அந்த வெறுமையைத்
தோட்டம் அறிந்திருக்கிறது.
கைநிறைய மலர்களோடும் கனிகளோடும் உறவாடும்
அந்த ஸ்பரிசத்தை இழந்த தென்னையும் மாவும்
ஒற்றைக் குயிலைச் சுமந்தபடிக்கு
காற்றின் மௌனத்தைச் சுவைக்கிறது.
அசையும் அசையா
பொருட்களெல்லாம்
அறிந்திருக்கின்றன அப்பாவையென்பது
எவ்வாறாகவோ உணரப்படுகிறது.
முதுமையும் குழந்தைமையுமான
தனி வாசனை வீடெங்கிலும் இருக்கிறது.
அப்பா இருந்தபோது
அது அப்பாவின் வாசனை என்பதை
அறியாமலேயே இருந்தோம்.
விதவிதமான குருவிகள்
வந்தபடியுள்ள தோட்டம்
அப்பாவால் பேணப்பட்டது.
குருவிகளைத்
தோட்டம் அறிந்திருக்கிறது.
ஜன்னல் கம்பிகளில்
கை பதித்த படிக்கு அவற்றோடு
கண்களால் உறவாடுவார்.
இன்றைக்கும்
தோட்டம் குருவிகளால் நிறைந்திருந்தாலும்
கை நிறைய மலர்களோடும் கனிகளோடும்
உறவாடும் அந்த ஸ்பரிசத்தை
இழந்த தவிப்பு
தோட்டத்திற்கிருக்கிறது.
அப்பாவின்
மேல் துண்டையும்
கால் செருப்பையும்
கண்ணுரும்
எங்களது
தவிப்பைப் போல.
கருக்கல் விடியும் - மே 2012
தவிப்பு
- விவரங்கள்
- வியாகுலன்
- பிரிவு: கருக்கல் விடியும் - மே 2012
More articles by வியாகுலன்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.