தோழர்களே!

இந்த தேசத்தில் ஏற்பட்டிருக்கும் ஜன சமூக அமைப்பின் அஸ்திவாரமே சரியாய் இல்லாமல் இருக்கிறது. இந்த அஸ்திவாரத்தின் மீது கட்டக் கூடிய எந்த அமைப்பும், ஜன சமூகத்திற்கு நன்மையளிக்கக் கூடியதல்ல. ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படிச் சம அந்தஸ்தும், சம உரிமையும் உண்டோ அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர்களுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் மக்கள் சுகமாக வாழ முடியும். ஏதோ தான் பிறந்த வேளையின் பலன் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியதுதான்; மற்றொருவன் சுகத்தை அனுபவிக்க பாத்தியதை யுடையவன் தான் என்னும் சோம்பேறி எண்ணமே மக்களை அழித்து வருவதற்கு முக்கிய கருவியாய் இருக்கிறது. இந்த எண்ணம் மாறுபட வேண்டியது அவசியமாகும். இதற்காக எவ்வளவு தியாகம் செய்தாலும் அது வீணாகாது. ஜனங்களின் மனோபாவமும், வாழ்க்கையை நடத்தும் முறையும் மாறினாலொழிய வேறொரு முறையாலும் நன்மை உண்டாகாது என்பது திண்ணம்.

periyar and maniammai kidsதற்போதிருக்கும் நிலைமையில் சுயராஜ்ஜியம் வந்தால் குருட்டு நம்பிக்கையும், வைதீகமும் தான் வலுக்கும். தற்போது சுயராஜ்யம் அனுபவிக்கும் தேசங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஏழைகள் நிலைமை அங்கே எப்படி இருக்கிறது? அமெரிக்கா ஜனநாயக ஆட்சியுடையதாகத்தான் இருக்கிறது. அங்கே லட்சக்கணக்கானவர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றார்கள். அமெரிக்கா உலகில் செல்வத்திற்கே இருப்பிடமா யிருந்தும் அங்கே ஏழைகள் நிற்க நிழலின்றி, உறங்க இடமின்றித் தவிக்கிறார்கள். ஜர்மனியின் நிலைமை இன்று எவ்விதமாக இருக்கிற தென்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தையுடையதென்று சொல்லும் இங்கிலாந்தும் சுயராஜ்ய தேசமேயாகும். உலகத்தில் பல நாடுகள் இங்கிலாந்தின் ஆளுகைக் குட்பட்டிருக்கின்றன. ஆனால் அங்கு ஏழைகள் படும் துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. சுயராஜ்யமுள்ள ஒவ்வொரு தேசமும், இப்படித்தான் இருக்கிறது. சுயராஜ்யமோ அன்னிய ராஜ்யமோ, குடிஅரசோ, முடி அரசோ எந்தவிதமான முறையிலும் மக்கள் சுகம் பெற முடியாத நிலைமையில் உலகம் இன்று இருந்து வருகிறது.

ஆகையால் ஏழைகள் துயரத்தைப் போக்க இந்திய சுயராஜ்யம் இப்போது சிலரால் கருதப்படும் முறையில் யாதொரு நன்மையும் கொடுக்கப் போவதில்லை என்பது நிச்சயம். சமதர்மத்தையும், பொதுவுடமையையும் அஸ்திவாரமாகக் கொண்ட ராஜாங்க அமைப்பொன்றே மக்கள் சுகவாழ்க்கைக்குரிய வழியாகும். இதற்காக ஏன் நாம் தியாகம் செய்யத் தயாராயிருக்கக் கூடாதென்று கேட்கிறேன்.

உலகத்தில் பலவகையில் ஜீவராசிகள் மரணமடைகின்றன. பல நோய்களால் இறக்கிறவர்களின் தொகை சாதாரணமல்ல. மதத்தின் பெயரால் யாதொரு விவேகமுமில்லாமல் ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இன்னும் பல வழிகளில் மரணமடையும்போது மக்களின் உன்னத வாழ்க்கை அமைப்பை உத்தேசித்துச் சிலரோ, பலரோ உயிரைத் தியாகம் செய்வது கூட பெரிய காரியமாகுமோவென்று கேட்கிறேன். மனிதனுக்கு மனிதன் எதற்காக வித்தியாசங்கள் காண்பிக்கப்பட வேண்டும்? அறிவுள்ள எவரும் இனி இந்நிலைமையைச் சகித்துக் கொண்டு ஒரு க்ஷணமாவது வாழ முடியாது. பலாத்காரம் கூடாது. இம் முறைகளை மாற்ற பலாத்காரம் ஒரு பொழுதும் வெற்றியடைய முடியாது. பலாத்காரம் பலாத்காரத்தையே பெருக்கும். உண்மை மறைந்து விடும். ஆகையால் ஜனங்களுடைய மனதை மாற்றப் பாடுபட வேண்டியது தான் முறையேயொழிய, பலாத்காரத்தினால் சாதித்து விடலாமென்று எண்ணுவது மனித இயற்கைக்கு விரோதமான தத்துவமாகும்.

இந்த தேசத்தில் முன்னேற்றமுள்ளவர்களொன்று, பிற்போக்கானவர்கள் மற்றொன்றாக இரண்டு கட்சிகளே இருக்க முடியும். இப்படி பிரிக்கப்பட்டாலொழிய மக்கள் அபிவிருத்தியடைய மார்க்கமில்லை. நமது மக்களுக்கு விஷயத்தை அறியக்கூடிய பகுத்தறிவு விருத்தியடைந்தாலொழிய மற்றெந்த ராஜீய முறையாலும் ஒரு நன்மையும் விளைந்து விடப் போவதில்லை.

(குறிப்பு: 08.07.1934 இல் கும்பகோணத்தில் ஆற்றிய சொற்பொழிவு.

பகுத்தறிவு சொற்பொழிவு 09.09.1934)

Pin It