சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியாளர் சுப்பையாபிள்ளை, பொருளையும், புகழையும் துச்சமாக மதித்து ஒரு குக்கிராமத்தில் உழுதுண்டு வாழ்ந்த பொ.வே. சோமசுந்தரனாரை தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள மேலைப் பெருமழை என்றும் சிறிய கிராமத்தில், வேலுத்தேவர் - சிவகாமியம்மாள் தம்பதிக்கு 1909-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் நாள் பிறந்தார்.

திண்ணைப் பள்ளியில் சேர்ந்து அரிச்சுவடி, ஆத்திச்சூடி, வெற்றிவேற்கை, நிகண்டுகள், நைடதம், கிருட்டிணன் துதூ, அருணாசலப் புராணம் முதலிய நூல்களைக் கற்றார். இவருடைய தந்தையார், தொடர்ந்து மகன் படிப்பதற்கு இடம் தராமல் உழவுத் தொழிலில் ஈடுபடுத்தினார். இருப்பினும் தந்தையாருக்குத் தெரியாமல் கோவில், மடம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள நூல்களைப் பெற்று படித்து வந்தார்.

இவருடைய தாயார் இவரது பத்தாவது வயதில் காலமாகிவிட்டார். தந்தையார் மறுமணம் செய்து கொண்டார். பின்னர், சோமசுந்தரனார் தமது தாய்மாமன் இல்லத்தில் தங்கினார். இவரது கிராமத்துக்கு அருகில் உள்ள ஆலங்காடு என்னும் ஊரில் ‘சர்க்கரைப் புலவர்’ வாழ்ந்து வந்தார். அவரைக் கண்டு, தமது கல்வி ஆர்வத்தை வெளிப்படுத்தினார். சர்க்கரைப் புலவர், சோமசுந்தரனாரை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்குச் சென்று பயிலுமாறு ஆர்வமூட்டி, அப்பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றிய பூவராகம்பிள்ளை என்பவருக்கு அறிமுகக் கடிதம் கொடுத்து அனுப்பினார்.

சோமசுந்தரனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ்க் கல்வி கற்றார். ஆவர் அங்கு அவர் பயின்ற காலத்தில், சோழவந்தான் கந்தசாமியார், பண்டிதமணி கதிரேசச் செட்டியார், விபுலானந்த அடிகள் முதலிய தமிழ் அறிஞர்கள் ஆசிரியர்களாக பணிபுரிந்தனர். இவரது தமிழறிவு வளர்ச்சிக்கு அது நல்வாய்ப்பாக அமைந்தது.

‘புலவர்’ படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். இருப்பினும், தமிழ்மொழி அறியாத ஆங்கிலேயே ஆளுநர் எர்ஸ்கின்பிரபு இவரை கைகலக்கி வழங்கிய சான்றிதழை கிழித்தெறிந்துவிட்டு தனது ஊர்போய்ச் சேர்ந்தார்.

தமது ஊரில் தங்கி உழவுத் தொழிலில் ஈடுபட்டார். தமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களை படிப்பதற்கும், எழுதுவதற்கும் தமது பல்கலைக் கழக ஆசிரியரான பண்டிதமணி கதிரேசச் செட்டியாரை சென்று சந்தித்து தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார். தாம் எழுதிக் கொண்டிருந்த திருவாசக உரையை, சோமசுந்தரனாரிடம் அளித்து எதும்படி வேண்டினார். சோமசுந்தரனாரும் இந்தப் பணியை மேற்கொண்டு ‘திருவாசகத்துக்கு’ உரை எழுதி முடித்தார். இதுவே, இவர் பின்னாளில் உரையாசிரியர் ஆவதற்குப் பயிற்சியாக அமைந்தது.

திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் எழுதிக் கொண்டிருந்த கருப்பக்கிளர் இராமசாமிப் புலவரின் தொடர்பால், சென்னை சென்று கழகத்துக்காக சங்க இலக்கியங்களுக்கு உரைகள் எழுதி வந்தார்.

சங்க இலக்கியங்களான ‘நற்றினை’, ‘குறுந்தொகை’, ‘அகநானூறு’, ‘ஐங்குறுநூறு’, ‘கலித்தொகை’, ‘பெருங்காப்பியங்களான ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமேகலை’, ‘சீவகசிந்தாமணி’, ‘வளையாபதி’, ‘குண்டலகேசி’, சிறுகாப்பியங்களான ‘உதயணகுமார காவியம்’, ‘நீலகேசி மற்றும் பெருங்கதை’, ‘புறப்பொருள் வெண்பாமாலை’, ‘கல்லாடம்’, ‘பரிபாடல்’, ‘ஐந்திணை எழுபது’, ‘ஐந்திணை ஐம்பது’, ‘திருக்கோவையார்’, ‘பட்டினத்தார் பாடல்’, முதலிய நூல்களுக்கு சோமசுந்தரனார் உரையெழுதி அளித்துள்ளார்.

மேலும், ‘செங்கோல்’, ‘மானனீசை’ முதலிய நாடக நூல்களும், பெருங்கதை உரைநடையும், பண்டிதமணி வரலாறு முதலிய உரைநடை நூல்களையும் எழுதி அளித்துள்ளார்.

இவரது உரை விளக்கங்கள் யாவும் தமிழறிஞர்களையே வியக்க வைக்கும். பழைய உரையாசிரியர்களை மறுத்து எழுதும் புலமை பெற்றிருந்தார்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் 1008-வது நூல் வெளியீட்டு பொன்விழாவில், சோமசுந்தரனார் கேடயம் அளித்து போற்றிச் சிறப்பிக்கப்பட்டார்.

அவர் வாழ்ந்த மேலப் பெருமழை ஊராட்சியில் உள்ள நூலகத்துக்கு ‘பெருமழைப்புலவர் சோமசுந்தரனார் நூலகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தன்னலமற்ற தமிழ்ப்பணி புரிந்த சோமசுந்தரனார் 03.01.1972-ஆம் நாள் காலமானார். அவர் மறைந்தாலும், சங்க இலக்கியங்களுக்கு அவர் எழுதிய உரைகள் தமிழர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்.

Pin It