பன்னாட்டு புத்தகக் கண்காட்சி சென்னையில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. நிறைவு விழாவில் 118 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. ஏராளமான நூல்கள், 365 நூல்கள் பிறமொழிகள் தமிழில் இருந்து மொழிபெயர்ப்பதற்கான ஒப்பந்தங்களாக அவை நடந்து முடிந்திருக்கின்றன.

நிறைவு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பெரியாருடைய எழுத்து, பேச்சுகள், இந்திய மொழிகளை உள்ளடக்கி 21 உலக மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிட தமிழக அரசு ஏற்பாடுகளைத் தொடங்கி இருக்கிறது என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டு இருக்கிறார். அதே உரையில் அவர் மற்றொரு செய்தியையும் குறிப்பிட்டு இருக்கிறார். பதிப்புத் துறையில் பெரிதும் வளராத காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையும், ஏங்கல்ஸ், லெனின் அம்பேத்கர் உள்ளிட்ட பல அறிஞர்களுடைய நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார். அந்த வகையில் முன்னோடிகளின் கனவை நிறைவேற்றும் காட்சிகளாக இந்த பன்னாட்டு புத்தகக் கண்காட்சி உள்ளது என்றும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

பெரியாருடைய சிந்தனைகள் நாடு முழுவதும், உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்பதற்காக, நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்த வேண்டிய ஒரு சூழ்நிலை தமிழகத்தில் உருவானது. பெரியார் எழுத்து பேச்சுகளை தொகுத்து 28 தொகுதிகளாக பெரியார் திராவிட கழகம் வெளியிட்ட போது,அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் வந்தன. குறிப்பாக பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனமே அந்த வழக்கை தொடர்ந்தது. முதலில் நீதிபதி சந்துரு அந்த வழக்கை விசாரித்து இந்தத் தொகுப்பை வெளியிடுவதற்கு தடை விதிக்க முடியாது, இடைக்கால தடை கிடையாது என்று அறிவித்தார். பிறகு இரண்டு நீதிபதிகள் அடங்கிய மேல்முறையீட்டுக்கு வழக்கு அப்பில் செய்யப்பட்டது.

இரண்டு நீதிபதிகளும் நீதிபதி சந்துருவின் தீர்ப்பையே உறுதி செய்தார்கள். தடைகள் நீக்கப்பட்டதற்கு பிறகு ஏராளமான நூல்கள் பெரியார் எழுத்துக்கள், பேச்சுக்கள், புத்தகங்களாக நாட்டு மக்களிடம் பல பதிப்பகங்களால் கொண்டு வரப்பட்டன. இன்றைக்கு அடுத்த கட்டமாக 21 உலக மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் பெரியார் நூல் வர இருக்கிறது என்பது அடுத்த கட்டமாக வந்திருக்கிற மகிழ்ச்சிக்குரிய செய்தி. பெரியாரிய சிந்தனைகள் உலகம் தழுவியவை. அவை உலகம் முழுவதும் பரப்பப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கை எட்டி அடைவதற்கு தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசு ஒன்று வரும் வரை நாம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. அந்த சாதனை போல மகுடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தட்டிச்சென்று இருக்கிறார் .

பெரியாரியவாதிகள், சமூக மாற்றத்தை விரும்புகிற அனைத்து முற்போக்கு முற்போக்கு சக்திகளும், நிச்சயமாக இதை வரவேற்பார்கள், மகிழ்வார்கள்.

- விடுதலை இராசேந்திரன்

***

வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு ஆதரவான போராட்டம்: வழக்கு தொடரப்பட்ட கள்ளக்குறிச்சி தோழர்கள் விடுதலை

சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும் தாழ்த்தபட்ட பழங்குடியினருக்கு ஒரளவு பாதுகாப்பாக இருக்கும் வன்கொடுமை தடுப்புசட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டில் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை அவசர அவசரமாக அமுல்படுதில் ஒன்றிய அரசு முனைப்பு காட்டியது. இதனை எதிர்த்து இந்தியா முழுவதும் தொடர்சியான நீடித்த போராட்டங்கள் நடைபெற்றன. பல மாநிலங்களில் துப்பாக்கி சூடு நடைபெற்று உயிர்ப் பலி ஏற்பட்டது. இதன் பின்னரே இத்தீர்ப்பை உச்சநீதிமன்றமே வாபஸ் பெற்றது.

தமிழகத்தில் இடதுசாரிகட்சிகளும், திராவிட இயக்கங்களும், தலித் அமைப்பு களும் ஒருங்கிணைந்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர்.

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் 9.4.2018 மற்றும் 2.7.2018 ஆகிய தேதிகளில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சின்னசேலம் ரயில் நிலையத்தில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சேலம் இருப்புபாதை காவல்படை, ஆத்தூர் காவல்நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

 இந்த வழக்குகள் விழுப்புரம் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்குகளை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வழக்கறிஞர்கள், வி.ராஜா, எ.சங்கரன் ஆகியோர் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நடத்தி வந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தநிலையில் 24.11.2022ல் மாலை 7 மணியளவில் தீர்ப்பு வழங்கபட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் த.ஏழுமலை. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர். மு.தமிழ்மாறன், திராவிடர் விடுதலை கழகம் மாவட்டச் செயலாளர் க.ராமர், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் அ.ப.பெரியசாமி, விசிக மாவட்ட துணைச் செயலாளர் சி.ராமமூர்த்தி, விசிக கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலாளர் பா. பாசறை பாலு, விசிக இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநில துணைச் செயலாளர் ச. பொன்னி வளவன் ஆகிய 7 பேரும் குற்றவாளிகள் இல்லை என வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்பு சமூக நீதி போராட்டத்தை மேலும் மேலும் முன்னெடுத்து உத்வேகம் அளிப்பதாகும். பொதுநல நோக்கதுடன் நீதிமன்றங்களையும் ஒரு போராட்ட களமாக மாற்றிவரும் தோழர்கள் வி. ராஜா, ஏ.சங்கரன் போன்ற வழக்கறிஞர்கள் அதிகமானோர் உருவாகும்போது வழக்குகளும் உறுதிமிக்க போராளிகளை உருவாக்கும்.

- க.ராமர், கள்ளகுறிச்சி மாவட்டக் கழகச் செயலாளர்

Pin It