1914ம் வருஷம் முதல் 1918ம் வருஷம் வரை நடந்த உலக மகா யுத்தமானது அதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தேச மக்களையும் தேசீயம் - தேசாபிமானம் என்பவற்றின் பேரால் செய்யப்பட்ட பிரசாரத்தின் பயனாகவே அந்த யுத்தத்தில் சம்மந்தப்படும்படி செய்து. இந்த உலக மகாயுத்தத்தின் பயனாய் கொல்லப் பட்டவர்கள் 9743914. கிட்டத் தட்ட ஒரு கோடிபேர் காயம் பட்டவர்கள். 2,09,27,459 இரண்டு கோடிப் பெயர்களுக்கு மேலானவர்கள் காணாமல் போனவர்கள் 30,00,000. இந்த மகாயுத்தத்திற்கு செலவான துகை 70,00,00,00,000 பவுன் (ஏழு ஆயிரம் கோடி பவுன்) அதாவது 10,00,00,00,00,000 ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும்.

இது நிற்க இன்றைய தினம் உலக யுத்தத்தை எதிர்பார்த்து “தேசாபி மானத்தின் காரணமாக” என்று தேசத்தைக் காப்பாற்றுவதற்காக உலக அரசாங்ங்கள் மொத்தமும் செலவு செய்யும் தொகை சென்ற 1931ம் வருஷத்திற்கு மாத்திரம் 80,00,00,000 எண்பது கோடி பவுன் அதாவது 1080,00,00,000 ஆயிரத்து எண்பது கோடி ரூபாய் ஆகும்.

இதை தினக்கணக்காய் பிரித்தால் தினம் 1க்கு 2000000 பவுன் (இருபது லட்சம் பவுன்) அதாவது நாள் 1க்கு 27000000 இரண்டே முக்கால் கோடி ரூபாய் செலவு செய்யப்படுகின்றது.periyar with follower familyபிரிட்டிஷ் அரசாங்கமானது தனது அரசாட்சி வரி வரும்படியில் உள்ள ஒவ்வொரு பவுன் வரும் படியிலும் 13 ஷில்லிங் யுத்த தேசாபிமானத்திற்காக. தேசத்தைக் காப்பாற்ற தேசீய கடனுக்கும் சேனை தளவாடங்களுக்காக அதாவது

யுத்தக் கடனுக்கு வட்டி 0 - 9 - 0

யுத்த வீரருக்கு பென்ஷன் 0 - 1 - 3

தற்கால ராணுவத்திற்கும் 0 - 2 - 9 தரைகப்பல் தளவாடத்திற்கும் ஆக : 0 - 13 - 0

³ பதின்மூன்று ஷில்லிங் போக பாக்கி இருக்கும்

ஷில்லிங்கில் கல்விக்கு 0 - 1 - 5

உத்தியோக பென்ஷன் 0 - 1 - 3

ஸ்தலஸ்தாபன உதவி 0 - 1 - 2

வேலை இல்லதவர்களுக்கு பிச்சை 0 - 1 - 2

வீட்டு வசதி கோர்ட்டு வசதி வகையறாவுக்கு 0 - 0 - 8

போலீஸ் 0 - 0 - 6

விவசாயம் சுகாதாரம் 0 - 0 - 2

சில்லரை 0 - 0 - 3

ஆக : 0 - 7 - 0

ஆக பிரஜைகளின் நன்மைக்கு என்று ஏழு ஷில்லிங்கும் செலவு செய்யப்படுகிறது.

அதாவது மேற்கண்ட யுத்தக் கடன் வட்டிக்காக என்று செலவு செய்யப்படும். 9 ஷில்லிங்கும் முதலாளிமார்களுக்கே போய்ச் சேரும் தேசாபிமானத்திற்காக ஏற்பட்ட காரியத்தின் பயனாய் இன்று முதலாளிமார்கள் தேச அரசினர் வரும்படியில் கிட்டத்தட்ட சரிபகுதியை உலகமுள்ளளவும் அனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

எனவே பல கோடிக்கணக்கான மக்களை பலி கொடுத்து காயப்படுத்தி காணாமல் போகச் செய்ததும் அல்லாமல், மக்களிடத்தில் வாட்டிப் பிழிந்து வசூல் செய்யும் வரியிலும் நூற்றுக்கு 65 பாகத்தை தேசத்தைக் காப்பாற்ற என்னும் பேரால் இராணுவத்திற்கும், தளவாடங்களுக்கும் செலவு செய்தும், இந்த தேசத்தில் இன்று பத்து லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமலும், ஜீவனத்துக்கு தங்களுக்கும் தங்கள் பெண்டு பிள்ளைகளுக்கும் அரை வயிற்றுக்கு போதுமான கஞ்சிக்கூட மார்க்கமில்லாமலும் தவித்து வருகிறார்கள். இது பாமர ஜனங்களுடைய - ஏழை ஜனங்களுடைய தேசாபிமான முட்டாள்தனமா? அல்லது பணக்காரணுடைய ‘படித்த’ கூட்டத்தாருடைய தேசாபிமான பித்தலாட்டமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அடுத்த வாரம் தேசீயக் கடன் என்றால் என்ன? என்பதைப் பற்றி எழுதுகிறேன்.

('தேசீயத்துரோகி' என்ற பெயரில் பெரியார் எழுதியது; குடி அரசு - கட்டுரை - 11. 12. 1932)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.