மே 1 – உழைப்பாளர் நாளன்று, தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் த.தே.பொ.க. – த.இ.மு. கொடியேற்ற நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன.

சென்னை :

சென்னை தியாகராயர் நகர் முத்துரங்கம் சாலையில் காலை 10 மணியளவில், த.தே.பொ.க. கொடியேற்ற விழா நடைபெற்றது. மே நாள் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தியும், தமிழ்த் தேச விடுதலைக்கு சூளுரைத்தும் எழுப்பப்பட்ட முழக்கங்களுக்கிடையில், த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் கொடியேற்றி வைத்தார். த.தே.பொ.க. சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தாம்பரம் செயலாளர் தோழர் இளங்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதன்பின், அங்கிருந்து த.தே.பொ.க. கொடியுடன் வாகனங்களில் அணிவகுப்பாகச் சென்ற தோழர்கள், க.க.நகர் தலைமை அலுவலகத்தை அடைந்தனர். அங்கு, மே நாள் சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அங்கு நடைபெற்றக் கூட்டத்தில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி தொடக்கவுரையாற்றினார்., தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் உதயன், அ.ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அங்கு கூடியிருந்த தோழர்களிடையே, தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய மே நாள் உரையின் எழுத்து வடிவம்:

“அன்பார்ந்த தோழர்களுக்கு புரட்சிகர மே நாள் வாழ்த்துகள்!

உழைக்கும் மக்களுக்கு 8 மணி நேர வேலை உரிமையைப் பெற்றுக் கொடுத்த பாட்டாளிகளின் போராட்டத்தை, மே நாளன்று நாம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்கிறோம். இவ்வாண்டும் அதே போல் நினைவுகூர கூடியிருக்கிறோம். மே நாள் ஈகியக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மட்டுமின்றி, தமிழகமெங்கும் உள்ள பல்வேறு இடதுசாரி அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மே நாளைக் கொண்டாடி வருகின்றன.

1880களில் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளான அமெரிக்க பாட்டாளி வர்க்கத்தினர், 12 லிருந்து 16 மணி நேரம் வரை வேலை வாங்கப்பட்டார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்து, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் பிற செயல்பாடுகள், 8 மணி நேரம் உறக்கம் என்ற கோரிக்கையை முன்வைத்து சிகாகோ நகரில் தொழிலாளர் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டிற்குத் தொழிலாளிகள் பலியானார்கள். தொழிற்சங்கத் தலைவர்கள் பலர் தூக்கிலிடப்பட்டனர். 8 மணி நேர வேலை உரிமையைத் தொழிலாளர்கள் போராடிப் பெற்றதன் நினைவாகவே, மே நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றது.

ஆனால், மே நாள் வெறும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை வலியறுத்தும் நாள் மட்டுமல்ல. அது தேசிய விடுதலையையும் வலியுறுத்துகின்ற நாளாகும். எவ்வளவோ நெருக்கடிகள் இருந்த போதும், தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழத்தில் மே நாள் பேரணிகளை நடத்தினர்.

ஆனால், தமிழ்நாட்டில் தொழிற்சங்கமும் அரசியலும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் அமைக்கப்பட்ட இடம் சென்னைதான். திரு.வி.க. அதை 1918-இல் தொடங்கினார். இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் முதலாக மே நாள் கடைபிடிக்கப்பட்டு கூட்டம் நடத்தப்பட்ட மண் தமிழ் மண். 1923-ஆம் ஆண்டு சிங்கார வேலர் முதல் முதலாக சென்னை கடற்கரையில் மே நாள் பொதுக்கூட்டம் நடத்தினார். எந்த முற்போக்குக் கருத்துகள் வந்தாலும், அதை முதலில் உள்வாங்கிக் கொள்ளுகின்ற இனமாக தமிழினம் விளங்குகிறது என்பதன் அடையாளம் அது! ஆனால், தொழிற்சங்கங்களின் இன்றைய நிலை கவலைக்குரியதாக இருக்கிறது.

சி.பி.எம். – சி.பி.ஐ. போன்ற இடதுசாரிக் கட்சிகள் நடத்துகின்ற தொழிற்சங்கங்கள், வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டும் போராடும் தன்னலக்குழுக்களாக இருக்கின்றன.

தமிழீழப் படுகொலையை எதிர்த்து, போர் நிறுத்தம் கோரி சில தொழிலாளர்கள் தன்னார்வத்துடன் போராடினார்கள். ஆனால், எந்த இடதுசாரித் தொழிற்சங்கங்கள் அமைப்பு வழியாக வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டன? பட்டினிப்போர் நடத்தின? பி.எச்.இ.எல்., சிம்சன், நெய்வேலி அனல் மின் நிலையம் என எல்லா இடங்களிலும், போர் நிறுத்தம் கோரி தொழிற்சங்கங்கள் என்னப் போராட்டம் நடத்தின? காவிரி நீர் வராததால், 25 இலட்சம் ஏக்கர் வேளாண் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, எத்தனை தொழிற்சங்கங்கள் அமைப்புவழியாகத் தொழிலாளர்களைத் திரட்டிப் போராடியிருக்கின்றன? தொழிற்சங்கங்களை அரசியல்படுத்தாதன் கோர விளைவு இது!

வர்ண சாதி ஒடுக்குமுறை மற்றும் தேசிய இன ஒடுக்குமுறை ஆகிய இரண்டும் இந்தியாவின் தனித்த கூறுகள். இவற்றைப் புறந்தள்ளிய இடதுசாரிக் கட்சிகள், பாரதிய சனதாக் கட்சியும் காங்கிரசும் முன்வைக்கும் இந்தியத் தேசியக் கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டன. ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும் வேண்டி நிற்கும் ஒரு அரசியல் தலைமை இருந்தால், தொழிற்சங்கத் தலைமை மட்டும் எப்படி சரியாக இருக்கும்? முதலாளிகள் என்ன கொடுக்கிறார்களோ அதை வாங்கிக் கொண்டு வரும் தொழிற்சங்கத் தலைமைதான் இருக்கும். இவ்வாறுதான், தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணம் இங்கு சீரழிக்கப்பட்டு விட்டது.

சமூக மாற்றத்திற்கான புரட்சி நடக்கும்போதுதான், புரட்சிகரத் தொழிற்சங்க இயங்கங்களும் வளரும். நமக்கான சமூக மாற்றம், தமிழ்த்தேசியமே! தமிழ்நாடு விடுதலையே!

19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஏகாதிபத்தியம், தனது காலனி நாடுகளில் கொள்ளையடித்தவற்றைக் கொண்டு, தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தது. எனவே, இலண்டன் தொழிலாளர்கள் யாரும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் காலனியாதிக்கத்தைக் கண்டிக்கவில்லை. இத்தகைய தொழிலாளர்களை, காரல் மார்க்ஸ் ‘தொழிலாளர் பிரபுக்கள்’ (Labour aristocrats) என்றார். அதுபோல, இன்றைக்கும் இங்கு தொழிலாளர் பிரபுக்கள் இருக்கிறார்கள். இந்திய ஏகாதிபத்தியத்தின் கொடுங்கோல் ஆட்சியைக் கண்டும் காணாத தொழிலாளர் பிரபுக்களாக இருக்கிறார்கள்.

தமிழ்த்தேசியம் என்பது தமிழர்களுக்குள்ளான ஓர் ஒருங்கிணைவு! அதை குறுகிய இனவாதம் என்கிறார்கள் சிலர். இவ்வாறு பேசுபவர்கள் அனைவரும் பெருந் தேசிய இனவாதம் பேசுபவர்களாக, இன்னொரு இனத்தின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். 77 இலட்சம் பேர் வாழும் இசுரேல் சிறுபான்மையல்ல. 44 இலட்சம் பேர் உள்ள நார்வே சிறுபான்மையல்ல. ஐ.நா. சபையில் இந்தியாவுக்கு சமமாக வாக்களிக்கின்றன இந்நாடுகள். ஆனால், உலகெங்கும் 12 கோடி பேரையும், தமிழ்நாட்டில் 7 கோடி பேரையும் கொண்ட தமிழர்களை சிறுபான்மை என்கிறார்கள். எங்களை அடக்காதே ஒடுக்காதே என்று நாம் தமிழ்த்தேசியத்தை முன்வைத்து ஒருங்கிணைகிறோம், அதை இனவாதம் என்கின்றனர். இதை நாம் முறியடிக்க வேண்டும். நமக்கான சமூக மாற்றம், தமிழ்த் தேசியப் புரட்சியே, அதை நோக்கி நாம் முன்னேற வேண்டும்”

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

நிறைவில், த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் நன்றி கூறினார். இந்நிகழ்வில், திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை நகரம்

தஞ்சை புதுஆற்றுச் சாலையிலுள்ள, கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வில், த.தே.பொ.க. கொடியை தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு அவர்களும், த.இ.மு. கொடியை தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை அவர்களும் ஏற்றி வைத்தனர்.

பின்னர், அங்கிருந்து இரு சக்கர வாகனங்களில் அணிவகுப்பாகச் சென்ற த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை உள்ளிட்ட தோழர்கள், கோபிகுளம், பூக்கார லாயம், முனியாண்டவர் காலனி, அண்ணா நகர், இரெங்கநாதபுரம், கலைஞர் நகர், பழைய பேருந்து நிலையம் பழக்கடை உள்ளிட்ட பகுதிகளில், கொடியேற்றி வைத்து உரையாற்றினர்.

நிறைவில், வடக்குவாசல் பகுதிகளில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு த.தே.பொ.க. தஞ்சை செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி த.தே.பொ.க. கொடியை ஏற்றி வைத்துப் பேசினார். நிகழ்வில், த.தே.பொ.க. தஞ்சை துணைச் செயலாளர் தோழர் இரா.தமிழ்ச்செல்வன், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் லெ.இராமசாமி, கலைஞர் நகர் த.தே.பொ.க. செயலாளர் தோழர் மா.சீனிவாசன் வழக்கறிஞர் மு.கரிகாலன், தோழர் மு.இராசேந்திரன் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

பூதலூர் ஒன்றியம்:

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்திலுள்ள பல்வேறு கிராமங்களில் மே நாள் கொடியேற்ற நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. த.தே.பொ.க. மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் தட்சிணாமூர்த்தி, நந்தவனப்பட்டி த.தே.பொ.க. செயலாளர் தோழர் இராஜசேகர் உள்ளிட்ட திரளான தோழர்கள் இரு சக்கர வாகனங்களில் அணிவகுப்பாகத் திரண்டுச் சென்று, செங்கிப்பட்டி, சாணூரப்பட்டி, காதாட்டிப்பட்டி, வளம்பக்குடி, மனையேறிப்பட்டி, நந்தவனப்பட்டி, முத்துவீரன்கண்டேன்பட்டி, பூதலூர், விருதராயன்பட்டி, புதுப்பட்டி, வன்னியம்பட்டி ஆகிய பகுதிகளில் த.தே.பொ.க. – த.இ.மு. கொடிகளை ஏற்றி வைத்தனர்.

புதுக்குடி, புதுக்குடி முதன்மைச்சாலை, மேலத்திருவிழாப்பட்டி, காமாட்சிபுரம், பெரியார் சமத்தவபுரம், வெண்டையம்பட்டி ஆகிய பகுதிகளில், த.தே.பொ.க. பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு, த.இ.மு. துணைத்தலைவர் தோழர் க.காமராசு ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

த.இ.மு. பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் அ.தேவதாசு, த.தே.பொ.க. தோழர் மலைத்தேவன் ஆகியோர், ஆச்சாம்பட்டி, கொசுவப்பட்டி, பாளையப்பட்டி, கண்டப்பட்டி ஆகிய இடங்களில் த.தே.பொ.க. – த.இ.மு. கொடிகளை ஏற்றி வைத்தனர்.

தஞ்சை ஒன்றியம் :

தஞ்சை ஒன்றியத்தில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வில், த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் சி.முருகையன், த.இ.மு. பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் அ.தேவதாசு, வல்லம்புதூர் கிளைச் செயலாளர் தோழர் சி.தனசேகர் ஆகியோர் வல்லம், வல்லம்புதூர், முன்னியம்பட்டி, உருங்குளம், வாகரக்கோட்டை ஆகியப் பகுதிகளில் கொடியேற்றி வைத்தனர்.

சிதம்பரம்:

சிதம்பரம் காசுக்கடைத் தெரு – நெல்லுக்கடைத் தெரு சந்திப்பில், காலை 8.15 மணிக்கு நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுக்கு த.தே.பொ.க. மூத்தத் தோழர் மு.முருகவேல் தலைமையேற்றார். ”மே நாள் வாழ்க! தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக“ என தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா முழக்கங்கள் எழுப்ப, த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் மா.கோ.தேவராசன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

முன்னதாக த.தே.பொ.க. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், மே நாள் குறித்து உரையாற்றினார். நிகழ்வில், த.தே.பொ.க. தோழர்கள் ச.மணிவண்ணன், சி.ஆறுமுகம், பா.பிரபாகரன், செந்தில், தமிழக உழவர் முன்னணி தோழர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், அமைப்புக் குழு உறுப்பினர்கள் தோழர் மு.சம்பந்தம், தமிழக மாணவர் முன்னணி பொறுப்பாளர்கள் தோழர்கள் ஆ.யவனராணி, செ.ரோகேஷ் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

திருச்சி:

திருச்சி இராமச்சந்திர நகரில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு த.தே.பொ.க. திருச்சி செயலாளர் தோழர் கவித்துவன் தலைமையேற்றார். தோழர்கள் முழக்கங்கள், எழுப்ப திரு அய்யா மனுவேல் கொடியேற்றி வைத்தார். அதனை தொடர்ந்து திருச்சி விமான நிலையம் அருகில் தோழர் இனியன்(த.தே.பொ.க.) தலைமையில், குன்றாண்டார்கோயில் ஒன்றியச் செயலாளர் தோழர் ஆரோன் கொடியேற்றிவைத்தார். தோழர் இராசரகுநாதன் (த.க.இ.பே) உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து திருச்சி அரியமங்கலத்தில் த.க.இ.பே. தலைவர் தோழர் இரெ.சு மணி கொடியேற்றி வைத்தார். அதன் தொடர்ச்சியாக அண்ணா வளைவில் தோழர் இராசரகுநாதன் தலைமையில் தோழர் கவித்துவன் கொடியேற்றினார். இந்நிகழ்வில் தோழர்கள் வே.க. இலட்சுமணன், மிதுன், இராஜசேகர், செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஓசூர்:

ஓசூரில் இராம் நகரில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் செம்பரிதி தலைமையேற்றார். த.தே.பொ.க. தோழர் செந்தில் மாறன் எழுச்சி முழக்கங்கள் எழுப்ப, தோழர் முருகப்பெருமாள் த.தே.பொ.க. கொடியை ஏற்றி வைத்தார். தோழர் சுப்பிரமணியன் மே நாள் குறித்து உரையாற்ற, தோழர் முத்துவேலு நன்றியுரையாற்றினார்.

குடந்தை:

குடந்தை தியாக இராமசாமி தெருவிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.செந்தமிழன் தலைமையேற்றார். த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் க.விடுதலைச்சுடர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். சாமிமலை த.தே.பொ.க. செயலாளர் தோழர் திருவரசன், த.இ.மு. செயலாளர் தோழர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாமிமலை:

சாமிமலை திருமஞ்சன வீதியில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. குடந்தை செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் தலைமையேற்றார். கிளைச் செயலாளர் தோழர் திருவரசன் முன்னிலை வகித்தார். த.தே.பொ.க. தோழர் தமிழ்த்தேசியன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

தேவராயன்பேட்டை:

தேவராயன்பேட்டை முதன்மைச் சாலையில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் பிரபாகரன் தலைமையேற்றார். த.தே.பொ.க. குடந்தை செயலாளர் தோழர் க.விடுதலைச்சுடர் முன்னிலை வகித்தார். தமிழக இளைஞர் முன்னணிக் கொடியை தோழர் மனோகரன் ஏற்றி வைத்தார்.

மதுரை:

மதுரை செல்லூர் தாகூர் நகரில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. மதுரை செயலாளர் தோழர் இரெ.இராசு தலைமையேற்றார். மகளிர் ஆயம் தோழர்கள் செரபினா, மேரி முன்னிலை வகித்தனர். தோழர் முருகேசன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தோழர் அருளர் மே நாள் குறித்து உரையாற்றினார்.

ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. தோழர் பார்த்திபராசன் தலைமையேற்றார். ஈரோடு த.தே.பொ.க. செயலாளர் தோழர் வெ.இளங்கோவன், கட்சிக் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தோழர் இராசய்யா மேநாள் குறித்து விளக்கவுரையாற்றினார். தோழர் பரமேசுவரன் நன்றி கூறினார். நிகழ்வில், திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் மே நாள் கொடியேற்ற நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன. த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் சி.ஆரோக்கியசாமி திருமலைஇராயபுரத்தில் கொடியேற்றி வைத்தார். காரடிவயல், தெம்மாவூர் ஆகிய பகுதிகளில், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.மணிகண்டன், தெம்மாவூர் த.தே.பொ.க. தலைவர் தோழர் முருகானந்தம் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

கிள்ளுக்கோட்டை பகுதியில், த.தே.பொ.க. குன்றாண்டார் ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர் திருப்பதி த.தே.பொ.க. கொடியை ஏற்றி வைத்தார். கிளைச் செயலாளர் தோழர் தங்கமணி முன்னிலை வகித்தார். காட்டுக்கோட்டைப்பட்டி, செங்களுர் ஆகிய பகுதிகளில் குன்றாண்டார் கோயில் த.இ.மு. ஒன்றியத் தலைவர் தோழர் இலட்சுமணன் த.இ.மு. கொடியை ஏற்றி வைத்தார்.

த.தே.பொ.க. ஒன்றியக்குழு உறுப்பினர் தோழர் பாலதண்டாயுதபாணி திருமலைப்பட்டியில் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தனர். கிளைச் செயலாளர் தோழர் கருப்பையா முன்னிலை வகித்தார்.

பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வட்டம் முருகன்குடியில், பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மே நாள் நிகழ்வில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

ஆசிரியர் திரு. பழனிவேல், தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் தோழர் இராமகிருஷ்ணன் ஆகியோர் மே நாள் குறித்து உரையாற்றினர். நிறைவில், த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு நன்றி கூறினார். துறையூரில் த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு தலைமையில் நடைபெற்ற மே நாள் நிகழ்வில், தோழர் இராமகிருஷ்ணன் த.இ.மு. கொடியை ஏற்றி வைத்தார். சாத்துக்குடல் பகுதியில், த.இ.மு. கிளைச் செயலாளர் தோழர் இளநிலா த.இ.மு. கொடியை ஏற்றி வைத்தார்.

வேதாரண்யம் உப்புத் தொழிற்சாலையில் எழுச்சியுடன் நடைபெற்ற மே நாள் விழா!

வேதாரண்யம் வட்டம், கடிநல்வயலில் உள்ள ஜி.எச்.சி.எல் உப்புத் தொழிற்சாலையில் உப்புத்தொழிலாளர்கள் சார்பில் மே நாள் விழா எழுச்சியாக நடைபெற்றது.

பல நூறு ஏக்கரில் அமைந்துள்ள இந்த உப்புத் தொழிற்சாலை முதலில் விம் கோ நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்தது. அதன் பிறகு தாரங்க தாரா கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு கை மாறியது. அதற்கும் பிறகு டால்மியாவின் குஜராத் ஹெவி கெமிக்கல்ஸ் (ஜி.எச்.சி.எல்) நிறுவனத்தால் வாங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நிர்வாகம் கைமாறினாலும் தொழிலாளர் சங்கம் தொடர்ந்து ஒரே தலைமையின் கீழ் “ விம்கோ உப்புத் தொழிலாளர் சங்கம் ” என்ற பெயரிலேயே இயங்குகின்றது. கடந்த 34 ஆண்டுகளாக தோழர் கி.வெங்கட்ராமன் அச்சங்கத்தின் தலைவராக தொடர்ந்து பணியாற்றிவருகிறார். நமது தமிழக தொழிற்சங்க முன்னணியில் இணைக்கப்பட்ட சங்கமாக அது செயல்பட்டுவருகிறது.

விம்கோ உப்புத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மே நாள் பேரணி 01.05.2014அன்று மாலை 5.30 மணியளவில் பன்னாள் , அரசுப் பள்ளி அருகிலிருந்து புறப்பட்டது.

பேரணிக்கு தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

சங்கச் செயலாளர் தோழர் இரா.தியாகராசன் வரவேற்புரையாற்றினார். பன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு வி.கே.விஸ்வநாதன், ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு,ஜெகன்நாதன், ஓய்வுபெற்ற ஜி.எச்.சி.எல் அதிகாரி திரு,வி.கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேரணியை தொடங்கி வைத்தனர்.

பேரணிக்கு சங்கத் துணைத் தலைவர் தோழர் காமராஜ், துணைச் செயலாலர் தோழர் வாசு, சங்கப் பொருளாளர் தோழர் இளங்கோவன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஜி.எச்.சி.எல் தொழிலாலர் சங்கத்தின் செயலாளர் தோழர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியின் முன்னால் தஞ்சை செல்வராஜ் குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுச் செல்ல, உப்புத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஏறத்தாழ முன்னூறு பேர் மே நாள் முழக்கங்கள் எழுப்பியவாறு அணிவகுத்துச் சென்றனர்.

பேரணி செல்லும் பாதையெங்கும் ஆங்காங்கே தொழிலாளர் குடும்பத்தினரும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் மற்றும் சங்கத்திற்கு ஆதரவளிக்கும் பல்வேறு அமைப்பினரும் , ஆசிரியர்களும் குளிர்பானம் அளித்தும் தோழர் கி.வெ அவர்களுக்கு சால்வை , மாலை அணிவித்தும் சிறப்பித்தனர்.

மாலை புறப்பட்ட பேரணி 5 கிலோமீட்டர் கடந்து இரவு 10.30 மணி அளவில் கடிநல்வயலில், ஆலை வாயிலை அடைந்தது.

அங்கு அமைந்துள்ள அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் தொழிலாளர்களின் எழுச்சிமிக்க மே நாள் முழக்கங்கங்களுக்கிடையே தோழர் கி.வெங்கட்ராமன் தமிழக தொழிற்சங்க முன்னணியின் கொடியை ஏற்றிவைத்து மே நாள் உரையாற்றினார்.

சி.பி.எம் கட்சியின் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் வேதாரண்யம் ஒன்றியத்தலைவர் தோழர், வைத்தியநாதன் வாழ்த்துரை வழங்கினார். சங்கச் செயலாளர் தோழர்.இரா. தியாகராசன் நன்றி உரையாற்ற இரவு 11.30 மணி அளவில் மே நாள் விழா நிறைவுற்றது.

Pin It