மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், மதுரையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொ.மோகன்(60) 30.10.2009 வெள்ளியன்று மாலை சென்னையில் காலமானார். இடதுசாரி கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பொ.மோகன் இந்திய மாணவர் சங்கத்தில் தம்மை இணைத்து கொண்டு தனது அரசியல் பணியை துவக்கினார். 1973ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மேலப்பொன்னகரம் காஸ்ட்ரோ கிளையில் தனது அரசியல் பயணத்தை துவங்கினார்.

சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் செயல்துடிப்பு மிக்க ஊழியராக செயல்பட்ட பொ. மோகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நகரச் செயலாளராகவும் பின்னர் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராகவும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றினார். மதுரை அரசு மருத்துவமனையில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக பிரம்மாண்டமான மறியல் போராட்டத்தை நடத்தி காவல்துறையின் கொடூர தடியடி தாக்குதலுக்கு உள்ளானார். மேலும் மக்களின் பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்று 52 நாட்கள் சிறையில் அவர் இருந்துள்ளார். கடந்த 1999ஆம் ஆண்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பொ. மோகன், 2004ஆம் ஆண்டும் தொடர்ந்து மதுரை மக்களின் நல்லாதரவுடன் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் உசிலம் பட்டி அருகே உள்ள பூச்சிபட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மீனாட்சி ஆகியோரின் மகனான பொ.மோகன் பி.ஏ. பட்டதாரியாவார். இவர் 30.12.1949ஆம் ஆண்டு பிறந்தார். இவரது மனைவி பூங்காவனம் மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பகத்சிங், வைகைராஜ், நேதாஜி என்ற மூன்று மகன்களும், பாரதி, கங்கா ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.

1999 ஜனவரி 21ஆம் தேதி சண்டே இந்தியன் பத்திரிகையில் அவரைப்பற்றி இப்படி சொல்லப்பட்டு இருந்தது.

முன்பெல்லாம் நாடாளுமன்றத்திற்கு எனது அப்பா நடந்தே போவார். இப்போது அவரிடம் சைக்கிள் ஒன்று உள்ளது. டில்லியில் சைக்கிளை ஓட்டிக் கொண்டு செல்வது போல அவரது புகைப்படம் ஒன்றை மலையாள பத்திரிகை வெளியிட்டிருந்தது என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் மோகனின் இளைய பெண் பாரதி. புகைப்படக் கலைஞர்களைப் பொறுத்தவரை, அது டில்லியாக இருந்தாலும் சரி, மதுரையாக இருந்தாலும் சரி சந்தோஷமாக கிளிக் செய்து கொள்வார்கள். ஒரு காலத்தில் கட்சியால் வழங்கப்பட்ட பஜாஜ் எம்80 வண்டியில்தான் இன்னும் அவர் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு முறை, ரேசன் கடையில் பொருள் வாங்கிக் கொண்டு செல்லும் வழியில் வண்டி நின்று விட்டதால் இறங்கி அவரே சரி செய்ய முற்பட்டார். அந்த வழியாக சென்று கொண்டிருந்த நாளிதழின் புகைப்படக்கலைஞர் அதைப் படம் பிடித்தார். அடுத்த நாள் முதல் பக்க புகைப்படமானது.

மதுரையில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தனது நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சி நிதியை இந்தத் தொகுதிகளுக்கு சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கிறார். மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கித் தருகிறார். இந்தப் பணிகள் நடைபெறுவதையும் தொடர்ந்து கண்காணிக்கிறார். கிராமம் ஒன்றில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வந்தது. அப்பணியை மேற்கொண்டிருந்த ஒப்பந்ததாரர் சிமெண்டுடன் அதிக மணலைக் கலந்து வந்தார். உங்கள் பணம் எவ்வளவு வீணாகிறது பாருங்கள் என்று மக்களிடம் மோகன் கூறினார். மக்களே அந்த ஒப்பந்ததாரர்களை தூக்கி எறிந்தார்கள்.

மழை பெய்து கொண்டிருந்த நாள் ஒன்றில் ஜோதி கணேஷ் என்ற வங்கி ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்தது. ஆனால் ஒரு நபர் மட்டும் வேட்டியை மடித்துக் கொண்டு அதை சரி செய்யும் பணியில் இருந்தார். அவர் வேறு யாருமல்ல, நாடாளுமன்ற உறுப்பினரான தோழர் மோகன்தான்.

யாரிடமிருந்தும் அவர் பணத்தை வாங்கியதில்லை என்பதற்கு நான் சாட்சியாகும். அவருக்கு எதிரான கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், இதைச் சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தெய்வநாயகம் குறிப்பிடுகிறார்.

அப்பழுக்கற்ற அந்த அரசியல்வாதிக்கு அனை வரும் அஞ்சலி செலுத்துவோம்!!!

 

Pin It