அழுக்காறாக ஓடிக்கொண்டிருக்கிறது
அந்நதி
நகரின் ஒட்டுமொத்தக் கழிவையும்
தன் மேல் சுமந்து
பெரும் சாக்கடையாக
மாறிப் போயிருந்தது அது.

தாயின் முலைப்பாலினைப் போன்ற
தூய்மையிருந்தது
அப்போது

இன்று -
உண்ணா முலையாகிவிட்டது
நீர் உண்ணும் காலங்கள்
இனி சாத்தியமன்று

நம்மின் எல்லா கைகளும்
அதன் முகத்தில்
கரியைப் பூசியுள்ளது

தண்டனையற்ற குற்றம்
தவறு செய்ய ஏதுவானது

அதன் மணலாடைகள்
களையப்பட்டன
அரணாக நின்ற மரங்கள்
களவாடப்பட்டன

நதியின் உயிரிழையறுக்கப்பட்டு
இரசாயனக் கலவைகள்

அதன் வாயில் கொட்டப்பட்டன

நஞ்சை சுமந்த நதி
சாவு ஏந்திற்று

நம் பிள்ளைகளுக்குக் காட்ட
இன்று நதியில்லை

நாதியற்றுப் போனது
நீயும் நானும்
நீர் குடித்து வளர்ந்த
இந்நதியும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.