ஆளுநர் உரை : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களே, உறுப்பினர்களே, அவைத் தலைவரே உங்கள் அனைவருக்கும் குடியரசு தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநரின் நமஷ்காரம். ஜெய் சிரி ராம் என்று நான் இப்போது கூறுவேன். அதை நீங்கள் திருப்பி முழங்க வேண்டும் (அவையில் நான்கு பேர் மட்டுமே திருப்பி முழங்குகிறார்கள்) சரி அனைவரும் இதை முழங்காவிட்டாலும், நான் அனைவரும் முழங்கியதாக பேரவைக் குறிப்பில் பதிவு செய்ய உத்தரவிடுகிறேன்.

தமிழ்நாட்டில் இப்போது மாநில உரிமை என்ற கூச்சல் காதை துளைக்கிறது. இப்போதைய தேவை மாநில உரிமை அல்ல, ஆளுநர்களின் உரிமை. அதுவும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களுக்கான உரிமை. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் சனாதன தர்மம். இந்த சனாதன தர்மம் இல்லாவிட்டால் ஜனநாயகமே இல்லை என்று நமது முன்னோர்களும், ரிஷிகளும், தேவர்களும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அடித்து கூறிவிட்டார்கள்.

சூத்திரர்கள், பஞ்சமர்கள் அன்னிய மதத்தினர் ஓட்டு போட்டதாலேயே மக்கள் பிரதிநிதியாகிவிட முடியாது. தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் வழிவந்த எங்கள் ஆணைக்கு நீங்கள் அடிபணிந்தாக வேண்டும். இதுதான் சனாதன வாழ்க்கை. நீங்கள் போடுகிற சட்டங்களுக்கு நாங்கள் ஒப்புதல் தர முடியாது. எங்களது மாளிகையிலேயே பல சட்டங்களை உருவாக்கி உங்களுக்கு எங்களது ஆட்கள் மூலம் அனுப்பிவிடுவோம். அதற்கு நீங்கள் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதுதான் சனாதன ஜனநாயகம்.

நமது மன்னர்கள் மக்களிடம் வரி வாங்கினார்கள். அதை மக்களுக்கு செலவிட்டார்கள் என்பதற்கு வரலாற்றில் நீங்கள் எந்த ஆதாரத்தையாவது காட்ட முடியுமா? நீங்கள் இப்போது செலுத்திய வரிகளுக்கு பங்கு கேட்பது நமது முன்னோர்களும், தேவர்களும் அவர்கள் வழிவந்த அரசர்களும் போற்றி பாதுகாத்துவந்த கலாச்சாரத்தையே சீர்குலைப்பதாகும்.

தொழில் முதலீட்டுக்கு ஏன் வெளிநாடு போக வேண்டும்? நமக்கான தொழில்கள் நமது பாரத தேசத்தில் இருக்கிறது. முடி வெட்டுவது, மலம் எடுப்பது, சவரம் செய்வது, மண்பானை செய்வது போன்ற நமது பாரம்பரிய தொழில்களை வளர்ப்பதற்கு நமது பிரதமர் விஷ்வகர்மா என்ற திட்டத்தை வகுத்துள்ளார். அதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு அன்னிய முதலீட்டை கொண்டுவருவது பாரத துரோகம் என்று நான் பதிவு செய்கிறேன்.

இது என்ன தமிழ்நாடு? இப்படி ஒரு தீர்மானத்தை இந்த அவையில் நிறைவேற்ற உங்களுக்கு யார் உரிமை தந்தது? பாரதத் தமிழர்கள், பாரதத் தமிழகம் அல்லது தமிழகம் என்றே பெயர் சூட்டியிருக்க வேண்டும். தமிழ்நாடு என்ற சொல் இன்று முதல் முற்றாக ஒழிக்கப்படுகிறது. அரசு சின்னத்தில் உள்ள வாய்மையே வெல்லும் என்ற சொல்லும் நீக்கப்பட்டு ஜெய் சிரி ராம் என்று மாற்றியமைக்கப்படுகிறது.

நமது மகாபாரதத்திலேயே சூது விளையாடி இருக்கும் போது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து சட்டப்பேரவை நமது கலாச்சாரத்தையே அவமதித்துள்ளது. அதனால் தான் அதற்கு நான் ஒப்புதல் தர மறுத்தேன். நான் ஒரு கலாச்சார பாதுகாவலன்.

நான் ‘ரா’ உளவு நிறுவனத்தில் பணியாற்றியவன். நாகாலாந்து ஆளுநராக இருந்து அங்கு விடுதலை கேட்ட தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களால் விரட்டியடிக்கப்பட்டு தமிழகம் திரும்பி வந்தேன். ஆனாலும் எனது தேசபக்தி குறைந்துவிடவில்லை. எனது உடல் முழுவதும் அந்த ரத்தம் ஓடிக்கொண்டுள்ளது. தேசிய கீதத்தை நான் திரும்ப திரும்ப பாடுவேன். சாப்பிடுவதற்கு முன் பாடுவேன். தூங்குவதற்கு முன் பாடுவேன், பூஜைக்கு முன் பாடுவேன், குறட்டை வராவிட்டால் பாடுவேன். இப்படி பாடிக்கொண்டே இருந்தால் தான் தேசபக்தி நம்மிடம் ஊறிக்கொண்டே இருக்கும். அதனால் தான் சட்டமன்றத்தில் உரை தொடங்கும் முன்பு கூட தேசிய கீதம் பாட வேண்டும் என்று நான் திரும்ப திரும்ப கூறினேன். ஆனால் அடம் பிடிக்கிறது இந்த சட்டசபை. இது மிகப்பெரிய அவமதிப்பு அல்லவா

காந்தி தான் நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தாரா? அவரது போராட்டம் பிசுபிசித்து விட்டது. நமக்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது. அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட அந்த நாளில் தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. நமது பாரத பிரதமரே ராமன் கோயில் திறந்த நாளில் தான் நமக்கு அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது என்று கூறியதற்கு பிறகு காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் என்று உளறுவதா?

ராமராஜ்ஜியம் தான் நமக்கான பண்பாடு. விபீஷணர்கள், அனுமார்கள் என்று அன்று ராமனுக்கு ஆதரவாக பெரும்படை இருந்தது. இப்போது சிபிஅய், அமலாக்கத்துறை, நாடாளுமன்றம் அவ்வப்போது நீதிமன்றங்கள் அனைத்துமே நமது தர்மத்தை காப்பாற்ற களமிறக்கப்பட்டுள்ளன.

மதமாற்றம் செய்வது சனாதனத்திற்கு, தேச பக்திக்கு எதிரானது. ஆனால் எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை கட்சி மாற்றம் செய்ய விலை பேசுவது சனாதனம். அதற்கு மற்றொரு பெயரும் இருக்கிறது, அதுதான் தேசபக்தி. இது தொடர்பாக நான் சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.

  • நான் நியமித்த துணைவேந்தர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள்.
  • எனது மாளிகைக்கு வெளியில் பெட்ரோலை பாட்டிலில் வைத்து நெருப்பு வைத்த பயங்கரவாதி மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும்.
  • ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மோடி ஆட்சிக்கு ஆதரவாக நடக்க வேண்டும். சட்டப்படி நடப்பேன் என்று அடம்பிடித்தால் கடும் தண்டனை.
  • எனக்காக தொலைக்காட்சிகளில் வாதாடும் பரப்புரையாளர்களிடம் நெறியாளர்கள் குறுக்குக் கேள்விகளை கேட்கக் கூடாது. அப்படி கேட்டால் தொலைக்காட்சி உரிமங்களை ரத்து செய்ய நேரிடும் என்று அந்த முதலாளிகளை எச்சரிக்கை செய்கிறேன்.
  • இதுகுறித்து விரிவாக ஆராய அரசியல் சட்ட நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்திருக்கிறேன். அந்த குழுவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.ஆர்.கோமிநாதன் தலைமை தாங்கி அறிக்கைத் தருவார்.

என்னுடைய இந்த உரையை பற்றி இந்த அவையில் விவாதங்கள் ஏதும் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே விவாதங்கள் நடத்தாமலேயே ஒப்புதல் தர வேண்டும் என்று உத்தரவிட்டு எனது மனசாட்சியை திருப்தி படுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஜெய் சிரி ராம்!

யாரப்பா அங்கே, மீண்டும் அந்த தேசிய கீதத்தை போடு!

- கோடங்குடி மாரிமுத்து

Pin It