periyar 680அர்ஜுனன்: - சகே சீனாம் நிகே சீனாம் காகதி புருஷோத்தமா?

கிருஷ்ணன்:- அஹம் சந்யாசி ரூபேணாம் புரோஷ்டிதாம் தனஞ் சயா! இதன் பொருள்.

அர்ஜுனன்: - ஹே புருஷோத்மா! தலையில் மயிருடனும், மயிரில்லாமல் மொட்டத் தலையுடனும் இருக்கும் (படியாய் நீ செய்திருக்கின்ற) விதவைகளுக்கு என்ன கதி?

கிருஷ்ணன் :- ஹே அர்ஜுனா! நானே சந்நியாசியாக பூமியில் அவதரித்து அவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்வேன்.

அர்ஜுனன்: - ஹே கிருஷ்ணா! உன்னை ஒரு பெரிய கடவுளென்று சொல்லிவிட்டு பிறகு நீ இப்படிச் செய்தாய், அப்படிச் செய்தாய், கண்ட ஸ்திரீகளுடன் கலந்தாய், உதைபட்டாய், அடிபட்டாய், அழுவாரற்ற பிணமாய் செத்தாய் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கின்றார்களே இதைப் பற்றி உனக்கு சிறிதும் அவமானமில்லையா?

கிருஷ்ணன்:- ஹே அர்ஜுனா! அதைப் பற்றி நீ சிறிதும் கவலைப் படவேண்டாம். இதெல்லாம் எனது திருவிளையாடலென்றும் இவற்றைப் படித்த கேட்ட ஒவ்வொருவரும் இதனைக் கொண்டாட வேண்டுமேயொழிய குற்றம் சொல்லக்கூடாதென்றும், குற்றம் சொன்னால் பாவமென்றும், நரக மென்றும் அவற்றை எழுதின அவர்களே எழுதி இழிவை அடக்கி விட்டார்கள். ஆதலால் நமக்கு ஏன் கவலை?

அர்ஜுனன்: - கிருஷ்ணா! அதுதான் போகட்டும், நம்ப முடியாத அநேகப் பொய்யையும் புளுகையும் சொல்லி நீ சின்னக் குழந்தையாயிருக்கும் போது பெரிய முலையை உருஞ்சி சூப்பையாக்கி விட்டாயென்றும் மலையை சுண்டு விரலால் குடையாய்ப் பிடித்தாய் என்றும் 10 ஆயிரம் பெண்களை ஏக காலத்தில் கலந்தாய் என்றும் இப்படி எல்லாம் எழுதி இருக்கின்றார்களே இந்தப் புளுகுகளை எவன் நம்புவான்?

கிருஷ்ணன் :- ஓ! அர்ஜுனா! அதைப் பற்றியும் நீ கவலைப்படாதே. ஏனென்றால் அந்தப் படியெல்லாம் எழுதினவர்கள் இவற்றையெல்லாம் எவன் நம்பவில்லையோ அவன் நாஸ்திகன் என்றும் அவனை அரசன் தண்டிக்க வேண்டுமென்றும் அரசன் தண்டிக்காவிட்டாலும் அவன் நரகத்துக்கு போகவேண்டும் என்றும் எழுதி மக்களை மிரட்டி பயப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். ஆதலால் எவனும் தைரியமாய் தான் இவற்றை நம்புவதில்லை என்று வெளியில் சொல்லவரமாட்டான்?

அர்ஜுனன்: - அதென்ன கிருஷ்ணா! பாவம் என்றால் என்ன? நரகம் என்றால் என்ன? எனக்கு ஒன்றும் புரியவில்லையே,

கிருஷ்ணன்:- அந்தப்படி புரியாமலிருக்கின்றதாகவே பார்த்துதான் சொல்லி இருக்கின்றார்கள்.

அர்ஜுனன்: - அதென்ன புரியாததைச் சொன்னால் என்ன பயன்.

கிருஷ்ணன் : - ஒருவனுக்குத் தெரியாததையும் புரியாததையும் சொன்னால் தான் மனிதர்கள் பயப்படுவார்கள். புரியும் படியானதாக எதைச் சொன்னாலும் திருப்பிக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். ஆதலால் தான் அது செய்தால் பாபம், இது செய்தால் பாபம், நினைத்தால் பாபம் என்றெல்லாம் மிரட்டி வைத்திருக்கின்றார்கள்.

அர்ஜுனன்: - இந்த மாதிரி எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும்?

கிருஷ்ணன்:- முடிந்தவரையில் முடியட்டும்.

அர்ஜுனன்: - இந்தப் புரட்டு வெளியாய் விட்டால் அப்புரம் என்ன செய்வது?

கிருஷ்ணன் : - அப்புரம் வேறு புரட்டை உண்டாக்கிக் கொள்ள அவர்களுக்குத் தெரியும்.

அர்ஜுனன்: - அதென்ன புரட்டு?

கிருஷ்ணன் : - அரசியல் புரட்டு.

அர்ஜுனன்: - அதுவும் வெளியாகிவிட்டால்?

கிருஷ்ணன் : - அதற்குள் பார்த்துக் கொள்ளுவோம். இந்த இரண்டு புரட்டும் மண்டுகள் நிறைந்த இந்தியாவுக்கு சுலபத்தில் வெளியாய் விடவா போகின்றது?

அர்ஜுனன்: - சுயமரியாதைக்காரர்கள் இந்த இரண்டையுமே சேர்த்து வெட்டவெளியாக்கிக் கொண்டு வருகின்றார்களே, சீக்கிரத்தில் வெளியாய் விடாதா?

கிருஷ்ணன்:- அவர்களால் சுலபத்தில் முடியாது. ஏனென்றால் அந்த இரண்டு புரட்டின் மேல் தாங்கள் வாழ்வையே ஏற்பாடு செய்து கொண்ட அநேகர் சுயமரியாதைக்காரர்களுக்குள்ளாகவே இருக்கிறார்கள். அந்தப்படி மீறி அவர்களெல்லாம் தங்கள் வாழ்க்கைக்குக் கேடு வந்தாலும் வரட்டும் என்று துணிந்து கட்டுப்பாடாய் வேலை செய்தாலும் கூட அது தமிழ் நாட்டிலும் மலையாளத்திலும் தான் செல்லும். இந்தியாவில் மற்ற பாகங்கள் எவ்வளவோ இருக்கின்றன.

அர்ஜுனன்: - எப்படியானாலும் என்றைக்கிருந்தாலும் இந்த இரண்டு புரட்டுக்கும் ஆபத்து ஆபத்துதான்.

கிருஷ்ணன்:- அந்தக் காலத்தில் பார்த்துக் கொள்ளலாம். நடந்த வரை நடக்கட்டும்.

சைவ வைணவ சம்பாஷணை

வைணவதாசன் : - என்ன தேசிகர்வாள் உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல் விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே. இதுஎன்ன பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?

சைவ பண்டாரம்: - அசிங்கமென்னையா வந்தது. ஒரு சிம்ட்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோக்ஷத்திற்கு போய்ச் சேர்ந்து விடும் என்பதாக விபூதி மான்மியத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. நாம் நல்ல காரியம் செய்து மோக்ஷத்திற்கு ஒருக்காலமும் போக முடியாதபடி சைவநெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால் விபூதி பூசியாவது. மோக்ஷத்திற்குப் போகலாமென்றால் இதில் உமக்கேன் இத்தனை பொறாமை.

வைணவதாசன் : - எனக்கு ஒன்றும் பொறாமை இல்லை. சந்தோஷமாய் தாங்கள் மோட்சத்திற்குப் போங்கள். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.

சைவ : - என்ன சந்தேகம்.

வைணவதாசன் : - ஏ. ஒரு சிம்ட்டா சாம்பல் பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்துக்கு போய் விடும் என்றீர்களே மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த அந்த மலங்கள் எல்லாம் மோக்ஷத்திற்குப் போயிருக்குமே, அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோக்ஷத்திற்கு போய் அந்த எழவு நாற்றத்தை எப்படி சகிப்பது என்கின்ற சந்தேகம் தான்.

சைவ: - சரி சரி, நீர் சுயமரியாதைக்காரர் போல் தெரிகின்றது. உம்முடைய யோக்கியதை பார்ப்போம். நீர் ஏனையா மண்ணை குழைத்து பட்டை பட்டையாய் வலிப்பு மாட்டுக்கு சூடுபோட்டது போல் போட்டுக் கொண்டிருக்கின்றீர்.

வை. தா: - உம்மை கேட்ட சங்கதிக்கு பதில் சொல்லும். பிறகு நான் பதில் சொல்லுகிறேன்.

சை : - நாளைக்காவது சொல்லுவீரா?

வை. தா: - நான் நீர் சொன்ன பிறகு தான் சொல்லுவேன்.

கடவுள் இருந்தால்

சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பார் அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப் பற்றி மனிதனுக்கு தேவை இல்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார்.

உதாரணமாக மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி தினம் தினம் சவரம் செய்து கொள்ளுவதை பார்க்கின்றோம். ஆனால் கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவராமல் முளைத்துக் கொண்டே வருவதையும் பார்க்கின்றோம்.

இது என்ன கடவுளுடன் மனிதன் ஏறுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறானா அல்லது மனிதனுடன் கடவுள் ஏறுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறாரா அல்லது ஒருவருக்கொருவர் சம்மந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?

- சித்திரபுத்திமன்

(குடி அரசு - உரையாடல் - 09.11.1930)

Pin It