ஆண்களுக்கு மநு வரையறுத்துக் கூறுகிற லட்சியத்தின் சாராம்சம் இதுதான் : புனிதமான மந்திர உச்சாடனத்தோடு அவளைத் திருமணம் செய்து கொண்ட கணவன் எப்போதும் – இந்த உலகிலும், மறுஉலகத்திலும் அவனுடைய மனைவிக்கு மகிழ்ச்சியின் மூலாதாரமாக இருக்கிறான். அவள் எப்போதும் மகிழ்ச்சியுடனிருக்க வேண்டும். தனது வீட்டு விவகாரங்களை நிர்வகிப்பதில் சாமர்த்தியமாக இருக்க வேண்டும். தனது பாத்திரங்களை சுத்தம் செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். செலவு செய்வதில் சிக்கனமாக இருக்க வேண்டும். இதை ஒரு பெண்ணுக்கு மிகவும் உன்னதமான லட்சியம் என்று இந்துக்கள் கருதுகின்றனர்.

பெண்களின் இயலாமைகள் என்ற அவருடைய நினைவுச் சின்னத்தின் மீது ஓர் அடையாளக் கல்லை வைப்பது போன்று மநு, ஒரு பெண்ணைக் கொல்வதை சாதாரண குற்றம் என்கிறார். மேலும், மது (அருந்துதல்), பெண்கள், சூத்திரர்கள், வைசியர்கள் அல்லது சத்திரியர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கையில்லாதவர்களைக் கொல்வது ஆகிய அனைத்தும் சிறிய குற்றங்களேயாகும். ஒரு சூத்திரன், வைசியன் அல்லது ஒரு சத்திரியனைக் கொல்வது ஒரு சாதாரண குற்றமே என்று ஏன் மநு கூறினார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். ஒரு பார்ப்பனர் இவர்கள் அனைவருக்கும் மேலானவன் என்றும், ஒரு பார்ப்பனரை கொல்வதுதான் மிகப்பெரிய குற்றம் என்றும் நிலைநிறுத்துவதற்கு அவர் முயன்று கொண்டிருந்தார். ஆனால், அதே விதியைப் பெண்களுக்கு அவர் ஏன் பயன்படுத்தவில்லை? ஏனெனில், மநுவின் பார்வையில் ஒரு பெண் எந்த மதிப்பும் இல்லாத ஒரு பொருள் என்பதே இதற்குக் காரணமாகும்.

பெண்களைப் பற்றிய மநுவின் சட்டங்களில் புதியவையோ, அதிர்ச்சியளிக்கத் தக்கவையோ ஒன்றுமில்லை. இந்தியாவில் பார்ப்பனியம்

தோன்றியது முதல் பார்ப்பனர்களின் கருத்துகள் இவையேயாகும். மநுவுக்கு முன்னால் அவை சமூகத்தத்துவம் என்ற அளவில் மட்டுமே இருந்தன. ஒரு சமூகத் தத்துவமாக இருந்ததை, அரசின் சட்டமாக மாற்றியதுதான் மநு செய்த வேலையாகும். பெண்களின் மீது இந்த இயலாமைகளை மநு சுமத்துவதற்கு இட்டுச் சென்ற காரணத்தை அவர்கள் அறியாதது, இரண்டாவது விஷயமாகும். புத்தரின் சமயத்தில் வந்து சேர்ந்து அதன் மூலம் பார்ப்பனிய மதத்தின் அடிக்கட்டு மானத்தையே தகர்ப்பதற்கு பெரும் கும்பலாக வந்த ஆரிய சமூகத்தின் இரு முக்கியப் பகுதியினர் சூத்திரர்களும் பெண்களுமாவர். புத்த சமயத்தின் திøசயில் பெரும் எண்ணிக்கையில் வந்து கொண்டிருந்த பெண்களின் நுழைவைத் தடுத்து நிறுத்துவதற்கு மநு விரும்பினார்.

இதற்காகத்தான் மநு இந்த இயலாமைகளைப் பெண்களின் மீது சுமத்தி, அவர்களை நிரந்தரமாக முடமாக்கினார். இதை சந்தேகிப்பவர்கள் மநுஸ்மிருதியில் அடங்கியுள்ள கீழ்வரும் ஆணைகளை கவனித்துப் பார்க்கட்டும் : ஒரு நபர் இறந்தபோது செய்யப்படும் ஈமச் சடங்குகளும் இறுதிக் காரியங்களும் – அவர் சாதி மறுப்புத் திருமணத்தின் மூலம் பிறந்தவராக இருந்தாலோ, துறவு வாழ்க்கையில் ஈடுபட்டவராக இருந்தாலோ, தற்கொலை புரிந்து தமது வாழ்க்கையை முடித்துக் கொண்டவராக இருந்தாலோ – அந்த ஈமக் கடன்கள் திரும்பப் பெறப்படும்.

இந்த ஆணை, மற்றவர்களோடு அதாவது, (1) துறவு மனப்பான்மை உடையவர்கள் (2) மதப் பற்றில்லாத குழுவினரோடு சேர்ந்த பெண்களுக்கு எதிராக குறிவைத்துள்ளதாகும். இந்த ஆணையில் துறவு மனப்பான்மையானது, பரிவர்ஜகர்களைக் குறிப்பிடுகிறது. அதாவது, தமது இல்லங்களை விட்டு வெளியேறி துறவறத்தை மேற்கொண்டவர்கள் மற்றும் மதப் பற்றில்லாத குழுவினர் என்று குறிப்பிட்டதற்குக் காரணம், புத்த சமயம் தான் மநுவின் மனதிலிருந்தது என்பதில் சிறிதும் அய்யமில்லை. எனவே ஒரு துறவிக்கு அல்லது மதப்பற்றில்லாத குழுவில் சேர்ந்து கொண்ட ஒரு பெண்ணுக்கு ஈமச் சடங்குகள் நடத்தப்படக் கூடாதென்று மநு அறிவிக்கும்போது, புத்தரின் சமயத்தில் சேர்ந்து கொண்ட ஒரு குடும்பத்தின் நபருக்கு – ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும் – ஈமச் சடங்குகள் செய்வதை மநு தடை செய்துள்ளார். வேறு சொற்களில் கூறுவதெனில், அவர்கள் கட்டவிழ்த்து விடப்பட்டவர்கள், இனி ஒருபோதும் குடும்பத்துடன் சேர்ந்தவர்களல்லர் என்றே கருதப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

ஒரு சில பக்கங்களின் எல்லைக்குள், இந்து பெண்ணின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியின் வரலாற்றை எடுத்துக்காட்டுவதற்கு நான் முயன்றுள்ளேன். அவர்களின் வீழ்ச்சிக்கு யார் காரணம், அவர் ஏன் அதை ஏற்படுத்தினார் என்பது தொடர்பான விளக்கத்தைத் தருவதற்கும் நான் முயன்றுள்ளேன். தப்பெண்ணம் இல்லாத மற்றும் பாரபட்சமில்லாத ஒவ்வொருவரும் பெண்ணின் இடையறாத துயரங்களுக்கு பொறுப்பானவர் புத்தர் அல்லர் என்பதை உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால், உண்மையில் பெண்ணை உயர்த்துவதற்கு புத்தர் முயன்றார் என்றால், அது அவளை ஆணுக்கு இணையாக உயர்த்துவதற்குதான்.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(2), பக்கம் : 126

Pin It