உயிர்கள் – உருவாவது, வளர்வது, நகர்வது, வயதாவது, சிதைவது இறப்பது போலவே வான்பொருட்களும் முக்கியமாக விண்மீன்களும் பிறந்து, வளர்ந்து, தேய்ந்து, வயதாகி இறந்து போகின்றன. நாம் தான் இவற்றைக்கண்டு கொள்வதே இல்லை, நமக்குத் தெரிவதும் இல்லை. உலகிலுள்ள அனைத்துப் பொருட்களுக்கும் ஆக்கம், வளர்ச்சி, அழிவு உண்டே. நம் குடும்பத் தலைவனான சூரியன் இன்னும் 600 கோடி ஆண்டுகளில் இல்லாமல் போகப் போகிறது என்பது தெரியுமா? நம் பூமியும் சூரியனைச் சார்ந்துள்ள செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனியெல்லாம் எங்கே போகும்? அப்போது அது சுற்றுமா, சுற்றாதா? அது நடக்க சுமார் 700 கோடி தலைமுறைகள் ஆகலாம், நம் வால் போக (அதாவது நம் முன்னோரான குரங்காரிடமிருந்து நமது வால் போன கதைதாங்க) சுமார் அரை கோடி ஆண்டுகள் ஆயினவே. 600 கோடி ஆண்டுகளில் மனிதன் என்னவாக மாறியிருப்பானோ? இதற்கிடையில் சூரியனின் கிழட்டுப்பருவம் வந்த பின் சக்தி இல்லாத நிலையறிந்தும் விஞ்ஞானிகள் நம்மை வேறு ஒரு சூரிய மண்டலத்திற்கு கொண்டு செல்லலாம்.

பிரபஞ்சத்தின் பிறந்த தினம்

 பிரபஞ்சம், இது ஒரு தனிமைமிக்க இடம் தான். பிரபஞ்சவெளி மிகமிகப்பெரியது, சூனியமானது. பிரபஞ்சம் இடைவிடாமல் விரிந்துகொண்டே செல்கிறது. இது எப்போது பிறந்தது? பிறந்திருக்கவே வேண்டியது இல்லை என சில வானியலாளர்கள் கருதுகின்றனர். பிரபஞ்சத்தின் உருவம் எப்படி? நீங்கள் ஒரு கண்ணாடி முன் நிற்கிறீர்கள். அதனுள்ளே உங்கள் உருவம் தெரிகிறது. அதற்குள் இன்னொரு கண்ணாடி. அங்கும் உங்கள் உருவம். அதற்குள்ளும் இன்னொரு கண்ணாடி. இன்னொரு கண்ணாடி, இப்படியாக போயக்கொண்டே இருந்தால்... என்ன தலை சுற்றுகிறதா நண்பரே! இதுதான் பிரபஞ்சம். ஒவ்வொரு நாளும் விண்மீன்களில் உருவெடுக்கும் ஹைட்ரஜன் பிரபஞ்சத்தை நிறைத்துக்கொண்டேயிருக்கிறது. இது விண்மீன்களுக்கிடையே பரவுகிறது. இடை இடையே அண்டங்கள் வயதாகி இறக்கின்றன; விலகியும் செல்கின்றன; தொடர்ந்து புதிய அண்டங்கள் பிறந்துகொண்டேயிருக்கின்றன பில்லியன் கணக்கில். என்ன சொல்லலாம் இதை? ஒவ்வொரு நாளும் பிரபஞ்சத்தின் பிறந்த நாள் தான்...

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

நாம், நமது நாட்டின் முக்கிய தினங்கள் என சுதந்திரதினம், குடியரசு தினம் ஆகியவற்றைக் கொண்டாடுகிறோம். அதுபோலவே ஐக்கியநாடுகள் சபை, யுனஸ்கோ, உலக சுகாதார‌ நிறுவனம், அறிவியலாளர்கள், அரசு அமைப்புகள், சில தன்னார்வ அமைப்புகள், சர்வதேச தினங்கள் பலவற்றை அறிவித்துள்ளன. அதன் முக்கியத்துவம் கருதி, மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யவும், அதனால் பயனும், மகிழ்வும் பகிர்ந்தளிக்கவும், இந்த தினங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவைகளுள் முக்கியமானவை பிப்ரவரி 28 அறிவியல் தினம், மார்ச் 8 உல‌க மகளிர் தினம், மார்ச் 15 -உலக ஊனமுற்றோர் தினம், மார்ச் 21- உலக வனதினம், இன ஒழிப்புதினம், மார்ச் 22 - உலக நீர்தினம், மார்ச் 23 உலக வானிலை தினம் போன்றவை. அது போலவே ஏப்ரலிலும் ஏப்ரல் 1- உலக முட்டாள்கள்  தினம், ஏப்ரல்-7 உலக சுகாதாரதினம், ஏப்ரல் 21- உலக வானியல் தினம், ஏப்ரல் 22- உலக புவிதினம், ஏப்ரல் - 23 உலக புத்தக தினமாகும்.

இதற்கான சிறப்பு நிகழ்வுகளை அரசு, கல்வி நிறுவனங்கள், தன்னார்வ இயக்கங்கள், தனி நபர்களும் நடத்துகின்றனர். ஏப்ரல் முதல் நாளில்தான் வணிகர்கள் அனைவரும் புதுக்கணக்கைத் துவங்குகின்றனர். ஏப்ரல் மாதம் என்பது வசந்தத்தின் துவக்கம். நம்ம‌ கோடை காலம் என்பதே வசந்தமாகும்.

ஏப்ரல் 21- உலக வானவியல் தினம்

நாம் அனைவரும், விரும்பியோ, விரும்பாமலோ, வானையும், வானில் வலம் வரும் சூரியன், சந்திரன், விண்மீன்கள், வான்மீன்கள், விண்கற்கள் எரிதல் போன்றவற்றைப் பார்க்கிறோம். சிலர் பார்த்து ரசிக்கின்றனர்; சிலர் அதன் வருகைகளைப் பதிவு செய்து, பண்ணங்கள், வடிவங்கள் சோதனை செய்து, மகிழ்கின்றனர். இதுதான் வானவியல் என்பது.

அனைவரும் பூமி வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. அதுமட்டுமா- பிளாஸ்மா பொருளாலான நம் சூரிய விண்மீனும், தன் கோள்கள், வால்மீன்கள் என குடும்ப சமேதராய், தன் தாய்வீடான பால்வழி மண்டலத்தை சுமாராக வினாடிக்கு 250 கி.மீ. வேகத்தில் வட்டமடிக்கிறது. பால்வழி மண்டலமும் வினாடிக்கு 370 கி.மீ வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் உட்கார்ந்து இருந்தாலும், வினாடிக்கு 280 கி.மீ வேகத்தில் ஆடாமல் அசையாமல் சொகுசு ரங்கராட்டினத்தில் நகர்ந்து கொண்டே இருக்கிறோம். இப்படிப்பட்ட ஆச்சரியமான இயற்கை வானியல் நிகழ்வுகளை சாதாரண‌ மக்களிடையே சொல்வதற்காக உருவான முக்கிய நாள்தான் உலக வானியல் தினம்.

வானியல் நிகழ்வுகளை, அதன் வியப்பை அடித்தட்டு பாமர மக்களிடம் பரப்பி, பகிர்ந்து, பங்குகொள்ள உருவாக்கப்பட்டதுதான் சர்வதேச வானியல் தினம். இது 1973-முதல் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 15ம் நாளுக்குப் பிறகு வரும், வளர்பிறையின் 4வது நிலவு நாளில் இந்த வானியல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு 2010ல் ஏப்ரல் 21-தான் உலக/சர்வதேச வானியல் தினம். ஏப்ரல் மாதம் உலக வானியல் மாதமாக கொண்டாடப்படுகிறது.

வானியல் தினம்/வானியல் மாதத்தில் அனைவரும் அனுபவம் இன்றியும், கருவிகள் இன்றியும், வெறும் கண்ணால் பார்த்தே வானியல் பொருட்கள் நகர்வினைக் கண்டு களிக்கலாம். ஒளிமாசு குறைவான பொது இடங்களில், கிராமத்தின் வயல் வெளிகள், பூங்காக்களில் மக்களும், மாணவர்களும், குழந்தைகளும் ஒன்றுகூடி இதனைக் கொண்டாட வேண்டும். சூரியன், விண்மீன்கள் தினமும் உதிக்கும் நேரம் பார்க்கலாம், அது பற்றி பேசலாம்.

லைரிட்.. விண்கற்கள்.. பொழிவு ..!!  ஏப்ரல் 21 & 22..!!!

lyra_finderவிண்கற்கள் பொழிவைப் பார்ப்பது என்பது மிகவும் எளிதான ஒன்றுதான். யார் வேண்டுமானாலும் இரவில் வீட்டின் பின்புறம்  அமர்ந்து, நிலவற்ற வானைப் பாருங்கள். வானில் பளிச்சென்று தீக்குச்சி எரிவது போல் எரிந்து கிழே விழுவதுதான் விண்கல் எறிதல் /பொழிவு. இதனை நம் வழக்கில் எரிநட்சத்திரம் என்று அழைக்கிறோம். ஆனால் இது உண்மையில் விண்மீன் அல்ல; விண்கல் நமது வளிமண்டலத்தில் மோதி எரிந்து விழுகிறது. இப்படிப்பட்ட  விண்கற்கள் பொழிவுகளை பதிவு செய்வதற்காக ஒரு அமைப்பு சர்வதேச அளவில் உள்ளது. அதன் பெயர் சர்வதேச விண்கற்கள் பொழிவு நிறுவனம்.

ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் பலமுறை நம் பூமி மீது விண்கற்கள் பொழிவு நடந்துகொண்டு தான் இருக்கிறது. பூமியை வலம்வந்து விட்டுச்சென்ற  அதன் தூசுதும்புகள் பூமியின் வளிமண்டலம் மீது மோதுவதால் ஏற்படும் விளைவுதான் இந்த விண்கற்கள் பொழிவு. ஆனால் இது ஒரு குறிப்பிட்ட விண்மீன் தொகுதியின் கீழே  காணப்படும்போது, அதனை அந்த விண்மீன் தொகுதியின் விண்கற்கள் பொழிவு என்றே பெயர் சூட்டப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் விண்கற்கள் பொழிவின் பெயர் லைரிட் விண்கற்கள் பொழிவு(Lyrid meteor shower) என்பதாகும்.  இது இம்மாதம் 16-30 தேதிகளில் காணப்பட்டாலும், இதனை தெளிவாக , நன்றாக, நிறைய எண்ணிக்கையில், 21-22 தேதிகளில்தான் காணமுடியும். பொதுவாகவே விடியற்காலை பொழுதுகளில்தான் இதனை நன்றாக பார்க்கலாம். எனவே, 21 இரவு 10 மணிக்கு மேலிருந்து  22 விடிகாலை 4 மணி வரை கண்டு மகிழலாம்.

லைரிட் விண்கற்கள்

பொழிவு மணிக்கு சுமாராக 15-20 வரை காணப்படும். குறிப்பிட்ட நாளுக்கு முன்னும் பின்னும் விண்கற்கள் பொழிவின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

லைரிட் விண்மீன் தொகுதி என்பது வானில் வடக்கிலிருந்து கொஞ்சம் தள்ளி சற்று கிழக்காக சுமார் 50 டிகிரி /பாகை உயரத்தில் தெரியும்.இதனை இரவு 8 மணிக்கு மேல்தான் பார்க்க முடியும். அந்த விண்மீன் கூட்டத்தில் தெரியும் விண்மீன்களில் மிகவும் பளிச்சென தெரியும் விண்மீன் தான் "வேகா". அது வானில் தெரியும் பிரகாசமான 20 விண்மீன்களில், 5வது பிரகாசமான விண்மீன். யாருடைய கண்களிருந்தும் அது தப்பவே முடியாது. அவ்வளவு பளிச்சென இருக்கும். இது நம் சூரியனைவிட 3 மடங்கு பெரியது. இது சூரியனை விட பிரகாசமான, இளநீல வெண்மை ஒளி வீசும் விண்மீன். இது இன்னும் 14,000 ஆண்டுகளுக்குப் பிறகு, வடதுருவ விண்மீன் ஆக மாறப்போகிறது. ஏன் தெரியுமா? நாம் பூமியின் சுற்று வேகத்தால் வடதுருவம் லேசாக தலை சாய்ந்த பம்பரம் போல் வேகா விண்மீன் இருக்கும் பக்கமே திரும்பிவிடுவதால் வேகாவே துருவ விண்மீன் ஆகிவிடும். இது ஒரு தொடர்கதைதான்.

வேகாவுக்கு வடக்கிலும் பளிச்சென தெரியும் இரண்டு விண்மீன்கள்தான் வடக்கு கழுகின் டெனாப்பும், மேற்கே தெரியும் கும்பம் விண்மீன் தொகுதியின் திருவோணமும். இந்த முன்று விண்மீன்களும் சேர்ந்துதான் கோடை கால முக்கோணம் ஏற்படுகிறது. முதல் முதல் புகைப்படமாய் எடுக்கப்பட்ட விண்மீன் வேகாதான். எடுக்கப்பட்ட ஆண்டு ஜூலை 16, 1850.

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

வெறுங்கண்ணால் பார்க்கும்போது, உள்ளங்கை அளவு வானத்தில் ஏதுமில்லாதது போலத்தான் இருக்கிறது, பைனாக்குலர் அல்லது குட்டி டெலஸ்கோப்பின் மூலம் பார்த்தால், அடேங்கப்பா..! எத்தனை நட்சத்திரங்கள் அதே இடத்தில்! ஜுபிட்டரின் சுழலும் சிவப்பு புயல் திட்டும், சனிக்கோளின் வெள்ளி மோதிர வளையமும் ஒரு முறை பார்த்துவிட்டால் அடுத்து இதைவிட பெரிய டெலஸ்கோப்பில் கட்டாயம் பார்த்தே தீர வேண்டும் என்ற ஆசை ஏற்படும்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கலிலியோ, அவராகவே தயாரித்துக் கொண்ட சிறிய பித்தளைக் குழாய் டெலஸ்கோப்பின் உதவியால் ஒரியன் (திருவாதிரை) நட்சத்திரக்கூட்டத்தை முதலில் கவனித்தார். அதற்கு இடையிடையே தென்படும் நட்சத்திரங்களை எண்ணி கணக்கிட்டு மேப் செய்ய முயன்றார். எண்ண எண்ண மாளவில்லை. எண்ணிக்கை விரிந்து கொண்டேயிருந்தது. “அடப் போங்கப்பா.. இதை யாரால் எண்ண முடியும்?” என்று கலிலியோ விட்டுவிட்டார்.

மொழுமொழு வென்றிருக்கும் நிலாவின் மேல்பரப்பில் நிறைய மலைகள் இருப்பதை கலிலியோதான் முதலில் கண்டார். ஜுபிட்டர் (வியாழன்-குரு) கோளைச் சுற்றியபடி நான்கு நிலாக்கள் இருப்பதைப் பார்த்து வியந்து போனார். ஒரு கோளுக்கு நான்கு நிலாக்கள் இருக்கிறது என்று அவர் சொன்னதை யாரும் நம்பவில்லை. பெளதீக விதிப்படி இது சாத்தியமேயில்லை என்று கலிலியோவைக் கேலி செய்தனர். சிறிய வானத்தில் பெரிய பூமி என்ற கருத்தை மறுத்து பெரிய வானத்தில் மிகச்சிறிய பூமி என்ற புதுக்கருத்தை கலிலியோ கொண்டுவந்ததற்கு அவரது டெலஸ்கோப்தான் காரணம். வானம் தோண்டத் தோண்ட போய்க் கொண்டேயிருக்கும் முடிவிலாத வெளி என்பதைப் புரிந்து கொண்டனர்.

ஆரமபகால டெலஸ்கோப்புகளில் அகலத்தைவிட நீளம்தான் அதிகமாக இருந்தது. எவ்வளவுக்கெவ்வளவு முன் லென்ஸை பெரிதாக்குகிறோமோ அந்த அளவுக்கு ஓளியை அதிகம் கிரகித்து நிறைய பொருள்களைத் துல்லியமாகப் பார்க்க முடியும். ஆனால் முன் லென்ஸைப் பெரிதாக்குவதற்குப் பதிலாக, கண் லென்ஸை அதிக தூரத்திற்கு கொண்டு சென்றனர். விளைவு டெலஸ்கோப்பின் நீளம் நீண்டுகொண்டே போனது. இதற்கு இன்னொடு காரணமும் இருக்கிறது. முன் லென்ஸை கனமாக மாற்றினால் டெலஸ்கோப்பைத் தூக்கிப் பிடிக்க முடியாது.

ஜொஹன்ன்ஸ் ஹெவெல்லியஸ் என்பவர் மிக நீளமான டெலஸ்கோப்பை தயாரித்தார். அதன் நீளம் 150 அடி. அந்த டெல்ஸ்கோப்பை ஊஞ்சல் போல, கனமான இரும்புக் கம்பிகளில் தொங்கவிட்டுதான் உபயோகிக்க முடியும். கொஞ்சம் காற்றடித்தால் கூட ஊஞ்சலாகிவிடும்.

நெதர்லாந்தைச் சேர்ந்த ஹயூஜென் குழாய் இல்லாத திறந்தவெளி டெலஸ்கோப்பை உருவாக்கினார். உயரமான மேடை மீது முன் லென்ஸை நிறுத்தி வைத்துவிட்டு, 200 அடி தூரம் பின்னால் சென்று சிறிய கண் லென்ஸ் மூலம் முன்லென்ஸ் வழியாக ஆகாயத்தை கவனிப்பார். இரண்டு லென்ஸிற்கிடையில் குறுக்கே நடந்து போய் வரலாம்.. அப்படி ஒரு டெலஸ்கோப்!

சர் ஐசக் நியூட்டன் வந்த பிறகுதான் கண்ணாடியால் செய்த குழி ஆடிகளை டெலஸ்கோப்புகளுக்குப் பயன்படுத்தும் வழக்கம் பிறந்தது. தடிமனான லென்சுக்குப் பதில் குழியாடிகளை நியூட்டன் பயன்படுத்தினார். பிரதிபலிப்பு மூலம் ஆகாய ஒளியை குழியாடி சேகரித்துத் தரும் பிரதிபலன் டெலஸ்கோப்பை முதலில் பயன்படுத்தியவரும் இவரே.

பிரதிபலன் டெலஸ்கோப்புகளில் குழியாடிதான் முக்கியம். இதில் ஒளி ப்ட்டு பிரதிபலித்து ஆடியின் முன்பாகக் குவியும். அவ்வாறு குவியும் பிம்பத்தை இன்னொரு லென்சு மூலம் பார்ப்பது இந்த தொலைநோக்கிகளில் விசேஷம். இதுமாதிரி டெலஸ்கோப்பின் பின்னால் இருப்பது ஒருவகையில் வசதியாகப் போய்விட்டது. முன்புறம் கனமாக இருந்தால் தூக்குவது கஷ்டம், தாங்கியில் நிறுத்துவதும் கஷ்டம். மேலும் லென்சுகளால் ஒளியை நிறப்பிரிகை செய்யாமல் அனுப்பமுடியாது. இதனால் பார்க்கும் பொருளைச் சுற்றிலும் வானவில் நிறங்கள் தெரியும். பிரதிபலன டெலஸ்கோப்புகளில் இம்மாதிரியான காட்சித் திரிபுகள் எதுவும் இருக்காது.

வில்லியம் ஹெர்ஷெல் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு பார்க்கக்கூடிய பிரதிபலன் தொலைநோக்கியின் உதவியால்தான் யுரேனஸ் கோளை கண்டுபிடித்தார், நியூட்டன் மாதிரி ஹெர்ஷெல் தனக்கு வேண்டிய டெலஸ்கோப்புக்கான ஆடியை அவராகவே தயாரித்துக் கொள்வார்.

குதிரை சாணத்தைப் பிசைந்து குழியான ‘மோல்டு’ செய்து காயவைத்துவிடுவார். பின்னர் உலோகத்தை உருக்கி அதில் ஊற்றி குழிவான ‘கடாய்’ போல் ஆடியை வார்ப்பு செய்து, பாலீஷ் கொடுத்து குழியாடியாகப் பயன்படுத்துவார். சிலசமயங்களில் குதிரைச் சாண மோல்டு உடைந்து, உருகிய உலோகம் வழிந்து தரையில் ஓடும். தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஹெர்ஷெல் ஓடுவாராம்.

ஆடிகளின் அளவு பெரிதாகிக் கொண்டே போய் கிட்டத்தட்ட ஆறடி அகலத்திற்குப் பெரிதானது. அய்ர்லாந்தைச் சார்ந்த லார்டு ரோஸ்தான் முதன் முதலில் கேலக்ஸியைக் (நட்சத்திரத் திரட்சி) கண்டார்.

இப்போது ஆறடி அகல ஆடியென்பது சாதரணம். பத்து மீட்டர் அதாவது 33 அடி அகல ஆடிகள் பயன்படுத்துவதுதான் மதிப்பு. ரொம்ப காலமாக பாலோமர் மலையில் வைக்கப்பட்டிருக்கும் ஹேல் தொலைநோக்கியைத்தான் உலகிலேயே மிகப்பெரியது என்று வினாடி வினாக்களில் கேட்பார்கள். அதன் குறுக்களவு வெறும் 5 மீட்டர்தான் ஆனால், சும்மா சொல்லக்கூடாது அது முழுக்க முழுக்க ஆட்டோமேட்டிக் டெலஸ்கோப், அதில் பயன்படுத்தப்படும் நிறமாலைக் கருவிகள், கேமராக்கள், பதிவு கருவிகள் ஓவ்வொன்றும் பெரிய

‘கார்’ மாதிரி இருக்கும். வெங்காய வடிவில் கட்டப்பட்ட கோபுரத்துக்குள் டெலஸ்கோப் இருக்கும். கோபுரம் திறப்பதும், ஆடிகளைத் துடைப்பதும், கருவிகளை இணைப்பதும் ஆட்டோமேட்டிக்தான். ஓய்வு ஒழிசலில்லாமல் ஹேல் தொலைநோக்கி இன்றும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மணிநேரம் அதைப் பயன்படுத்த நீங்கள் கட்ட வேண்டிய கட்டணம் 100,000 டாலர்கள்.

ஹாவய்த் திவீல் மவுனா கீ என்றொரு செத்துப்போன எரிமலை இருக்கிறது. இதன் உச்சி தட்டையாக வெட்டப்பட்ட பீடம் போல இருக்கிறது. தரையிலிருந்து 14000 அடி உயரத்திலிருப்பதால், அங்கே காற்று மண்டலம் வெறும் 40 விழுக்காடுதான்.

டெலஸ்கோப்புகளை வைப்பதற்கு சிறந்த இடம். காற்றுமண்டல சலனம் இங்கே குறைவாக இருக்கும். நகரத்தின் ஒளியும், சந்தடியும், தூசியும் இருக்காது.

ஜெமினி நார்த், சுபரூ, கெக் என்று பல பெரிய பெரிய தொலைநோக்கிகள் அங்கேதான் உள்ளன். கடுமையான குளிர், ஆக்ஸிஜன் இல்லாத மூச்சு முட்டும் வறட்டுக்காற்று, இராத்திரியில் கண்விழித்துச் செய்ய வேண்டிய வேலை. உண்மையிலேயே மனமும், உடம்பும் திடமாக இருந்தால்தான் அஸ்ட்ரானமராக இருக்க முடியும்.

முகத்தில் ஆக்ஸிஜன் குழாய்களைப் பொருத்திக்கொண்டு குளிருக்கு உல்லன் ஆடைகளை உடுத்திக் கொண்டு வேலை செய்ய் வேண்டும். ஒரு விஷயத்தை சொல்ல நான் மறந்துவிட்டேன் . குறிப்பிட்ட நேரங்களுக்குள் அங்கே சென்று டெலஸ்கோப்பை செட் செய்வதுடன் நிறுத்திக் கொண்டு மிச்ச வேலையை வீட்டிலிருந்தே செய்துகொள்ளும் வானசாஸ்த்திரிகளும் உண்டு. முழுக்க முழுக்க கம்ப்யூட்டரின் உதவியுடன் டெலஸ்கோப் இயக்கப்படுவதால், பலர் வேலையை மின் அஞ்சல் மூலம் அனுப்பி கம்ப்யூட்டரிடம் வேலை வாங்கிக் கொள்கின்றனர்.

அல்ட்ரா கூல் குள்ள நட்சத்திரங்களின் காந்தவிசைகளை கவனிக்கும் ஒரு வானியல் நிபுணர் தனது விண்ணப்பத்தை டெலஸ்கோப்புக்கு அனுப்பிவிடுவார். அவருக்குத் தொடர்ந்து ரிசல்ட் வீடு வந்து சேருகிறது. ஜியோ மார்சி பற்றி நிறைய பேர்களுக்குத் தெரியும். இவர் கிட்டத்தட்ட 150 நட்சத்திரங்களில் கோள்கள் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தார். இன்னமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். ஒரு முறை டெலஸ்கோப் செட் செய்துவிட்டால் அதன்பிறகு உதவி எதிர்பார்க்காமல் அடிமை போல அது வேலை செய்யும். மார்சி வரிசையாக ஆகாயம் முழுக்க சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறார்.

பெரும்பாலான வேலைகளை வீட்டிலிருந்தபடியே செய்து விடுவதால் பெண்டாட்டிப் பிள்ளைகள் எங்களை கோவிச்சுக் கொள்வதில்லை என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் பெர்க்ளி என்பவர்.

டிவிங்கிள் கூடாது

நட்சத்திரம் என்றாலே ஜொலிப்பது கண் சிமிட்டுவதும்தான் நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு நட்சத்திரமும் கற்பனைக் கெட்டாத தொலைவிலிருக்கிறது. அவற்றிலிருந்து புறப்பட்ட ஒளி பூமியை வந்தடைய ஒன்று ரெண்டல்ல பல பில்லியன் ஆண்டுகள்கூட எடுத்துக் கொள்கின்றன. அத்தனை தொலைவும் அத்தனை காலமும் கழிந்து சிந்தாமல் சிதறாமல் வெட்டவெளி வழியாக வரும் ஒளி ரேகைகள் பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்த உடன் அதன் சலனத்தால் நடுக்குறு அடைந்து, மின்னுவதுபோல தோன்றுகிறது. விண்வெளியில் பயணம் செய்யும் அஸ்ட்ராநாட்களுக்கு அல்லது நிலாவில் இருந்து பார்ப்பவர்களுக்கு நட்சத்திரங்கள் கண் சிமிட்டாமல் ஊசி முனை மாதிரி ‘கருக்’கென்று தெரியும்.

டெலஸ்கோப்புக்கு மேலே இருக்கும் காற்று மண்டலத்தின் சலனம் பிம்பங்களை கலைத்துவிடாதபடி இருக்க.. காற்றை நிறுத்த முடியாது. ஆனால் லென்சுகளைத் தக்கபடி அசைத்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளமுடியும்.

டெலஸ்கோப்பின் நாலா பக்கத்திலிருந்தும் கத்தி செருகியது போல நாலைந்து லேசர் கீற்றுகள் வானை நோக்கிப் பாய்கின்றன. காற்று வெளியின் 78 கிமீ தொலைவில் நிறைய சோடிய அயனிகள் இருக்கிறபடியால் அங்கே லேசர் கதிர்கள் மோதி அவற்றை பல்புகள் போல ஒளிரச்செய்கின்றன.

இரவில் லேசர் மோதி ஒளிரும் சோடியப் பிரகாசம் செயற்கை நட்சத்திரங்கள் போலிருக்கும். காற்று மண்டல அசைவில் அவை நடுங்கும். அதனடிப்படையில் எவ்வளவு அட்ஜஸ்ட் செய்யவேண்டும் என்பதை கம்ப்யூட்டர் தீர்மானித்து லென்சுகளை அட்ஜஸ்ட் செய்யும். அப்படி அட்ஜஸ்ட் செய்தபின் விண்வெளி வஸ்த்துக்கள் பளீரென்று கத்தரித்ததுபோலத் தோன்றும். வினாடிக்கு 1000 முறை லென்ஸ் அட்ஜஸ்ட் செய்யப்படுகிறது என்பது கொசுறு செய்தி.

லேஸர் கதிர்களுக்கிடையே சில நேரங்களில் விமானம் குறுக்கே செல்ல வேண்டிவரலாம். அதை முன்கூட்டியே பார்த்து எச்சரிக்கை செய்ய இரண்டு கல்லூரி மாணவர்கள் ‘பார்ட் டைம்’ வேலை செய்கிறார்கள். மணிக்கு 1000 ரூபாய் சம்பளம் அவர்களுக்கு.

புள்ளிப்பார்வை - அகலப்பார்வை

வான மண்டலம் நமக்கு நீலநிறக் கிண்ணம் கவிழ்ந்ததுபோலத் தோன்றுகிறது அல்லவா, நம்மால் வானமுழுவதையும் ஒரே சமயத்தில் பார்க்க முடியாது. பாதியைத்தான் பார்க்கிறோம். தொலைநோக்கிகள் எவ்வளவு வானப்பரப்பைப் பார்க்கின்றன என்று நினைக்கிறீர்கள்? வட்டத்தின் ஒரு பாகையில் 3600 இல் ஒரு பகுதியைத்தான் கவனிக்கின்றன. ஒரு சமயத்தில் ஒரு கேலக்ஸியை மட்டுமே கவனிக்க வேண்டியிருப்பதால் இத்தனை நுணுக்கம்.

ஆனால் சில வான்வெளி ஆய்வுகளில் வானத்தின் பெரிய பகுதியைக் கவனித்தால்தான் நிறைய நிகழ்ச்சிகளை தவறவிடாமல் அறியமுடியும். எந்த இடத்தில் எப்போது வால்நட்சத்திரம் வரும், புதிய சூப்பர்நோவா வெடிக்கும் என்று தெரியாததால், ஒத்தைக் கண்ணால் ஒரு புள்ளியைப் பார்ப்பதைவிட பெரிய பரப்பை அடிக்கடி பார்ப்பது நல்லது. பெரிய பரப்பை படம் பிடிக்கும்போது குறைந்த நேர கேமரா ‘எக்ஸ்போஷர்’ கொடுத்தாலே போதும். சிறிய புள்ளிகளை படம்பிடிக்கும் போது நீண்ட நேரம் எக்ஸ்போஸ் செய்ய வேண்டியிருக்கும்

ஸ்லோவான் டிஜிட்டல் ஸ்கைமேப் எனும் புராஜெக்ட் 1999 முதல் 2008 வரை ஆகாயம் முழுக்க படம்பிடித்து மேப் செய்தது. ஆண்ட்ரீ காஸ் தொடர்ந்து 14 ஆண்டுகளாக வானத்தைப் படம்பிடித்து ஒரு தொடர் சினிமா செய்திருக்கிறது. வானில் நிகழும் நிதானமான நிகழ்ச்சிகளெல்லாம் அதில் வேகமாக ஓடுகின்றன. பேரண்டத்தின் நத்தைவேக மாற்றத்தை குதிரைரேஸ் பார்ப்பதுபோல பண்ணியிருக்கிறார்.

ஆகாயத்தில் 7 நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தென்படாத ஏதோ ஒன்றை மையமாக வைத்துக்கொண்டு சுற்றி வருவதை ஆண்ட்ரீதான் கவனித்தார். மையத்திலிருந்து கருந்துளை என்று அவர் கூறுகிறார்.

லார்ஜ் சைகாப்டிக் சர்வே டெலஸ்கோப் (Lrge cynoptic survey Telescope) 8.2 மீட்டர் குறுக்களவு ஆடியைக் கொண்டது. அரிஸோனாவில், டாக்ஸான் என்ற இடத்தில்தான் இதற்கான குழியாடியை செய்தார்கள். உருகிய கண்ணாடியை சுழலும் கிண்ணத்தில் விட்டதும் அதுவும் கிண்ணம் போல் ஆகி, குளிர்ந்ததும் குழி ஆடிபோல மாறிவிடும். பிறகு அதைத் தேய்த்து பாலீஷ் செய்து, உலோகப் பூச்சிட்டு பளபளப்பாக்கி விடுவார்கள். டெலஸ்கோப் ஆடி செய்வது ஒரு கலை மட்டுமல்ல, தொழில்நுட்பமும் கூட! LCST தொலைநோக்கியின் பார்வை அகலம் நிலாவின் வட்டம் அளவுக்கு இருக்கும். இருட்பொருள், இருள்சக்தி ஆகிய நூதன விஷயங்களை நேரடியாக ஆராய LCST உதவும்.

இந்தியாவின் மிகப்பெரிய டெலஸ்கோப் தமிழகத்தில் வாணியம்பாடி அருகே உள்ள ஜவ்வாது மலையில் வைக்கப்பட்டுள்ளது. வைனு பாப்பு ஆப்சர்வேட்டரி என்று அதற்குப் பெயர். 3.8 மீட்டர் அகல ஆடி அதில் உள்ளது. வியாழனில் நிலாவான கனிமீடுவுக்கு காற்றுமண்டலம் இருப்பதை இதுதான் கண்டுபிடித்தது.

எதிகாலத்தில் தொலைநோக்கிகள் எப்படியெல்லாம் வடிவெடுக்கும் என்று சொல்ல முடியாது. நிச்சயமாக நிலாவில் ஒன்று நிறுவப்படலாம், இங்கிருந்து அதை இயக்கி பேரண்ட எழிலை இங்கிருந்தே காணலாம்.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

இந்தியாவின் முதல் தொலை விண்வெளித்திட்டம் - சந்திராயன் -1 இந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. தானே ஏவுஊர்தி - Rocket தயாரித்து செயற்கைகோள் வடிவமைத்து விண்வெளி சாதனைகள் பல புரிந்துள்ளது இந்தியா. ஆயினும், புவியினைவிட்டு விண்வெளிக்கு - அதாவது வேறு கோள்களுக்கு செல்லும் முதல்திட்டம் சந்திராயன்.

சந்திராயன் என்ற பெயர் சந்திரன் மற்றும் “யான்” என்ற இரண்டு வடமொழி சொற்களின் கூட்டு ஆகும். சந்திரன் என்றால் நிலவு. யான் என்றால் பயணம் செய்யும் கலன். எனவே நிலவுக்கு பயணம் செய்யும் கலம் என்பதே சந்திராயன். தானே சுயமாக வடிவமைத்து Rocket- ஏவுஊர்தி PSLV வழி சந்திராயன் நிலவுக்கு ஏவப்படும். PSLV என்பது Polar Sattelite Council Vehicle என்பதாகும். 832 சுற்றுப் பாதைக்கு செயற்கைக்கோள்களை எடுத்துசெல்லும் ஏவுஊர்தி இது. 1995 முதல் இந்த ஏவுஊர்தி வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. 45 மீட்டர் உயரம், சுமார் 295 டன் எடை கொண்ட இந்த ஏவுஊர்தி சந்திராயன் கலத்தை ணிஜிளி எனப்படும் சுற்றுப்பாதைக்கு எடுத்து செல்லும்.

ஷாட்புட் எனப்படும் குண்டு எறிபந்தயத்தில் வீரர் குண்டை கையில் வைத்து தட்டாமாலை சுற்றுவார். பின்னர், தேவையான இழுவிசை பெற்றதும் குண்டை எறிவார். இதன்வழி குண்டு முடுக்கு பெற்று வெகுதூரம் பயணம் செய்யும். அதுபோல ETO என்கிற சுற்றுப்பாதையில் சுழலும் செயற்கைக்கோள் முடுக்கு பெற்று அதன் பாதை நீள்வட்டமாக மாறும். ETO என்பது Elliptic Transfer orbit ஆகும். அதாவது நீள்வட்டத் தடம்மாற்று சுற்றுப்பாதை. முதலில் அண்மைப்புள்ளி 260 கி.மி. சேர்மைபுள்ளி 36000 கி.மி. என்கிற நீள்வட்ட பாதையில் அமையும். கலம் இந்த சுற்றி சுற்றி வரும்போது அதன் சேர்மைபுள்ளி 40000 கி.மி. ஒரு லட்சம் கி.மி என உயர்ந்து கொண்டேபோகும். சுமார் இரண்டு நாட்கள் இவ்வாறு நீள்வட்ட தடம்மாற்று சுற்றுபாதையில் சுற்றிவர வேண்டும். மெல்ல மெல்ல சேர்மைபுள்ளி உயர்ந்து 4,00,000 கி.மி. என உயரும். புவியிலிருந்து கலம் அச்சமயத்தில் 400000 கி.மி. தொலைவில் அமையும்.

- தா.வி.வெங்கடேஸ்வரன்

Pin It