரத்திலிருந்து தான் தப்பித்துவிட முடியாது என்பதை அறிந்திருந்தும் தன் படைப்பின் வழியே அதை அம்பலப்படுத்தாமல் இருப்பதற்கு யாரொருவர் கூறும் வியாக்கியானமும் மதிக்கத்தக்கதல்ல.
இங்கேதான் மாறுபட்ட படைப்பாளுமைகளோடு பிரளயன் வருகிறார். நிற்க நேரமின்றி இயங்கிக் கொண்டே இருப்பவர் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் தரும் வெளிச்சம் தமிழ் கலை இலக்கிய, பண்பாட்டுச் சூழலில் புதிய விவாதங்களை முன்னெடுப்பதாய் உள்ளது. இந்த நம்பிக்கையோடு அவரது பகிர்வுகளை விரிவாக பதிவு செய்திருக்கிறோம்.
ஆசிரியர் குழு ச. தமிழ்ச்செல்வன் நாறும்பூநாதன் ஜா. மாதவராஜ் ஜே. ஷாஜகான் உதயசங்கர் கமலாலயன் நிர்வாகக்குழு ந. பெரியசாமி ப. சிவகுமார் சி. சிறி சண்முகசுந்தரம் இரா. ரமேஷ் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா படைப்புகள் / நன்கொடை அனுப்ப: PUTHU VISAI B2, BSNL QUARTERS HOSUR - 635109 TAMIL NADU INDIA |