மோடி ஆட்சியில் பாடத் திட்டத்தில் இந்துத்துவா திணிப்பு - காஷ்மீர் மக்கள் மீதான அடக்குமுறைகள் - வங்கிப் பண பரிமாற்றத்தில் நிகழ்ந்த மோசடிகள் பற்றிய ஒரு தொகுப்பு:

modi 297மோடியின் ஐந்தாண்டுகளில் பள்ளிக் கல்வி : 2014இல் மோடியின் தேர்தல் அறிக்கையில், மாணவர்களுக்கு புதிய கல்வித் திட்டம் கொண்டு வரப்படும் என்று  சொல்லப்பட்டது. அதன்படி 2016ஆம் ஆண்டு ஒரு குழு நியமிக்கப்பட்டு 230 பக்க வரைவு தயார் செய்யப்பட்டது. பிறகு அதையும் மாற்றியமைத்து சுப்ரமணியம் என்பவர் தலைமையின் கீழ் ஒரு புதிய குழு தொடங்கப்பட்டு வரைவு தயாரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அதுவும் இன்று வரை முடியவில்லை.

இந்தியாவில் 2009ஆம் ஆண்டு கல்விக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதில் 1 முதல் 8ஆம் வகுப்பு சர்வ சிக்சா அபியான் திட்டத்தின் கீழும், 9 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள் அனைத்தும் இராஷ்ட்ரிய மத்யமிக் சிக்சா பையன் திட்டத்தின் கீழும் தனித்தனியாக பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. ஆனால், மோடி அரசு இந்த இரண்டு திட்டத்தையும் இணைத்து சமக்ரா சிக்சா அபியான் என்ற திட்டத்தின் கீழ் அனைத்தையும் கொண்டு வந்தது. அதனால், ஒரே பட்ஜெட்டாக வெளியானது. இதன் காரணமாக கல்விக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் மிகக் குறைவாக மாறியது.

கடந்த பத்தாண்டுகளில் 2018-19ஆம் ஆண்டில் கல்விக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தான் மிக குறைவானது. வெறும் 3.5சதவீதம் தான் கல்விக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் அதிகாரத்தைக் கொண்டு மாநிலத்தில் பின்பற்றி வந்த கல்விக் கொள்கை யிலும் தலையீடு செய்தது மோடி அரசு. அதனால் பெரும் பிரச்சினைகள் உருவானது. மோடி அரசின் இந்த தலையீட்டால் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லப்பட்ட கல்விப் பட்டியல் மாநில அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்ற குரல் ஓங்கியிருக்கிறது. தமிழகத்தில் இது தேர்தல் அறிக்கையாகவும் கூட மாற்றப்பட்டிருக்கிறது. மோடி அரசு கொண்டு வந்த ஆதார் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். பள்ளிக்கூடங்கள் மாணவர்களின் ஆதாரை ஆவணங்களில் இணைக்க வேண்டும் என்ற கட்டாய உத்தரவினால் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து மாணவர்கள் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.

மருத்துவத் துறையில் நீட் கட்டாயமாக்கப் பட்டதால் தமிழகம் இந்நாள் வரை பெற்று வந்த வளர்ச்சியையே இழக்கும் நிலை ஏற்பட்டது. அனிதா போன்ற மாணவிகளின் எதிர்காலமும் பறி போனது.

கல்வி நிலையங்களிலும் நூல்களிலும் இந்துத்துவா பரப்புரை: டெல்லியில் உள்ள குரு கோபிந்த் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் செமஸ்டர் சட்டப் படிப்பில் இப்படி ஒரு கேள்வி.

அஹ்மத் ஒரு முஸ்லிம்; இந்துக்களான ரோஹித், துசார், மனவ் மற்றும் ராகுல் இருக்கும் போதே சந்தையில் மாட்டை வெட்டிக் கொல் கின்றான். இப்போது  அஹ்மத் செய்தது குற்றமா?

இதற்கான தொடக்கம் பா.ஜ.க. ஆட்சி யமைக்கும்போதே தொடங்கப்பட்டது. இந்தியாவில் பாட திட்டங்களை வடிவமைக் கும் குழு தொடங்கி எல்லாவற்றையும் இந்துத்து வாவின் பக்கம் நிறுத்தியிருக்கிறது பா.ஜ.க.

2013இல் ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பாட புத்தகங்களை திருத்தம் செய்யும் குழுவை மாற்றியமைத்தார்கள். இதனைப் பற்றி ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஒருவர் கூறும்போது, “சென்ற முறை அமைத்த குழுவில் சில சங் உறுப்பினர்கள் யதார்த்தமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இம்முறை தேர்ந்தெடுக்கப்படும் குழு உறுப்பினர்கள் அனைவருமே சங் அமைப்பைச் சார்ந்தவராகத் தான் இருப்பார்கள்.

இராஜஸ்தானில் 2016க்கு முன் மூன்றாம் வகுப்பு புத்தகத்தில் இருந்த ஒரு கதை.

“அஜ்மீர் நகரத்தின் சிறப்பை இரு மாணவர்கள் சுற்றிப் பார்க்கிறார்கள். குருமீத் கூட்டம் நிறைந்த இரயிலில் ஏறி அஜ்மீர் வருகிறான். அவனது நண்பன் ரஜாக் அவனை அழைத்துக் கொண்டு மொய்னுதீன் சிஸ்தி தர்கா விற்கு செல்கிறான். தர்காவில் வருடா வருடம் நடக்கும் உர்ஸ் விழாவைப் பற்றி சூர்மீதிற்கு சொல்கிறான்.  அடுத்ததாக தாராகர் கோட்டைக்கு செல்கிறார்கள். அங்கே இராஜபுத்திர அரசர் பிரத்விராஜ் சௌகான் நினைவு சின்னத்தை பார்க்கிறார்கள். அனா சாகார் ஏரிக்கு வரும்போது சோர்வடைந்து வேறு எங்கும் செல்லாமல் திரும்பு கிறார்கள்.”

தற்போது புதிய பாடத் திட்டத்தில், மூன்றாம் வகுப்புப் பாடத்தில் வரும் அதே கதையில்:

“அதிலும் குருமீத் நெரிசல் மிகுந்த இரயிலில் வந்து அஜ்மீர் நகரில் இறங்குகிறான். இருவரும் அந்த தர்காவிற்கு செல்கிறார்கள். ஆனால் உர்ஸ் விழாவைப் பற்றி பெரிதாக எதுவும் இல்லை. தர்காவிற்கு அடுத்ததாக தராகர் கோட்டைக்குச் செல்கிறார்கள். அங்கு, இந்த பாரத நாட்டை ஊடுருவ முயன்று முகம்மது கோரி என்ற முஸ்லிம் மன்னனை தோற்கடித்த இராஜபுத்திர அரசன் பிரத்விராஜ் சௌகானின் நினைவு சின்னத்தைச் சுற்றிப் பார்க்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு, இந்து மத யாத்திரைத் தளமான புஷ்கர் நகருக்குச் செல்கிறார்கள். அங்கே ரஜாக், குருமீத்திற்கு பிரபலமான பிரம்மா கோயிலையும், மகாபாரத வீரர்களான பாண்டவர்களால் கட்டப்பட்ட ஐந்து நீர்த் தேக்கங்களையும் சுற்றிப் பார்த்தார்கள்” என்று முடிகிறது கதை.

இந்த புதிய பாடத் திட்டத்தின் நோக்கம், படிக்கும் மாணவர்கள் முழுக்க இந்து கலாச் சாரங்களை மட்டுமே படிப்பவர்களாகவும் இங்கே இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் இந்துத்துவாவிற்கு பணிந்து வாழ்பவர்களாக வுமே வாழ்ந்திட வேண்டும். அப்படி இல்லாதவர்கள் இந்தியாவைக் கொள்ளை யடித்த முஸ்லிம் மன்னர்களின் வாரிசுகள் என எல்லோராலும் பார்க்கப்பட வேண்டும் என்பதே.

இந்த புதுப்பித்த பாடத் திட்டத்தில் மாற்றப்பட்ட அம்சங்களில் சில:

கணவன் இறந்தால் மனைவி தீயில் இறங்கி உயிரை விடும் சதி போன்ற நடவடிக்கைகள் அரசு நிகழ்த்தும் ஒழுங்கு விதிமுறைகள் போலானது என்று கூறப்பட்டிருக்கிறது.

பாட புத்தகங்களின் ஒவ்வொரு பகுதியும் தேசியவாதத்தைப் பேசுவதாகவும், இராணுவ வீரர்களிடம் கேள்வி கேட்பது மரியாதை குறைவானது என்றும் பேசுகிறது.

6ஆம் வகுப்புப் பாடத்திலுள்ள ஒரு கதை, தடை செய்யப்பட்ட சதி பழக்கம் சரியானது என்ற போர்வையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த கதையில்,

“சிறிய பகுதியை ஆட்சி செய்த அரசன் சுராவத். டெல்லியில் இருந்து படையெடுத்து வரும் பாதுஷாவை எதிர்க்கப் போகும்போது ராணி அவரைத் தடுத்து, சதியின் பெருமையைப் பற்றி சொல்கிறார். அதனால்  தன் தலையை அறுத்து அந்த இரத்தத்தின் மூலம் கோயிலை சுத்தம் செய்கிறார் ராணி. பிறகு அரசன் ராணியின் முடியை மாலையாகக் கழுத்தில் சுற்றி ராணியின் தலையை பதக்கமாக அணிந்து கொண்டு போருக்குப் போகிறார்.

இப்படியான கதைகளைப் பாடத்தில் சேர்ப்பதன் மூலம் தங்களது சனாதன தர்மத்தை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு தலைமுறையை உருவாக்க மாணவர்களைப் பழக்க நினைக்கிறார்கள்.

4ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் ஆண்கள் அனைவரும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர் களாகவும், பெண்கள் குடங்களில் தண்ணீர் நிரப்புபவர் களாகவும், சமைப்பவர்களாகவும் சித்திரங்களின் மூலம் காட்டப்பட்டிருக்கிறது. முதலாம் வகுப்புப் பாடத்திலேயே, மொழியின் எழுத்துக்களை சொல்லித் தர வேண்டிய இடங்களில் இந்து மத அடையாளங்களைக் கொண்ட வார்த்தைகள் மட்டுமே கையாளப் பட்டுள்ளது.

ஐந்தாம் வகுப்பு பாடத் திட்டத்தில், பசு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தைக் கூறும்போது, ஞானம், வலிமை, உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் வளமை என்பதை குறிப்பதாகவும் அதனால் குழந்தைகள் பசுவுக்கு சேவை செய்யவும், பாதுகாக்கவும் வேண்டும் என குறிப்பிடப்பட் டிருக்கிறது.

எட்டாம் வகுப்பு பாடத் திட்டத்தில், “பசு பாதுகாப்பில் கிராம முன்னேற்றம்” எனும் தலைப்பில் பாடமே இடம் பெற்றுள்ளது. அந்த புத்தகத்திலேயே முதல் துணை பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் சோம்நாத் கோயிலை திரும்பக் கட்டமைத்ததில் உள்ள மிகப் பெரும் பங்களிப்பைப் பற்றி விரிவாகக் கூறுகிறது.

அதைப் போல் 3, 4, 5ஆம் வகுப்பு சுற்றுச் சூழல் அறிவியல் பாடத்தில் நமது நாட்டின் பெருமை என்று 15 தலைவர்கள் படங்கள் இடம் பெற்றிருக்கிறது. இதில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை.

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகம், சாதி அமைப்பின் வரலாற்றை மூடி மறைக்கும் விதமாக ஒரு பாடத்தைக் கொண்டிருக்கிறது. அதில், “தொடக்கத் தில் சாதி அமைப்பானது மிக சிறப்பானதாக இருந்தது. சாதி, அவரவர் தொழில்களை சார்ந்ததே தவிர பிறப்புடன் சம்பந்தப்பட்டதல்ல. சாதிகளுக்கு இடையில் குடிநீர், உணவு பகிர்ந்து கொள்ள திருமண உறவை வைத்துக் கொள்ள எந்தத் தடையும் இல்லை. அதனால் தீண்டாமைக்கு இங்கு இடம் இல்லை” என்றும் கூறுகிறது.

3ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்களின் தொடக்கத் திலேயே, தேச பக்தி என்ற பாடம் அல்லது பாடலைக்  கொண்டதாகத் தான் அமைந்திருக் கிறது.

7ஆம் வகுப்பில் உள்ள ஆங்கில பாடப் புத்தகத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் கொண்ட தொலைத் தொடர்பு பற்றி கூறும்போது நரேந்திர மோடியின் வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் இடம் பெற்றுள்ளது.

4ஆம் வகுப்பில் உள்ள சுற்றுச்சூழல் அறிவியல் புத்தகத்தில் இந்திய அரசின், கங்கா திட்டமானது மிக சிறப்பானது. இதன் மூலம் கங்கை மீண்டும் நிரந்தரமாக சுத்தப்படுத்தப் படும் என்று சொல்லப்பட் டிருக்கிறது. (ஆனால் கங்கை மோடி அரசின் கீழ் தான் மிக அசுத்தமான நிலைக்கு சென்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது)

புதுப்பிக்கப்பட்ட புத்தகங்களின் அனைத்து பகுதிகளிலும், இந்துக்களை மட்டும் முதன்மைப் படுத்தும் கருத்துகளும் பா.ஜ.க.வின் ஆட்சி சிறப்புகள் என்ற பெயரில் அரசின் திட்டங்கள் பற்றியும் ஆங்காங்கே கூறப்பட்டிருக்கிறது. (ஆதாரம் : ஸ்க்ரால், 14.11.18)

மோடி பொறுப்பேற்றப் பிறகு “இந்திய வரலாற்று ஆராய்ச்சி சபை” நிறுவனத்தின் தலைவராக சுதர்சன் ராவ் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பினுடைய மிகப் பெரும் அனுதாபி. இவர் பொறுப்பேற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்த மூன்று பேரை இந்த கவுன்சிலுக்குள் பணியமர்த்தினார்.

இந்தியாவின் கல்விக் கொள்கையை உருவாக்குவதில் மிகப் பெரும் பங்கு இந்த கவுன்சிலுக்கு இருக்கிறது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலையீடு ஏற்பட்ட பின்பு, மகாபாரதம், இராமாயணத்தை ஆய்வு செய்து புத்தகங்களில் வரலாற்றுப் பாடமாக்க வேண்டும் என கூறி வருகிறார்கள். (ஃபர்ஸ்ட்போஸ்ட், ஜனவரி 2015)

மோடி அரசின் உதவியுடன் சங்பரிவார அமைப்புகள் கல்வி பாடப் புத்தகங்களில் வரலாற்றைத் திரித்து தங்களைக் கதாநாயகனாகக் காட்ட முயற்சிக்கிறார்கள். இதற்காக, கல்வி நிலையங்களையும், நாட்டின் கல்வி அமைப்பை யும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

(தொடரும்)

Pin It