நமது ‘குடி அரசு’ மீது அன்பு கொண்டு அடிக்கடி பற்பல முக்கிய விடயம் பற்றி கட்டுரை வரைந்து வரும் அன்பர்களுக்கு நமது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். தமிழகத்தின் முன்னேற்றத்தில் ஆர்வங்கொண்டு எழுதப்பெறும் அவர்களின் ஒவ்வொரு வாக்கியத்தையும் போற்றுகிறோம்.

ஆனால் “குடி அரசு”க்கு விஷயதானம் செய்வோரில் பலர் , நமது பத்திரிகை வாரப்பத்திரிகை என்பதையும் சிறிய அளவில் பெரிய விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதையும் அவர்கள் கருதுவதில்லையென்றே நினைக்கவேண்டியிருக்கிறது. நமது கட்டுரைக்கர்த்தாக்கள் பக்கம் பக்கமாய் வரைந்த நீண்ட கட்டுரைகளை அனுப்பிவிடுகிறார்கள்.

நாள்தோறும் வரும் இக்கட்டுரைகளை மட்டிலும் பூராவும் பிரசுரிப்பதாக வைத்துக் கொண்டாலும் 12 பக்கங்களுக்கு மேலாகி விடும். அக்கட்டுரைகளைச் சுருக்கி வெளியிடுவதென்றாலும் அதனை ஆக்கியோரின் கருத்து புலனாகாது போய்விடுமென அஞ்ச வேண்டியிருக்கிறது. ஆகவே, மிகுந்த மன வருத்தத்துடன் கஷ்டத்தோடு இத்தகைய கட்டுரைகளை தள்ளி விட நேருகிறது.

ஆகையால், நமது நிரூப நேயர்கள் அன்பு கூர்ந்து இனி வரையும் கட்டுரைகளை மிகச்சுருக்கி தெளிவாக இங்கியில் எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொள்ளுகிறோம். சுருங்கச் சொல்லி விளங்கவைத்தலே நன்று.

( ப - ர் )

(குடி அரசு - அறிக்கை - 09.05.1926)

Pin It