(1.இந்தியத் தகவல் ஏடு, பிப்ரவரி 1, 1945, பக்கங்கள் 97-101 & 109)

         ambedhkar 400 “நாட்டின் நீர்வள ஆதாரங்கள் விஷயத்தில் தற்போது நிலவும் நிலைமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பிரதிகூலங்களையும் இந்திய அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது. இந்த வள ஆதாரங்களை அனைவரது நலன்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கொள்கையை, இந்த வளங்களை ஏனைய நாடுகள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறேன் என்னும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொள்கையை உருவாக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அது விரும்புகிறது.” தாமோதரப் பள்ளத்தாக்கை அபிவிருத்தி செய்வதற்கான வழிமுறைகளை ஆராயும் பொருட்டு ஜனவரி 3ஆம் தேதி கல்கத்தாவில் வங்காள மாகாண தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றுகையிலேயே இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினரான மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மத்திய அரசாங்கத்தையும் மற்றும் வங்காள, பீகார் அரசாங்கங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கு கொண்டனர்.

            டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரையின் முழுவிவரம் வருமாறு:

            இவ்வாறு குறுகிய காலத்தில், எத்தனையோ சிரமங்களுக்கு இடையே இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு இணங்கியமைக்காக மத்திய அரசாங்கத்தின் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 1944ஆம் ஆண்டில் வங்க அரசாங்கம் நியமித்த தாமோதர் நதி வெள்ளப்பெருக்கு விசாரணைக் குழு தெரிவித்துள்ள யோசனைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கான விதிமுறைகளைப் பரிசீலிப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும். மேற்கொண்டு பேசுவதற்கு முன்னதாக, இந்தக் குழுவை நியமித்தமைக்காக வங்க அரசாங்கத்தைப் பாராட்டுவதே முறையாகும். இவ்வாறே, தாமோதர் நதியின் வெள்ளப் பெருக்குப் பிரச்சினை குறித்தும், பொதுவாக நாட்டின் நீர்வள ஆதாரங்களை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்வது குறித்தும் மிக ஆழமான, ஆக்கபூர்வமான கருத்துகளைத் தெரிவித்துள்ளமைக்காக இந்தக் குழுவை பாராட்டுவதும் என் கடமையாகும்.

குழுவின் பரிந்துரைகள்

          குழு தெரிவித்த பரிந்துரைகளில் இரண்டை இங்கு முக்கியமாகக் குறிப்பிட விரும்புகிறேன்: VIII மற்றும் XIII ஆவது பரிந்துரைகள்தாம் அவை. XIII ஆவது பரிந்துரையில் குழு பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறது:

            “இந்தியாவின் வனங்களும் நதிகளும் மத்திய அரசாங்கத்தின் பொறுப்பின்கீழ் கொண்டுவரப்பட்டால், வெள்ளக்கட்டுப்பாடு, மண் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அனுகூலமாக இருக்கும் என்று விவாதங்களின் போது குழு உணர்ந்தது.”

            தாமோதர் நதி அணைக்கட்டுத் திட்டத்தின் நோக்கம் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதாக மட்டுமன்றி, மின்விசை உற்பத்திக்கும் பாசனத்துக்குத் தண்ணீர் வழங்குவதற்கும் வகைசெய்வதாகவும் இருக்க வேண்டுமென்று குழு தனது VIII ஆவது பரிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறது. இந்தியாவின் நீர்வழிப் போக்குவரத்துகளைப் பயன்படுத்திக் கொள்வதில் பின்பற்றப்பட்டு வரும் இப்போதைய கொள்கையை அறிந்தவர்கள் இந்தப் பரிந்துரைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். நீர் வழிப்போக்குவரத்துகளைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும் விஷயத்தில் ஓர் ஆக்கபூர்வமான கொள்கை இல்லை என்பது நிதர்சனமான உண்மையாகும். இரண்டாவதாக, நீர் வழிப் போக்குவரத்து சம்பந்தமான நமது கொள்கை பன்னோக்குக் கொண்டதாக இருக்க வேண்டும். பாசன வசதி, மின்விசை உற்பத்தி, போக்குவரத்து முதலியவற்றுக்கும் அதில் வழிவகை செய்ய வேண்டும் என்ற உணர்வு போதிய அளவில் இல்லை.

ரயில்வேயும் நீர்வழிப் போக்குவரத்தும்

            நீர்வளம் சம்பந்தப்பட்ட நமது கொள்கை பாசன வசதி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இருந்து வருகிறது. தவிரவும், ரயில் போக்குவரத்துக்கும் நீர்வழிப் போக்குவரத்துக்கும் இடையே வேறுபாடு எதுவும் இல்லை என்ற உண்மையை நாம் தகுந்த முறையில் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறிவிட்டோம். ரயில்வேக்களுக்கு மாகாண எல்லைகள் ஏதும் இல்லையென்கிற போது ஆறுகளுக்கும் அதேபோல் மாகாண எல்லைகள் எவையும் இருப்பதற்கில்லை; ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்துக்கு பாய்ந்து செல்லும் ஆறுகளுக்கு முக்கியமாக இது பொருந்தும். இதற்கு மாறாக, ரயில்வேக்களுக்கும் நீர்வழிப் போக்குவரத்துகளுக்கும் இடையே நமது அரசியலமைப்புச் சட்டத்தில் வேறுபாடு இடம் பெற அனுமதித்து விட்டோம்; இதன் விளைவாக ரயில்வேக்கள் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டவையாகவும், ஆறுகள் மாகாண அரசாங்கங்களின் அதிகாரவரம்புக்கு உட்பட்டவையாகவும் ஆக்கப்பட்டுவிட்டன.

            இந்தத் தவறால் ஏற்பட்ட பிரதிகூலங்கள், பாதகங்கள் அநேகம்; அவை கண்கூடானவை. இதற்கு இங்கு ஓர் உதாரணம் கூறுவோம்: ஒரு குறிப்பிட்ட மாகாணத்துக்கு மின்விசை தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்; அப்போது இதன் பொருட்டு அந்த மாகாணம் தனது நீர்வளங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது; ஆனால் இதனை அது செய்ய முடியாது; ஏனென்றால் மின்விசை உற்பத்தி செய்வதற்கு அணைகட்ட வேண்டிய இடம் மற்றொரு மாகாணத்தில் அமைந்திருக்கிறது; அந்த மாகாணமோ வேளாண்மையைப் பெரிதும் சார்ந்திருக்கும் மாகாணம்; அதற்கு மின்விசை தேவையில்லை; அதில் அதற்கு அக்கறையும் ஆர்வமும் இல்லை; மேலும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அதனிடம் போதிய பண வசதியும் இல்லை; எனவே, அணை கட்டுவதில் ஆர்வம் கொண்டுள்ள மாகாணத்தை அவ்வாறு செய்ய அது அனுமதிக்காது. இது குறித்து நாம் என்ன புகார் செய்தாலும் சம்பந்தப்பட்ட அந்த மாகாணம் அதைப் பொருட்படுத்தாது; மாகாண சுயாட்சி என்ற பெயரால் இத்தகைய நேசமற்ற போக்கை அது நியாயப்படுத்தவும் கூடும்.

நீர்வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

          இரண்டு நோக்கங்களை மனத்திற் வைத்தே இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறேன். முதலாவதாக, நான் தெரிவித்த விவரங்களின் பகைப்புலனில், வங்க அரசாங்கம் நியமித்த தாமோதர் நதி வெள்ளப் பெருக்கு விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நீங்கள் நன்கு மதிப்பிட முடியும்; இந்தப் பரிந்துரைகள் பற்றி நான் முக்கியமாகக் குறிப்பிட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இரண்டாவதாக, இப்போதைய சூழ்நிலைகளால் தோன்றியுள்ள பிரதிகூலங்களை மத்திய அரசாங்கம் பெரிதும் உணர்ந்துள்ளது என்பதையும் நாட்டின் நீர்வளங்களை அனைவருக்கும் மிகவும் நலமளிக்கும் முறையில் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கொள்கையை, மற்ற நாடுகளில் நீர்வளங்கள் எந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றனவோ அதே நோக்கங்களுக்காக நாமும் நமது நீர்வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கொள்கையை உருவாக்க நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள மத்திய அரசாங்கம் விரும்புகிறது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.

            ரயில்வேக்கள் விஷயத்தில் நாம் எத்தகைய நடைமுறையைக் கைக்கொள்கிறோமோ அதே நடைமுறையை நீர்வழிப் போக்குவரத்து விஷயத்திலும் பின்பற்றக்கூடிய விதத்தில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவது மிகவும் பயனளிக்கக்கூடிய ஒரு மாற்றமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும் இத்தகைய அரசியலமைப்புச் சட்ட மாற்றங்கள் ஏற்படும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று இந்திய அரசாங்கம் கருதுகிறது. அதேபோல், நீர்வளங்களைப் பயன்படுத்தும் ஒரு கூட்டுத் திட்டத்தில் ஒத்துழைக்க மாகாணங்கள் ஆர்வம் காட்டுமேயானால், அரசியலமைப்புச் சட்டம் இது விஷயத்தில் எவ்வகையிலும் குறுக்கிடாது என்றும் அரசாங்கம் நினைக்கிறது.

            அமெரிக்காவில் செயல்படுத்தப்பட்டுவரும் டென்னஸ்ஸி பள்ளத்தாக்குத் திட்டத்தை இந்திய அரசாங்கம் பெரிதும் மனத்திற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தை அது நன்கு ஆராய்ந்து வருகிறது; இது விஷயத்தில் ஒத்துழைக்க மாகாணங்கள் முன்வருமானால், அவற்றின் முன்னேற்றத்திற்கும் வளத்திற்கும் செழுமைக்கும் குறுக்கே நிற்கும் மாகாணத் தடைகளை அகற்ற அவை இணங்குமானால், டென்னஸ்ஸி திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவிலும் ஏதேனும் செய்ய முடியும் என்று அது நம்புகிறது. நாட்டின் நீர்வளங்களை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும் திசைவழியில் ஒரு பூர்வாங்க நடவடிக்கையாக இந்திய அரசாங்கம் ஒரு மத்திய அமைப்பைத் தோற்றுவித்துள்ளது – மத்திய தொழில்நுட்ப மின்விசை வாரியம் என்பது இந்த அமைப்பின் பெயர். இதே போன்று, மத்திய நீர்வழிப் போக்குவரத்து மற்றும் பாசன வசதி ஆணையம் என்ற மற்றொரு மத்திய அமைப்பை உருவாக்கவும் நாங்கள் யோசித்து வருகிறோம்.

            நீர்வளங்களை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும், பாசன வசதி தவிர இதர பல காரியங்களுக்கும் ஒரு திட்டத்தை எவ்விதம் செயல்படுத்த முடியும் என்பது குறித்து மாகாணங்களுக்கு ஆலோசனை கூறுவதே இந்த இரண்டு அமைப்புகளையும் தோற்றுவித்ததன் நோக்கமாகும். மத்திய பயனோக்கு வாரியம் அல்லது விசேட விசாரணை ஆணையங்கள் போன்ற இதர பல அமைப்புகளை உருவாக்குவதும் அவசியமாகலாம். மத்திய மின்விசை வாரியம், மத்திய நீர்வழிப் போக்குவரத்து மற்றும் பாசன வசதி ஆணையம் ஆகியவற்றின் நியமனம் இத்தகைய அமைப்புகளை உருவாக்குவதை அவசியமற்றதாக்கி விடவில்லை.

            தாமோதர நதித் திட்டம் இந்தத் திசைவழியில் மேற்கொள்ளப்பட்ட முதல் திட்டமாகும். இது பல-நோக்குத் திட்டமாக இருக்கும். தாமோதர நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடி பெரும் சேதம் விளைவிப்பதைத் தடுப்பது மட்டுமே இத்திட்டத்தின் நோக்கமாக இருக்காது; பாசன வசதி, நீர்வழிப் போக்குவரத்து, மின்விசை உற்பத்தி ஆகியவையும் இதன் குறிக்கோளாக இருக்கும்.

            இத்திட்டத்தைச் செயல்படுத்தி நிர்வகிக்கும் அமைப்பு ஏறத்தாழ டென்னஸ்ஸிப் பள்ளத்தாக்குத் திட்ட நிர்வாக அமைப்பை ஒத்ததாக இருக்கும். இது ஒரு கூட்டுறவு அமைப்பாக இருக்கும். மத்திய அரசாங்கமும் பீகார், வங்க மாகாண அரசாங்கங்களும் இதில் பங்குதாரர்களாக இருந்துவரும். இத்திட்டத்துக்கு வடிவமும் கட்டமைப்பும் உயிர்த்துடிப்பும் அளிக்க இந்திய அரசாங்கம் மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறது; இவ்வாறு செய்வதில் எத்தகைய தாமதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் உறுதி கொண்டிருக்கிறது.

புதிய நீர்வளக் கொள்கை

            சில பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டாலொழிய இது விஷயத்தில் மேற்கொண்டு முன்னேற முடியாது என்பதை இந்திய அரசாங்கம் உணர்ந்துள்ளது. இத்தகைய பூர்வாங்க நடவடிக்கைகளில் ஒன்று அணை கட்டுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதாகும். வங்காளத்தின் விருப்பப்படி இதனைச் செய்ய முடியாது என்பது தெளிவு. அதேபோல், பீகாரின் விருப்பத்தை வைத்து மட்டும் இதனைத் தீர்மானிக்க இயலாது. ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் இவ்விரு மாகாணங்களுமே உடன்பாடு கண்டால் கூட நிபுணர்களின் ஆலோசனையைப் பெறாமல் இதனை முடிவு செய்ய முடியாது. இது விஷயத்தில் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டிய வேறு பல அம்சங்களும் இருக்கின்றன. நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் தாமோதர் நதித் திட்டம் ஒரு பல-நோக்குத் திட்டமாக இருப்பது அவசியம். வெள்ளப் பெருக்குப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவது மட்டுமே இத்திட்டத்தின் நோக்கமாக இருக்கக் கூடாது. பாசன வசதி, மின்விசை உற்பத்தி, நீர்வழிப்போக்குவரத்து போன்றவற்றையும் உள்ளடக்கியதாக இத்திட்டம் அமைந்திருக்க வேண்டும். அணை கட்டுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் பிரச்சினையுடன் கூட இவற்றையும் பரிசீலிப்பது முக்கியம்.

            இந்தப் பணியைச் செய்வதற்கு ஒரு சிறந்த அமைப்பை உருவாக்குவது இந்த மாநாட்டின் நோக்கமாக இருக்க வேண்டும். எல்லாத் தன்னலக் கருத்துகளையும் மூட்டைக்கட்டி ஒதுக்கிவைத்துவிட்டு, சரியான, நேர்மையான, நியாயமான உணர்வால் நாம் வழி நடத்தப்பட வேண்டும்; ஒன்றுபட்டு சிறந்த தீர்வு காணுவோம் என்ற உறுதிப்பாட்டோடு, தீர்மானத்தோடு முன்னேற வேண்டும்; நமது நீர் வளங்கள் சம்பந்தமாக ஒரு புதிய கொள்கையை உருவாக்க வேண்டும்; கொத்தியெடுக்கும் கொடிய வறுமையில் வாடும் இந்த நாட்டின் கோடானுகோடி மக்கள் வாழ்வும் வளமும் பெறும் ஒரு சுபிட்ச சூழ்நிலையைத் தோற்றுவிக்க நாம் உறுதி பூண வேண்டும். இதுவே எனது ஆசையாகும்.

மாநாட்டு விவாதங்கள்

          தாமோதர நதியைப் பாசனத்துக்கும், மின்விசைமயமாக்கத்துக்கும், நீர்வழிப்போக்குவரத்துக்கும் பயன்படுத்தும் குறிக்கோள் கொண்ட பல – நோக்குத் திட்டமான தாமோதர நதிப் பள்ளத்தாக்குத் திட்டம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமை வகித்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

            இத்திட்டம் குறித்து அவசியமான தகவல் சேகரிக்கும் நடைமுறை சம்பந்தமாக மத்திய அரசாங்கம் சுற்றுக்கு விட்ட ஒரு குறிப்பு இந்த விவாதத்திற்கு அடிப்படையாக அமைந்திருந்தது.

            மூன்று அரசாங்கங்களும் தத்தமக்குக் கிடைத்த தகவல்களும் புள்ளிவிவரங்களும் அடங்கிய ஒரு பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்று இந்தக் குறிப்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மத்திய அரசாங்கத்தின் நிபுணர்களைக் கலந்தாலோசித்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். இந்தப் பட்டியலில் தேவையான விவரங்கள் இடம்பெற்றிருக்கவில்லை என்றால், மேற்கொண்டு தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். இதன் பேரில் மத்திய அரசாங்கத்தின் தொழில் நுட்ப நிபுணர்கள் ஒரு பூர்வாங்க அறிக்கையைத் தயாரிப்பாளர்கள்; தாமோதர நதிப் பள்ளத்தாக்கை பல வழிகளிலும் அபிவிருத்தி செய்யும், மேம்படுத்தும் ஓர் ஒருங்கிணைந்த திட்டத்தைத் தயாரிப்பதற்கான வாய்ப்பு வசதிகளை அதில் அவர்கள் கோடிட்டுக் காட்டுவார்கள். பின்னர் இத்தகைய திட்டத்தைத் தயாரிக்கும்படி மத்திய அரசாங்கத்தையும் மாகாண அரசாங்கங்களையும் சேர்ந்த நிபுணர்களை மூன்று அரசாங்கங்களும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

பொது உடன்பாடு

            தாமோதர நதிப் பள்ளத்தாக்குத் திட்டத்தை ஒரு பல-நோக்குத் திட்டமாகத் தயாரிக்கும் விஷயத்தில் பொது உடன்பாடு நிலவிய போதிலும், தாமோதர நதி வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தும் பிரச்சினையில் பிரதான கவனம் செலுத்த வேண்டும் என்று வங்காளப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். மத்திய அரசாங்கம் செய்துள்ள பரிந்துரைகள் வலியுறுத்தினர். மத்திய அரசாங்கம் செய்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், வங்க அரசாங்கத்தின் பாசனத்துறை பொறியாளரான திரு.மான் சிங் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சிறிது விவாதத்திற்குப் பிறகு ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் திரு.மான் சிங்குக்கு உதவ மத்திய அரசாங்கமும் பீகார் அரசாங்கமும் அதிகாரிகளை அனுப்பி உதவ வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. பீகார் பாசனத்துறை துணைப் பிரதம பொறியாளரான திரு.ஏ.கரீம் மான்சிங்குடன் அடிக்கடி தொடர்பு கொள்வார்.

            இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் நலத்துறை செயலாளர் திரு.எச்.சி.பிரியோர் கூட்ட ஆரம்பத்தில் பேசும்போது, நீர்வளப் பிரச்சினைகளின் நிர்வாக அம்சம் பற்றிக் குறிப்பிட்டார்; மத்திய அரசாங்கம் தனது பங்குக்கு ஆற்றக் கூடிய பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.

*           *           *

            மாநாட்டின் பங்கு கொண்டவர்களில் பின்வருபவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்: வங்க அரசாங்கத்தின் தகவல் போக்குவரத்து மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. பி.பி.பெய்னே, இதே துறையின் செயலாளர் திரு.பி.சர்க்கார் ஐ.சி.எஸ்., திரு.பி.எல்.சபர்வால், வங்கத்தின் பிரதம பொறியாளர், திரு.ஜே.எஃப்.ரஸ்ஸல், விசேட பொறியாளர் (பாசனத்துறை) திரு.மான் சிங்., நதிகள் ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் திரு.என்.கே.போஸ், யுத்தப் பிற்காலப் புனரமைப்புக் குழுவின் செயலாளர் திரு.என்.தார், வளர்ச்சித் துறை ஆணையர் திரு.எச்.எம்.இஷாக், பாசனத்துறை துணைப் பொறியாளர் திரு.ஏ.கரீம், மத்திய தொழில்நுட்ப மின்விசை வாரியத்தின் தலைவர் திரு.எச்.எம்.மாத்யூஸ், இவ்வாரியத்தின் நீர்மின் விசைத்துறை உறுப்பினரான திரு.டபிள்யூ.எல்.ஊர்தின், மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியான திரு.டி.எல்.மஜூம்தார்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It