ஆரியம் திராவிடத்தைவிட்டு அடியோடு அகன்றால் ஒழிய, திராவிடத்திற்கு மீட்சி இல்லை, வாழ்வு இல்லை, மானமில்லை, மனிதத் தன்மை இல்லை என்று தூக்குமேடையில் நின்று கிட்டியை மாட்டிக்கொண்டு கூடக் கூறுவோம்.

திருஇடம் என்னும் திராவிடம் இன்று தீண்டப்படாதத் தன்மை எய்தி, அதன் மகன் பிறவி சூத்திரன், பஞ்சமன் என்னும் நிலை அடைந்ததற்கு ஆரியமல்லாமல் வேறு எதனை காரணமாகக் கூறமுடியும்? ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற் பட்ட ஆராய்ச்சிச் சுவடிகளில் இருந்தும், அதற்கும் முற்பட்டதான கண்டு பிடிப்புச் சின்னங்களில் இருந்தும் ஆரியத்தாலேயே திராவிடம் அழிந்து பட்டு ஈன நிலைமைக்கு வந்தது என்பதைப் புலவர்கள், அறிஞர்கள், சாதாரண பகுத்தறிவாளர்கள் அய்ய மற அறிந்திருந்தும், அனுபவத்தில், நடைமுறையில் கண்டுவந்தும் வீழ்ந்து கிடக்கும் நிலையில் இருந்து திராவிடம் எழுச்சிபெற்ற நிலைக்கு வர வேண்டு மானால், ஆரியர் அருளால்தான் முடியும் என்று ஆரியருக்கு அனுமாராக அடிசுமந்து நிற்பதானால் இதைவிட மதியீனத்தன்மை வேறு என்ன இருக்கமுடியும்?

காட்டுமிராண்டித் தன்மையில் இருந்த நாடுகளும், காட்டுமிராண்டி மக்களும் இன்று மனிதத்தன்மை பெற்று மேன்மைவாழ்வு வாழ்கின்ற இந்தக் காலத்தில் திராவிடம் சாதா ரண மனிதத்தன்மைபெற மக்களைக் கோவில்களுக்குள் நுழைப்பதும், அதையே மாபெரும் மனிதத் தொண்டாகக் கருதுவதுமாயிருந்தால் திராவிடத்திற்கு என்றாவது எழுச்சி ஏற்படும் என்று யார்தான் கருதமுடியும்?

திராவிடத்தின் சமுதாய முயற்சி இதுவாய் இருந்தால் இனி அரசியல் முயற்சி எப்படி இருக்கின்றது என்று பார்ப்போமேயானால், அது மகாமகா மோசமான மடத்தன்மையதாய் இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைய அரசியல் பிரச்சினை என்ன என்று பார்ப்போம். அதுபெரிதும் இந்துக்கள் - முஸ்லிம்கள் போராட்டம் என்பதல்லாமல் வேறு என்ன என்று சொல்லமுடியும்? இந்துக்கள் - முஸ்லிம் போராட்டம் என்ன என்று பார்ப்போமானால் ஆரியத்திற்கும் ஆரியமல்லாததற்கும் அல்லது ஆரியர் களுக்கும் ஆரியர்கள் அல்லாதவர் களுக்கும் போராட்டம் என்பதல்லாமல் வேறு உள் கருத்து என்ன என்று சொல்லமுடியும்?

இந்து - முஸ்லிம் என்பது ஒரு மதத் தத்துவ வேறுபாடேயாகும். என்னவென் றால் ஒரு கடவுள் வழிபாடு - பல கடவுள் வழிபாடு; உருவக் கடவுள் வழிபாடு - அருவக் கடவுள் வழிபாடு; மக்கள் சமுதாயத்தில் ஒரு ஜாதி - மக்கள் சமுதாயத்தில் பல ஜாதி வகுப்பு; மக்கள் யாவரும் பிறவியில் சமம் - மக்கள் யாவரும் பிறவியில் வேறுபட்டவர்கள் என்பனவாகிய இந்தத் தன்மை பேதங்கள்தான் முஸ்லிம் மதமாகிய இஸ்லாத்திற்கும் இந்து மதமாகிய ஆரியத்திற்கும் இருந்துவரும் அடிப்படை பேதங்கள் ஆகும். இந்த அடிப்படையை வைத்து நடத்தப்படும் ஆரியர்கள், ஆரியரல்லாதவர்கள் (முஸ்லிம்கள்) என்கின்ற மக்கள் போராட்டத்தில், திராவிடத்தின் - திராவிடரின் கடமை என்ன என்று கேட்கிறோம்.

இந்தப் போராட்டத்திற்குத் திராவிடன் ஆரியத்திற்கு அடிதாங்கி நிற்பது அறிவுடை மையா அல்லது எதிர்த்து நிற்பது அறிவுடைமையா என்று சிந்திக்கும்படி திராவிடப் புலவர்களையும் திராவிடக் காளைகளையும் இறைஞ்சு கின்றோம். இந்திய அரசியல் போராட்டமானது இந்து - முஸ்லிம் போராட்டம் என்னும் தன்மையை வெளிப்படையாய் அடைந்த வுடன் உண்மைத்திராவிடர் இந்திய தேசிய அரசியலைவிட்டு உடனே விலகி இருக்க வேண்டியதல்லவா? மறத் திராவிடனின், மணிப் புலவனின் கடமையாக இருந்திருக்கவேண்டும்.

இஸ்லாம் மதம் அதாவது ஆரிய எதிர்ப்பு மதம் இன்று இந்தியாவில் இல்லாதிருக்குமானால், கிறிஸ்தவ மதம் இன்று இந்தியாவில் இல்லாதிருந் திருக்குமானால், திராவிட தேசியத் தோழனே! இன்று உனது கதி, நிலை, வாழ்வு, மானம் எப்படி இருந்திருக்கும் என்பதை வெளிக் கண்ணை மூடிக் கொண்டு மனக்கண்ணால் சற்று உன்னையே பார். என்ன காணும்? நீ வேசிமகனாக, வைப்பாட்டி மகனாக, உண்மையில் அட்டியாக, அடிமையாக, இழிமகனாக, கடையனாக இருந்திருப் பாயா இல்லையா? இன்னமும் உன் உடன்பிறந்த சோதரிகள் பலர் வேசிகள் என்பதையும், சோதரர்கள் பலர் வேசி மக்களே என்பதையும், உறவினர் பஞ்சமர், சண்டாளர், இழிநிலையர் என்பதையும், பெயராக இடமாகக் கொண்டு உண்மை யிலேயே சட்டத்தில் சாத்திரத்தில் நடப்பின் அந்தப்படி நடத்தப்படு கிறார்களா? இல்லையா? சிந்தித்துப்பார். கோபப்படாமல் ஆத்திரப்படாமல் வெட்கப் பட்டுச் சிந்தித்துப்பார்.

ஆரிய இழிவில் இருந்து, கொடுமையில் இருந்து திராவிடம் மீள வேண்டுமானால் திராவிடநாடு ஆரிய நாட்டுச் சம்பந்தத்தில், பிணையில் பிடிப்பில் இருந்து பிரியவேண்டும் என்று திராவிடர் கழகம் சொன்னால் கல்யாண சுந்தரங்களுக்கும், மீனாட்சி சுந்தரங் களுக்கும் மற்றும் புலவர் மணிக் குழாங் களுக்கும் ஏன் கோபம் வரவேண்டும்? கோபிப்பவர்கள் புலவர்களாக இருக்க முடியுமா? எங்களுக்குப் புலையர் பட்டம் வேண்டாம் என்று நாங்கள் சொல்லு வதைத் தடுப்பவர்கள் எப்படிப் புலவர் களாக இருக்க முடியும்? எப்படித் தேசிய வீரர்களாக இருக்கமுடியும்? ஆரியம் ஒழிந்தால் ஒழிய அல்லது ஆரியத்தில் இருந்து விடுபட்டால் விலகினால் ஒழியத் திராவிடர்களுக்கு எப்படிப் புலையர்ப்பட்டம் நீங்க முடியும்? தேசியக் காளைகளே! நீங்கள்தான் சிந்தித்துப் பாருங்கள்.

புலவர் தோழர்களே! தேசிய வீரத் தோழர்களே! இந்துஸ்தான் - பாகிஸ்தான் என்பது ஆரியஸ்தான ஆரியமல்லாதஸ்தான் என்பதல்லாமல் அதன் உண்மைக் கருத்து வேறு என்ன? ஆரிய மல்லாதஸ்தான் என்பதற்குப் பதிலாக அதாவது அல்லாத என்கின்ற வார்த்தை கூடாது என்பதற்காக அதாவது நாம் எப்படிப் பார்ப்பனர் அல்லாதார் என்று சொல்வது இழிவு என்று கருதித் திரா விடர் என்ற சரித்திர கால ஆராய்ச்சிப் பெயரைப் பயன்படுத்துகிறோமோ அதுபோல் ஆரியத்தை வெறுத்தவர்கள், ஆரியத்தை ஏற்காதவர்கள் பாகிஸ்தான் என்று பெயர் சொல்லுகிறார்கள். அதுபோல்தான் நாமும் ஆரியமல்லாத நாடு என்பதற்குப் பதிலாக திராவிட நாடு என்கின்றோம்.

ஆகவே பாகிஸ் தான் என்பதும் திராவிட நாடு என்பதும் ஒரே அடிப்படையை ஒரே கருத்தைக் கொண்ட சொற்களே தவிர வேறுவேறு கருத்துக்கள் இலட்சியங்கள் கொண்ட வைகள் அல்ல. அப்படி இருக்கத் திராவிட நாட்டில் திராவிட மக்கள் இடையில் பாகிஸ்தான் இந்துஸ்தான் பிரச்சினையைப் புகுத்தி அதன் சாக்கில் இந்து - முஸ்லிம் கலவரங்களை வெறுப் புகளை உண்டாக்கி இருப்பதானது ஆரியர்கள் சூழ்ச்சியே ஒழிய அதில் திராவிட நாட்டுக்கோ, திராவிட மக்களுக்கோ ஆகும் நலமான காரியம் ஒன்றுமே இல்லை; கேடேயாகும். பாகிஸ்தான் பிரச்சினை பற்றித் திராவிட நாட்டில் திராவிடர்கள் இடையில் எதிர்ப்புப் பேசப்படுவது வேண்டப்படாத காரியமேயாகும்.

இன்று திராவிடநாட்டில் அரசியல் பிரச்சினை உண்மையானதாகவும் யோக்கிய மானதாகவும் ஒன்று இருக்க வேண்டுமானால் அது ஆரியப்பிடியில், சம்பந்தத்தில் இருந்து திராவிடநாடு விலகவேண்டும், விடுபடவேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. திராவிடநாடு விடுபடுவதைத் தடுப்பதும் எதிர்ப்பதுமான காரியமே தான் திராவிடநாட்டில் பாகிஸ் தான் எதிர்ப்புப் பிரச்சினையைக் கொண்டு வந்து ஆரியர்கள் புகுத்தியதாகும். திராவிட மக்கள் உண்மை உழைப்பாளி களானால் ஆரியத்தில் இருந்து அடி யோடு விடுபடமுயலும். ஆரியரல்லா தார், ஆரியம் வேண்டாதார் ஆகிய எல்லோருடனும் ஒத்துழைத்து உதவி செய்யவேண்டியதுதான் யோக்கியமான தொண்டு ஆகும்.

ஆதலால் புத்தாண்டு நினைவுக் குறியாகவும், பொங்கல்விழா படிப்பினைக் குறியாகவும் திராவிட புலவர்களுக்கும் திராவிட காளைகளுக்கும் நாம் மனம் நிறைந்த வேண்டுகோள் சேதியாக மகிழ்ச்சிப் பொங்கலோடு விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம்.

-------------------
தந்தை பெரியார் -”குடிஅரசு” - தலையங்கம் - 18.01.1947
அனுப்பி உதவியவர்:-தமிழ் ஓவியா

Pin It