இந்த நாட்டில் நாட்டுப்பற்றோ, மனிதப்பற்றறோ உள்ள அரசாங்கமானாலும், பொதுத் தொண்டு செய்யும் ஸ்தாபனங்களானாலும், அல்லது தனிப்பட்ட சமுதாயப்பற்றுள்ள மக்களானாலும் அவர்கள் முதலாவது செய்ய வேண்டிய காரியம் நாட்டு மக்களை அறிவாளிகளாகச் செய்து அவர்களது ஆராய்ச்சித் தன்மையைப் பெருக்கவேண்டியதாகும்.

periyar 32மக்களின் வாழ்க்கைத்தரத்துக்கு ஒரு வழி செய்து அவர்களுக்குக் கவலையோ, குறைபாடோ ஏற்படுவதற்கு இல்லாமல் பொருளாதார சமத்துவமும், சமுதாய சமத்துவமும், ஏற்படும்படிச் செய்ய வேண்டும்.

இந்தத் தன்மைகள் உள்ள நாட்டைத் தான் நாடு என்றும், சுதந்திர பூமி என்றும் சொல்லலாம். இவை இல்லாத நாட்டையும், சமுதாயத்தையும் சிறைக்கூடம் என்றும், அடிமைச் சமுதாயம் என்றும் தான் சொல்ல வேண்டும்.

சாதாரணமாக அரசர்களால் ஆளப்படும் நாடுகளும், சமுதாயமும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனெனில் அரசனுக்கு ஆட்சி முறை மதமும், சாஸ்திரங்களுமே தான். மக்களால் ஆளப்படும் நாடுகளுக்கு ஆட்சி முறை அறிவும், சுதந்திரமுமேயாகும்.

மதமும் சாத்திரங்களும் மனிதனின் அறிவையும், சுதந்திரத்தையும் ஒழிப்பதற்கென்றே, மக்களை மடையர்களாகவும், அடிமைகளாகவும், ஆக்குவதற்கென்றறே ஏற்பட்ட - ஏற்படுத்தப்பட்ட சாதனங்களாகும். அவைகளும் மக்கள் காட்டுமிராண்டிகளாய் மிருகப் பிராயத்தில் இருந்த போது ஏற்படுத்தப்பட்டவைகளாகும். எப்படி என்றால், மக்களுக்குப் பயத்தைக் காட்டியே அதாவது பேய், பிசாசு, பூதம் என்பவைகளைச் சொல்லியே எப்படி மக்கள் பயமுறுத்தப்பட்டார்களோ அது போலவே தான் மதத்தையும், சாத்திரங்களையும் கூறி மக்களை பயமுறுத்தி வைத்து விட்டார்கள்.

மதத்திற்கும், சாத்திரங்களுக்கும் கடவுளை எஜமானனாக, மூலகர்த்தாவாக வைத்து உண்டாக்கினார்கள் என்றாலும் கடவுள் வேறு, மதம் - சாத்திரம் வேறு என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், கடவுள் அறியாமையிலிருந்து தோன்றியதாகும்.

மதமும், சாத்திரங்களும் அயோக்கியத்தனத்திலிருந்து அதாவது மக்களை மடையர்களாக்கவும், பயமுறுத்தி அடிமைகளாக்கவும் வேண்டுமென்ற எண்ணத்தின் மீதே உண்டாக்கப்பட்டவைகளாகும்.

உலக அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட மேல் நாட்டுக் குறிப்பிடத் தகுந்த அறிஞர்களாலேயே இக்கருத்து வலிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அதாவது, கடவுளைக் கற்பித்தவனை மன்னித்து விடலாம். ஏனெனில் அவன் மடையன், அறிவில்லாத காரணத்தால் கற்பிக்க வேண்டியவனானான். ஆனால், மதத்தையும், சாத்திரங்களையும் (ஆத்மா – மோட்சம் - நரகம்) கற்பித்தவன் அயோக்கியன்; இவனை மன்னிக்கவே முடியாது, இவன் மக்களை பயமுறுத்தி வைக்க வேண்டியே இவற்றைக் கற்பித்து இருக்கிறான் என்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள்.

கடவுளைக் கற்பறித்தவன் "உலக உற்பத்திக்கு, நடத்தைக்கு ஒரு கர்த்தா இருக்க வேண்டும்; அந்த கர்த்தாதான் கடவுள்" என்று உத்தேசத்தின் மீது உறுதிப்படுத்திச் சொல்லுகின்றான்.

அதாவது சந்தேகத்தின் பயனை (பெனிபிட் ஆஃப் டவுட்) (Benefit of Doubt) கடவுளுக்குக் கொடுக்கின்றான். ஆனால் மதமும், சாத்திரமும் அப்படி இல்லை. முழுப் பொய்யையே கற்பனை செய்து மக்களை ஏய்ப்பதற்கென்றே, பயமுறுத்தி வைப்பதற்கென்றே பாகுபடுத்தி மதத்தையும், சாத்திரத்தையும் அமைத்திருக்கின்றான்.

இந்த அமைப்புக்கு (இதை அமைப்பு என்பதற்கு) ஆதாரம் என்னவென்றால் பல மதங்கள், பல சாத்திரங்கள் இருப்பதும், அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக (நேர்மாறாக) இருப்பதுமேயாகும்.

மற்றும் இப்படிக் கற்பித்தவர்கள் என்பவர்கள் மனிதத்தன்மைக்கு மேம்பட்டவர்கள் என்பதும், இந்துமத சாத்திரங்கள் இயற்கை பிரத்தியட்ச விதிகளுக்கு மாறுபாடாக இருப்பதும் மற்றொரு ஆதாரமாகும்.

இதை நாம் ஏன் குறை கூறுகிறோம் என்றால், இவை அறிவை மாத்திரமல்லாமல் ஒழுக்கம், நேர்மை, அன்பு, அருள், ஒற்றுமை, சமநிலை முதலியவற்றைப் பாழ் செய்வதோடு, வளர்ச்சியையும் கெடுத்து, விஞ்ஞானத்தை மறைத்து அஞ்ஞானத்தை வளர்த்து வருகிறது. இதை உணர நாம் வெகுதூரம் போக வேண்டியதில்லை. "நமது" மதத்தையும் சாத்திரங்ளையும் எடுத்துக் கொண்டாலே போதுமானதாகும்.

நம் (திராவிடர்) தமிழர்களாகிய மக்களுக்கு (கடவுள் உண்டா? இல்லையா? என்பது வேறு விஷயம்) ஆனால், மதமே இல்லை, இந்து நம் மதம் என்று கருதிக் கொண்டிருக்கிறோம். இதுவே ஒரு மாபெரும் "இமயமலை அளவு" முட்டாள்தனமாகும். இந்துமதம் என்றால் என்ன? அதற்குப் பொருள் என்ன?

மதம் என்னும் சொல்லுக்கு கிருஸ்து மதம், இஸ்லாம் மதம் என்பதற்கு உள்ள இலட்சணப்படி, ஆதாரப்படி இலட்சிய ஆதாரம், சரித்திரம் ஏதாவது உண்டா? இந்து மத சாத்திரம், வேதம் என்பதாக இருக்கிறதா?

இந்து மதத்தை பார்ப்பனர் வேத மதம் என்கிறார்கள். பார்ப்பனர் தங்களை ஆரியர் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். அதனால் அதை ஆரிய மதம் என்றும் சொல்லிக் கொள்கின்றார்கள். ஆங்கில அகராதிகளில் இந்து மதம் என்றால் பிராமணர் மதம் என்றும், கிருஸ்துவர், மகமதியர் அல்லாதாருடைய மதம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விரிக்கில் பெருகும். ஆகவே, சுருக்கிக் கொள்கின்றேன்.

இந்து மதத்திற்கு ஆதாரம் வேதம், சாத்திரம், புராண, இதிகாசமே! இந்த மதத்தின்படி நாம் கீழான பிறவி, 4-ஆவது, 5-ஆவது ஜாதியினராவோம்! அதனால் மேற்கண்ட மத ஆதாரங்களைப் படிக்கத் தகுதி அற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம். வேத, சாத்திர, புராண, இதிகாச ஆதாரங்கள் பெரிதும் நம் மக்களை இதிலே மயக்கி, அயோக்கியராக்கிப் பல வழிகளிலும் அவமானப்படுத்தியுள்ளன.

ஆகவேதான் கடவுள் நம்பிக்கை, மதம், சாத்திரம், புராணம், இதிகாசம் ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று கூறுகின்றோம்.

----------------------------------

4.10.1970- "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It