தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - அரைக்கிலோ
பச்சைமிளகாய் - 5
தக்காளி - 5
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா ஒரு தேக்கரண்டி
பூண்டு - 8
இஞ்சி சிறிய துண்டு
நெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி


செய்முறை:

இஞ்சி, பூண்டினை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய் விட்டு முதலில் இஞ்சி, பூண்டு நறுக்கியவற்றைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் கொத்திய கோழிக்கறியினை சேர்த்து, கரம் மசாலாத் தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்துப் புரட்டி மிதமான தீயில் நன்கு வேகவிட வேண்டும்.

கறி முக்கால் பாகம் வெந்த நிலையில் நறுக்கின தக்காளியைச் சேர்த்து, தீயை சற்று அதிகமாக்கி நெய் பிரியும் வரை வதக்க வேண்டும். அதன்பின் பொடியாய் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கறி நன்கு வேகும் வரை வைத்திருந்து வெந்தவுடன் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

Pin It