கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சு.உலோகேசுவரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
இச்செய்தியைப் படிக்கும்முன் நாம் ஏன் கடல் நீரைக் குடிக்கக் கூடாது என்று பார்த்து விடுவோம். நமது உடலில் இயல்பாகவே நீர் இருக்கும். இப்போது நாம் கடல் நீரைக் குடிக்க, அதுவும் நம் உடலில் சேரும் தானே! நம்முடலில் இருக்கும் குடல் அணுச்சுவர், ஏற்கெனவே உடலில் இருந்த நீரைக் கடல் நீருடன் கலக்கச் செய்யும். இப்படிச் செய்வதால் நல்ல நீரின் அளவு உடலில் குறைந்து நீரிழப்பு ஏற்படும். இதனால் தான் கடல் நீர் நாம் குடிப்பதற்கு ஏற்றதில்லை. இங்கு குடல் அணுச்சுவர் செறிவு மிகுந்த கடல் நீருக்கும் செறிவு குறைந்த நல்ல நீருக்கும் இடையே ஒரு சவ்வு போலச் செயல்பட்டு இரு நீரையும் கலக்கச் செய்கிறது.
இரு வெவ்வேறு செறிவளவு கொண்ட கரைசல்களுக்கு நடுவே ஒரு கூறு புகவிடும் சவ்வு (‘semi permeable membrane’) இடைப்படும்போது, கரைப்பான் (solvent) செறிவு மிகுந்த கரைசலிலிருந்து (‘solution’) செறிவு குறைந்த கரைசலுக்குச் சவ்வின் சிறுதுளைகள் (‘pores’) வழியே கடக்கும். இரு கரைசல்களும் ஒரே செறிவளவு பெறும் வரை கரைப்பான் கடப்பது தொடர்ந்து நடக்கும். இந்தப் படிமுறை செறிவு மாற்றமே சவ்வூடு பரவல் என்று அறியப்படுகிறது. இது எல்லாக் கரைசல்களுக்கும் உள்ள பொதுவான வேதியியல் பண்பாகும். மேலும், இக்கரைப்பான் கடவு எவ்விதப் புறத்தாக்கமும் இன்றி இயற்கையாக நடக்கும் என்பது நாம் கவனிக்க வேண்டிய குறிப்பு. இக்கரைப்பான் கடவினை நாம் பிரவுனியன் கடவு (‘Brownian motion’) என்கிறோம்.
மேலும் புரிந்து கொள்வதற்கு ஓர் எளிய ஆய்வினைக் காண்போம்.
ஒரு முகவையில் செறிவு குறைந்த நீர் (செறிவு குறைந்த நீர் என்றவுடன் ஏதோ புதியது என நினைத்து விடாதீர்கள். நாம் வீட்டில் பயன்படுத்தும் நல்ல நீரை நினைத்துக் கொள்ளுங்கள்) நிரப்பிக் கொள்வோம்.
இரு முனைகளைக் கொண்ட ஒரு குழாயை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் ஒரு முனையை ஒரு கூறு புகவிடும் சவ்வுப் பொருளை வைத்து அடைத்து விடுங்கள். மற்றொரு முனையில் இப்போது செறிவு மிகுந்த உப்பு நீர் (எல்லோருக்கும் கடல் நீர் கிடைக்காதல்லவா!) பாதி நிரப்பிக் கொண்டு குழாயினை முகவையில் அரையளவு மூழ்கச்செய்வோம்.
இப்போது பார்த்தால் குழாயிலும் முகவையிலும் ஒரே அளவு நீரேற்றம் இருக்கும். ஆனால், குழாய் நீர் படிப்படியாக ஏற்றம் மிகுந்து விடும். முகவை நீரோ ஏற்றம் குறைந்து போகும். நீங்கள் நினைப்பது சரிதான்! இந்த ஏற்ற மாறுதலுக்கு அடிப்படை சவ்வூடு பரவலே தான்! சவ்வூடு பரவல் வழியாக முகவையிலிருந்து குழாய்க்குச் சவ்வு வழியே நீர் கடப்பதே இதற்குக் காரணமாகும். கரைசல் நீரின் மூலக்கூறுகள் சவ்வு வழியே கடப்பதற்குச் சவ்வு உதவியாக இருக்கும். ஆனால், உப்புக் கூறுகள் கடப்பதற்குச் சவ்வு உதவாது; அவற்றைத் தடுத்துவிடும். படிப்படியாக ஒரு காலக்கட்டத்தில் சவ்வின் இரு பக்கமுள்ள கரைசல்களும் சம அளவு செறிவு பெற்று விடும் அல்லது குழாயிலுள்ள நீரழுத்தம் சவ்வூடு அழுத்தத்தை (‘osmotic pressure’) ஒத்து விடும். இக்காலக்கட்டம் வரும்போது நீர் கடத்தல் நின்றுவிடும்.
அது சரி ‘சவ்வு’ என்று சொன்னால் போதாதா, அது என்ன ‘ஒரு கூறு புகவிடும்’ சவ்வு என்னும் கேள்வி எழுகிறதா?
சவ்வின் வாயிலாக ஒரு சில வகை அணுக்களும் மூலக்கூறுகளும் மட்டுமே கடக்க முடியும். மற்றவை இதன் வழியே கடப்பதற்குச் சவ்வு உதவாது. எனவே தான் இதை 'ஒரு கூறு புகவிடும் சவ்வு' (‘semi permeable’) என்று கூறுகிறோம்
இப்போது சவ்வூடு பரவல் என்றால் என்ன? என்று நாம் ஓரளவுக்கு புரிந்து கொண்டிருப்போம்.
இப்போது எதிர்மறை சவ்வூடு பரவலைப்(‘Reverse Osmosis’) பார்ப்போமா?
செறிவு மிகுந்த கரைசலுக்கு(எ.கா. கடல்நீருக்கு) நாம் புற அழுத்தம் கொடுக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதனால் அதிலுள்ள பல்வகை பெரிய மூலக்கூறுகளும் அயனிகளும் அகற்றப்படும். விளைவாகச் சவ்வின் ஒரு பக்கம் செறிவுபட்ட கரைசல் தேங்குகிறது. மறுபக்கத்தில் தூய நிலையில் கரைப்பான் (நல்ல தண்ணீர்) சேர்கின்றது. இதுவே எதிர்மறை சவ்வூடு பரவல் அடிப்படையாகும்.
இந்தச் செய்முறையில் புற அழுத்தத்தின் காரணமாகச் செறிவு மிகுந்த கரைசலிலிருந்து குறைந்த செறிவு கொண்ட கரைசலுக்கு மூலக்கூறுகளும் அயனிகளும் சவ்வின் சிறுதுளைகள் வழியே கடக்கின்றன. ஊடுபரவல் அழுத்தத்தால் உண்டாகும் நீரோட்டத்தை எதிர்த் திசைப்படுத்த (செறிவு மிகுந்த கரைசலிலிருந்து செறிவு குறைந்த கரைசலுக்கு கரைப்பான் கடவு) புற அழுத்தம் கொடுத்துச் செறிவற்ற தெளிந்த நீர் ஒரு பக்கமாகச் சேர்க்கப்படும். இதுவே எதிர்மறை சவ்வூடு பரவலின் நீர் துப்புரவு முறைக்கு அடிப்படையாகும்.
இயல்பான வடிகட்டுதலுக்கும் எதிர்மறை சவ்வூடு பரவல் நீர் துப்புரவு முறைக்கும் உள்ள முதன்மை வேறுபாட்டை நாம் அறிந்து கொள்வோம்! பல இடங்களில் விற்கும் நீர்ப்புட்டிகளின் மேல் எதிர்ச்சவ்வூடு பரவல் முறையில் வடிகட்டப்பட்டது (‘Reverse Osmosis’) என்று பார்த்திருப்பீர்கள். வடிகட்டுதலால் கரைக்கப்படாத கலவைகளை மட்டுமே அகற்ற முடியும். ஆனால், எதிர்மறை சவ்வூடு பரவல் நீர் துப்புரவு முறையில் கரைக்கப்பட்ட கலவைகள் கூடச் சிக்கிவிடும்.
எதிர்மறை சவ்வூடு பரவலில் பயன்படுத்தப்படும் சவ்வுகள் கூட்டணு தாய்த்தொகுதியாலான அடர்ந்த அடுக்குத்தடை படிவுகள் கொண்டது. இவ்வகை சவ்வு நீர்க்கூறுகள் கடக்கவும் மற்ற உப்புக் கூறுகள் கடப்பதைத் தடுக்கவும் வடிவமைக்கப்பட்டவை. இந்த செயல்முறையில் செறிவு மிகுந்த கரைசல் பக்கம் உயரழுத்தம் வைக்கப்படுகிறது.
துப்புரவுக்குப் பொதுவாகத் தேவைப்படும் அழுத்தம்:
உவர்ப்பு கொண்ட நிலத்தடி நீராயின்: 2 – 17 ‘பார்’(‘Bar’ அலகு)
கடல்நீராயின்: 40 - 70 ‘பார்’
சவ்விலுள்ள சிறுதுளைகளின் விட்டம் 0.1 நா.மீ லிருந்து 5000 நா.மீ வரை இருக்கும். அகப்படும் துகள்களின் விட்டம் 10 நா.மீ லிருந்து 50 மை.மீ வரை வேறுபடும்.
சராசரியாக 10 இலிட்டர் உவர்ப்பு நீரிலிருந்து 4.5 இலிட்டர் நல்ல நீரைப் பெறலாம். மிஞ்சும் 5.5 இலிட்டரை மறுசுழற்சி செய்ய இயலாது.
ஆங்கில மூலம்: http://en.wikipedia.org/wiki/Reverse_osmosis
http://science.howstuffworks.com/reverse-osmosis.htm
- சு. உலோகேசுவரன்(
- விவரங்கள்
- சு.உலோகேசுவரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
நாம் சில கணினிகள் கதிரொளியால் இயங்குவதாகக் கேள்விப்பட்டிருப்போம். பல பேரிடம் கதிரொளியில் இயங்கும் கணிப்பான்களைப் பார்த்திருப்போம். சில இடங்களில் பெரிய அளவு சூரிய ஒளிப் பலகங்களை(‘Solar panel) யும் பார்த்திருப்போம். இந்தப் பலகங்கள் பல ஃபோடொவோல்டைக் மின்கலங்களின் ஒருங்கிணைப்பாகும். இவை போடொவோல்டைக்கு என்கிற கருத்தாக்கத்தினால் செயல்படுகின்றவை. (போடோ(‘Photo’) என்றால் ஒளி, வோல்டு (‘Volt’) என்றால் மின்கலம்). போடோவொல்டைக்கு எனப்படும் தொழில்நுட்பம் ஒளியிலிருந்து (சூரிய ஒளி) மின் உற்பத்தி செய்யப் பயன்படுவதாகும்.
இந்தத் தொழில்நுட்பம் முற்காலத்தில் விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள்களின் மின் தேவைகளை மட்டுமே ஈடு செய்தது. தற்போது தரையிலும் சீரான வளர்ச்சி கண்டு வருகிறது.
இந்தத் தொழில்நுட்பத்தால் வெறும் கதிரொளியை உள்ளீடாக ஏற்றுக்கொண்டு இலவசமாக (சிறிய ஒருமுறை முதலீட்டுடன்) மின்சாரம் பெற முடியும் என்றால் நம்புவீர்களா? ஒரு சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட சூரிய ஒளிப் பலகையிலிருந்து உச்சி வெயிலில் கிட்டத்தட்ட 1000 வாட்டு மின்சாரம் பெற முடியும்.
கதிரொளியிலிருந்து மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின்கலங்கள் 'சிலிகான்', 'சர்மானியம்' போன்ற குறைகடத்திகளால் ஆனவை. குறைகடத்தியின் மீது கதிரொளி பாயும்போது அதன் ஒரு பகுதி குறைகடத்தியால் உள்வாங்கப்படுகிறது. அதாவது, கதிரொளி ஆற்றலின் ஒரு பகுதி குறைகடத்திக்குக் கைமாறுகிறது என்று நாம் புரிந்து கொள்ளலாம். கதிரொளி ஆற்றலால் சிலிகான் குறைகடத்தியுள் இருக்கும் மின்னணுக்கள் பாய்ச்சலுக்குத் துணையாகிறது. இந்த மின்னணுக்கள் கால் போன போக்கில் பாய்கின்றன. ஆனால், மின் உற்பத்திக்கோ மின்னணுக்கள் ஒரே திசை நோக்கி சீராகப் பாய வேண்டும். இதற்காகக் குறைகடத்தியின் இரு முனைகளில் அலுமினியம், செப்பு போன்ற உலோகம் பொருத்தப்படுகிறது. இந்த நிலையில், மின்னணுக்கள் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஒரே திசையில் சீராகப் பாயும். இவ்வாறு ஒரே திசையில் சீராகப் பாயும் மின்னணுக்கள் மின்புலத்தை (‘எலக்ட்ரிக் பீல்டு’) உண்டாக்கும். இதுவே, மின் உற்பத்தியின் அடிப்படையாகும்.
எதற்காக 'சிலிகான்' போன்ற குறைகடத்திகள் போடொவோல்டைக்கு மின்கலத்திற்குத் தேவைப்படுகின்றன?
சிலிகானின் சிறப்பு வேதியியல் தன்மை இதற்கு முதன்மைக் காரணம். தூய நிலையில் ஒவ்வொரு சிலிகான் அணுவிலும் 14 மின்னணுக்கள் 2,8,4 என்று வெவ்வேறு ஓடுகளில் சுழன்று கொண்டிருக்கும். இது படிக வடிவம் கொண்டதாகும்.
வெளி ஓட்டினில் சுழலும் 4 மின்னணுக்கள் தனது சுற்றத்திலுள்ள 4 அணுக்களுடன் தனது மின்னணுவைப் பகிர்ந்து கொண்டு பிணைகிறது. இப்பிணைப்பினால், சிலிகான் பாய்ச்சலுக்கு மின்னணுக்கள் இன்றி மின் கடத்த இயலாது.
இதனை ஈடு செய்ய பாசுபரசு, போரான் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பாசுபரசு அணு (2,8,5) என்று மின்னணுச் சுழற்சி கொண்டது. அதாவது சிலிகானை(2,8,4) விட ஒரு மின்னணு கூடுதலாகக் கொண்டது என்பதைக் கவனிக்கலாம். இதனால் சிலிகான் - பாசுபரசு பிணைப்பு ஒரு கூடுதல் மின்னணுவைப் பாய்ச்சலுக்கு தருகின்றது. இதனால், பாசுபரசு கலக்கப்பட்ட சிலிகான் எதிர்மறை சிலிகான் என்றழைக்கப்படுகிறது.
ஆனால், போரான் அணுவோ (2,3) என்று மின்னணுச் சுழற்சி கொண்டது. அதாவது சிலிகானை விட ஒரு வெளியோடு மின்னணு குறைவாகக் கொண்டது. ஆகவே, சிலிகான் - போரான் பிணைப்பினால் ஒரு மின்னணு பகிர்வின்றிப் பொத்தல் (வெற்றிடம்) உருவாகின்றது. எனவே, போரான் கலப்பட சிலிகான் நேர்மறை சிலிகான் என்று அழைக்கப்படுகிறது.
இந்த இருவகை சிலிகான் குறைகடத்திகளின் சந்திப்பால் அருகிலுள்ள மின்னணுக்கள் எதிர்மறை சிலிகானிலிருந்து நேர்மறை சிலிகான் திசை நோக்கிக் கடக்கும். இதற்கு தேவையான ஆற்றல் கதிரொளியிலிருந்து கிடைக்கின்றது. மிஞ்சியிருக்கும் மின்னணுக்கள் ஆற்றலற்று சந்திப்பைக் கடக்க முடியாமல் தேங்குகின்றன. இந்த சிலிகான் அமைப்பினை 'போடொடையோடு' (‘Photo Diode’) என்று அழைக்கிறோம்.
சிலிகானின் பளபளப்புத் தன்மையால் கதிரொளியின் பெரும்பகுதி எதிரொளிக்கப்பட்டு வீணாகிறது. அதனால், கதிரொளி எதிரொளிப்பை ஓரளவு தடுக்க சிலிகான் குறைகடத்தியின் மீது ஒரு வகை மேல் அங்கி போர்த்தப்படுகிறது.
சூரிய ஒளிப் பலகங்களின் அமைப்பு கதிரொளி வீச்சுக்கேற்ப உயரமும் சாய்வும் கொண்டதாக இருக்க வேண்டும். வடக்கு அல்லது கிழக்குத் திசைகளில் பலக அமைப்பு கதிர்வீச்சுக்கு ஏதுவாக இருக்கும். எல்லாப் பருவங்களிலும் சூரிய ஒளிப் பலகங்களிலிருந்து சீரான மின் உற்பத்தியை எதிர்பார்க்க முடியாது. ஆனால், மின் உற்பத்தி சீராக உள்ள போது மின்சாரத்தை மாறுதிசை மின்னாக்கி (‘இன்வர்டர்') மூலமாகச் சேமித்துக்கொள்ளலாம். மழை, மேகமூட்ட நாட்களில் சூரிய ஒளி மின்சாரம் கை கொடுக்காமல் போகலாம். இந்நிலையில், பொது மின்னிணைப்பு அல்லது மின்னியக்கி(‘Generator’) வாயிலாக மின்சாரம் பெற்றுக்கொள்ளலாம். ஆகவே, சூரிய ஒளி மின்சாரம் உங்களது மின்சாரச் செல்வினை முற்றிலும் ஒழிக்காது. ஆனால், அதனைக் குறிப்பிடத்தகுந்த அளவுக்குக் கட்டுப்படுத்தும்.
நாம் நினைவில் கொள்ளவேண்டிய முதன்மையான செய்தி, நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு 'வாட்டு' சூரிய ஒளி மின்சாரமும் தூய்மையான மின்சாரமாகும். நிலக்கரி எரிக்காமல் கிடைத்த மின்சாரம். புகையற்ற மின்சாரம், சுற்றுச்சூழல் மாசுபடுத்தாத மின்சாரம், எதிர்காலத்தின் மின்சாரம் ஆகும்.
ஆங்கில மூலம்: http://science.howstuffworks.com/environmental/energy/solar-cell1.htm
- விவரங்கள்
- நா.வசந்தகுமார்
- பிரிவு: தொழில்நுட்பம்
ஒரு தனிமத்தில் நேர்மின் அயனி (proton), எதிர் மின்னயனி( electrons), நொதுமி( neutron) ஆகியவை இருக்கும். இவற்றில் எதிர்மின்னயனிகளின் ஓட்டமே மின்னோட்டம் எனப்படும். ஒவ்வொரு தனிமத்திலும் எதிர்மின்னயனிகளின் ஓட்டத்திற்கு ஒரு தடை இருக்கும். இதைத்தான் மின்தடை (resistance) என்கிறோம். இம்மின்தடை அதிகமாக இருக்கும்போது மின்னோட்டம் குறைவாகவே இருக்கும். எனவேதான் மின்தடை குறைவாக உள்ள மாழைகளை (metal) மட்டுமே நாம் மின்சாரத்தைக் கடத்தப் பயன்படுத்துகிறோம். [எ.கா: செம்பு (copper), அலுமினியம்]
மின்சாரத்தை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கடத்தச் செம்பு, அலுமினியம் ஆகிய மாழைகளையே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இம்மாழைகளின் வழியே ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இரண்டு வாட் மின்சாரத்தைச் செலுத்துகிறோம் என்று வைத்துக்கொள்வோம். 1 வாட் மின்சாரம் மட்டுமே சென்று சேரும். அதாவது, ஏறத்தாழ ஐம்பது விழுக்காடு மின்னிழப்பு ஏற்படுகிறது.
மின் உற்பத்தித் திறன்(2 வாட்) – மின் இழப்பு(1 வாட்) = மின் பயன்பாட்டுத்திறன்(1 வாட்)
இந்த இழப்பைக் குறைப்பதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்னிழப்பே இல்லாமல் மின்சாரத்தைக் கடத்தும் மாழைகள் மீக்கடத்திகள் (super conductors) எனப்படுகின்றன. மின்னிழப்பு மின்தடையினால் ஏற்படுகிறது என்பதை மேலே பார்த்தோம்.
சில தனிமங்கள் மிகக் குறைந்த வெப்ப நிலையில் மின்தடையே இல்லாமல் மின்சாரத்தைக் கடத்துகின்றன. இப்பண்பை மீக்கடத்தும் பண்பு என்கிறோம். மின்தடையே இல்லாததால் மீக்கடத்திகளைப் பயன்படுத்தும்போது மின்னிழப்பு இருக்காது. அதாவது மீக்கடத்தியின் மூலமாக இரண்டு வாட் மின்சாரத்தை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செலுத்தினால், இரண்டு வாட் மின்சாரமும் முழுமையாகச் சென்று சேரும்.
இவ்வாறு குறைந்த வெப்பநிலையில் பயன்படும் இம்மீக்கடத்திகளை இயல்பு வெப்பநிலையில் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாராய்ச்சிகளுக்கு வெற்றி கிட்டும்போது, குறைந்தது சென்னையைத் தவிர பிற நகரங்களில் நிலவும் மின்வெட்டுகள் குறையும்.
- வசந்தகுமார் (
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
மருத்துவமனைகள் நோயாளிகள் கூடும் இடம் மட்டுமல்ல. நோய்க்கிருமிகள் கூடும் இடமும் அதுதான். மருத்துவமனைக்குள் சென்றுவருபவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. உங்களுடைய நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருந்தால், நீங்கள் மருத்துவமனைவாழ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாவது நிச்சயம். குழந்தைகள், முதியவர்கள் இவர்களெல்லாம் மருத்துவமனைக்குள் போய்வருவது ஆபத்தானது. அறுவை சிகிச்சை செய்துகொள்வோரின் உடலில் குழாய்கள் செருகப்பட்டிருக்கும்; தோல் கிழிக்கப்பட்டிருக்கும். நோய்க்கிருமிகள் இவர்களின் உடலில் புகுந்துகொள்வதற்கு இந்த திறப்புகள் எளிதான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
MRSA எனப்படும் Staphylococcus aureus எனப்படும் பாக்டீரியாக்கள் எதிர்ப்பு ஆற்றல் மிக்கவை. எளிதில் அழிக்க இயலாதவை. C.difficile என்றழைக்கப்படும் Clostridium difficile பாக்டீரியாக்கள் குடல் நோய்களை ஏற்படுத்தவல்லவை. முதியவர்களை பாதிக்கக்கூடியவை. எனவே, மருத்துவமனனகளில் கிருமியகற்றும் கண்டுபிடிப்புகள் முக்கியமானவை. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உள்ள
HINS-light எனப்படும் கண்ணால் காணக்கூடிய ஒளியைக் கொண்டு மருத்துவமனையின் அனைத்து பகுதிகளையும் குளிப்பாட்டுவதன் மூலம் மருத்துவமனைவாழ் நோய்க்கிருமிகளில் பெரும்பகுதியை அழித்தொழிக்க முடியும் என்று ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த சாதனத்தை உருவாக்குவதில் பல்துறை நிபுணர்கள் கூட்டாக முயன்றுள்ளனர். மின் இயல், நுண்ணுயிரியியல், ஒளி இயற்பியல் ஆகியவற்றில் துறைபோகிய வல்லுநர் குழு இதற்காக இணைந்து பாடுபட்டுள்ளது. நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் இந்த HINS-light ஒளிவெள்ளத்தால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம். ஒளிவெள்ளத்தின் ஒளிக்கதிர்கள் நோயுண்டாக்கும் பாக்டீரியாக்களின் மூலக்கூறுகளை தாக்கி புதிய வேதிப்பொருட்களை உருவாக்குகின்றன. இந்த வேதிப்பொருட்கள் meticillin-resistant Staphylococcus aureus, (MRSA), Clostridium difficile(C.diff.) இவற்றை அழித்தொழிக்கவல்லவை.
மருத்துவமனைகள் பெருகிவிட்டதால் கிருமியகற்றும் தொழில்நுட்பத்திலும் மாற்றங்கள் தேவைப்படுகிறது. ஆட்களின் துணைகொண்டு செய்யப்படும் பணிகள் திருப்திகரமாக இருப்பதில்லை. HINS-light தொழில்நுட்பம் கருநீல ஒளியை உமிழக்கூடியது. இதனுடன், LED தொழில்நுட்பத்தை இணைத்து இதமான வெப்பத்தை அளிக்கவல்லதும், சாதாரண ஒளி உமிழும் விளக்குகளுடன் இணைந்து செயல்படக்கூடியதுமான சாதனங்கள் இப்போது உருவாக்கப்பட்டுள்ளன.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/11/101114190744.htm
தகவல்: மு.குருமூர்த்தி (
- வெப்பத்தை பூட்டிவைக்க இயலுமா?
- கல்லீரல் புத்துருவாக்கம்
- அரிப்பு நரம்புகள்
- முட்டையா...? கோழியா...?
- செவி பாதுகாப்பிற்கு ஒரு புதிய கருவி
- உணவை பகுத்து ஆராயும் காந்தவியல்
- பிடுங்கிய பல்லில் இருந்து ஸ்டெம் செல்கள்
- பெட்ரோலை ஒழித்துக் கட்டவருகிறது லித்தியவாயு
- மனித மரபணுக்களுக்கும் காப்புரிமை
- ஒளி மின் விளைவு – ஓர் அறிமுகம்
- ஏறுநடை போடும் ஏழை நாடுகள்
- கற்றது நினைவில் நிற்க என்ன செய்யவேண்டும்?
- உடல் தூங்க உள்ளம் விழித்திருக்கிறது.
- மண்டையைப் பிளந்த பிறகும் பேசலாம்
- நினைவு வலுப்பெற மூக்கில் ஸ்ப்ரே
- உயிரி கார்பன்
- கார்பன் டை ஆக்சைடில் இருந்து எரிபொருள்
- நின்றொளிரும் விந்தை
- 2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்
- மர எண்ணெயில் கார்கள் ஓடப் போகின்றன