periyar 238அடுத்து வருகிற சென்ஸஸ் கணக்கில் (ஜனக் கணிதத்தில்) இந்துக்கள் என்பவர்கள் ஜாதிப் பெயரைக் கொடுக்கக் கூடாதென்பதாக லாகூர் ஜட்பட் டோரக் மண்டலத்தாரும் மேலும் அநேகர்களும் தீவிர முயற்சியெடுத்து வருகிறார்களென்பது யாவர்க்குந் தெரியும்.

மற்றும் இந்தியாவிலுள்ள சீர்திருத்தவாதிகளென்பவர்களிலும் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் முதல் தாழ்ந்த ஜாதியார் என்று பிற மக்களால் சொல்லப்படும் ஆதிதிராவிடர்கள் என்கின்றவர்கள் முதலிய எல்லாராலும் அநேகமாக மேடைகளில் பத்திரிகைகளில் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன.

இதைப் பற்றி நமது “குடிஅரசி”லும் அநேக அறிஞர்களால் கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பதோடு சுயமரியாதை மகாநாடு, பார்ப்பனரல்லாதார் மகாநாடு, சீர்திருத்த மகாநாடு முதலிய மகாநாடுகளில் இதைப் பற்றி பல தீர்மானங்கள் செய்யப்பட்டு அதையநுசரித்தே அநேக கனவான்கள் ஜாதிக் குறிப்பைக்காட்டும் பட்டம் முதலியவைகளையும் விட்டிருப்பது யாவருக்கும் தெரியும்.

ஆகவே ஜாதிப் பிரிவும் வித்தியாசங்களும் இருக்கக் கூடாதென்பது இந்தியாவின் ஒரு முகப்பட்ட அபிப்பிராயமென்பதும், கோரிக்கையென்பதும் நாம் சொல்லாமலே விளங்கும். பொதுவாகப் பார்க்கும் போது போதிய உலக ஞானமற்ற மக்களுக்கு ஜாதிப் பிரிவுகளை ஒழிப்ப தென்றால் பிரமாதமாகத் தோன்றுவதும், சிலருக்கு ஏதோ முழுகிப் போவது போல் அவர்கள் மனதிற்குப் பெரிய திகில்கள் உண்டாவதும் சகஜமாகக் காணப்படுகின்றன.

ஆனால் இவையெல்லாம் ஜாதி என்பதின் உண்மையும், உற்பவமும் இன்ன தென்றறியாத மயக்கத்தினால் தோன்றப் படுவதே தவிர வேறில்லை.

ஒரே நாட்டு மக்களை பிறவியில் பல ஜாதியாகப் பிரிக்கப் பட்டிருப்பது நமது இந்தியாவில் தான் இருக்கின்றதே தவிர வேறெங்கும் இல்லை என்பது உலகக் கல்வி ஞானமுடையவர்கள் யாவரும் அறிந்ததாகும்.

அந்தப்படி இந்தியாவில் பிரிக்கப்பட்டிருக்கும் ஜாதியும் எவ்வித கொள்கைக்கும் பொருத்தமில்லாமல் வெரும் பிரிவுக்கும் இழிவுக்கும் மாத்திரம் ஆதாரமாய் இருப்பதைத் தவிர மற்றபடி அவற்றால் யாதொரு பயனும் இல்லாமல் இருப்பதும் யாவரும் அறிந்ததாகும்.

எனவே இப்படிப்பட்ட ஜாதி உயர்வும் தாழ்வும் எப்படி ஏற்பட்டதென்றும் இதற்கு ஆதாரம் என்ன என்பதையும் சற்று கவனிப்போம்.

பொதுவாக ஜாதி என்பது இந்துக்கள் என்பவர்களுக்குள் ஆரியக் கொள்கைகளுக்கு அடிமைப் பட்டவர்களுக்குள் மாத்திரம்தான் “கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது” என்கின்ற கொள்கையின் மீது நான்கு வருணங்களாக அதுவும் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.

இவை முறையே ஒன்றுக்கொன்று தாழ்ந்ததாகவும் கடைசி ஜாதி என்பது மிக்க இழிவானதாகவும் கருதப்படுவதாக குறிக்கப்பட்டிருக்கின்ற விபரம் யாவரும் அறிந்ததேயாகும். இப்படி இருந்தாலும் இப்போது அநேக ஜாதிகள் இருப்பதற்கு என்ன காரணம் என்று கவனித்துப் பார்ப்போமானால் அதற்குக் கிடைக்கும் சமாதானம் மிகமிக இழிவைத் தரத்தக்கதாகவே இருப்பதை உணரலாம்.

அதாவது “ஆதியில் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான்கு வருணத்தாரும் தங்களில் ஜாதி முறை தவறி கலப்பு விவாகம் செய்து கொண்டதாலும் கலப்பு விபசாரம் செய்து கொண்டதாலும் ஏற்பட்ட பிரிவு”களென்றும், அப்படிப் பட்ட பிரிவுகளுக்கு பஞ்சம ஜாதியார்கள் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக் கின்றதென்றும் ஆதாரங்களில் இருக்கின்றன.

அப்படிச் சொல்லப்படுவதிலும் இப்பஞ்சம ஜாதிகள் என்பது இப்போது நமது நாட்டில் பெரும்பான்மையாய் இருக்கும் பல முக்கியமான ஜாதிக்காரர்கள் என்பவர்களே பெரிதும் இந்த விபசாரப் பெருக்கால் ஏற்பட்ட பஞ்சம ஜாதிகள் என்றே காட்டப்பட்டிருக்கின்றன.

அந்த விபரத்தை தமிழ் அகராதியில் உள்ளபடி மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கின்றோம். ஆகவே அதில் உதாரணமாக, இன்று தமிழ் நாட்டில் பிரபல ஜாதியும் பிரமுக ஜாதியும் என்று சொல்லிக் கொள்ளப்படுவதான வேளாள ஜாதியார் எனப்படுபவர்களே பஞ்சம ஜாதியில் சேர்ந்தவர்கள் என்றும், பஞ்சம ஜாதியிலும், பிராமணன் க்ஷத்திரிய குலப்பெண்ணை சோரத்தால் கலந்ததால் பிறந்தவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றன.

இவர்களில் இந்தப்படியான வேளாளர் என்பவர்களில் விவசாயம் செய்பவர்களாயிருந் தால் அவர்களுக்கு காணியாளர் என்று பெயர் என்றும், மற்றபடி “சிற்றரசு, மந்திரித்துவம்” முதலிய பதவிகளில் இருப்பவர்களாயிருந்தால் அவர் களுக்கு வேளான் சாமந்தர் என்கின்ற பெயர் என்றும், குறிக்கப்பட்டிருப்பது டன் இவற்றிற்காதாரம் சுப்பரபோதகம், பிரம்ம புராணம், வைகாநசம், மாதவியம், சாதி விளக்கம் என்கின்ற நூல்கள் என்றும் குறிப்பிடப்பட்டி ருக்கின்றன.

தவிர மேல் கண்ட பிராமண ஜாதி ஆண், க்ஷத்திரிய ஜாதி பெண்ணை விவாகம் செய்து கொண்டதால் பிறந்த பிள்ளைகளே சவர்ணர் எனவும் தெலுங்கர் எனவும் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. அதாவது இது தெலுங்கு பாஷை பேசும் தெலுங்கு தேசத்தவரனைவரையும் குறிப்பிடத் தக்கதாகவே குறிக்கப்பட்டிருக்கிறது.

அதுபோலவே பிராமணன் வைசியப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்த பிள்ளை அம்பட்டன் என்றும் சோரத்தால் பிறந்த பிள்ளைகள் குயவர் என்றும் நாவிதர் என்றும் குறிக்கப் பட்டிருக்கின்றது. அதுபோலவே பிராமணன் சூத்திரப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்த பிள்ளை பரசவர் அதாவது செம்படவர் என்றும், சோரம் செய்ததால் பிறந்தவர் வேட்டைக் காரர் அதாவது வேடுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

பிராமணப் பெண்ணுடன் சூத்திரன் விபசாரம் செய்ததால் பிறந்தவர்கள் சண்டாளர்கள் என்றும் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. பிராமண குலப் பெண்களுடன் சண்டாளர் கூடிப் பிறந்த பிள்ளைகள் சருமகாரர் அதாவது சக்கிலிகள் என்று குறிப்பிடப் பட்டிருக்கின்றது.

க்ஷத் திரிய குலப்பெண்ணுடன் சண்டாளர் முதலியவர்கள் சேர்வதால் பிறந்த மக்கள் வேணுகர், (அதாவது வேணுகானம் செய்பவர்களும்) கனகர் (அதா வது தங்க வேலை செய்பவர்களும்) சாலியர் (அதாவது சாலியர் முதலிய நெசவு வேலை செய்வோர்களும்) ஆவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றன.

இந்த மாதிரி “கீழ் மேல்” ஜாதிகள் கலந்து கலந்து வந்ததால் ஏற்பட்ட ஜாதிகளில் ஒன்றாகிய அயோவகச் சாதிப் பெண் இடம் நிடாதனுக்குப் பிறந்த பிள்ளைகள் பார்க்கவர்கள் என்றும் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. இந்தப் படியே இப்போது அமுலில் உள்ள சாதிகளையெல்லாம் குறிக்கும்படியாகவே இன்னும் அநேக விஷயங்கள் காணப்படுகின்றன.

இதுபோலவே இன்னும் இரண்டொரு ஆராய்ச்சி நூல்களில் அதாவது அபிதான கோசம், அபிதான சிந்தாமணி முதலிய எல்லா இந்து பண்டிதர்களாலும் ஆதாரமாய் கொண்டாடும் புத்தகங்களில் மற்றும் பல ஜாதிகளை இதைவிடக் கேவலமாகவும் குறிக்கப் பட்டிருக்கின்றதோடு 4 ஜாதி தவிர மற்ற ஜாதிகள் எல்லாம் மேல் கண்ட நான்கு ஜாதிக்குள் மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் கல்யாணம் செய்தும், விபசாரம் செய்தும் பிறந்த பிள்ளைகளாக ஏற்பட்டவர்கள் என்றே கூறப்பட்டிருக்கின்றன.

செட்டியார்மார்களையும் ஆசாரிமார்களையும் பற்றி மிக மிக இழிவாகவே கூறப்படுகின்றது. ஆகவே ஜாதியை கட்டிக் கொண்டு அழுவது இவ்விழிவுகளை மறைமுகமாய் ஏற்றுக் கொள்ளுவதையே ஒக்குமென்பதைத் தவிர வேறில்லை.

உண்மையில் யாருக்கு யார் பிறந்திருந்தாலும் அதனாலேயே குற்றம் சொல்வதற்கில்லை என்பது நமது கொள்கையானாலும் ஒரு இழிவை கற்பித்து அதை நம் மக்கள் மீது சுமத்தி ஒரு பெரிய சமூகம் நிரந்தரமாய் அடிமையாயும் காட்டுமிராண்டியாயும் இருப்பதற்குச் செய்த காரியமே ஜாதிப் பிரிவும் பாகுபாடும் என்பதை எடுத்துக் காட்டவும் அவ்விதம் கொடுமையை ஒழிப்பதற்காகவுமே இதை எழுதுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 16.11.1930)

Pin It